இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, September 04, 2024

நமக்காக ஜெபித்த இயேசு கிறிஸ்து

 'ஆதவன்' செப்டம்பர் 14, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,314



"........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." ( யோவான் 17 : 9 )

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அறிந்த நம் ஒவ்வொருவருக்காகவும் ஏற்கெனவே ஜெபித்துள்ளார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் பார்க்கின்றோம். இன்று சிலர் ஜெபிப்பதைப்போல மொத்த உலகத்துக்காகவும் அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்காக மட்டும் அவர் ஜெபித்தார். அதனையே, "........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." என்று கூறுகின்றார். 

அவர் இப்படி ஜெபிக்க என்ன காரணம் என்பதனையும் அவர் கூறுகின்றார். அதாவது, "நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்." ( யோவான் 17 : 8 )

பிதா தனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்களே என்கின்றார். காரணம், பிதாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவனே பிதாவுக்குரியவன். அவர்களுக்காக மட்டுமே அவர் ஜெபிக்கமுடியும். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் அவரையும்  ஏற்றுக்கொள்ளாதவனாக இருக்கின்றான். அப்படி அவரை ஏற்றுக்கொள்ளாதவனுக்காக அவர் ஜெபிக்கமுடியாது.  

ஆனால், தேவன் அனைவரையும் அன்பு செய்வதால் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புகின்றார்.  ஆனால் அவர் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவருக்குரியவர்கள் ஆகின்றோம். 

தன்னை அறியும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் தேவன் அளிக்கின்றார்.  அதனை பயன்படுத்திக்கொள்பவர்கள் அவரை அறிகின்றார்கள். அல்லது சத்தியத்தை அறியவேண்டுமென்று விரும்புகின்றவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். உண்மையாக தேவனைத் தேடுபவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் அவருடையவர்களாகின்றனர். 

எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தின் முந்தைய  வசனத்தில், அவர்கள் உமது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள் என்று கூறுகின்றார். ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது பிதாவை ஏற்றுக்கொள்கின்றோம். நாம் அவர்களுடையவர்கள் ஆகின்றோம். 

அன்பானவர்களே, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் வாயினால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவதோ, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதோ, வெறுமனே வேதாகமத்தை வாசிப்பதோ அல்ல, மாறாக அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்  அனுபவம்.  அந்த அனுபவம் பெற்றவர்களே பிதாவினால் இயேசு கிறிஸ்துவுக்கென்று கொடுக்கப்பட்டவர்கள். அப்படி நாம் இருப்போமானால் நமக்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே ஜெபித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியும் மன நிறைவும் சமாதானமும் அடைந்தவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

துக்கத்தில் மனமகிழ்ச்சி

 'ஆதவன்' செப்டம்பர் 13, 2024. வெள்ளிக்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,313 



"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."( சங்கீதம் 119 : 92 )

கிறிஸ்துவுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போதும் பலவேளைகளில் துன்பங்கள் நம்மை நெருக்கிச் சோர்ந்துபோகச் செய்துவிடும். அத்தகைய வேளைகளில் தேவனுடைய வார்த்தைகளே நமக்கு ஆறுதலும் மனமகிழ்ச்சியும் தர முடியம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள், கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் வாழ்விலும் இது உண்மையாகும். ஆம், கிறிஸ்துவை வாழ்வில் அறியாத பலரும்கூட தேவ வார்த்தைகளால் மரணத்துக்குத் தப்பி வாழ்ந்துள்ளனர். 

இதுகுறித்தப் பல சாட்சிகளை நான் கேட்டுள்ளேன். வாழ்வே இருளாகி இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு  வழியில் தேவனது வார்த்தைகள் அவர்களோடு இடைப்பட்டு  தற்கொலை முடிவினை  கைவிட்டுள்ளதாகப் பலரும் சாட்சி கூறுகின்றனர். ஒருமுறை ஒரு பிராமண நண்பர் என்னிடம், "நான் சுவர்களில் எழுதப்பட்டுள்ள வேத வசனங்களை எங்கு கண்டாலும் வாசித்துப் பார்ப்பேன். காரணம் அவை எனக்குள்ளே புத்துணர்ச்சியைத் தருகின்றன" என்று கூறினார். 

இத்தகைய மகிழ்ச்சி தனக்குள்  இருந்ததால்தான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்" என்கின்றார். அதாவது,  உமது வேத வார்த்தைகள் இருப்பதால்தான் நான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இல்லையானால் அழிந்துபோயிருப்பேன் என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, வேத வசனங்களில் நாம் காணும் பல வாக்குறுதிகள் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையினைத் தந்து நம்மை வாழவைக்கின்றன. 

"உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்." ( சங்கீதம் 119 : 103 ) என்றும் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்றும் இன்றைய தியான சங்கீதத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

முதலாவது தேவ வார்த்தைகள் நமது வாய்க்கு இனிமையாகவும் தொடர்ந்து நமது வாழ்க்கையினை நாம் சரிபடுத்திக்கொள்ள தீபமாகவும் இருக்கின்றன.  எனவேதான் நாம் வேதாகமத்தை வாசிக்கவும் அதிலுள்ள வசனங்களை நமது இருதயத்தில் பதித்து வைக்கவேண்டியதும் அவசியமாய் இருக்கின்றது. அப்படி நாம் இருப்போமானால் அவை நமக்கு எந்தவித துன்ப வேளையிலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்க உதவிடும். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது வார்த்தைகள் நமக்குள் இருக்கவேண்டும்; அவற்றின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். எனவே வேத வசனங்களை வாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரது வேதம் நமது மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், இன்றைய தியான வசனத்தின்படி நமது துக்கத்திலே நாம் அழிந்து போய்விடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம்

 'ஆதவன்' செப்டம்பர் 12, 2024. வியாழக்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,312

"என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்." ( சகரியா 14 : 5 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தனது பரிசுத்தவான்கள் புடைசூழ அவர் உலகிற்கு வரும்போது நாம் அவருக்கு ஏற்றத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் அவர் நம்மில் தனக்கு உகந்தவர்களாக வாழ்பவர்களை அவரோடுகூட அப்போது எடுத்துக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது இதுகுறித்து பல்வேறுமுறை உவமைகளாகக் கூறியுள்ளார்.  அவற்றில் பத்துக் கன்னியர்  உவமை (மத்தேயு 25), திருமண ஆடை இல்லாத மனிதனைக் குறித்த உவமை (மத்தேயு 22) நாம் பலமுறை படித்து அறிந்தவையே. 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து அவர் உயிர்த்து பரலோகம் சென்றவுடனேயே சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டது. "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 ) என வானதூதர் அவர்களுக்கு அறிவித்தார். 

இயேசு கிறிஸ்துவும் தான் உயிரோடு இருந்த நாட்களில் இதனை வெளிப்படுத்தினார். "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." ( மத்தேயு 24 : 29, 30 ) என்றார் அவர். 

ஆனால் அந்த நாள் என்று வரும் என்று நமக்குத் தெரியாது. "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்." ( 2 பேதுரு 3 : 10 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. மேலும், "இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!" ( 2 பேதுரு 3 : 11 ) என்று அவர் கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் வருவதற்குமுன் என்னென்ன நிகழும் என வேதாகமம் கூறும் தீர்க்கதரிசனங்கள் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல பரிசுத்த நடக்கையுள்ளவர்களாய்  நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். மணவாளனாகிய அவர் வரும்போது அவரோடுகூட பரலோகராஜ்யத்தில் நுழைய முடியாமல் நாம் புறம்தள்ளப்பட்டுவிடக்கூடாது. எனவே எச்சரிக்கையாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.  ஆம், "தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; " ( 2 பேதுரு 3 : 12 )

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

Sunday, September 01, 2024

ஏற்ற கனிகளைக் கொடுங்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 11, 2024. 💚புதன்கிழமை            வேதாகமத் தியானம் - எண்:- 1,311

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." ( லுூக்கா 3 : 8 )

தேவன் விரும்புகின்ற வாழ்க்கை இருக்கின்றதோ இல்லையோ பல கிறிஸ்தவர்களுக்குள்ளும் தங்களது சபைகளைக்குறித்த வீண் பெருமைமட்டும் அதிக அளவு உள்ளது.  கிறிஸ்துவுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கை இல்லாமல் இத்தகைய வீண் பெருமைகள் எதற்கும் உதவாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

யூதர்களுக்கு ஒரு மத வைராக்கியம் இருந்தது. தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் தேவன்மேல் ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசமோ அவர்களுக்கு இல்லை. அவர்கள் கருத்துப்படி ஆபிரகாம்தான் மேலான தகப்பன்.  எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், "எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் " ( யோவான் 8 : 53 ) என்றார்கள்.

இன்றும் இப்படி வீண் பெருமைபேசும் மனிதர்கள் உண்டு. மற்ற சபைப் பிரிவினரைவிட தங்களுக்குள் மேன்மையாக இருக்கும் காரியங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இப்படிப் பேசும் பலரிடமும் தேவன் விரும்பும் நற்குணங்கள் இருப்பதில்லை. மூன்றாம்தர உலக மனிதர்களைப்போல குடித்து, லஞ்சம் வாங்கி, கெட்டவார்த்தைகள்பேசி, தகாத உறவுகள்கொண்டு, சபைத் தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளைவிடக் கேவலமாக நடந்துகொண்டு  வாழும் இவர்கள் தங்களது சபையைக்குறித்து மேன்மையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

இதுபோலவே அன்றைய யூதர்கள் ஆபிரகாமைப்பற்றி பெருமைபேசுபவர்களாக இருந்தனர். இத்தகைய மனிதர்களைப்பார்த்துத்தான் இன்றைய வசனம் கூறுகின்றது,  "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." என்று. 

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தைக் கூறிய யோவான் ஸ்நானகன் தொடர்ந்து கூறுகின்றார், "இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( லுூக்கா 3 : 9 ) அதாவது மனம்திரும்பி கனிகொடுக்கின்ற வாழ்க்கை இல்லாமல் இருக்குமேயானால் நல்ல கனி கொடாத மரங்களை வெட்டி வீழ்த்துவதுபோல வெட்டி வீழ்த்தப்படுவாய். கோடரியானது அருகே தான் வைக்கப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது சபை மேன்மையோ, நமது சொந்த பதவி, அதிகார பலமோ நம்மை இறுதி நாட்களில் இரட்சிக்காது. கனியுள்ள வாழ்க்கை வாழும்போது மட்டுமே நாம் தேவனுக்கு உகந்தவர்களாக முடியும்.  அது மட்டுமே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராகக்  கொண்டுச் செல்ல முடியும்.

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  
 

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ?

 'ஆதவன்' செப்டம்பர் 10, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,310


".............அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை". ( தானியேல் 4 : 35 )

வானத்தின் சேனைகள் என்று இங்குக் குறிப்பிடப்படுவது வான்மண்டல கோள்கள் மற்றும் விண்மீன்களைக் குறிக்கின்றது. வானத்துக் கோள்கள் அங்கு சும்மா இருக்கவில்லை, மாறாக ஒன்றையொன்று தங்களது ஈர்ப்புவிசையால் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி நடத்துபவர்தான் நமது தேவனாகிய கர்த்தர். 

பூமி அந்தரத்தில் குறிப்பிட்ட இலக்குக்குள் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு ஆதாரம் வேண்டும். அது கிரகங்களின் ஈர்ப்புவிசையால் (Magnetic Force) தான் நடைபெறுகின்றது. இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த உண்மையினை ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பரிசுத்தவான்களுக்குத் தேவன் வெளிப்படுத்தியுள்ளார். எனவேதான் எந்தவித நவீன கருவிகள் இல்லாதகாலத்திலேயே இதனை அவர்கள் கண்டுணர்த்து கூறமுடிந்தது.  

"வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" ( யோபு 38 : 31 -33 ) என்று தேவன் கேட்கின்றார்.  

அதாவது இப்படி இந்தக் கிரகங்கள், ராசிகள்  பூமியை நிலைநிறுத்த உதவுகின்றன. (பூமியிலுள்ள மக்களையல்ல) இவை செய்யும் எந்த காரியத்தையும் மனிதனால் செய்ய முடியாது. இதனையே மேற்படி வசனத்தில் தேவன், "அறிவாயோ? திட்டம்பண்ணுவாயோ? நீ இணைக்கக்கூடுமோ? கட்டுகளை அவிழ்ப்பாயோ?  வரப்பண்ணுவாயோ? வழிநடத்துவாயோ?" என்று கேட்கின்றார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை தேவனால்தான் முடியம்  என்றுதான் இருக்கமுடியும். 
 
இப்படி தேவன்  தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் மக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. இப்படி நாம் வெறும் தூளும் துரும்புமாக இருப்பதால் அவருக்கு அஞ்சி வாழவேண்டியது அவசியம். அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. ஒருவனும் இல்லை என்று கூறும்போது எந்த பரிசுத்தவானும் இல்லை என்றுதான் பொருள். 

எனவேதான் நாம் தேவ கிருபையினைச் சார்ந்துகொள்ளவேண்டியது அவசியம். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் அவரது கிருபையைச் சார்ந்தகொண்டு அவரது சித்தத்தின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Saturday, August 31, 2024

ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே பற்றிக்கொள்வோம்.

 'ஆதவன்' செப்டம்பர் 09, 2024. திங்கள்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,309

"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன." ( யோவான் 6 : 63 )

தேவ வசனங்கள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன என்று இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உயிருள்ளவை. எனவேதான் அவை மரித்தவனுக்கு உயிர்கொடுக்கும் வல்லமையும் நோய்களைக் குணமாக்கும் வல்லமையும் கொண்டுள்ளன. அதுபோலவே அந்த வார்த்தைகள் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வையும் கொடுக்க வல்லவை. 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே." ( யோவான் 6 : 68 ) என்று இயேசு கிறிஸ்துவிடம் கூறினார். 

இயேசு கிறிஸ்து கூறுவதுபோல ஆவியே உயிர்ப்பிக்கிறது, அவர் கூறும் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது. அதாவது மாம்சகாரியங்கள் ஒன்றுக்கும் பயனற்றவை. ஆனால் இன்று பலரும் ஆவிக்குரிய காரியங்களைவிட மாம்சகாரியங்களையே தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தேவனது ஜீவனுள்ள வார்த்தைகளைப் புறக்கணிக்கின்றனர். வார்தையைப் புறக்கணிப்பது என்பது  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே புறக்கணிப்பதாகும். 

காரணம், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் தேவனது வார்த்தை என்று வேதம் கூறுகின்றது. ஆம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே, மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது நமது ஆண்டவராகிய இயேசுவை அறிவிப்பதுதான். அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.' ( 1 யோவான்  1 : 1 ) என்று. எனவே, கிறிஸ்துவையும் அவர் தரும்  நித்தியஜீவனையும் அறிவிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக அறிவிப்பது அவரைப் புறக்கணிப்பதாகும்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; அந்த வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன என்று கூறியுள்ளபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றார். அவரைப் நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நாம் நமது மாம்சத்தில் எடுக்கும் முடிவுகள் ஒன்றுக்கும் உதவாதவை. 

எனவே, ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே வாழ்வில் பற்றிக்கொள்வோம்.  ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்ற அவரே நமக்கு நித்திய ஜீவனையும் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

மாறுபாடுள்ளவனுக்கு அவர் மாறுபாடுள்ளவர்

 'ஆதவன்' செப்டம்பர் 08, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,308


"தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்." ( சங்கீதம் 18 : 25, 26 ) 

கடவுளை நாம் எப்படிப் பார்க்கின்றோமோ அப்படியே அவர் நமக்குத் தோன்றுவார். பணத்தை அடிப்டையாகக் கொண்டு தேவ ஆசீர்வாதத்தினைத் தேடுபவர்களுக்கு அவர் வெறும் பணம் தரும் தெய்வமாகவும் ஆத்தும இரட்சிப்பைத் தேடுபவர்களுக்கு அவர் ஆத்தும இரட்சகராகவும் தோன்றுவார். 

திருடச் செல்பவனும் தனது மனதில் தேவனைத் தன்னைப்போல ஒரு திருடனாக எண்ணுவதால் திருடும்போது யாரும் தன்னைக் கண்டு பிடித்துவிடக்கூடாது என்றுதான் வேண்டுதல் செய்கின்றான். இப்படித்  தன்னை ஒருவன் எப்படிப்பட்டவராக எண்ணுகின்றானோ அப்படியே அவனுக்குத் தோன்றுவார். ஆம்,   மாறுபாடுள்ளவனுக்கு  அவர் மாறுபடுகிறவராகத்  தோன்றுவார். எனவே தான் தேவனைத் துன்மார்க்கர்கள் எளிதில் கடவுளை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. இந்த உலகத்தில் ஊழல் செய்யும் ஊழல்வாதிகள், எத்தர்கள், துன்மார்க்க அரசியல்வாதிகள் பலரும் பக்திக் செயல்பாடுகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ளனர். காரணம், அவர்கள் பார்வைக்கு கடவுளும் அவர்களைப் போன்றவர்தான்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும் தோன்றுவீர்"  என்று.  ஆம் அன்பானவர்களே, நாம் தேவனது தயவு, உத்தமம், பரிசுத்தம் அல்லது புனிதம் இவற்றை அடையவேண்டுமானால் தேவனை நாம் அப்படிப்பட்டவராக எண்ணி வாழவேண்டியது அவசியம். 

இன்று கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் தேவனை உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவே மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றனர். எனவே அவர்களுக்கு அவர் அந்த மட்டுமே வெளிப்படுவார். நித்தியஜீவனை அளிப்பவராக தேவனைப் பார்பவர்களுக்கோ நித்திய ஜீவனை அளிப்பார். 

ஆம், "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்." ( ரோமர் 2 : 6 - 8 ) என்று வாசிக்கின்றோம். 

