அவரது சித்தமில்லாது நாம் எதனையும் செய்யமுடியாது.

 

ஆதவன் 🖋️ 528 ⛪ ஜுலை 09, 2022 சனிக்கிழமை


"மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." ( சங்கீதம் 94 : 11 )


மனிதன் பலவீனமானவன். ஆனால் இந்த பலவீனமான உடலைக்கொண்டு அவன் நினைக்கும் காரியங்களையும் செய்யும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது அவை என்றைக்கும் அழியாமல்  நிலைத்திருக்கும் என்று அவன் எண்ணுவதையே காட்டுகின்றது. காரணம், தனது வலுவற்ற தண்மையைஅவன் உணருவதில்லை. இந்த உலகினில் நிரந்தர முதல்வர், நிரந்தர பிரதமர்  என்று கூறிக்கொண்டவர்களது  நிலைமையை நாம் அறிவோம்.

இந்த உலகத்தில் பலரும் செய்யும் காரியங்கள் அவர்கள் இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப்போவதாக எண்ணுவதையே நமக்கு உணர்த்தும். ஆனால் மனிதனது இத்தகைய செயல்பாடுகள் தேவனுக்குச் சிரிப்பையே வரவழைக்கும். காரணம், "மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." 

"வானத்தினளவு கோபுரம் கட்டி நமக்குப் பெயர் உண்டாகப் பண்ணுவோம்" என்று எண்ணி கோபுரம்கட்ட முயன்ற மக்களைப் பார்த்தக்  கர்த்தர்   "தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள்" என்று கூறி அவர்கள்  பேசும் மொழியைத் தாறுமாறாக்கினார்.  பாபேல் என்ற கோபுரம் பாதியில் நின்றுபோனது (ஆதியாகமம் - 11)

நாம் என்னதான் உடல் வலுவுள்ளவர்களாக இருந்தாலும், அதிகாரபலம், பணபலம் உள்ளவர்களாக இருந்தாலும் அது நிறைவேறுவது கர்த்தரது கிரியை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 ) என்று நீதிமொழிகள் கூறுவது கவனிக்கத்தக்கது.

அன்பானவர்களே, நாம் எப்போதும் பெருமைகொண்டு என்னால் முடியும் என்று எண்ணுவதைவிட கர்த்தரது கிருபையினைச் சார்ந்துகொள்வதே நமக்கு வெற்றியைத் தரும். காரணம் அவரது சித்தமில்லாது பலவீனமான நாம் எதனையும் செய்யமுடியாது. படுக்கைக்குச் செல்லும் மனிதன் மறுநாள் எழுந்திருப்பதே நிச்சயமில்லை.

"நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று அருமையான யோசனையைத் தருகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.

கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதுதான் மனித வாழ்வு. எனவே நாம் கர்த்தரை முன்வைத்தே நமது திட்டங்களை வகுப்போம். கர்த்தரை மறந்து நாம்  எடுக்கும் செயல்திட்டங்கள் வீணானவையே. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்