நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை!

 

ஆதவன் 🖋️ 529 ⛪ ஜுலை 10, 2022 ஞாயிற்றுக்கிழமை


"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." ( ஏசாயா 64 : 8 )

மனிதர்களாகிய நாம் அனைவருமே கடவுளது கரத்தின் செயல்பாடுகளாய் இருக்கின்றோம். மனிதர்களைக் கடவுள் வித்தியாசமான குணங்கள் உள்ளவர்களாகப் படைத்துள்ளார். ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள். ஆனால் எல்லோருமே தேவ நோக்கம் நிறைவேற்றவே படைக்கப்பட்டுள்ளோம். 

ஒரு தாய் தந்தையருக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒரு குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை. 

ஒரு வீட்டில் பல்வேறுவித பாத்திரங்கள் இருக்கும். வொவ்வொன்றையும் நாம் தேவைக்கேற்ப பயன்படுத்துவோம். அதுபோலவே தேவன் மனிதர்களை பயன்படுத்துகின்றார். மேலும், பாத்திரத் தொழிற்சாலையில் வெவ்வேறுவிதமான் பாத்திரங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. எல்லாமே ஒவ்வொரு தேவைக்குப்   பயன்படுகின்றன.  

இதனையே அபோஸ்தரான பவுலும் கூறுகின்றார். "மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

எனவே நாம் பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். பிறரிடம் இல்லாத ஏதோ ஒன்று நிச்சயம் நம்மிடம் இருக்கும். அதற்காக தேவனுக்கு நன்றி கூறவேண்டும். ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே தேவன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் எனும் உணர்வு வரும்போது நாம் தேவனிடம் குறைபட்டுக்கொள்ளமாட்டோம். 

வெறுமனே ஆராதனைகளில் கலந்துகொண்டு கடமையை நிறைவேற்றுவதல்ல கிறிஸ்தவம். அது தேவனோடு உறவை வளர்த்துக்கொண்டு அவரோடு வாழ்வது. தேவனோடு நெருங்கிய உறவுகொள்வோமானால் நம்மைக் குறித்த தேவநோக்கத்தை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். அந்த நிலைக்கு நாம் வரும்போது மட்டுமே தேவன் ஏன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் என்பது புரியும். நமது துன்பங்கள்,  துயரங்கள், பிரச்சனைகள் எல்லாமே தேவ நோக்கத்தோடுதான் நடக்கின்றன.  

கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை என்பதை உணர்ந்துள்ளேன். எனக்கு என்னைக்குறித்த தேவ நோக்கத்தை வெளிப்படுத்தும் என விசுவாசத்துடன் வேண்டுவோம். கர்த்தர் அதனை நமக்கு வெளிப்படுத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்