நாம் குணப்பட்டபின்பு அடுத்தவரைக் குணப்படுத்த சுவிசேஷம் அறிவிக்கவேண்டும்

 ஆதவன் 🖋️ 553 ⛪ ஆகஸ்ட் 03, 2022 புதன்கிழமை

"நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்." ( லுூக்கா 22 : 32 )

தலைமை அப்போஸ்தலர் பேதுருவைச் சாத்தான் சோதிக்க கிறிஸ்துவிடம் அனுமதிகேட்டபோது இயேசு கிறிஸ்து பேதுருவை நோக்கிக் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். 

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்குமுன் நாம் முதலில் கிறிஸ்தவ விசுவாசத்தில் பலப்படவேண்டியது அவசியம். அல்லாவிட்டால் நமது சுவிசேஷ அறிவிப்புகள் எதார்தத்தைவிட்டு விலகி சாதாரண ஒரு அரசியல்வாதியின் பேச்சுபோல ஆகிவிடும்.

நமது விசுவாசத்தை சீர்குலைக்க சாத்தான் பல்வேறு வகைகளில் முயலுவான். அவற்றை முதலில் நாம் மேற்கொள்ளும் பலமடைந்தவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்துவோடு இரவும் பகலும் உடனிருந்து அவரோடு உண்டு குடித்து வாழ்ந்த பேதுருவையே சாத்தான் சோதிக்க முயலுவானென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 11 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, பேதுருவுக்காக இயேசு  கிறிஸ்து வேண்டுதல் செய்ததுபோல நாமும் வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். அத்துடன் அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆவிக்குரிய போர் ஆயுதங்கள் ( எபேசியர் 6 : 14-17 )நம்மிடம் மழுங்கிப்போகாமல் சரியாக இருக்கின்றதா என்றும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இப்படி நாம் குணப்பட்டபின்பு அடுத்தவரைக் குணப்படுத்த சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் மாயக்காரர்களாகவே இருப்போம். நாம் அறியாத கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க முயலும் சாதாரண மதவாதியாகவே இருப்போம். இயேசு கிறிஸ்து கூறிய பின்வரும்  வசனம் மனம் திரும்பாமல் இருந்துகொண்டு பிறருக்கு சுவிசேஷம் பிரசங்கிப்பவர்களுக்குப்  பொருந்தும்.

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." ( மத்தேயு 7 : 5 )

நம்மை நாமே சோதித்துப்பார்த்து மாய வாழ்க்கையை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு கிறிஸ்துவை அறிவிக்கும் பணியினைத் தொடர்வோம். அப்போது மட்டுமே நாம் அறிவிக்கும் கிறிஸ்துவை பிறர் ஏற்றுக்கொள்வர். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்