தேவன் தன்னை எவரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது கிடையாது. எனவே அவரவர் குணங்களுக்கேற்ப தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும்; புனிதனுக்கு புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுகின்றார்.  எனவே, அன்பானவர்களே, பாவ மன்னிப்பையும் பரிசுத்த வாழ்வையும் நித்தியஜீவனையும் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் தன்னை உண்மையாக வெளிப்படுத்தி அவர்களுக்கு இவைகளை அருளுகின்றார்.  

"..............நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். " ( லுூக்கா 6 : 38 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

Friday, August 30, 2024

சந்தேகம்

 'ஆதவன்' செப்டம்பர் 07, 2024. 💚சனிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,307


"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இருமனமுள்ளவர்கள் உலக காரியங்களில் மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்விலும் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக தோல்வி வாழக்கையையே சந்திப்பார்கள். உலக காரியங்களில் சிலர் ஒரு வேலையினைச் செய்யத் துவங்குவார்கள். பின்னர் மற்றவர்களையும் தங்களது செயலில் ஏற்படும் பிரச்சனைகளையும் கண்டு மனம்மாறி வேறு ஒரு செயலைச் செய்யத் துவங்குவார்கள். இத்தகைய மனிதர்கள் நிலையற்றவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இதற்குக் காரணம் சந்தேகம். ஒருவேளை நாம் செய்யும் இந்தச் செயல் நஷ்டத்தில் முடியுமோ? என்று சந்தேகப்படுவது. ஆவிக்குரிய வாழ்விலும் பலர் இப்படியே இருக்கின்றனர். எப்போதும் எதெற்கெடுத்தாலும் சிலர் சந்தேகத்திலேயே இருப்பார்கள். நன்றாக ஜெபிப்பார்கள், ஆனால் ஒருவேளை நாம் ஜெபித்தபடி நடக்காவிட்டால் என்னசெய்வது? என்பதே இவர்களது எண்ணமாக இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 ) என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறுகின்றார். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தின் முன்பு யாக்கோபு கூறுகின்றார், "சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 6, 7 ) என்று. ஆம் அன்பானவர்களே, சந்தேகம் ஒரு பெரிய நோய். உலக காரியங்களிலும் ஆவிக்குரிய காரியங்களிலும் மனிதர்களின் அழிவுக்கு சந்தேகம் இட்டுச்செல்லும். 

எனவே நாம் ஜெபிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சந்தேகப்படாமல் ஜெபிப்பது. எனது ஜெபத்துக்கு நான் விரும்பும் பதில் வந்தாலும் வராவிட்டாலும் நான் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடமாட்டேன் என்று உறுதியாக இருப்பது. இந்த உறுதி இருக்குமானால் நாம் கலங்கிடமாட்டோம். நிலையற்றவர்களாக அலைந்து திரியமாட்டோம். இன்று கிறிஸ்தவர்கள் பலர்கூட தங்களுக்குச் சில பிரச்சனைகள் வரும்போது  பல்வேறு மூட நம்பிக்கைச் செயல்பாடுகளையும் பிறமதத்தினர் கையாளும் காரியங்களுக்கும் அடிமைகளாக உள்ளனர். இது தவறல்ல, இந்தியன் கல்ச்சர் என்று கூறித் தங்கள் தப்பிதங்களை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர். 

இத்தகைய இருமனதுள்ளவர்களைப் பார்த்து வேதம் கூறுகின்றது,  "நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்." ( 1 இராஜாக்கள் 18 : 21 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Thursday, August 29, 2024

ஞானமுள்ளவர்களாக பிதாவின் சித்தம் செய்வோம்

 'ஆதவன்' செப்டம்பர் 06, 2024. வெள்ளிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,306


"நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 15, 16 )

இந்த உலகத்தில் நமக்கு வாழக்கொடுக்கப்பட்ட நாட்கள் குறைவு. எனவே அந்தக் குறைந்த  நாட்களை நாம்  நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஏன் கவனமாக நடக்கவேண்டும்? இந்த உலகத்தின் நாட்கள் பொல்லாதவைகளாய் இருக்கின்றன. காரணம் இந்த உலகம் பொல்லாங்கனுக்குள்  கிடக்கின்றது. "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  5 : 19 ) என்று கூறுகின்றார் யோவான். 

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம், ஆனால்  உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் (பிசாசு அல்லது சாத்தானின் கையில்)  கிடக்கிறது. இந்த முரண்பாடே பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே நாம்  ஞானமற்றவர்களாய் இருக்காமல்  ஞானமுள்ளவர்களாய்க் கவனமாய் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.   

ஞானமில்லாதவன் அறிவில்லாமல் சில காரியங்களைச் செய்வதைப்போல நாமும் செய்துவிடக்கூடாது என்கிறார் அப்போஸ்தலராகிய பவுல். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறுகின்றார்,  "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) அதாவது ஞானமுள்ளவன் தன்னைக்குறித்த தேவனது சித்தம் இன்னதென்று அறிந்தவனாக இருப்பான். ஞானமில்லாதவனுக்கு அந்த அறிவு இருக்காது. 

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. அந்தச் சித்தத்தைச் செய்வதே தேவனுக்கு உகந்ததாகும். தேவ சித்தத்தை மீறும்போது நாம் பாவம் செய்தவர்களாகின்றோம். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "இதனிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்......." ( கொலோசெயர் 1 : 9 ) என்று கொலோசெய சபை விசுவாசிகள் தேவ சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட ஜெபிப்பதாகக் கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும் தான் சொல்லிக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். ஆம் அன்பானவர்களே, பிதாவின் சித்தம் பரலோகத்தில் எப்படி அவரது விருப்பப்படி செய்யப்படுகின்றதோ அதுபோல பூமியில் நாம் அதனை நிறைவேற்றவேண்டும்.  எனவே, நாட்கள் பொல்லாதவைகளானதால் நமது குறுகிய வாழ்நாள்  காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஞானமுள்ளவர்களாக நம்மைக்குறித்த பிதாவின் சித்தம் அறிந்து செயல்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Wednesday, August 28, 2024

ஆதாம் ஏவாள் புறக்கணித்த நித்தியஜீவன்

 'ஆதவன்' செப்டம்பர் 05, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,305


"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 14 ) '

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம்வரை கோர்வையாக நாம் பார்ப்போமானால் மனிதர்கள் தன்னைப்போல பரிசுத்தமாக வாழ்ந்து நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்க தேவன் தொடர்ந்து எடுத்தச்  செயல்பாடுகளை நாம் பார்க்கலாம்.  ஆதியாகமத்தில் ஜீவவிருட்சமாக  நித்தியஜீவன் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேவனாகிய கர்த்தர், "...தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 ) ஆனாலும் அவர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ண மட்டுமே தடைசெய்திருந்தார். தோட்டத்தின் நடுவிலே இருந்த ஜீவவிருட்சத்தைக்  குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தை விரும்பவுமில்லை அதனை அடைய விரும்பவுமில்லை. ஆனால் தேவன் தடைசெய்த மரத்தின் கனியைத் தின்று தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். 

ஜீவனுக்குள் பிரவேசிக்க பரிசுத்தம் வேண்டும். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

தேவ கட்டளையை மீறியபோது ஆதாமும் ஏவாளும் உண்மையில்லாதவர்களாக மாறிவிட்டனர். எனவே, அதுவரை பாவம் செய்யாமல் இருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் திறந்திருந்த ஜீவவிருட்சத்துக்குச் செல்லும் வாசல் அடைக்கப்பட்டது. இதனை,  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 ) என்று வாசிக்கின்றோம். 

ஆதாமும் ஏவாளும் இழந்துபோன இந்த பாக்கியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் வழங்க விரும்புகின்றார். அதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கவே அவர் பாடுபட்டு மரித்து நித்திய மீட்பினை உண்டுபண்ணினார்.  ஆம், அவரே வாசல். அவர் வழியாகவே நாம் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியும். இதனையே, "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே,  கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய இந்த மீட்பின் பாதையினைப் புறக்கணிக்காமல் வாழ்வோம். ஆதாம் ஏவாள் சுவைக்க மறுத்த ஜீவவிருட்சத்தின் கனியினை உண்டு மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Sunday, August 25, 2024

ஒருவரது குறையை மற்றவர்களிடம் .....

 'ஆதவன்' செப்டம்பர் 04, 2024. 💚புதன்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,304


"உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன். " ( யோவான் 8 : 26 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரு முக்கியமான குணத்தைக்குறித்துப்  பேசுகின்றார். மனிதர்களாகிய நாம் பல வேளைகளில் ஒருவரைக்குறித்து முழுவதும் அறியாமல் அவர்களைப் பற்றிப் பல காரியங்களைப் பேசவும் அவர்களிடம் நாம் காணும் குறைகளைவைத்து அவர்களை நியாயம்தீர்க்கவும் செய்கின்றோம். 

ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லோரையைப் பற்றியும் அவர்களது மனத்தின் எண்ணங்களைக்குறித்தும் நன்கு அறிந்திருந்தார். இதனை நாம், "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் அவர் மனிதர்களைப்போல ஒருவரது குறையை மற்றவர்களிடம் கூறிக்கொண்டிருக்கவில்லை.  

இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்." என்று. அதாவது, உங்களைக் குறித்துப் பேச உங்களைப்பற்றி  பல காரியங்கள் எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைப் பேச விரும்பவில்லை, மாறாக என்னை அனுப்பின சத்தியமுள்ள பிதாவாகிய தேவன் என்னிடம்  சொல்ல நான் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்".

ஆம் அன்பானவர்களே, நாம் பேசவேண்டியக்  காரியங்கள் இப்படியே இருக்கவேண்டும். மற்றவர்களைக்குறித்து அரையும் குறையுமாக நாம் கேள்விப்பட்டவற்றைப் பேசுவதையும் அதன் அடிப்படையில் அவர்களை நியாயம்  தீர்ப்பதையும் விட்டுட்டு தேவனுக்கேற்ற காரியங்களை மட்டுமே பேச முயற்சியெடுக்க வேண்டும்.  பிறரைக்குறித்த தேவையற்ற பேச்சுக்கள் மனிதர்களிடையே சண்டையையும் பிரச்சனைகளையுமே வளர்க்கும். 

ஒருவரைக்குறித்து நாம் சில காரியங்களை எளிதில் பேசிவிடலாம். ஆனால் நாம் பேசியது தவறு என்று பின்னர் நாம் உணர்ந்துகொண்டாலும் நாம் மற்றவர்களிடம் சென்று நான் இன்னாரைக்குறித்து பேசியது தவறு என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. காரணம் நாம் தவறுதலாகக் கூறிய அந்தச் செய்தி அதற்குமுன் பலரிடம் பரிமாறப்பட்டிருக்கும். அதாவது நாம் ஒருவரது நற்பெயருக்கு கெடுதல் உண்டாக்கியிருக்கின்றோம் என்று பொருள். 

எனவே, மற்றவர்களைக்குறித்து நாம் கேள்விப்படுகின்ற காரியங்களை நாம் நமக்குளேயே வைத்துக்கொள்வது நல்லது. இதனால்தான் வேதம் கூறுகின்றது, "தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே." ( நீதிமொழிகள் 20 : 19 ) அவர்களோடு கலவாமல் இருப்பது மட்டுமல்ல; நாமும் அதுபோல தூற்றிக்கொண்டும் இரகசியக்களை வெளிப்படுத்திக்கொண்டும் வாழாமல் தேவனுக்குச் சித்தமானவைகளை மட்டுமே பேசுபவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Saturday, August 24, 2024

உன்னதத்திலிருந்து வரும் பெலன்

 'ஆதவன்' செப்டம்பர் 03, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,303


"என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்" ( லுூக்கா 24 : 49 )

பிதாவான தேவன் நம்மை வழிநடத்தும் ஆவியானவரை நமக்கு வாக்களித்துள்ளார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமூலம் ஆவியானவர் நமக்கு அருளப்படுகின்றார். "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். இதனையே, "என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆவியானவர் நமக்குள் வரும்போதுதான் நமக்கு பெலன் கிடைக்கின்றது. இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு உலகத்தில் வாழ்ந்தபோது கூறியது. அதுபோல தான் மரித்து உயிர்த்தபோதும் இதனையே கூறினார். "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) என்று உயிர்த்த இயேசு சீடர்களிடம் கூறினார். 

"எருசலேம் நகரத்தில் இருங்கள்" என்றும்  "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. எருசலேம் என்பது பரிசுத்த நகரம். அதாவது நீங்கள் உங்கள் பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் எனது வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 
 
அன்பானவர்களே, நாம் இங்குக் கவனிக்கவேண்டியது பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் காத்திருக்கும் அனுபவம். நாம் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டுமானால் இந்தக் காத்திருத்தல் அவசியமாய் இருக்கின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுவது ஆவிக்குரிய வாழ்வின் முதல்படிதான். உடனேயே கிறிஸ்துவை அறிவிக்கப்போகின்றேன் என்று புறப்பட்டுவிடக்கூடாது. நமக்கு உன்னத பெலன் தேவையாய் இருக்கின்றது. அந்த பெலன் ஆவியானவரால் நமக்கு அருளப்படுகின்றது. அந்த பெலன் தான் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவக்கூடியது. 

எனவேதான் இயேசு கிறிஸ்து சீடர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) ஆம்,  எருசலேம் நாம் இருக்கும் பரிசுத்த நகரம், நமது சொந்த வீடு, குடும்பம். முதலில் நமது சாட்சி அங்கு இருக்கவேண்டும். தொடர்ந்து அடுத்திருக்கும் யூதேயா, அதாவது நம்மைச் சுற்றியிருக்கும் சமூகம் / ஊர்,  அடுத்து சமாரியா எனும் பிற இனத்து மக்கள்.  இப்படி நமது சாட்சியுள்ள வாழ்க்கை விரிவடைந்து இருக்குமானால் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வில் பூமியின் கடைசி எல்லைவரை சாட்சிகளாய் இருக்க முடியும். 

சொந்த வீட்டிலும், ஊரிலும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலும் சாட்சிக்கேடான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது.   ஆம் அன்பானவர்களே, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி எருசலேமில் தரித்திருந்து ஆவிக்குரிய பெலனடைவோம். அதன்பின்னர் கிறிஸ்துவை அறிவிக்க நமக்கு பெலன் கிடைக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Friday, August 23, 2024

ஜாதி பாகுபாடு

 'ஆதவன்' செப்டம்பர் 02, 2024. திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,302



"...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

நமது நாட்டின் சாபக்கேடான விஷயங்களில் ஒன்று ஜாதி பாகுபாடு. ஜாதி வெறி இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருப்பது மறுக்கமுடியாத நிஜம். ஜாதி பாகுபாட்டைக் கொண்டுசெயல்படும் கிறிஸ்தவ ஆலயங்கள், கல்லறைகள் மட்டுமல்ல ஜாதி அடிப்படையில் உயர் பதவிகளுக்கு ஊழியர்களை நியமனம் செய்யும் அவலநிலையும்  கிறிஸ்தவத்திலும் மற்ற சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கின்றது. ஜாதி அடிப்படையில் மறைமாவட்டங்களைப் பிரித்து ஆட்சிசெய்வதையும் நாம் பார்க்கின்றோம். 

ஆனால் இன்று இவைகளை மறைத்து தங்களிடம்  குறையில்லாததுபோல கிறிஸ்தவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜாதிவெறி பாவம் என்பதும் அது தேவனுக்கு ஏற்பில்லாத செயல் எனும் எண்ணமும்  கிறிஸ்தவத்  தலைவர்களுக்கும் இருப்பதில்லை. தேவன் இதனை அப்போஸ்தலரான பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். எனவே அவர் கூறுகின்றார், "...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று. 

தேவன் ஆள்பார்த்தும் ஜாதி இனம் பார்த்தும் செயல்படுபவரல்ல. ஒருவன் தனக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றானா இல்லையா என்பதே அவரது அளவுகோல். ஆம், "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்கிறார் பேதுரு. 

தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்கின்றவன், நீதியைச் செய்யாதவன் எனும் இரு பிரிவுகள் தான் தேவனுக்கு உண்டுமேத்தவிர ஒருவர் பிறந்த ஜாதி இனத்தின் அடிப்படையில் அவர் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படியிருந்தும் நீதியைச் செய்யாதவன் மனம் திரும்பி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழத் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது தேவன் அவனையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஏற்றுக்கொள்கின்றார். 

கிறிஸ்தவம் வெறும் இரண்டே கட்டளைகளுக்குள் தான் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்து கூறினார், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக." ( மத்தேயு 22 : 37 - 39 )

அதாவது, தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவதும் தன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இணையான கட்டளைகள். தன்னைப்போல பிறனிடத்தில் அன்புகூருபவன் மற்றவனைப் பிரித்துப் பார்க்கமாட்டான். ஆனால் இந்த இரண்டு கட்டளைகளில் ஒன்றில் தவறுகின்றவன் இரண்டிலும் தவறுகின்றான். 

எனவே அன்பானவர்களே, ஜாதி பாகுபாடுபார்ப்பவன் கிறிஸ்தவத்தில் எந்த உயர் பதவியில் இருபவனாக இருந்தாலும் அவன் தேவனுக்கு அருவெறுப்பானவன். அத்தகைய அருவெறுப்பானவன் மக்களை நல்வழியில் நடத்திட முடியாது. இதுபோலவே, ஒருவன் சாதாரண கிறிஸ்தவ விசுவாசி என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அவன் கிறிஸ்தவ விசுவாசி கிடையாது. 

எனவே, எந்த மனிதரையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருப்போம். அப்படிச் சொல்லிக்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்வோமானால் இறுதிநாளில் தேவன் நம்மையும்  அசுத்தன் என்று கூறிப் புறம்பே தள்ளுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்