DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, September 04, 2024

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம்

 'ஆதவன்' செப்டம்பர் 12, 2024. வியாழக்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,312

"என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்." ( சகரியா 14 : 5 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தனது பரிசுத்தவான்கள் புடைசூழ அவர் உலகிற்கு வரும்போது நாம் அவருக்கு ஏற்றத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் அவர் நம்மில் தனக்கு உகந்தவர்களாக வாழ்பவர்களை அவரோடுகூட அப்போது எடுத்துக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது இதுகுறித்து பல்வேறுமுறை உவமைகளாகக் கூறியுள்ளார்.  அவற்றில் பத்துக் கன்னியர்  உவமை (மத்தேயு 25), திருமண ஆடை இல்லாத மனிதனைக் குறித்த உவமை (மத்தேயு 22) நாம் பலமுறை படித்து அறிந்தவையே. 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து அவர் உயிர்த்து பரலோகம் சென்றவுடனேயே சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டது. "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 ) என வானதூதர் அவர்களுக்கு அறிவித்தார். 

இயேசு கிறிஸ்துவும் தான் உயிரோடு இருந்த நாட்களில் இதனை வெளிப்படுத்தினார். "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." ( மத்தேயு 24 : 29, 30 ) என்றார் அவர். 

ஆனால் அந்த நாள் என்று வரும் என்று நமக்குத் தெரியாது. "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்." ( 2 பேதுரு 3 : 10 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. மேலும், "இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!" ( 2 பேதுரு 3 : 11 ) என்று அவர் கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் வருவதற்குமுன் என்னென்ன நிகழும் என வேதாகமம் கூறும் தீர்க்கதரிசனங்கள் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல பரிசுத்த நடக்கையுள்ளவர்களாய்  நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். மணவாளனாகிய அவர் வரும்போது அவரோடுகூட பரலோகராஜ்யத்தில் நுழைய முடியாமல் நாம் புறம்தள்ளப்பட்டுவிடக்கூடாது. எனவே எச்சரிக்கையாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.  ஆம், "தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; " ( 2 பேதுரு 3 : 12 )

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

No comments: