பிசாசின் செயல்பாடுகளுக்கு விலகி நில்லுங்கள்

 

ஆதவன் 🖋️ 546 ⛪ ஜுலை 27, 2022 புதன்கிழமை


"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )

தேவனுக்குக் கீழ்படிந்திருத்தல் என்பது அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதைக் குறிக்கின்றது. அதுபோல பிசாசுக்கு எதிர்த்து நிற்பது என்று  சொல்வது, கத்தியையும் துப்பாக்கியையும்  எடுத்துக்கொண்டு பிசாசு எங்கே என்று தேடி அதனைத் துரத்துவதோ அல்லது பேய் ஓட்டும் ஊழியர்களைக் கொண்டு பேய் ஓட்டுவதோ அல்ல; மாறாக, பிசாசின் செயல்பாடுகளைச் செய்யாமல் அவற்றுக்கு விலகி நிற்பது. 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வசனத்திற்கு நேர் எதிராகச் செயல்படுகின்றார்கள். ஆம், அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் பிசாசுக்குக் கீழ்படிந்திருக்கிறார்கள், தேவனுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.  எனவே பிசாசு விலகி ஓடிப்போவதற்குப் பதிலாக இவர்களோடு  பாய்போட்டுப் படுத்துக்கொண்டுள்ளான்.

ஆதாம் ஏவாள் செய்த அதே ஆதி பாவமே மக்களிடம் இன்றும் தொடருகின்றது. தேவன் ஆதாம் ஏவாளிடம் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கூறினார். (ஆதியாகமம் 2:17) ஆனால் பிசாசு:-

"நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்"  (ஆதியாகமம் 3 : 4,5 ) என்று கூறியது. அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் பிசாசுக்குக் கீழ்படிந்து தேவனுக்கு எதிர்த்து நின்றார்கள்.  

இன்று தங்களது பிரச்சனைகளுக்கு தேவனுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளே காரணம் என்பதைப்  பல கிறிஸ்தவர்கள் உணர்வதேயில்லை.  அவர்கள் எதற்கெடுத்தாலும் சாத்தான் மேல் பழிபோட்டு, யோபுவைச் சோதித்ததுபோல சாத்தான் தங்களைச் சோதிப்பதாகக் கூறிக்கொண்டு அதற்காக ஊழியர்களைத்தேடி ஓடுகின்றனர். ஆனால் தாங்கள் யோபுவைபோல உத்தமர்களாய் இருக்கின்றோமா என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

அன்பானவர்களே, எனவேதான் இன்று ஆவிக்குரிய சபை ஊழியர்களில் பேய் ஓட்டும் ஊழியர்கள் அதிகரித்துவிட்டனர். மக்களை தேவனுக்கு நேராக மனம்திரும்பச் செய்யாமல் பேய் ஓட்டும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  பில்லி சூனிய கட்டு அவிழ்க்கப்படும் என்று போஸ்டர், நோட்டிஸ், ஒலிபெருக்கி அறிவிப்பு கொடுத்து  மந்திரவாதி நிலைமைக்கு பல ஊழியர்கள் தங்களை கொண்டுசென்றுவிட்டனர். 

கர்த்தரது மெய்யான இரட்சிப்புக்கு ஏதுவாக மக்களை நடத்தினாலே போதும் என்ற அடிப்படை அறிவற்ற ஊழியர்கள் கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக இருக்கின்றனர்.

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; கர்த்தரோடு இசைந்திருங்கள்; பிசாசின் செயல்பாடுகளுக்கும்  பிசாசு ஓட்டும் ஊழியர்களுக்கும் விலகி நில்லுங்கள், அப்பொழுது பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்