DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, July 16, 2022

எது விக்கிரக ஆராதனை?

 ஆதவன் 🖋️ 536 ⛪ ஜுலை 17, 2022 ஞாயிற்றுக்கிழமை

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக் காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 )

தேவன் அருவருக்கும் இரண்டு பெரிய பாவங்கள், விபச்சாரமும் விக்கிரக ஆராதனையும்தான். சர்வ வல்லவரின் மகிமையையும் அவரது அளப்பரிய ஆற்றலையம் உணர்ந்தவன் சிலையைச் செய்து அதனை வணங்கமாட்டான். இந்த அண்டசராசரங்களைப் படைத்து அடக்கி ஆளும் தேவன் மனிதனின் கையால் உருவாக்கப்பட்ட சிலையினுள் இருப்பார் என எண்ணுவது அறிவுடைமையல்ல. 

"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;" ( யாத்திராகமம் 20 : 4 ) என இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் மோசே மூலம்  அளித்த  பத்துக் கற்பனைகளில் கூறியுள்ளார். 

ஆனால் இன்றைய வசனம் இதற்கு மேலே ஒருபடி போய், "விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது" என்று நம்மை அறிவுறுத்தும் உண்மை என்னவென்றால், விக்கிரக ஆராதனை எனும் சிலை வழிபாடு என்பது மண்ணினாலோ, மரத்தினாலோ அல்லது வேறு உலோகங்களினாலோ செய்யும் சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, பொருளாசையும் சிலை வழிபாடுதான் என்பதே. 

இன்று சிலைகளை அருவருகின்றோம் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும்  பொருளாசை எனும் சிலைவழிபாட்டுக்குள் விழுந்து கிடக்கின்றனர். மட்டுமல்ல பல கிறிஸ்தவ ஊழியர்கள்  மக்களை நடத்துவதும் சிலைவழிபாட்டுக்கு நேராகவேதான். 

சொத்து சேர்ப்பது, வாகனங்கள் மற்றும் வீடு வாங்க ஜெபிப்பது, காணிக்கை கொடுத்தால் தேவன் அதனைப் பல மடங்காகத் திருப்பித் தருவார் என மக்களை ஆசைகாட்டி அதிக காணிக்கைக் கொடுக்கத் தூண்டுவது, இவை அனைத்தும் சிலை வழிபாடுகளே. ஆனால்  தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இன்று இத்தகைய விக்கிரக ஆராதனைக்காரர்களாகவே இருக்கின்றனர். 

இன்றைய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது, "அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே" என்று.  அதாவது, நேரடியான சிலை வழிபாடு செய்யவில்லை என்றாலும் வேதம் கூறும் அசுத்தக் குணமும் பொருளாசை எனும் சிலைவழிபாட்டுக் குணமும் நமக்கு இருக்குமானால் நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்கடைவதில்லை. 

இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு பொருள், பணம் தேவை. ஆனால் பொருளாசை என்பது உள்ளது போதும் என நிறைவடையாமல் துன்மார்க்கமாய் மேலும் மேலும் பணம், சொத்து சேர்க்கும் ஆசையைக் குறிக்கின்றது. எனவே கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்கடைய வேதம் கூறும் சிலைவழிபாடுகளை நம்மைவிட்டு அகற்றுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: