DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, February 24, 2026

🏫 வேதாகமத் தியானம் - பெப்ரவரி 2026

 "விதைகளின் உள்ளே" 🌳  

📖  வேதாகமத் தியானம் எண் - 1821                                                    
🔆 ஆதவன் 01.02.2026 ஞாயிறு       

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்." ( கலாத்தியர் 1: 8)

ஆரம்பகாலத்தில் கலாத்திய திருச்சபையில் ஏற்பட்டக் குழப்பமான போதனைகளைத் தெளிவுபடுத்த விரும்பிய பவுல், தவறான போதகர்கள்மீது கோபத்தில் இன்றைய தியான வார்த்தைகளைச் சாபமாகக் கூறுகின்றார். 

யூதர்கள் மோசே அளித்த பல்வேறு சட்டங்களையும், பல்வேறு சடங்குகளையும் பின்பற்றிவந்தனர். யூதர்களது இந்த முறைமைகளைக் கடைபிடித்தால் மட்டுமே ஒருவருக்கு மீட்பு கிடைக்கும் என அவர்கள் நம்பினர். அப்படியே போதித்துவந்தனர். இத்தகைய போதகர்கள் கலாத்திய திருச்சபை மக்களையும் இந்தத் தவறான போதனையால் குழம்பினர். எனவே அப்போஸ்தலரான பவுல் அத்தகைய தவறான போதனை செய்பவர்களை சபிக்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, அப்படி மனிதர்களை மீட்படையச் செய்ய யூத சட்டங்களும் சடங்குகளுமே போதுமென்றால் கிறிஸ்து மரித்திருக்கவேண்டாமே? அவர் மரித்ததே வீணல்லவா? என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இதனையே, "நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால்,   கிறிஸ்து   மரித்தது   வீணாயிருக்குமே."  ( கலாத்தியர் 2: 21) என்று வாசிக்கின்றோம். 

ஆம், இன்று யூதர்கள் அல்லாதவர்களும் இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் மீட்கப்படுகின்றனர்.  இன்று நாமும்  கிறிஸ்தவர்களாக; அவரால் மீட்கப்பட்டவர்களாக  மாறியுள்ளோம். இப்படி நாம் மீட்கப்பட்டதற்கு காரணம் நாம் யூதர்களது சட்டங்களையும் சடங்கு முறைமைகளையும் பின்பற்றியதால் அல்ல. கிறிஸ்துவின் கிருபையினால்தான். 

இன்றும் கிறிஸ்தவத்தில் இதுபோல நடப்பதை நாம் காணலாம். ஒவ்வொருத்  திருச்சபைப் பிரிவுகளுக்கும் தங்களுக்கென்று தனித்தனி சட்டங்களை வகுத்து வைத்துள்ளனர். அவற்றைக்  கடைபிடித்தால்தான் மீட்பு உண்டு என்கின்றனர். இத்தகைய போதனைகள் கிறிஸ்துவின் கிருபையினை அவமாக்குகின்றன. நாம் எந்த சட்டங்கள் மூலமும் இரட்சிக்கப்படுவதில்லை. கிறிஸ்துவே நம்மை இரட்சிப்பவர். நாம் அவரது கிருபையினால் இரட்சிக்கப்படுகின்றோம். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு   இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" (எபேசியர் 2:8)

எனவே, இதற்கு மாறான உபதேசத்தை எவர் செய்தாலும் அது கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரட்டுவதாகும்.  "வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல." ( கலாத்தியர் 1: 7) எனவே அன்பானவர்களே, குறிப்பிட்டச்  சட்டங்கள், சடங்குகளைக் கடைப்பித்தால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு உண்டு என்று கருதி அவைகளைக் கடைப்பிடிப்பதில் முயலாமல், கிறிஸ்துவின் கிருபைக்காகக் காத்திருப்போம். அவரே நமது மீட்பும் இரட்சிப்புமானவர்.

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1822
🔆 ஆதவன் 02.02.2026 திங்கள்        

"அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6: 56)

இன்றைய தியான வசனம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணமளிக்கும் வல்லமையினைக் குறிப்பதாக உள்ளது. அவரைத் தொட்ட சிலர் என்று கூறாமல், அவரைத் தொட்ட யாவரும் குணமானார்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. 

இன்றைய தியான வசனத்தை முழுமையாக வாசிக்கும்போது, "அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6: 56) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இன்று நாமும்கூட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவரை நோக்கி ஜெபித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நமக்கு நாம் வேண்டிய குணம் இதுவரைக் கிடைக்காமல் இருக்கலாம். எனவே நாம் மனம் சோர்ந்துபோய்விடவேண்டாம். அவரைத் தொடுவதற்கு, சில காரியங்களை நாம் செய்யவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

அவரைத் தொடுவது என்பது ஆழமான அர்த்தமுள்ளதாகும். வெறுமனே அவரைநோக்கி ஜெபிப்பதல்ல, மாறாக நாம் அவரைத் தொடவேண்டும்; அவரது ஆடையின் ஓரத்தைத் தொடுவதுபோல அவரது இருதயத்தைத் தொடவேண்டும். நமது செயல்பாடுகள் விசுவாசம் எனும் கரம்கொண்டு அவரது இருதயத்தைத் தொடுவதாக இருக்கவேண்டியது அவசியம். "இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது  என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்." (மத்தேயு 8:13) என்று வாசிக்கின்றோம். 

மேலும் சில இடங்களில் தன்னிடம் குணம்பெற வந்தவர்களிடம், "என்னால் இது கூடுமென்று விசுவாசிக்கிறாயா?" என்று அவர் கேட்பதை நாம் வாசிக்கின்றோம். அசுத்த ஆவிபிடித்த ஒருவனை சீடர்களால் குணமாக்க முடியாதபோது இயேசு குணமாக்கினார். அப்போது முதலில் அசுத்த ஆவிபிடித்திருந்த அவனது தகப்பனிடம் இயேசு, "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்." (மாற்கு 9:23)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த நாட்களில் "அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்" இன்று நாம் அவரை நேரடியாகக் காணவில்லை. எனவே, நாம் விசுவாசக் கரம்கொண்டு அவரைத் தொடவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. "அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்." ( யாக்கோபு 5: 15) என்று நாம் வாசிக்கின்றோம். 

மேலும், இன்று நாம் குணமடைய நமது பாவங்களை அறிக்கையிடவேண்டியதும், நாம் யாருக்காவது எதிராகப் பாவம் செய்திருந்தால் முதலில் அவர்களிடம் ஒப்புரவாகி, பின்னர் ஜெபிக்கவேண்டியதும்  அவசியமாய் இருக்கின்றது. "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5: 16) ஆம் அன்பானவர்களே, தேவனிடமும் பிறரிடமும் ஒப்புரவாகும்போது நாம் அவரது இருதயத்தைத் தொடுகின்றோம்; நீதிமான்களாகின்றோம். அப்போது நமது ஜெபம் மிகவும் பெலனுள்ளதாக மாறுகின்றது. 

விசுவாசக் கரம்கொண்டு கிறிஸ்துவைத் தொடுவோம். அவரிடம் முதலில் நமது பாவங்களுக்கு மன்னிப்பை வேண்டுவோம்;  மனிதர்களிடம் ஒப்புரவாகுவோம். அப்போது நமது விண்ணப்பங்களை தேவன் கேட்டு நமக்கு நாம் விரும்புகின்றபடி நோய்களிலிருந்து சுகம் தருவார். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1823
🔆 ஆதவன் 03.02.2026 செவ்வாய் 

"நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்." ( பிரசங்கி 5: 1)

நம்மில் பெரும்பாலானவர்கள் "ஞாயிறு கிறிஸ்தவர்களாக" இருக்கின்றோம். மட்டுமல்ல, ஆலய வழிபாடுகளுக்கு முன்னுரிமைகொடுத்து அதுவே கிறிஸ்தவவாழ்வு என நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம். இத்தகைய செயல்பாடுகள் தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  

ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளுமுன் நமது நடைமுறைகள் தேவனுக்கு ஏற்புடையவைகளாக மாறவேண்டியது அவசியம். அதனையே, "நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. மட்டுமல்ல, அப்படித்  தேவனுக்கு  ஏற்புடையவர்களாக வாழாமல் வெறுமனே ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வது மூடத்தனம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.

இதனையே, "மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, மூடனைப்போல பலிசெலுத்த ஓடாதே முதலில் தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடு என்று இந்த வசனம் கூறுகின்றது. 

கர்த்தருக்கு எதிரானச்  செயல்பாடுகளில் ஈடுபட்டுக்  கர்த்தருக்குப் பலி செலுத்திய சவுலைபார்த்து சாமுவேல் கூறினார், "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." (1 சாமுவேல் 15: 22) ஆம் அன்பானவர்களே, ஆலயங்களுக்குச் சென்று பலியிடுவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிதலும் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்படிவதும்தான் முக்கியம். 

இன்றைய தியான வசனம் இறுதியாகச் சொல்கின்றது, "தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்" என்று. அதாவது மனிதர்கள் இப்படித் தேவனது வார்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்துகொண்டு ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வது   தீமையென்று அறியாதிருக்கிறார்கள். இன்று ஆலயத் திருவிழாக்கள், ஆசனப்பண்டிகைகள், ஆலயப்  பிரதிஷ்டைப் பண்டிகைகள்  நடைபெறும் விதத்தையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் பணபலம் படைத்தவர்களது செயல்பாடுகளையும் பார்க்கும்போது இது விளங்கும். ஆம், இவர்கள் தாங்கள் செய்கிறது தேவனுக்கு எதிரான தீமையான காரியம் என்று அறியாதிருக்கிறார்கள்; மட்டுமல்ல, தேவானையும் தங்களைப்போன்ற ஒருவராக எண்ணிக்கொள்கின்றனர் என்பது விளங்கும்.

"ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து." (மத்தேயு 5;23,24) காணிக்கை மட்டுமல்ல, தேவனுக்குமுன் வரும்போது இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்வூட்டுவதாக இருக்கவேண்டும்; தேவனுக்குமுன் மனத்தாழ்மை அவசியம்.  எனவே அன்பானவர்களே, தேவாலயத்துக்குப் போகுமுன் முதலில் நமது நடைமுறைகளை அவருக்கு ஏற்றதாக மாற்றுவோம். மூடர்களைப்போல அல்லாமல் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பவர்களாக இருந்துகொண்டு ஆராதனைகளிலும் ஆலய காரியங்களிலும் கலந்துகொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1824
🔆 ஆதவன் 04.02.2026 புதன்  

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1)

நேற்றைய தியானத்தில் நாம் தேவாலயத்துக்கு எந்த மனநிலையுடன் ஆராதனை செய்யச்செல்லவேண்டும் என்று பார்த்தோம். இன்றைய தியான வசனம், எது புத்தியுள்ள தேவன் விரும்பும் ஆராதனை என்பதை விளக்குவதாக உள்ளது. 

ஆலயத்தில் வந்து ஆர்ப்பரித்துப் பாடுவதும், கூக்குரலிட்டு ஜெபிப்பதும் பிரசங்கங்களைக் கேட்பதும்தான் தேவனை ஆராதிப்பது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.  இன்று பல்வேறு திருச்சபைச் சபைப்பிரிவுகளும் பல்வேறு விதமாக தேவனை ஆராதிக்கின்றனர். இவற்றில் எது சரி, எது தவறு என்பதை நாம் பார்க்கப்போவதில்லை. மாறாக, எப்படி நாம் தேவனை ஆராதித்தாலும் ஆராதிக்கும் மனிதனிடம் அவர் முதலில் என்ன விரும்புகின்றார் என்பதையே நாம் பார்க்கப்போகின்றோம். 

நாம் எந்த முறையில் தேவனை ஆராதித்தாலும் முதலில் ஆராதிக்கும் நாம் தூயவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அதாவது, நாம் நமது உடல் உறுப்புகளால் பாவம் செய்யாதவர்களாக இருந்துகொண்டு தேவனை ஆராதிக்கவேண்டும். இதனையே, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்" என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

பலரும் உடல் தூய்மை என்றதும்,  ஆலயத்துக்குச் செல்லுமுன் குளித்து, சுத்தமாக இருப்பது என்று எண்ணுகின்றனர். குளிக்கவேண்டியது அவசியம்தான், ஆனால் நமது உடல் உறுப்புக்கள் பாவமற்றதாக இருக்கவேண்டியது அதனைவிட முக்கியம். கரங்களாலும், நாவினாலும் பல்வேறு பாவங்களைச்  செய்துவிட்டு காலையில் ஆலயத்துக்குச் சென்று ஆராதிப்பதில் அர்த்தமில்லை. இரவு முழுவதும் திரைப்படங்களையும் ஆபாசப்படங்களையும் பார்த்து கண்களைப்  பாவத்தில் வைத்துக்கொண்டு ஆலயங்களில் சென்று பரவசப்படுவதில் அர்த்தமில்லை. 

எனவேதான் இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" ( ரோமர் 12: 2) என்று. உலக மனிதர்கள் இப்படி வாழலாம். ஆனால் ஆவிக்குரிய மனிதன் அவனைப்போல வேஷம் போடக்கூடாது. தேவனை ஆராதிப்பவர்கள் தேவனுடைய சித்தம் அறிந்தவர்களாக, மனம் புதிதானவர்களாக மாறவேண்டியது அவசியம். அதன்பின்னரே நாம் தேவனை ஆராதிக்கத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். 

"இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை" என்கின்றார் பவுல். அதாவது, இப்படி இல்லாத ஆராதனைகள் புத்தியில்லாத ஆராதனைகள் என்று பொருள். அன்பானவர்களே, நாம் ஒருவேளை இதுவரை புத்தியில்லாத ஆராதனை செய்தவர்களாக இருந்திருக்கலாம். அதற்காக தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம். நமது உடலால் செய்த பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்.  நமது  சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம். இதுமுதல் புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக மாறுவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1825
🔆 ஆதவன் 05.02.2026 வியாழன்   

"தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." ( பிரசங்கி 5: 19)

பலரும் தங்களது உடல் பலமும், பணபலமும், உயர்பதவியுமே உலகத்தில் மகிச்சியாக வாழவும் இந்த உலகத்தில் காரியங்களைச் சாதிக்கவும் போதுமானவை என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தேவனுடைய கிருபையில்லாமல் நம்மால் இந்த உலகத்தில் ஒன்றையும் செய்யமுடியாது என வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகின்றது. பொதுவாக மனிதர்களிடம் இந்த அறிவு இருப்பதில்லை. ஆனால், தன்னிடம் இருக்கும் இவை அனைத்தையும் ஒருவர் இழக்கும்போது மட்டுமே அவரது அறிவுக்கண்  திறக்கப்பட்டுத் தேவனைத் தேடுகின்றார்.  

ஆனால், நாம் தேவனுக்குள் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது தேவன் நமக்கு இந்த அறிவைத் தருகின்றார். அப்போது நாம் நம்மையல்ல; தேவனை முன்னிலைப்படுத்தி வாழ்பவர்களாக மாறிவிடுகின்றோம். எனவேதான் பவுல் அப்போஸ்தலர், "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 5) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது தகுதி தேவனால் உண்டாகியிருக்கின்றது. "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்." ( அப். நடபடிகள் 17: 28) என்று நாம் வாசிக்கின்றோம். 

இந்த உலகினில் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதிகளாக வாழ்ந்தாலும் அவற்றை அனுபவிக்கும் தகுதியற்றவர்களாக நாம் இருப்போமானால் அதனால் என்னபயன்? பலர் இப்படியே உலகினில் வாழ்கின்றனர். பணத்துக்கு எந்தக் குறைவில்லாமல் இருந்தாலும் உப்பில்லாத ஓட்ஸ் கஞ்சியையும், உப்பில்லாத கோதுமை ரொட்டியையும் தின்னக்கூடிய நிலை பலருக்கு. ஆம், இதனையே இன்றைய தியான வசனம், "தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." என்று கூறுகின்றது. 

எனவே அன்பானவர்களே, நமக்கு தேவன் செல்வத்தைத் தந்திருந்தால் அதுகுறித்துப் பெருமையடையாமல்  அவருக்குப் பயந்த வாழ்க்கை வாழ்வோம். ஏனெனில் தேவனது சித்தம் நமக்கு முற்றிலும் தெரியாது; நாளை நடப்பதுகூடத் தெரியாது. எனவேதான், "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4: 14, 15) என நமக்கு அறிவுறுத்துகின்றார் யாக்கோபு. 

இந்த உலகினில் உண்ணவும், உடுத்தவும், நமக்கான நல்ல வாழ்விடத்தை நாம் அனுபவிப்பதும், நமது உழைப்பின் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் நமக்குக் கிருபை அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம். எனவே எப்போதும் தேவனது கிருபையினைச் சார்ந்துகொள்வோம். தேவனது கிருபை இல்லாமல் உலகச் செல்வங்கள் மட்டும் நம்மை மகிழ்ச்சியாக வாழச்செய்யாது எனும்  இந்த அறிவுடன் தேவனைச் சார்ந்துகொள்வோம்.  "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்".

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1826
🔆 ஆதவன் 06.02.2026 வெள்ளி   

"நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." (1 கொரிந்தியர் 13: 10)

தேவனை வாழ்வில் அறியாத எந்த மனிதனும் குறைவுள்ளவன்தான். ஆனால் மனிதர்கள் இதனை உணர்வதில்லை. பெரிய கல்வியறிவு நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றிவிடுமென்று பலரும் எண்ணுகின்றனர். நிறைவடைந்துவிட்டோம் எனும் எண்ணமே பலரை அதற்குமேலே எதனையும் அறியமுடியாதபடி அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது.  ஒரு பானையில் முழுவதும் நீரினால் நிறைத்துவிட்டோமானால் அதற்குமேல் அதில் ஒன்றும் ஊற்றிவிடமுடியாதல்லவா? 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நம்மைப் பூரணமாக்கமுடியும். அவரே நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றிடமுடியும். அவர் நம்மில் வரும்போது மட்டுமே நம்மிடமுள்ள குறைவுகள் மறைந்திடும். கிறிஸ்துவை அறியாதபோது நாம் சிறு குழந்தைகளைப்போலவே இருந்தோம். குழந்தைகளுக்கு பெரியவர்களது மனநிலையோ, உலக அறிவோ இருப்பதில்லை. கிறிஸ்துவை அறியாதவர்களும் இப்படிக் குழந்தைகளைப்போல முழுமையான அறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். 

கிறிஸ்துவை அறிந்தபின்னர் நாம் முழுமையடைந்து முழு மனிதனாகின்றோம். கிறிஸ்துவை அறியாத குழந்தை மனநிலையிலிருந்து கிறிஸ்துவை அறிந்து முழு மனிதனாக மாறும்போது நம்மில் ஏற்படும் மாற்றத்தினை அப்போஸ்தலரான பவுல் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்." (1 கொரிந்தியர் 13: 11, 12) 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய மனநிலையில் குழந்தையைப்போலப் பேசி, குழந்தையைப்போலச் சிந்தித்து, குழந்தையைப்போல யோசித்துக் கொண்டிருந்த நாம் நிறைவான கிறிஸ்து நம்மில் வரும்போது குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து முழு ஆவிக்குரிய மனிதர்களாகின்றோம்.  

ஒருசிலர் வேதாகமத்தை வசித்து ஓரளவு வேத அறிவு பெற்றவுடன் தாங்கள் அனைத்தும் அறிந்துகொண்டதாக எண்ணி மற்றவர்களை அற்பமாக மதிக்கின்றனர். அதாவது, இவர்கள் தாங்கள் பூரணராகிவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். வேதாகமத்தை வாசித்து அறிவதல்ல முக்கியம், கிறிஸ்து நமது உள்ளத்தை நிரப்பிட இடம்தரவேண்டியதே முக்கியம். அதற்கு நம்மிடம் உள்ள குறைகளை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்தக் குறைகள் நீங்கிட தேவனிடம் நம்மை ஒப்படைக்கவேண்டியது அவசியம். 

அப்படி நம்மைத் தாழ்த்தி கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கும்போது அவர் நம்மை நிறைவாக்குவார். நிறைவான கிறிஸ்து நம்மில் வரும்போது மட்டுமே நமது குறைவானது ஒழிந்துபோம். ஏனெனில், பிதாவாகிய தேவன் "எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்." ( எபேசியர் 1: 23) என்று வேதம் கூறுகின்றது. 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1827
🔆 ஆதவன் 07.02.2026 சனி    

"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." ( வெளி. விசேஷம் 21: 7)

ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிகொள்பவர்கள் மறுவுலகத்தில் அடையப்போகும் நித்திய ஜீவனைக்குறித்து இன்றைய தியான வசனம் எடுத்துக் கூறுகின்றது. சிறப்பான வாழ்வு வாழும்போது நாம் வாழ்வில் வெற்றிபெற்று தேவசந்நிதியை அடையும்போது மட்டுமல்ல, இந்த உலகத்திலும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றோம். காரணம், அப்போது அவர் நமது தேவனாகவும் நாம் அவரது பிள்ளைகளாகவும் மாறுகின்றோம்.  

ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் நாம் கவனம் செலுத்தாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோமானால் இரண்டாம் மரணமாகிய நித்திய நரகமே நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பங்கு என்று இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்." ( வெளி. விசேஷம் 21: 8)

மக்களது நீதி நேர்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தேவன் பல்வேறு நியாயப்பிரமாணக் கட்டளைகளை மோசே வழியாகக் கொடுத்திருந்தார். இவையே பழையஏற்பாட்டுக் கட்டளைகள். ஆனால், அந்த மக்கள் அவற்றைக் கடைபிடிக்கவில்லை. எனேவேதான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக தேவன் புதிய ஏற்பாட்டைக் கட்டளைகளைக் கொடுத்தார். இந்தப் புதிய ஏற்பாட்டுக் கட்டளைகளை தேவன் ஆவிக்குரிய மக்களது உள்ளத்தில் எழுதுகின்றார். இதனை எரேமியா தீர்க்கத்தரிசி மூலம் முன்னறிவித்தார்.

"அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 31: 33 மற்றும் எபிரெயர் 8:10) என்று நாம் வாசிக்கின்றோம். 

பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் பயனற்றுப்போனதுபோல உள்ளத்தில் எழுதப்படும் புதிய ஏற்பாட்டுக் கட்டளைகள் பயனற்றுப்போவதில்லை. அன்று கட்டளைகளைக் கைகொள்ளாத அந்த மக்களைத் தேவன் புறக்கணித்தார். இதனையே எபிரெய நிருப ஆசிரியர், "அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8: 9) என்கின்றார்.

ஆம் அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக வாழவேண்டுமானால் தேவனது கட்டளைகள் நமது உள்ளத்தில் பதிக்கப்படவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவ மன்னிப்பு பெறும்போது நமது உள்ளத்தில் தனது கட்டளைகளைப் பதிக்கின்றார். எனவே யாரும் நமக்குப் போதிக்கவேண்டியதில்லை. ஆவியானவரே நமக்குப் போதித்து நடத்துகின்றார். 

இதனால் நமது உள்ளம் புதிதாகி நாம் ஜெயம் கொள்ளுகின்றோம். இப்படி ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவர்களது தேவனாயிருப்பேன், அவர்கள் என் குமாரனாக, குமாரத்தியாக இருப்பார்கள் என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1828
🔆 ஆதவன் 08.02.2026 ஞாயிறு     

"எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம்." ( எஸ்றா 4: 3)

தேவனுக்கும் ஆலயக் காரியங்களுக்கும் காணிக்கைகள் கொடுப்பதற்குப் பலரும் தயங்குவதில்லை. காரணம், அப்படிக் கொடுப்பது தங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என்று அவர்கள் எண்ணுவதுதான். ஆனால், கோடி கோடியாக ஆலயங்களுக்குக் கொட்டிக்கொடுத்தாலும், இரவு பகல் பாராமல் ஆலயக் காரியங்களுக்கு உழைத்தாலும் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழாதவர்கள் கர்த்தருக்கென்று அளிக்கும் காணிக்கைகளையும் அவர்கள் செய்யும் உதவிகளையும் தேவன் அங்கீகரிப்பதில்லை. காரணம், தேவன் ஒன்றுமில்லாத தரித்திரனோ நம் உதவினால்தான் நிறைவடைபவரோ அல்ல.

தேவன் மனம்திரும்பிய வாழ்கையினையே மேலாக  விரும்புகின்றார். மேலும், மற்றவர்கள் செய்வதைப்பார்த்து போட்டிபோட்டுத்  தேவனுக்கென்று செய்வதை தேவன் அங்கீகரிப்பதில்லை.

பாபிலோனிலிருந்து கோரேஸ் ராஜாவால் விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு வந்த யூதர்கள் செருபாபேல்,  யெசுவா தலைமையில் எருசலேம் ஆலயத்தைப்  பழுதுபார்த்துக்  கட்டத்துவங்கினர். அதுவரை யூதர்களுக்கு எதிராகச்  செயல்பட்டவர்களும்  யூதர்கள் ஆலயம் கட்டுவதைப் பார்த்து அவர்களிடம்  வந்து, "உங்களோடுகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனையே நாடுவோம்" (எஸ்றா - 4:2) என்றார்கள்.  அவர்களுக்கு மறுமொழியாக செருபாபேலும்  எசுவாவும் இன்றைய வசனத்தைக் கூறுகின்றனர். 

தேவனுக்கு ஆலயம் கட்டுவதில் அவர்கள் உதவ முன்வந்தது நல்லச்  செயல்தான் ஆனால் யூதர்கள் அதனை விரும்பவில்லை. இன்றையகால ஊழியர்களை இந்நேரத்தில் நாம் நினைத்துப்பார்ப்போம். அவர்கள் தங்கள் ஊழியத் தேவைகளுக்கும் செலவுகளுக்கும் எந்தத்  துன்மார்க்கன், ஏமாற்றுக்காரன் உதவினாலும் அதனைப் பெற்றுக்கொண்டு அவனுக்கு ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறத்தயாராக உள்ளனர். மனம்திரும்புதல் பற்றி அவர்களிடம் பேசுவதுகிடையாது. 

ஆனால், ஆவியானவரின் துணையோடு உண்மையான ஊழியம்செய்யும் ஊழியர்கள் மனம்திரும்பாத மக்களது காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள், செருபாபேலும்  எசுவாவும் கூறியதைப்போலவே  இத்தகையோர் அளிக்கும் காணிக்கைகளை பெற்றுக்கொள்ளாமல் தவிர்த்துவிடுகின்றனர். 

நான் ஆரம்பகாலத்தில் ஆராதனைக்குச் செல்லும் IPC சபை பாஸ்டர், ஜாண்சன் டேவிட் அவர்கள் அவருக்குக் காணிக்கைக் கொடுக்க முன்வரும் சிலரிடம், "தம்பி, முதலில் நீங்க ஆண்டவர்பக்கம் வாருங்க, உங்க வாழ்க்கையை அவருக்கு ஒப்புகொண்டுங்க, காணிக்கைகளைப் பிறகு பார்க்கலாம்" என்று கூறிவிடுவார். அவர்களது மனம்திரும்புதலுக்காக ஜெபிப்பார். இதுவே உண்மை ஊழியர்  செய்யக்கூடிய செயல். மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளல்ல, மக்களது ஆத்துமாவே தேவனுக்குத்  தேவை.

எவ்வளவு பெரிய பணத் தேவைகள் இருந்தபோதிலும் மற்றவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளை  ஏற்றுக்கொள்ளாமல் "நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுவோம்" என்று துணிவுடன் இருந்து யூதர்கள் ஆலயத்தைக் கட்டினர்.  

நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் அளிக்கப்படும் காணிக்கையே தேவன் விரும்புவது. லஞ்சம் வாங்கியும் ஏமாற்றியும் சம்பாதித்த பணத்தை ஊழியர்கள் அங்கீகரித்தாலும் தேவன் அங்கீகரிப்பதில்லை. எனவே காணிக்கை அளிப்பதிலும் ஆலய பணிகளிலும் ஈடுபடும்போது நமக்கு அச்சம் இருக்கவேண்டியது அவசியம். காணிக்கை என்பது தேவனுக்கு அளிக்கப்படும் கையூட்டு அல்ல.  "எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை" என்ற வார்த்தைகள் நம்மை சிந்திக்கத் தூண்டி மனம்திரும்புதலைக் கொண்டுவரவேண்டும்.

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் அவரது  பிள்ளைகளாகிய மக்கள் மட்டுமே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு காணிக்கை அளிக்கமுடியும்; அவர்கள் அளிக்கும் காணிக்கைகளை மட்டுமே அவர் ஏற்றுக்கொள்வார். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1829
🔆 ஆதவன் 09.02.2026 திங்கள்      

"என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?"( யோபு 31: 1)

இன்று காதல் எனும் பெயரில் வெறும் இனக்கவர்ச்சியால் இளைஞர்களும் இளம் பெண்களும் சீரழிந்துகொண்டிருக்கின்றனர். காரணம், அவர்கள் தங்கள் கண்களால் காண்பவை தங்களுக்கு பூரண நன்மைதரும் என்று மனதினில் எண்ணுகின்றனர். வெளி அழகினைப் பார்த்து தங்கள் உள்ளங்களை எதிர்பாலரிடம் பறிகொடுத்து பலவேளைகளில் அல்லல்படுகின்றனர். இன்றைய வசனம் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் சிந்தனைக்குரிய வசனம். 

பக்தனான யோபு  தன் கண்களால் அழகிய பெண்களையல்ல, தேவனைக் காண்பதிலேயே தனது ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அதனால் பரிசுத்தமான பார்வை தனக்கு வேண்டும்; தேவனைத் தவிர வேறு எதனையும் பார்க்கமாட்டேன்; எதன்மேலும் ஆசைகொள்ளமாட்டேன்  என உடன்படிக்கைப்  பண்ணிக்கொண்டார். இப்படி இருந்ததால் ஒருநாளில் தனது கண்களால் தேவனைப் பார்ப்பேன் என உறுதியாக நம்பினார். அவரது எண்ணமெல்லாம் அதுவாகவே இருந்தது. ஆம்,  இளைஞர்களும்  இளம் பெண்களும் காதலால் சோர்ந்துபோவதுபோல யோபு தேவனின் நினைவால் சோர்ந்துபோனார். 

எனவேதான் அவர் கூறுகின்றார், "அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது." ( யோபு 19: 27) என்கின்றார் அவர். இதுவே அவரது உடன்படிக்கை. அதாவது, என் கண்களை நான் பரிசுத்தமாகக் காத்துகொள்வேனென்றால் தேவன் எனக்குத் தரிசனமாவார் என்று நம்பினார். அவரது அந்த ஆசை வீணாகவில்லை. தேவன் அவருக்குத் தரிசனமானார். "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது." ( யோபு 42: 5) என்கின்றார் யோபு.

இளைஞர்களுக்கு மட்டுமல்ல,  பெரியோர்களுக்கும் இன்றைய தியான வசனம் பொருந்தும். இன்று ஆபாச படங்களும் வீடியோ காட்சிகளும் எளிதில் காணக்கிடைப்பதால் பெரியோர்களும்கூட இவற்றின் கவர்ச்சியில் கவரப்பட்டு கண்களின் பாவத்தில் விழுகின்றனர். அன்பானவர்களே, இப்படி உலகக் கவர்ச்சியில் மயங்கியும் உலக மனிதர்களிடம் காதல் கொண்டும்  அலைவோமானால், "அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?" ( யோபு 31: 2) கிடைக்காது. 

அன்பான இளம் வாலிபர்களே, வாலிபப் பெண்களே, யோபுவைப்போல கண்களை  பரிசுத்தத்தை மட்டுமே காணவேண்டுமென்று  தேவனோடு உடன்படிக்கைபண்ணி வாழும்போது மட்டுமே நாம் உலகக் கவர்ச்சிக்குத் தப்பிடமுடியும். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் மட்டுமே நமக்குக் கவர்ச்சியாகத் தெரிவார். என் கண்களோடே தேவனுடன் உடன்படிக்கைப்பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் அல்லது ஒரு இளைஞன்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? எனும் எண்ணம் வெளிப்படும். 

உன்னதப்பாடல் ஆசிரியர் தேவனை ரசித்து அவரது அழகால் கவரப்பட்டுப் பாடுகின்றார்:-  "அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்." ( உன்னதப்பாட்டு 5: 16) ஆம், நமது கண்களோடு தேவனுடன் உடன்படிக்கைச் செய்யும்போது மட்டுமே நாமும் இப்படிப் பாடிடவும்; பரிசுத்த வாழ்க்கை வாழவும்  பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1830
🔆 ஆதவன் 10.02.2026 செவ்வாய்       

"இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." (2 கொரிந்தியர் 4: 7)

ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நாம் பெறுகின்ற தேவ வல்லமை பற்றி இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இந்த தேவ வல்லமையைப் பொக்கிஷம் அல்லது புதையல் என்கின்றார் பவுல்.  அதாவது,  மண்ணினாலான நமது உடம்பில் நாம் இந்த விலையேறப்பெற்ற வல்லமை எனும் புதையலைப் பெற்றிருக்கின்றோம். இது நமது சுய பலத்தினால் கிடைத்ததல்ல; மாறாக, தேவ பலத்தால் கிடைத்தது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்" என்று கூறுகின்றார்.

இன்று பலரும்  பல்வேறு தேவ வரங்களைப் பெறுவதுதான் வல்லமை பெறுதல் என எண்ணிக்கொள்கின்றனர். நோய்களைக் குணமாக்குதல், தீர்க்கத்தரிசனம் கூறுவது இவை இரண்டையும் பலரும் மிகப்பெரிய வல்லமை என்று எண்ணுகின்றனர். பல கிறிஸ்தவ ஊழியர்களும்கூட தங்களது பெயரை விளம்பரம் செய்யும்போது, "வல்லமை பெற்ற தேவ ஊழியர்" எனும் அடைமொழியைக் கூடவேச் சேர்த்துக்கொள்கின்றனர். 

ஆனால், அப்போஸ்தலரான பவுல் இவற்றைவிட வேறு பலத்தைத் தேவனிடமிருந்து பெறுவதுதான் ஆவிக்குரிய வாழ்வில் நாம் பின்மாறிடாமல் நம்மைப் பாதுகாக்கும் என்று எண்ணுகின்றார். எனவேதான் இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியாக, "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனம் முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை;     கீழே தள்ளப்பட்டும்   மடிந்துபோகிறதில்லை." (2 கொரிந்தியர் 4: 8,9) என்கின்றார். ஆம், இதுவே மிகப்பெரிய வல்லமை என்கின்றார்.

ஆவிக்குரிய வாழ்க்கைக் கடினமான ஒன்று. பல்வேறு நெருக்கடிகளும், துன்பங்களும், சோர்வுகளும் அடங்கியது. அவைகளை மேற்கொள்வதே வல்லமை. எனவே ஆவிக்குரிய வாழ்வில் துன்பங்களால் நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனம் முறிவடைகிறதில்லை; துன்பப்பட்டும் தேவனால் கைவிடப்படுவதில்லை, வாழ்க்கை நெருக்கடிகளால்     கீழே தள்ளப்பட்டாலும்    மடிந்துபோகிறதில்லை என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய வாழ்வில் நிலைநிற்கவேண்டுமானால் இந்த வல்லமை நமக்கு அவசியம். ஒருகாலத்தில் பல்வேறு அதிசய அற்புதங்களைச்  செய்த பல ஊழியர்கள் கிறிஸ்துவைவிட்டுப் பின்மாறியதுண்டு.  காரணம், சில வேளைகளில் வல்லமை பெற்று அரும்பெரும் செயல்கள் செய்வது நம்மில் பெருமையினைத்  தோன்றச்செய்து  நம்மைத் தேவனை விட்டுப் பிரித்துவிடும். அப்படி பல ஊழியர்கள் தேவனைவிட்டுப் பின்மறியுள்ளனர்; அல்லது தேவனால் கைவிடப்பட்டுள்ளனர். 

கிறிஸ்தவ உலகினில் இப்படி மக்களைத் தவறானச் சிந்தனையில் வளரச்செய்யும் பல்வேறு காரியங்கள் உண்டு. நாம் இவற்றுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின்மேல் உண்மையான அன்புகொண்டு வாழ்வோமானால் தவறான மந்திரவாத வல்லமைகளை நாம் அதிகம் விரும்பாமல் நம்மை அவரது அன்பில் நிலைநிறுத்திக்கொள்ளும் வல்லமையையே அதிகம் நாடுபவர்களாக இருப்போம். 

எனவே, தேவ வல்லமை நம்மை நமது ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து நிலைநிறுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். நாம் தலையில் கைகளை வைத்தவுடன் மக்கள் கீழே விழுவது அல்ல மெய்யான வல்லமை, நாம் விழுந்துவிடாமல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காத்துக்கொண்டு நிலைநிற்பதே வல்லமை. எப்பக்கத்திலும் நெருக்கடிகள், கலக்கங்கள், துன்பங்கள் நம்மைத் தொடர்ந்தாலும் ஒடுங்கிப்போகாமல் கலக்கமடையாமல் மனம் முறிவடையாமல் ஆவிக்குரிய வாழ்வில் தேவனால் கைவிடப்பட்டுவிடாமல் வாழ்வதே வல்லமை. 

எனவே, முதலில் இந்த மகத்துவமுள்ள வல்லமையை தேவனால் மண்பாண்டமாகிய நமது உடலில் பெற்றுக்கொள்ள முயலுவோம். அதுவே ஆவிக்குரிய வாழ்வில் நம்மை முற்றுமுடிய நிலைநிறுத்திட உதவும். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1831
🔆 ஆதவன் 11.02.2026 புதன் 

"நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்." ( ஓசியா 13: 5)

வறட்சியான பாலை நிலங்களைக் குறித்து  நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அங்கு நீரில்லாததால் வறண்ட நிலைமையே நீடிக்கின்றது. வனாந்தரங்களில் செழிப்பைக் காண்பது இயலாத ஒன்று. எனவே, இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள வறட்சி, வனாந்தரம், போன்ற வார்த்தைகள் செழிப்பற்ற நிலைமையைக் குறிக்கின்றன  என்பது தெளிவு. 

பொதுவாகத்  தேவன் தனக்கான மனிதர்களை இதுபோன்ற வனாந்தரங்களில் தெரிந்துகொள்கின்றார். அதாவது, செழிப்பற்ற, துன்பங்கள் சூழ்ந்த வாழ்க்கை நிலையில் வாழும் மக்களைத் தேவன் தனக்காகத் தெரிந்துகொள்கின்றார். "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் 1: 28) என்று கூறப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

ஆம் அன்பானவர்களே, தொடர்ந்த துன்பங்களும் இக்கட்டுகளும், இல்லாமையும், அற்பமான வாழ்வும்  நெருக்கி நமது வாழ்க்கைக் கடினமான நிலையில் இருக்கும்போது தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்த விரும்புகின்றார் என்று பொருள். "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." ( ஏசாயா 48: 10) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இதனால்தான் சங்கீத ஆசிரியர், "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119: 71) என்று பாடுகின்றார். உபத்திரவம் இல்லாவிட்டால் நாம் தேவனது கிருபை நம்மில் செயல்படுவதை உணரமுடியாது. நமது சுய பலமே நமக்குச் செழிப்பைத் தந்துள்ளது என்று எண்ணி, தேவனைப் புறக்கணித்து தேவனை அறியாதவர்களாகவே வாழ்வோம். 

இப்படியே தேவன் இஸ்ரவேல் மக்களை அவர்களது எளிய நிலையில்  கண்டுபிடித்தார். ஆனால் அவர்கள் தேவனது அன்பில் நிலைத்து நிற்காமல் பிற தெய்வங்களை வழிபட ஆரம்பித்தனர். இதனை, "வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல் தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்கள் ஆனார்கள்." ( ஓசியா 9: 10) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, உபத்திரவம், துன்பங்கள் நமக்குத்தேவன் வைக்கும் தேர்வு போன்றவை. அதனால்தான் அப்போஸ்தலரான பவுல்,  "அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்." ( ரோமர் 5: 3, 4) என்று கூறுகின்றார். 

எனவே அன்பானவர்களே, இன்று நமது வாழ்க்கை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரம்போல இருந்தாலும் கவலையடையாமல் தேவனுக்குப் பணிந்த வாழ்க்கை வாழ்வோம். வறட்சியான காலத்தில் நாம் எப்படி அந்தச் சூழ்நிலையை மேற்கொள்கின்றோம் என்பதனைத்  தேவன் பார்க்கின்றார்; மட்டுமல்ல, அதனை மேற்கொள்ள பெலன் தருகின்றார்.  ஆம், உபத்திரவத்தின் குகையிலே அவர் மனிதர்களைத் தெரிந்துகொள்கின்றார்.  இந்த உபத்திரவமான குகை வாழ்க்கைக்குப்பின் தேவனோடு வாழும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை உள்ளது. எனவே, துன்ப சூழ்நிலைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டு கடந்துசெல்வோம்.

"விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1832
🔆 ஆதவன் 12.02.2026 வியாழன்  

"மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது." ( எண்ணாகமம் 17: 8)

நமது தேவன் அதிசயமான முறையில் தான் தெரிந்துகொள்பவர்களை நடத்துபவர். மனித அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத அதிசயங்களை செய்து தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களை அவர் மற்றவர்களிலிருந்து வேறுபிரித்துக் காட்டுகின்றார்;  உயர்த்துகின்றார். 

தேவனே மோசேயையும் ஆரோனையும் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் உயர்த்தி அவர்கள்மூலம் அவர்களை எகிப்தியரின் கைகளுக்கு விடுவிக்கத்  திட்டம்கொண்டார். ஆனால், இஸ்ரவேல் மக்கள் மோசேயும் ஆரோனும் தங்களாகத் தங்களை உயர்த்தி மற்றவர்களுக்குத் தங்களைத் தலைவர்களாக ஏற்படுத்த முயல்வதாக எண்ணிக்கொண்டனர். தேவனது கட்டளையின்படியே மோசேயும் ஆரோனும் செயல்பட்டனர் என்பதை அவர்கள் நம்பவில்லை. எனவே, இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். 

அப்போது கர்த்தர் மோசேயிடம்,  இஸ்ரவேல் கோத்திரத்துத் தலைவர்கள் பன்னிரண்டுபேரிடமும் ஆளுக்கொரு கோலை கொண்டுவரச்செய்து அதில் அவர்களது பெயரை  எழுதவும், லேவி கோத்திரத்துக்குரிய கோலில் ஆரோனின் பெயரை எழுதி கர்த்தரது சமூகத்தில் வைக்கவும் சொன்னார். "அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்." ( எண்ணாகமம் 17: 5) என்றார்.

மோசே அப்படியே செய்தான். அந்த ஒரே இரவில் அற்புதம் நிகழ்ந்தது. லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.

இன்று தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் நம்மையும் இதுபோல பல்வேறு பிரச்சனைகள், எதிர்ப்புகள்,  தோல்விகள், துன்பங்கள் நெருக்கிக் கொண்டிருக்கலாம். நமது அற்பமான நிலைமையினைக்கண்டு சுற்றத்தாரும் நண்பர்களும் "தேவனையே நம்பி வாழ்கின்றாய் என்றால் உனக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள்? உன்னைவிட நாங்கள் நன்றாகத்தானே இருக்கின்றோம்? நீ ஏன் உன்னைப் பரிசுத்தவான்போலக் காண்பிக்கின்றாய்? என்று நேரடியாகக் கூறலாம், அல்லது மனதினில் நினைக்கலாம். இவர்கள்தான் நமது வாழ்வில் ஆரோனுக்கு எதிராக முறுமுறுத்தவர்களைப்   போன்றவர்கள். 

ஆம், இன்று  ஆரோனின் கையிலிருந்த காய்ந்த கோலைப்போல நமது வாழ்க்கை இருக்கலாம். ஆனால் காய்ந்த கோலையும் தேவனால் உயிர்ப்பிக்க முடியும்.  நமது வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும், நமது எந்த நோயையும் பிரச்சனைகளையும் மாற்றிடவும் தேவனுக்கு அதிக நாட்களோ நேரமோ தேவையில்லை. காய்ந்துபோல ஒரு மரக்கோலை  ஒரே இரவில் துளிர்த்து, பூத்து, காய்த்து கனிகளைக் கொடுக்கத்தக்கதாக  மாற்ற தேவனால் கூடுமென்றால் காய்ந்து பட்டுப்போன நமது வாழ்வையும் அவரால் ஒரே நொடியில் மாற்றிட முடியும். இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார்முன் மோசேயும் ஆரோனும் உயர்த்தப்பட்டதுபோல நம்மையும் அவர் உயர்த்துவார். 

ஆனால் நாம் செய்யவேண்டியது ஒன்று உண்டு. மோசே உலர்ந்துபோன கோலை தேவ சமூகத்தில் வைத்ததுபோல நமது உலர்ந்த வாழ்வையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் ஒப்படைக்க வேண்டியது அவசியம். மறுநாள்வரைக் காத்திருக்கவேண்டியது அவசியம். 

மனிதர்களாகிய நமக்குத்தான் காலமும் நேரமும். தேவனோ காலங்களைக் கடந்தவர். நமது விசுவாசம் தளர்ந்திடாமல் இருப்போம் என்றால் ஆரோனின் கோல் துளிர்த்து,  பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்ததுபோல தேவன் நமது வறண்டுபோன வாழ்க்கையிலும் பழங்களைக் காணச்செய்வார். அதற்கு முதலில் நமது வாழ்வை அவருக்குமுன் ஒப்படைப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1833
🔆 ஆதவன் 13.02.2026 வெள்ளி  

"உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை." ( எசேக்கியேல் 16: 4)

எருசலேம் குறித்துத் தேவன் கூறும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். இதனைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் தேவன் கூறுகின்றார், "உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்." ( எசேக்கியேல் 16: 5) அதாவது, தொப்புள் அறுக்கப்படாமலும்,  தண்ணீரினால் குளிப்பாட்டப்படாமலும், உப்பால் சுத்திகரிக்கப்படாமலும், துணிகளில் சுற்றப்படாமலும் கிடந்த அனாதைக் குழந்தையாக எருசலேம் இருந்தது.

பிறந்த குழந்தைகள் அனாதைகளாக குப்பைத் தொட்டிகளில் விடப்படுவதை இன்று நாம் பலவேளைகளில்  செய்தித்தாளில் வாசித்திருக்கின்றோம். மட்டுமல்ல, பிறந்து தொப்புள்கொடி காய்வதற்குமுன் இரத்தத்தோடு சில குழந்தைகள் இப்படி ஆனாதைகளாக விடப்படுவதுண்டு. இதனைக்காணும் சிலர் எடுத்து அரசாங்கத்துக்குத் தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் அந்தக் குழந்தை அரசாங்கக் காப்பகங்களில் வளர்க்கப்படும். இப்படி இந்தக் குழந்தைகள் கைவிடப்படக்  காரணம் பெரும்பாலும் இவை தகாத உறவுமூலம் பிறந்தவைகளாக இருக்கும்.

எருசலேம் இப்படியேக் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், அனாதையாக குப்பைத் தொட்டியில் போடப்பட்டக் குழந்தையான எருசலேம் தேவனது கிருபையால் ஆசீர்வாதமான தேவ நகரமாக மாறியது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் எருசலேம் முக்கிய பங்குவகித்த நகரமாக இருந்தது. விண்ணக எருசலேமுக்கு ஒப்பாக கூறப்படும் மண்ணக நகரமாக எருசலேம் மாறிவிட்டது. 

இன்று, கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் நமக்கு இதனை நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஆம் அன்பானவர்களே, கைவிடப்பட்ட அனாதையான எருசலேம் போன்ற கைவிடப்பட்ட வாழ்வு நம்மில் பலருக்கு பலவேளைகளில் நேர்கின்றது. நமக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பாத்திருந்த யாருமே நமக்கு உதவாமல் நம்மை உதாசீனப்படுத்தி ஒதுங்கலாம். இப்படிப்பட்ட நாம்தான் தொப்புள் அறுக்கப்படாமலும்,  தண்ணீரினால் குளிப்பாட்டப்படாமலும், உப்பால் சுத்திகரிக்கப்படாமலும், துணிகளில் சுற்றப்படாமலும் கிடக்கும் அனாதைக் குழந்தைகள். 

இப்படிப்பட்ட நிலையில் அந்த அனாதைக் குழந்தையால் எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படியே எதுவும் செய்யமுடியாத நிர்க்கதியான நிலைமையில் கைவிடப்பட்டு நாம் நிற்கலாம். ஆனால், அனாதைக் குழந்தையைப் போன்ற நம்மை மீட்க இரக்ககுணம் கொண்ட மனிதர்கள் உலகினில் இல்லாமல் இருந்தாலும் நமது இழிவான அற்பமான நிலைமையை ஆசீர்வாதமாக மாற்றும் ஒரு மீட்பர் நமக்கு உண்டு. அதனை நாம் மறந்துவிடக் கூடாது.  அவர் கிருபையால் நமக்கு இரங்குகின்றார்  என்பதனையும்  நாம் மறந்துவிடக்கூடாது.

இதனையே தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்." ( எசேக்கியேல் 16: 6) எருசலேமைப்பார்த்து "பிழைத்திரு" என்று கூறியதைப்போல  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப்பார்த்தும்  கிருபையாக, "பிழைத்திரு" என்கின்றார். இந்த வார்த்தையால் நாம் பிழைத்து வாழமுடியும். 

அனாதைக் குழந்தையான எருசலேமுக்கு வாழ்வளித்த உயர்த்திய தேவன் அனாதைபோல உதவிற்று வாழும் நம்மையும் "பிழைத்திரு" என்று ஒரே வார்த்தையால் உயர்த்தமுடியும். குப்பைத் தொட்டி குழந்தைபோல அமைதியாக அவரது கிருபை நம்மைக் கடந்துபோகக் காத்திருப்போம். "நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்கிறேன்" என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரது வார்த்தைக்காகக்  குழந்தைபோலக் காத்திருப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1834
🔆 ஆதவன் 14.02.2026 சனி   

"ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்." ( ஏசாயா 30: 18)

தேவன் எதனையும் அவசரகதியில் செய்வதில்லை. பொறுமை, நிதானம், காத்திருத்தல் இவை தேவனது குணங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதனை நாம் வேதாகமத்தில் பல்வேறு சம்பவங்களில் தேவன் செயல்பட்டதை வாசிக்கும்போது புரிந்துகொள்கின்றோம். 

இன்றைய தியான வசனம், தேவன் மற்றும் மனிதர்கள் ஆகிய  இரண்டுபேரின் காத்திருத்தலையும் உணர்த்துகின்றது. "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்" என்று கூறும் இந்த வசனத்தில்தானே, "அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது நமக்கு உதவும் ஏற்ற காலம் வரும் வரை தேவன் காத்திருக்கின்றார்; அந்தக் காலத்தில் தேவன் செயல்படும்வரை நாமும் காத்திருக்கவேண்டும். 

ஆபிரகாமிடம் தேவன், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12: 2) என்று வாக்குறுதி அளித்தபோது ஆபிரகாமின் வயது 75. அப்போது அவருக்கு பிள்ளைகள் எதுவும் இல்லாதிருந்தது. ஆனால் தேவனது வாக்குறுதி நிறைவேற ஆபிரகாம் 100 வயதாகும்வரை  காத்திருக்கவேண்டியிருந்தது. "அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்." ( எபிரெயர் 6: 15)

மோசே 80 வயதானபோதுதான் தேவ அழைத்தலைப் பெற்று இஸ்ரவேலரை கானானை நோக்கி வழிநடத்தினார். ஆம், மோசேயைத் தனது பணிக்கு என முன்குறித்த தேவன் அதற்காக மோசே 80 வயதாகும்வரைக் காத்திருந்தார். "இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்." ( யாத்திராகமம் 12: 40) என்று கூறப்பட்டுள்ளது. தனது மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார். மட்டுமல்ல, அவர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுக் கானான் தேசத்தை வந்தடைய 40 ஆண்டுகள் ஆயிற்று. 

ஆம் அன்பானவர்கள், இன்று நாமும் இதுபோல தேவனிடம் பல்வேறு தேவைகளுக்காகக் காத்திருக்கலாம். இந்தக் காத்திருத்தல் பலவேளைகளில் நமக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தச் சோர்வு நிரந்தரமல்ல, "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40: 31) என்று வேத வசனம் நமக்குத் தெம்பூட்டுகின்றது. 

இன்றைய தியான வசனம் இறுதியாகக் கூறுகின்றது, "கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்" என்று. ஆம், நம்மைக் காத்திருக்க வைத்து ஏமாற்றுபவரல்ல நமது தேவன். அவர் நீதி செய்கின்றவர். அவரிடம் அநீதி எதுவும் இல்லை. எனவே, நமக்கு இரங்கும்படிக் காத்திருக்கும் தேவனுக்காக நாமும் பொறுமையுடன் காத்திருப்போம். 

"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." (1 பேதுரு 5: 6)

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1835
🔆 ஆதவன் 15.02.2026 ஞாயிறு   

"நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?" ( ஏசாயா 51: 12)

பயம் மனிதர்களை அவிசுவாசத்துக்கு நேராக இழுத்துச் செல்கின்றது. மனிதர்கள் நாம் பொதுவாக பல்வேறு காரியங்களைக்குறித்துப் பயப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். நாளை என்ன நடக்குமோ எனும் பயத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாளைய தினத்தைக்குறித்த பயத்தினால் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் உண்டு. 

நமக்குக் கடன் கொடுத்தவர்கள் நாளைக் காலையில்  வரும்போது அவர்களுக்கு என்ன பதில் கூறுவது எனும் பயம் பலரைக் கலங்கச் செய்துகொண்டிருக்கின்றது. ஆனால், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறினார், "ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுபோதும்." ( மத்தேயு 6: 34)

நமக்கு வாழ்வில் ஏற்பட்டப் பிரச்சனைகள் ஏதுவாக இருந்தாலும் உண்மையாக நாம் நமது தவறையும் பிரச்சனைகளையும் தேவனிடம் எடுத்துக் கூறி மன்னிப்பையும் உதவியையும் வேண்டுவோமானால் நிச்சயமாக அவர் நமக்கு உதவி செய்வார். எனவேதான் "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படவேண்டாம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறவாதபடி நீ இருந்தால் போதும்" என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

முன்னாள் தமிழ்த்  திரைப்பட நடிகர் ஏ.வி.எம். ராஜன் அவர்களது சாட்சியை நான் கேட்டிருக்கின்றேன்.  மிகப்பெரிய கடன் சுமையால் பாதிக்கப்பட்டு மறுநாள் காலையில் வரும் தனக்குக் கடன் கொடுத்த மனிதனுக்கு என்ன பதில் கூறுவது என்று விரக்தியில் தற்கொலை செய்யும் முடிவோடு உறங்கச் சென்ற அவரை ஒரே இரவில் தேவன் சந்தித்து அதிசயம் செய்தார். கடன் கொடுத்தவர்களது இருதயத்தை மாற்றி அவருக்கு விடுதலை கொடுத்தார். அவர்கள் அவரோடு ஒப்புரவானார்கள். இன்று, தேவனுக்கு மிகப்பெரிய சாட்சியாக அவர் நற்செய்தி அறிவித்து வருகின்றார். (இவரது சாட்சியை YouTube இல் நீங்கள் கேட்கலாம்) 

"ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்." ( நீதிமொழிகள் 16: 7) என்று வேதம் கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே வேத வசனங்கள் வெறும் வாசிக்கவேண்டிய வார்த்தைகள் மட்டுமல்ல, அவை நமது வாழ்வில் உண்மையாக செயல்புரிபவை. இப்படிவேத வசனங்கள் நமது வாழ்வில் செயல்புரிய நாம் தேவனை அணுகும்போது அவர் தனது வசனத்தை உறுதிப்படுத்துவார். 

இதுபோன்ற பல சம்பவங்களை நாம் இராஜாக்கள் புத்தகத்தில் வாசிக்கலாம். பல முறை தேவன் இதுபோல இடைப்பட்டு எதிரி இராஜாக்களிடையிருந்து தனது மக்களைக் காத்துள்ளார். எலிசா, தாவீது, எசேக்கியா போன்றவர்களை பலமுறை தேவன் எதிரிகளிடமிருந்து தப்புவித்துள்ளார். கானானை நோக்கிய பயணத்தில் பலமுறை தேவன் மோசேயுடன்  "அவனுக்குப்  பயப்படவேண்டாம்" (எண்ணாகமம் 21:34, உபாகமம் 3:2, எரேமியா 42:11) என்று கூறுவதை நாம் வாசிக்கலாம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பல இடங்களில் "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம். 

எனவே அன்பானவர்களே, நமது பிரச்சனைகள், துன்பங்களையே  எண்ணி பயப்பட்டு நிம்மதி இழந்து தவிக்கவேண்டாம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்திய தேவாதி தேவன் நம்மோடு இருக்கின்றார். அவரே நம்மை உண்டாக்கினார். எனவே அவரை மட்டும் மறந்திடாமல் உறுதியுடன் இருப்போம்.  

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்." ( சங்கீதம் 121: 1, 2)

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1836
🔆 ஆதவன் 16.02.2026 திங்கள்    

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3: 8)

இன்றைய தியான வசனம் பலம் குறைந்த மனிதர்களாகிய நமக்கு ஆறுதல் அளிக்கும் வசனமாகும். தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு மிகப்பெரிய பலம் தேவையில்லை. நமக்கு இருக்கின்ற பலத்தோடு தேவனை மறுதலியாத சாட்சி வாழ்க்கை வாழ்ந்தாலே போதும். பெலனில்லாதவர்களையும் அவரால் பலப்படுத்திப் பயன்படுத்த முடியும். "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40: 29) என்று நாம் வாசிக்கவில்லையா? 

நியாயாதிபதிகள் நூலில், மீதியானியர் கையிலிருந்து இஸ்ரவேலரை இரட்சிக்க  தேவன் கிதியோனைத் தெரிந்துகொள்வதை நாம் பார்க்கலாம்.  அப்போது கிதியோன், "ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6: 15) "அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 14)

ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மை அனுப்பும்போது அல்லது நம்மோடு இருக்கும்போது நமக்கு இருக்கின்ற பலம் போதும். அதனை மட்டும் வைத்துக்கொண்டு விசுவாசத்தைக் கைவிடாமல் இருக்கவேண்டியதே முக்கியம். பிலதெல்பியா சபை இப்படித்தான் இருந்தது. எனவேதான், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்" என்கிறார் தேவன். 

மட்டுமல்ல, இந்தக் கொஞ்சமான பலத்தைக்கொண்டு அவர்கள் தேவன் செயல்படுவதற்கு பொறுமையாகக் காத்திருந்தார்கள். எனவேதான் தேவன் தொடர்ந்து கூறுகின்றார், "என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3: 10)

இன்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் வயதான பலர் சோர்வுடன் கூறுவதை நான் பலமுறைக் கேட்டுள்ளேன். "பிரதர், எனக்கு முன்புபோல அதிகநேரம் ஜெபிக்கமுடியவில்லை; வேதம் வாசிக்கமுடியவில்லை. மற்றபடி நான் ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசத்தோடுதான் இருக்கிறேன். எனது உடல் பலவீனம் முன்புபோல செயல்பட என்னை அனுமதிக்கவில்லை" என்று கூறுவார்கள்.  ஆம் அன்பானவர்களே, ஒருவேளை நீங்களும்  இதுபோல இருக்கலாம். ஆனால் உங்களைப் பார்த்துத் தேவன் கூறுகின்றார், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்."

தொடர்ந்து ஜெபித்துக்கொண்டும் வேதம் வாசித்துக்கொண்டும் வாழும் பலர் சாட்சியற்று, உண்மையில்லாதவர்களாக வாழ்வதை நாம் பார்க்கின்றோம். அவர்கள் மத்தியில் விசுவாசத்தைக் காத்துக்கொண்டு உண்மையாக, பொறுமையாக வாழும் பலவீன மனிதர்களையேத்  தேவன் விரும்புகின்றார். 

இதுபோலச் சிலர் தொடர்ந்த துன்பங்களினால் மனம் சோர்ந்து பலவீனமாக இருக்கலாம். ஆனாலும் தேவன்மேலுள்ள விசுவாசத்தில் அவர்கள் நிலைத்திருப்பதை தேவன் விரும்புகின்றார். "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." (2 கொரிந்தியர் 12: 10) எனப் பவுல் அப்போஸ்தலர் கூறவில்லையா? 

எனவே, பொறுமையுடன் விசுவாசத்தைக் கைவிடாமல் சாட்சி வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம். இப்படி நாம்  வாழ்வோமானால் "இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1837
🔆 ஆதவன் 17.02.2026 செவ்வாய்     

"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14)

கிறிஸ்துவின்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கையினை கொஞ்ச நாட்களுக்கு மட்டுமல்ல, நமது வாழ்வின் இறுதிவரை நாம் காத்துக்கொண்டு வாழவேண்டியது அவசியம். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டதால் மட்டும் நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிட முடியாது. கிறிஸ்துவை நமது வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அறியும் மறுபடி பிறக்கும் அனுபவமே நம்மைக் கிறிஸ்தவர்களாக மாற்றும். இப்படி விசுவாசத்தினால் கிறிஸ்தவர்கள் ஆகிவிட்ட நாம் அந்த விசுவாசத்தை நமது வாழ்வின் முடிவுவரைக் காத்துக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறியும் மறுபடி பிறக்கும் அனுபவம் இல்லையானால் நாம் மற்ற மதத்தினர்  தங்கள் மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதைப்போல கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கைக் கொண்ட வெறும் மதவாதிகளாகவே இருப்போம். அத்தகையவர்கள் வெறும் பெயர் கிறிஸ்தவர்களே. அவர்களுக்கு கிறிஸ்துவிடம் உறுதியான விசுவாசம் இருப்பது அரிது. இத்தகைய பெயர் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்ப பிரச்சனைகள், நோய்களுக்காக கிறிஸ்துவை விட்டு மற்ற வழிமுறைகளையும், மற்ற புனிதர்களையும் நாடி ஓடிக்கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்கு எள்ளளவும் கிறிஸ்துவின்மேல் விசுவாசம் இல்லை என்பதையேக்  காட்டுவதாக இருக்கும்.  

கிறிஸ்துவின்மேல் நாம் கொண்டுள்ள விசுவாசம் உறுதியானதாக இருக்கவேண்டியது அவசியம். நமது விசுவாசத்தைச் சிறிதளவு  நாம் காத்துக்கொண்டால்கூட அவர் நம்மை கனப்படுத்துவார். ஆம், அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது கடுகளவு விசுவாசம்தான். (லூக்கா 17:6)

மேலும், நாம் கிறிஸ்தவராக இருப்பதால் மற்றவர்களால் பகைக்கப்படலாம்; சில அரசாங்கச்  சலுகைகள் நமக்கு கிடைக்காமல் போகலாம். அதற்காக நாம் கிறிஸ்துவை மறுதலிக்க முடியாது. தன்னைப்  பின்பற்றுபவர்களைப்பற்றி இயேசு கிறிஸ்து கூறினார், "என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம்   நிலைநிற்பவனே  இரட்சிக்கபடுவான்."  (மாற்கு 13:13) என்று. எனவே, இன்பமோ துன்பமோ, நாம் கொண்ட விசுவாசத்தில் இறுதிவரை நிலைநிற்கவேண்டியது அவசியம்.  

ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையைவிட்டுப் பின்மாறிடாமல்  முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க இன்றைய தியான வசனம் கூறுவது மேலான பொருளிலாகும். அதாவது, இது வெறும் உலக காரியங்களுக்காக கிறிஸ்துவைவிட்டுப் பின்மாறுவதைக் குறிக்காமல், ஆவிக்குரிய பின்மாறுதலைக் குறிக்கின்றது. உலகப்பிரகாரமான மறுதலிப்பைவிட, ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவை மறுதலிப்பது அதிக தீமையானதாகும்.  

ஒருவேளை நமது குடும்பத்தினர்; மனைவி அல்லது கணவர் கிறிஸ்துவ ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையாமல் இருக்கலாம். அவர்களுக்காக சிலமுரண்பாடான  காரியங்களை நாம் செய்யவேண்டியிருக்கலாம். அத்தகைய நிலையில் அவர்களுக்காகச் சில காரியங்களை நாம் செய்யவேண்டியிருந்தாலும் மனத்தளவில்  கிறிஸ்துவைவிட்டு மாறிடாமல் இருக்கவேண்டியது அவசியம்.  மெய் தேவனை அறிந்துகொண்ட நாகமான் எலிசாவிடம் ரிம்மோன் கோவிலுக்குள் செல்ல அனுமதியை கேட்டதுபோல (2 ராஜாக்கள் 5:18) தேவ அனுமதியோடு தங்கள் இருதயம் கர்த்தரை நோக்கி இருக்க  நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.  

நமது தேவன் இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றவர். நமது வாயில் சொல் பிறக்குமுன்பே அதனை அறிபவர். எனவே ஆவிக்குரிய வாழ்வு வாழும் நமது செயல்பாடுகள் சிலவேளைகளில் முரண்பாடுபோல உலகுக்குத் தெரிந்தாலும் தேவனுக்குமுன் அது நீதியும் சரியான செயலுமாக இருக்கும்.  

இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை பிறமத நம்பிக்கையிலிருந்து புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கலாம்.  உங்கள் வீடுகளில் கிறிஸ்துவுக்கு பிரியமில்லாத காரியங்கள்  நடைபெறலாம். உங்களைக் கட்டாயப்படுத்திச் சில காரியங்களைச் செய்யும்படிச் சொல்லலாம். மனம் தடுமாறவேண்டாம். உங்கள் இருதயம் மட்டும் கிறிஸ்துவுக்கு நேராக இருந்தால் போதும்.   ஆம் அன்பானவர்களே, ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை மட்டும்  முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்பீர்களென்றால், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்பீர்கள். 

தேவன் நமது ஒரு செயலை மட்டும் பார்த்துத் தீர்ப்பிடுபவரல்ல, அவர் எதார்த்தத்தின்படி மக்களைத் தீர்ப்பிடுகின்றார். ஆம், "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11: 3, 4)

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1838
🔆 ஆதவன் 18.02.2026 புதன்      

"யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்." ( எஸ்தர் 10: 3)

சில வேளைகளில் நாம் அற்பமாய் எண்ணும் மனிதர்களே நமது வாழ்வில் மிகப்பெரிய நன்மை ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பார்கள். சிறு வயதில் சிங்கமும் சுண்டெலியும் கதையைப் பலரும் படித்திருப்போம். சுண்டெலி சிங்கத்துக்கு எப்படி உதவிடமுடியும் என்று பலரும் எண்ணலாம். ஆனால்,  சுண்டெலிதானே என்று அற்பமாக எண்ணப்பட்ட அந்த எலிதான் இராஜா போன்ற சிங்கத்துக்கு இக்கட்டான வேளையில் உதவிசெய்து அதன் உயிரைக் காப்பாற்றியதை அந்தக் கதையில் படித்திருப்போம். 

இதுபோலவே, யூதனாகிய மொர்தெகாய் சுண்டெலிபோல அற்பமானவனாகத்தான் இருந்தான். அரண்மனை வாசலில் காவல்காரனாக இருப்பவனை யார்தான் மதிப்பார்கள்?   ஆனால் அற்பமாக எண்ணப்பட்ட மொர்தெகாயினால் யூதர்களுக்கு மிகப்பெரிய இரட்சிப்பு வந்ததை நாம் எஸ்தர் புத்தகத்தில் வாசிக்கின்றோம். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18: 10) என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே, நாம் யாரையும் அவர்களது தொழிலைப்பார்த்தோ, அவர்களது வருமானத்தைப் பார்த்தோ, படிப்பைப் பார்த்தோ, ஜாதி, மதத்தைப்பார்த்தோ அற்பமாக எண்ணாமல் இருக்கவேண்டியது அவசியம். 

மேலும், ஒருவேளை நாமும் இன்று மொர்தெகாயைப்போல அற்பனான ஒரு வேலையில் இருக்கலாம்; நமது படிப்பு குறைவாக இருக்கலாம்; மற்றவர்களைவிட குறைவாக சம்பாதிப்பவர்களாக இருக்கலாம்.   நமது வேலையைக் கருத்தில்கொண்டும் நமது படிப்பு, பொருளாதாரக் குறைவு இவைகளைக்கொண்டு  நமது உறவினர்கள் நம்மை அற்பமாக எண்ணியிருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் வேலையில் உண்மையோடும் உத்தமத்தோடும் இருந்து தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால் நிச்சயமாக தேவன் நம்மையும் உயர்த்துவார்.  

வாயில் காவலனாக இருந்த மொர்தெகாய் தேவன் உயர்த்தியபின்னர் எப்படி ஆகிவிட்டான் என்பதனை "மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்." (எஸ்தர் 9: 4) என்று வாசிக்கின்றோம். 

இப்படி தேவனால் உயர்த்தப்பட்ட மொர்தெகாய் தனது சுய உயர்வுக்காக மட்டும் உழைக்கவில்லை. ஒட்டுமொத்த யூதர்களுக்காகவும் உதவி செய்பவனாக இருந்தான். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம்,   "யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்" என்று வாசிக்கின்றோம். 

எனவே, இன்றைய தியான வசனம் நமக்கு இரண்டு பாடங்களை உணர்த்துவதாக உள்ளது. முதலாவது, நம்மைவிட பதவியிலும், பொருளாதாரத்திலும், படிப்பிலும்,  வேறு எந்த விதத்திலும் குறைவாக இருப்பவர்களை நாம் அற்பமாக எண்ணக்கூடாது. ஏனெனில், தேவன் யாரையும் எந்தவேளையிலும் உயர்த்துவதற்கு வல்லவராக இருக்கின்றார். 

இரண்டாவதாக, தேவன் நம்மை நமது தாழ்நிலையிலிருந்து உயர்த்தும்போது அதனைப் பெருமையாக எண்ணி மற்றவர்களை நாம் அற்பமாக எண்ணாமல்  அவர்களுக்கு உதவுபவர்களாக வாழவேண்டும். 

ஆம் அன்பானவர்களே,  யூதர்களில் அற்பமானவனாக, வாயில் காவலனாக இருந்த மொர்தெகாய் யூதருக்குள் பெரியவனாக தேவனால் உயர்த்தப்பட்டான். அப்படி உயர்த்தப்பட்டபின்னர், அவன் தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்தது தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான். ஆம், தேவன் நம்மைத் தாழ்விலிருந்து மேலே உயர்த்த இதுதான் ஒரு காரணம். தேவன் நமக்குத் தரும் உயர்வு நமக்காக மட்டுமல்ல, நமது மூலம் மற்றவர்களும் ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பதற்காகவே. 

யூதனாகிய மொர்தெகாய் ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளான். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1839
🔆 ஆதவன் 19.02.2026 வியாழன்      

"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29: 13)

கடவுள் என ஒருவர் உண்டுமா, இல்லையா எனும் சர்ச்சை உலகம் துவங்கியதுமுதல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. பலரும் தாங்கள் கண்ணால் கண்டும், அல்லது உணர்ந்தும் கொண்ட எதனையும் தவிர மற்றவற்றை நம்புவதில்லை. ஆனால், வேதத்தில்  நாம் வாசிக்கின்றோம், "காணப்படாத தேவனின் வல்லமை அவரால் உண்டாக்கப்பட்ட பொருட்களைப் பார்த்தாலே நமக்குப் புரியும். ஆம், "எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." ( ரோமர் 1: 20) என்று. 

இன்று உலகில் பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் ஆனால், கடவுள் உண்டு என்று கூறிக்கொள்ளும் பலரும்கூட அவரை உண்மையாக அறிந்தவர்கள் அல்ல. பலரும் தாங்கள் அறியாததையே வணங்கிக் கொண்டிருக்கின்றனர். "நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம். ( யோவான் 4: 22) என்று இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் கூறவில்லையா?

அதாவது, பலரும் நமக்குமேலான ஒரு சக்தி உள்ளது என்று நம்புகிறார்களேத்தவிர மெய்யான அந்தச் சக்தியை அறிந்து, உணர்ந்து, அன்புகூர்ந்து  வணங்குவதில்லை.

எனவே, இப்படித் தேவனை பலரும் அறியாமலிருக்கக் காரணம் அவர்களுக்கு அவரை அறியவேண்டும் எனும் எண்ணமும் ஆர்வமும் இல்லாமல் இருப்பதுதான் என்பது விளங்கும். ஆலயங்களுக்குச் செல்லும் அனைவரும் தேவனைத் தேடி அங்குச்  செல்வதில்லை; மாறாக, தங்களது உலகத் தேவைகளை எடுத்துக்கூறி ஜெபிக்கச் செல்கின்றனர். எனவே, அவர்களால் தேவனை அறியமுடியவில்லை. "தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்." ( சங்கீதம் 14: 2 & 53:2) என்று வாசிக்கின்றோம்.  இப்படித் தன்னைத் தேடும் உணர்வுள்ளவனுக்குத்தான் தேவன் வெளிப்படுவார். ஆனால் துரதிஷ்டமாக "உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;" ( ரோமர் 3: 11)

கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக உலகினில் கடவுளை வழிபடும் பலரும் இப்படி அவரை அறியவேண்டும் எனும் எண்ணத்தில் வழிபடாமல் அவரிடம் உலகத் தேவைகளுக்காக மட்டும் ஆர்வமுடன் ஜெபிப்பதால் அவரை அறியவில்லை.

அன்பானவர்களே, "முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. முழு இருதயம் என்பது அவரை மட்டுமே நாடும் இருதயம்; சுத்தமான தேவ அன்புடன் அவரைத் தேடும் இருதயம். உலக ஆசைகளுக்காக அவரைத் தேடாமல் ஒரு தாயைத் தேடும் குழந்தையைப்போல அவரைத் தேடும் இருதயம். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5: 8) என்று கூறினார்.

இன்று இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே, சகோதரியே, உங்களது ஜெப முறையினை மாற்றுங்கள். உலக ஆசை இச்சைகளை நிறைவேற்ற ஜெபிக்காமல் தேவனையே வாழ்வில் அடைந்திட ஜெபிக்கப் பழகுங்கள். நமக்குப் பல்வேறு உலகத் தேவைகள் உண்டு என்பது நம்மை உண்டாக்கிய தேவனுக்குத் தெரியும். எனவே, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்". ( மத்தேயு 6: 33) எனும் வசனத்தை நம்பி ஏற்றுக்கொண்டு அவரிடம் விசுவாசம் கொள்ளுங்கள்.

இப்படி நாம் அவரைத் தேடும்போது, "என் பிள்ளை என்னைத் தேடுகின்றான் / தேடுகின்றாள்" என்று அவர் மகிழ்ச்சியடைவார். உங்களது பாவங்களை அவர் மன்னித்து ஏற்றுக்கொள்வதால் உங்களது வாழ்க்கை, ஆவிக்குரிய அனுபவங்கள் இவை மாற்றமடையும். அவர் கிருபையுடன் உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவார். அப்போது நாம் வெறும் வழிபாட்டுக் கிறிஸ்தவர்களாக இல்லாமல் தேவனை அறிந்த ஆவிக்குரிய மக்களாக மாறுவோம்.

"கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்." ( ஆமோஸ் 5: 4)

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1840
🔆 ஆதவன் 20.02.2026 வெள்ளி       

"நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்." ( யோவேல் 2: 25)

வாழ்க்கையில் துன்பங்களுக்குமேல் துன்பங்களும், பிரச்சனைகளும் தொடர்ந்து வாழ்க்கையை ஒன்றுமில்லாததாக  மாற்றிவிட்ட நிலையில் கவலையோடு இருக்கும் மக்களைப்பார்த்து தேவன் இன்றைய ஆசீர்வாத தியான வசனத்தைக் கூறுகின்றார். 

பலரது வாழ்வில் தேவனது ஆசீர்வாதம் வருவதற்குமுன் இருந்த வாழ்க்கையினை, "பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது." ( யோவேல் 1: 4) என்று யோவேல் தீர்க்கதரிசி கூறுகின்றார். அதாவது, ஒரு துன்பத்தினால் அழிந்துபோன செல்வங்கள் தவிர மீதி இருக்கும் செல்வத்தினை இன்னொரு துன்பம் வந்து அழித்தது. அப்போதும் மீதி இருந்த செல்வத்தை இன்னொரு துன்பம் அழித்தது. இப்படி வாழ்க்கையே அழிவுக்குரியதாக இருந்தது. 

வாழ்வில் இத்தகைய சூழ்நிலை பலருக்கு ஏற்படலாம். தமிழில், "பட்டகாலிலே படும்" என்று ஒரு பழமொழி உண்டு. ஆம், சிலரது வாழ்வில் ஒரு துன்பம் முடிவுறுவதற்குமுன் இன்னொரு துன்பம் வந்து தாக்கி விடுகின்றது.  ஆனால் இது நிரந்தரமல்ல என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. "பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

யோபுவின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. துன்பத்துக்குமேல் துன்பம் வந்து யோபுவை நெருக்கியது. இத்தனைக்கும் யோபு துன்மார்க்கரல்ல. ஆனால் அவரது வாழ்வில் தேவன் துன்பங்களை அனுமதித்தார். ஆனாலும்  இறுதிவரை யோபு தனது விசுவாசத்தை விட்டுவிடவில்லை. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் தனக்காக மட்டுமல்ல, தனது நண்பர்களுக்காகவும் ஜெபித்தார். "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்." ( யோபு 42: 10) என்று கூறப்பட்டுள்ளது.

ஆம், வாழ்வில் இழந்துபோன அனைத்தையும் யோபு இரண்டு மடங்காகப் பெற்றுக்கொண்டார். அதனையே இன்றைய தியான வசனம் மூலம் தேவன் நமக்கும் கூறுகின்றார். எந்தவித இழப்பிலும் விசுவாசத்தைக் கைவிடாத நிலையில் இருப்போமானால் நாம் அவரது மக்களாக இருப்போம். நாம் இழந்துபோன அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வோம். 

இதனையே இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக யோவேல் கூறுகின்றார், "நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." ( யோவேல் 2: 26)

ஆம், தேவனுடைய ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. விசுவாசத்தோடு துன்பத்தைச் சகித்து தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோம். "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1: 12)

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1841
🔆 ஆதவன் 21.02.2026 சனி        

"பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்." (2 கொரிந்தியர் 5: 1)

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானான் தேசத்தை அடையும்வரை அவர்கள் கூடாரங்களில்தான் தங்கியிருந்தனர். அவர்களோடு நடந்த தேவனும் ஆசரிப்புக் கூடாரத்தில்தான் தங்கினார். எனவே, அப்போஸ்தலரான பவுல் நமது இவ்வுலக வாழ்க்கைக்கான நமது உடலையும் மறுவுலக பரலோக வாழ்க்கையையும் கூடாரத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

நாம் இன்று பூமியில் வாழ்ந்தாலும் இது நமது நிரந்தர குடியிருப்பல்ல; நமது நித்திய வீடு பரலோகத்தில் உள்ளது. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் நாம் அங்கு செல்லப்போகின்றோம்.  இதனையே, "பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்" என்கின்றார் அவர். 

இஸ்ரவேல் மக்களது கூடார வாழ்க்கை லெகுவானதாக இருக்கவில்லை. கொடுமையான வெய்யிலிலும், பனிக்குளிரிலும், மழையிலும் குழந்தைகளோடு கூடாரங்களில் வாழ்வது எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அவர்கள் 40 ஆண்டுகள் அந்தத் துன்பத்தை அனுபவித்தப் பின்னர்தான் கானான் தேசத்திலும் நுழைய முடிந்தது. இதற்கு இடையே அவர்கள் பல்வேறு போர்களையும் உயிரிழப்புகளையும் சந்தித்தனர். 

அதுபோலவே, நமது இவ்வுலக வாழ்க்கையும் பாடுகள் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் இந்தப் பாடுகளை நாம் எதிர்காலத்தில் அனுபவிக்கப்போகும் பரலோக வாழ்க்கைக்காக சகித்துக்கொண்டு வாழ்கின்றோம். இதனையே அவர்,  "ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;" (2 கொரிந்தியர் 5: 2) என்கின்றார். 

மேலும், உலகக் கூடாரத்தில்  தங்கியிருக்கும் நமக்கு நமது உயிரானது போர்வையாக இருக்கின்றது. இந்தத் துன்பத்திலும் போர்வையான உயிரை நாம் மாய்த்துக்கொள்ள விரும்பாமல் தேவன் நம்மை அழைக்கும்வரை நமது உயிரைக் காத்துக்கொண்டவர்களாக வாழ்கின்றோமென்றால் அதற்குக் காரணம் ஆவியானவர் நமக்குள் இருந்து நம்மைப் பலப்படுத்துவதுதான்.  

இதனையே நாம், "இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே." (2 கொரிந்தியர் 5: 4, 5) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் துன்பங்கள் கொஞ்சநாட்களுக்குத்தான். ஆனால் நமது நித்திய வாழ்வோ முடிவற்றது. அதுவே நமது நிரந்தர வீடு. இந்த நம்பிக்கையில் நாம் பொறுமையாக துன்பங்களைச்  சகித்து வாழவேண்டியதிருக்கின்றது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இந்தக் கூடார அனுபவத்தைக் கடந்து சென்றவர்தான். எனவேதான், "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்." ( எபிரெயர் 12: 2)

எனவே, நாமும் எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையுடன் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ முயற்சிசெய்வோம். சில வேளைகளில் சில மனிதர்கள், "நான் செத்தாலும் எனது நிலையிலிருந்து  மாறமாட்டேன்" என்று  கூறுவதுண்டு. அதுபோலவே அப்போஸ்தலரான பவுலும், நான் உயிரோடிருந்தாலும், இல்லாமல்போனாலும் அவருக்குப் பிரியமானவனாயிருக்க நாடுகிறேன் என்கின்றார். இதனையே அவர்,  "அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்." (2 கொரிந்தியர் 5: 9) என்று கூறுகின்றார்.  

ஆம் அன்பானவர்களே, பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டு என்பதால் பவுலைப்போல உறுதியுடன் துன்பங்களைச் சகித்து தேவனுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1842
🔆 ஆதவன் 22.02.2026 ஞாயிறு         

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." (2 கொரிந்தியர் 11: 3)

ஆதியில் ஏதேன் தோட்டத்தில்  பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் தனது தந்திரமான வார்த்தைகளினால் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசித்   தான் சொல்லுவதுதான் சரி என்று அவளை நம்பச் செய்தது. இதுபோல, கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்துக்கு முரணாக போதிக்கும் உபதேசங்களைப்  பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான்.  மேலும், வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம். 

ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள்  கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே,  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்", (2 கொரிந்தியர் 11: 4)  அது சாத்தானின் உபதேசம். 

புதிய ஏற்பாட்டின்படி  நமது  உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாகப்  பாதுகாத்து உயிருள்ள  ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள  மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல்படி. ஆனால், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம்.  உலகப் பொருள் ஆசீர்வாதத்தையே தேவ ஆசீர்வாதம் எனப் போதிப்பது சாத்தானின் உபதேசம். 

இதுபோலவே, "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே." (1 தீமோத்தேயு 2: 5) என்று வேதம் கூறியிருக்க, வேதம் கூறாத மத்தியஸ்தர்களாக புனிதர்களைக் காண்பிப்பது சாத்தானின் உபதேசம்.

ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள்.  "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்த்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.  

தேவன் கூறியதற்கு முரணாக சாத்தான் போதித்தது. இதனை,  "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3: 4, 5) என்று வாசிக்கின்றோம். 

இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள்  இன்றைய பல ஊழியர்களது போதனைகள், மற்றும் அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பணத்தால் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான். 

தேவனுடனான நமது தனிப்பட்ட  உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும்.  ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய  வாழ்வு வாழ முடியும்.   


"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1843
🔆 ஆதவன் 23.02.2026 திங்கள்          

"பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்." ( மத்தேயு 2: 12)


வாழ்க்கை மாற்றமே நாம் கிறிஸ்துவினிடம் நெருங்கிச் செல்ல முதன்மையான காரணமாக இருக்கின்றது. மட்டுமல்ல, நாம் மெய்யாகவே கிறிஸ்துவை வாழ்வில் கண்டுகொண்டோமானால் கிறிஸ்துவை சந்திக்குமுன் இருந்த நமது பழைய வாழ்க்கையை விட்டு முற்றிலும் மாறுபாடான ஒரு வாழ்க்கையை நாம் வாழவேண்டியது அவசியம்.  

கிறிஸ்துவை தரிசிக்க வந்த ஞானிகள் தவறுதலாக ஏரோதின் அரண்மனைக்குள் வந்துவிட்டனர். மேசியா எனும் உலக இரட்சகர் என்று கூறப்பட்டதால் அவர் ஒரு அரசகுமாரனாகத்தான் இருப்பார் என்று அவர்கள் எண்ணிக்கொண்டனர். ஆனால் அங்கு வந்தபின்னர்தான் அவர்களுக்குத் தங்களது தவறு புரிந்தது. ஆம், கிறிஸ்துவை நாடி வந்த அவர்கள் அதுவரை ஏரோதின் வழியில் தான் நடந்திருக்கிறார்கள்.  

ஏரோதின் அரண்மனையினை விட்டு வெளியேறியபோது அவர்கள் கிறிஸ்துவை சந்திக்கும் சரியான நேர்வழியில் பயணித்தனர்.  எனவே, "இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்." ( மத்தேயு 2: 9, 10) அவர்கள் அந்த நட்சத்திரம் காட்டிய வழியில் வந்து இயேசுவைச் சந்தித்தனர். 

ஆனால் அதன்பின்னர், "ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று    சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவை சந்தித்தபின் நமது வாழ்க்கைப் பாதை மாறவேண்டியது அவசியம். நமது பயணம் புதிய வழியில் தொடரவேண்டியது அவசியம். ஏரோதின் பாதையிலிருந்து கிறிஸ்துவின் பாதைக்கு நாம் மாறவேண்டும்.

இன்று, "கிறிஸ்துவை வாழ்வில் அனுபவித்துள்ளேன், இரட்சிக்கப்பட்டுள்ளேன்" என்று பலரும் கூறிக்கொண்டாலும் அவர்களது ஆராதனை முறை மாறியிருக்கின்றதேத்  தவிர வாழ்க்கையில் எந்த மாறுதலையும் காணமுடிவதில்லை. நாம் வாழ்வில் கிறிஸ்துவை மெய்யாகவே சந்தித்துள்ளோமென்றால் நம்மைப் படைத்த அவருக்கு ஒப்பாக புதிய மனிதனாக மாறவேண்டியது அவசியம். "தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே." (கொலோசெயர் 3:10) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இதனையே ஞானிகளின் புதிய மாறுபட்ட வழிப்பயணம் நமக்கு விளக்குகின்றது. இப்படி, கிறிஸ்துவை சந்தித்தபின் நமது வாழ்க்கை மாறவேண்டியது அவசியம்; நாம் கிறிஸ்துவை வாழ்வில் சந்தித்து, புதிய மனிதனைத் தரித்துக்கொண்டு, புதிய பாதையில் நமது வாழ்வைத் தொடர வேண்டியது அவசியம். இப்படி நாம் நமது வாழ்க்கைப் பயணத்தைப் புதிய வழியில் திருப்புவோமென்றால் தேவன் நமக்கு வாழ்வில் புதிய காரியங்களைச் செய்வார். நமது வனாந்தர வாழ்க்கை மாறும். ஆறுகளும், செழிப்பும் நமது வாழ்வில் தோன்றும்.  "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்". (ஏசாயா 43:19) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1844
🔆 ஆதவன் 24.02.2026 செவ்வாய்        

"தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1: 28)   

தேவனை வாழ்வில் அறியாமல் வாழ்வோமென்றால் நமது வாழ்வு பாவத்திற்கு அடிமையாகி நரக படுகுழிக்கு நேராகச் செல்வதாகவே இருக்கும். காரணம், நாம் தேவனை அறியவில்லையானால் தகாத செயல்களையேச் செய்கிறவர்களாக இருப்போம். நமது சிந்தையும் கேடான சிந்தையாகவே இருக்கும் என்று இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

பலரும் தங்கள் ஆலயங்களுக்குத் தவறாமல் செல்வதாலும், ஜெபிப்பதாலும், வேதாகமத்தை வாசிப்பதாலும் தேவனை அறிந்துவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அன்பானவர்களே, இவை அனைத்தையும் வாழ்வில் தேவனை அறியாதவர்களும் செய்யமுடியும். ஆலய காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட பலர் சாட்சியற்ற வாழ்க்கை வாழ்வதை நம்மில் பலரும்  கண்டிருக்கலாம். இப்படிப் பலரும் இருக்கக் காரணம், அவர்கள் தேவனை தனிப்பட்ட விதத்தில் அறியாமல்  வெறும் பக்தி வாழ்க்கை வாழ்வதால்தான். 

தேவனை அறிதல் என்பது அவரை வாழ்வில் அனுபவித்து ருசிக்கும் அனுபவம். இதனால்தான் சங்கீத ஆசிரியர், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்". (சங்கீதம் 34:8) என்று கூறுகின்றார்.

தேவனை அறிதல் என்பது ஒரு குழந்தை தனது தாய் தகப்பனைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொள்வதுபோல தேவனையும் அவரது குணத்தையும் நமது வாழ்வில் அனுபவிப்பது. மேலும், தேவனை அறிதல் என்பது, வேதத்தில் கூறப்பட்டுள்ள தேவனது குணங்களையும், அவரது வல்லமையையும் நமது வாழ்வில் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்வது.  

பார்வையற்ற ஒரு  மனிதன் பல்வேறு நிறங்களின் பெயர்களைத் தெரிந்திருக்கலாம். சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள் என நிறங்களின் பெயரை அவன் அறிந்திருக்கலாம், ஆனால் இப்படி பெயரை அறிவது நிறங்களை அறிவதாகாது.   பார்வையற்ற மனிதனுக்கு இந்த நிறங்களின் உண்மையான மகிமை, அவற்றின் அழகு இவை புரியாது. இதுபோலவே, வேதாகமத்தை வாசிப்பதன்மூலம் நாம், தேவன் அன்பானவர், இரக்கமுள்ளவர், நீடிய சாந்தமுள்ளவர், வல்லமையும் பராக்கிரமம் உள்ளவர் என்று மட்டும் அறியலாம். இந்த தேவ வல்லமைகளை தங்கள் வாழ்வில் அறிந்துகொண்ட மனிதர்களைக் குறித்து அறிந்து கொள்ளலாம். ஆனால், இவை எதனையும் நாம் சொந்த வாழ்வில் நாம் அனுபவிக்கவில்லையானால் நாம் தேவனை அறியாதவர்களே. 

இப்படி, "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, தேவனை நாம் அறியவில்லையானால் வேதாகமத்தை வாசித்து, ஜெபித்து வந்தாலும் நமது சிந்தை புதியதாக மாறமுடியாது; உள்ளான மனிதன் மாற முடியாது; நமது சிந்தையும் கேடான சிந்தையாகவே இருக்கும். 

இந்தக் கேடான சிந்தை ஒரு மனிதனை எந்தவித பாவங்களைச் செய்யத் தூண்டுகின்றது என்பதனை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து ரோமர் 1: 29 - 31 வரை விளக்குகின்றார். அன்பானவர்களே, இந்த வசனங்களைக் கவனமாக வாசித்துப் பாருங்கள். இந்தப் பாவக்குணங்கள் நம்மைவிட்டு அகலவேண்டுமானால் நாம் வாழ்வில் தேவனை அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

மட்டுமல்ல, "இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்". (ரோமர் 1: 32)

தேவனுடைய ஆவியானவர் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் இந்தப்பாவ குணங்களிலிருந்து விடுபட முடியும். இந்தப் பாவங்களுக்கு காரணமான மனிதர்களையும்  பழைய பாவ வாழ்க்கை நண்பர்களையும் விட்டு நாம் விலக முடியும். காரணம், ஆவியானவர் நமக்குள் வரும்போதுதான்  நாம் கிறிஸ்துவை வாழ்வில் அறியமுடியும். இப்படி தேவனை அறியும் அறிவைப் நாம் பற்றிக்கொள்ள மனதில்லாமல் இருப்போமானால் தேவன் நம்மைக் கைவிட்டுவிடுவார்; தகாதவைகளைச் செய்யும்படி, கேடான சிந்தைக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிடுவார். 

எனவே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். "ஆண்டவரே, நான் எனது வாழ்வில்  உம்மை அறிய விரும்புகின்றேன், அதற்குத் தடையாக இருக்கும் எனது பாவங்களை உமது பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரியும். என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்" என்று மன்றாடுவோம். அப்போது  தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1845
🔆 ஆதவன் 25.02.2026 புதன் 

"தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 12: 6)

இந்த உலகத்தில் நாம் பெரிய பெரிய ஆலயங்களைக் கண்டு வியப்படைகின்றோம். சில ஆலயங்களை வல்லமை மிக்கவை என எண்ணுகின்றோம். அத்தகைய ஆலயங்களுக்கு மக்கள் கூட்டமும் அலைமோதுகின்றது. அன்று யூதர்களும் சீடர்களும் இப்படித்தான் எருசலேம் ஆலயத்தைக் கண்டு வியந்தனர். "அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும்." ( மாற்கு 13: 1) என்று வியந்து கூறியதைப் பார்க்கின்றோம். 

ஆனால் இயேசு கிறிஸ்து தன்னைத் தேவாலயத்திலும் பெரியவர் என்று கூறினார். ஆம் அன்பானவர்களே, விண்ணையும் மண்ணையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் தேவாலயத்தைவிடவும் பெரியவராக இருக்கின்றார். இதனைத்தான் அவர் தெளிவாக இன்றைய தியான வசனத்தில் கூறித்  தனது தெய்வீகத்தை உணர்த்துகின்றார்.  

கிறிஸ்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தான் கட்டிய ஆலயத்தைக் குறித்து சாலமோன் இராஜா, "தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?"(1 இராஜாக்கள் 8:27) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். "தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ?" என்று சாலமோன் சந்தேகத்துடன் கேள்வி கேட்டார். ஆனால், தேவன் பூமியில் வாசம்பண்ணுவார் என்பதனை இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்து பதில்  தந்தார். 

தேவன் தேவாலயத்தைவிடப் பெரியவர் என்பதனை ஸ்தேவானும் கூறுகின்றார். "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதப்படியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது" (அப்போஸ்தலர் 7:48, 49)

ஆம் அன்பானவர்களே, தேவனை நாம் நான்கு சுவர்களுக்குள் அடைத்திடமுடியாது. அவர் தேவாலயத்தைவிடப் பெரியவர், வானங்களைவிட உயர்ந்தவர். அத்தகைய உயர்ந்தவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

ஆனால், இப்படி தேவாலயமும், வானங்களும் கொள்ளாத தேவன் மனிதர்களுடைய சிறிய இருதயத்தினுள் வந்து தங்குகின்றார். இதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். ஆம், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." (1 கொரிந்தியர் 3: 16, 17)

மேலும், இதனை அப்போஸ்தலரான பவுல் ஒரு இரகசியம் என்று கூறுகின்றார். "புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1: 27) கிறிஸ்து நமக்குள் இருப்பதால் நாமே ஆலயமாகிவிடுகின்றோம். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து பெரிய பெரிய ஆலயங்களுக்குள் அடைபட்டுக் கிடப்பவரல்ல, அவர் தேவாலயத்தைவிடப் பெரியவர். ஆனால் அதே கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கின்றார். இந்த இரகசியத்தை நாம் புரிந்துகொள்வோமானால் மட்டுமே நமது ஆவிக்குரிய வாழ்க்கை முற்றிலும் மாறுதலடையும். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1846
🔆 ஆதவன் 26.02.2026 வியாழன்  

"நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்." ( சங்கீதம் 139:3)

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளைக் கவனிக்க சக்திவாய்ந்த கேமராக்களைப் பொருத்தியிருப்பார்கள். குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களின் ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படுவதையும் அதன் அடிப்படியில் நடுவர்கள் தீர்ப்புக் சொல்வதையும் நாம் பார்த்திருக்கலாம். 

இதுபோலவே தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கின்றார் என்று நீங்கள் எண்ணிப்பார்த்ததுண்டா?  ஆம் அன்பானவர்களே, நமது ஒவ்வொரு சொல்லும், செயலும், நினைவுகளும் அவருக்கு மறைவானவை அல்ல. "என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்." ( சங்கீதம் 139: 4) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம். 

இன்று மனிதர்கள் இந்த உணர்வு இல்லாததால் பல்வேறு துன்மார்க்கச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேவனது நியாயத்தீர்ப்புக்கு முன்னுதாரணமாக இன்று பல்வேறு குற்றங்கள் CCTV கேமராக்களின் பதிவின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்படுவதும் குற்றவாளிகள் தண்டனை பெறுவதையும் நாம் பார்க்கின்றோம். இதுபோலவே, தேவனது நியாயத்தீர்ப்பு நாளில் நாம் அவருக்குத் தப்பி ஓடிடமுடியாது. "உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?" ( சங்கீதம் 139: 7)

மேலும், இன்று நம்மில் பலரும் மற்றவர்கள் செய்யும் பல்வேறு குற்றங்களைக் குறித்து அறிவதிலும் அவற்றை விமர்சிப்பதிலும் ஆர்வமாக உள்ளோம். ஆனால், பலவேளைகளில் அதே குற்றச்செயல்களை நாமும் செய்கின்றோம். தேவன் இவற்றைக் கண்டும் காணாதவர்போல இருந்து கொண்டிருக்கின்றார். இப்படி நம்மிடம் குறை இருக்குமானால் நாம் முதலில் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.    எனவேதான் அப்போஸ்தலரான   பவுல்,  "இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?" ( ரோமர் 2: 3) என்று கேட்கின்றார். 

எனவே அன்பானவர்களே, அச்சத்துடன் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். நாம் நடந்தாலும் படுத்திருந்தாலும் அவர் நம்மைச் சூழ்ந்திருக்கிறார். நமது வாழ்க்கையின் வழிகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். மற்றவர்கள் செய்யும் குற்றத்தை விமர்சிக்குமுன் முதலில் நாம் அவற்றைச் செய்யாமல் இருக்க முயலுவோம். 

ஒருமுறை தேவனது இந்தக் கண்காணிப்பைக் குறித்து நான் குடிகார நண்பர் ஒருவரிடம் கூறியபோது அவர் கிண்டலாக என்னிடம், "என்ன, சின்ன பிள்ளைபோல அறிவில்லாமல் பேசுகிறாய்? கடவுளுக்கு உன்னை கவனிப்பதுதான் வேலையா? அவருக்கு வேறு வேலை இல்லையென்று நினைக்கிறாயா? " என்றார்.  

அன்பானவர்களே, தேவனுக்கு நாம் ஒவ்வொருவரும் முக்கியம். எனவேதான் நம்மை அவர் கண்காணித்துச் சிலவேளைகளில் எச்சரிக்கவும் செய்கின்றார். ஆனால் நாமோ பலவேளைகளில் உணர்வற்றவர்களாக இருக்கின்றோம். நாம் அவருக்கேற்ற பரிசுத்தராக மாறவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். நான் பரிசுத்தர்; எனக்கேற்ற பரிசுத்தராய் இருங்கள் என்கிறார் அவர் (லேவியராகமம் 11:44)

. நமது பரிசுத்தத்திற்காக வேதத்தின் ஆரம்பம் முதல்  பல்வேறு கற்பனைகளையும், பரிசுத்தவான்களது சாட்சிகளையும் அவர் கொடுத்துள்ளார். இவைகளை அற்பமாக எண்ணுவோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாக இருப்போம். எனவேதான் எச்சரிக்கையாக அவர் கூறுகின்றார்:- 

"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." ( வெளிப்படுத்தின விசேஷம் 22: 11, 12)

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                      📞 Contact: 96889 33712                                                                     🌐 Website: aathavanmonthly.blogspot.com

"விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1847
🔆 ஆதவன் 27.02.2026 வெள்ளி   

"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." ( யோபு 42: 2)

நாம் பல காரியங்களில் தேவன்மேல் விசுவாசம் கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம், நாம் மனித கண்ணோட்டத்துடனும் மனித அறிவுடனும் அனைத்தையும் பார்ப்பதுதான். இதனை மாற்றி நாம் தேவனைப் பார்ப்போமானால் மட்டுமே அவர்மேல் நாம் விசுவாசம்கொள்ள முடியும். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதனை நாம் விசுவாசிக்கவேண்டும். "ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு." ( ஆதியாகமம் 17: 1) என்றார். பிள்ளையில்லாத அவனுக்கு அந்த முதிர்ந்த வயதிலும் ஒரு மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். 

ஆம், அவர், வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகின்றவர் (ஏசாயா 43:19). ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த அண்டசராசரங்களைப் படைத்தவர். 

இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து அவர்களைக் கானானை நோக்கி நடத்தியபோது தேவன் அவர்களை அதிசயமாகவே நடத்திவந்தார். ஒவ்வொரு நாளும் அவர்கள் தேவனது அற்புத வல்லமையை ருசித்தார்கள். செங்கடலைக் கடந்தது, பாலை நிலத்தில் தண்ணீர் கிடைக்கப்பெற்றது, இறைச்சி, மன்னா என உணவினை ருசித்தது, யோர்தானைக் கடந்தது, எரிகோவின் கோட்டைச் சுவர்கள் தகர்ந்தது, இவை அனைத்துமே அவர்  சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழையச் செய்வதும் தேவனால் கூடும் என்றார். ஆம், "இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." ( மாற்கு 10: 27) என்று வாசிக்கின்றோம். 

இன்று நமது வாழ்வில் பல பிரச்சனைகள் ஒட்டகத்தைப்போலவும் யானையைப்போலவும் நமக்குத் தெரியக்கூடும். இந்தப் பிரச்சனையிலிருந்து நாம் விடுபடவே முடியாது என எண்ணி மனம் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்". மரித்து நான்கு நாட்களுக்குப் பின்னர் கல்லறையிலிருந்து அவர் லாசரை உயிருடன் எழுப்பவில்லையா? 

மட்டுமல்ல, இதுபோலவே நம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவனுக்கு ஒரு திட்டமுண்டு. நம்மைக்குறித்து அவருக்கு ஒரு நோக்கமுண்டு. அந்த நோக்கத்தை யாராலும் தடுக்கவோ மாற்றவோ முடியாது. 

நான் இடதுசாரி கடவுள் மறுப்புப் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, கம்யூனிச தத்துவங்களைப் படித்து அவைகளைக்குறித்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன்.  அப்போது  அதுவே மெய்யாக எனக்குத் தெரிந்தது. ஊழியர்களின் பிரசங்கங்கள் எனக்கு அப்போது அறிவில்லாத மனிதர்களின் உளறல்போலத் தெரிந்தது. இத்தனை விஞ்ஞானபூர்வமான காரல்மார்க்ஸ் தத்துவத்துக்குமுன் வேதாகமம் ஒன்றுமே இல்லை என எண்ணிக்கொண்டும் கூறிக்கொண்டும் அலைந்தேன். ஆனால் தேவன் என்னை மாற்றினார். அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்; அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை விளங்கச் செய்தார். 

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகளாக பல்வேறு அதிசய முறைகளில் அவர் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்திலும் என்னை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார். 

ஆம் அன்பானவர்களே, அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். குடும்பப் பிரச்சனைகள், வாழ்க்கைப் போராட்டங்கள், கடன் பாரங்கள், பயப்படச் செய்யும் கொடிய நோய்கள்,   எதுவாக இருந்தாலும்  விசுவாசத்துடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அவற்றை ஒப்புக்கொடுத்து, அவரது வல்லமையினை விசுவாசித்துக் காத்திருங்கள். நிச்சயமாக அற்புதமான வழியை வாழ்க்கையில் அவர் திறந்து அதிசயம் செய்வார். வாழ்க்கை நிலைமையை மாற்றுவார்.   ஆம் அன்பானவர்களே, "மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்" என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                      📞 Contact: 96889 33712                                                                     🌐 Website: aathavanmonthly.blogspot.com

"விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1848
🔆 ஆதவன் 28.02.2026 சனி 

"அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை." ( எரேமியா 8: 20)

மனிதர்களின் வாழ்நாள் மிகக் குறுகியதாக இருக்கின்றது. ஒரு புதிய ஆண்டு துவங்கியதுபோல இருக்கின்றது, ஆனால் மிக வேகமாக அந்த ஆண்டு முடிவடைந்துவிடுகின்றது; நமக்கும் ஒரு வயது அதிகரித்து விடுகின்றது.  இதனையே யோபு, "என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்." ( யோபு 7: 6) என்கின்றார்.

இந்தக் குறுகிய வாழ்நாளில் பல்வேறு விதங்களில் நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியக்கூடிய வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றது. தேவையற்றவை  எனக் கருதும் சமூக ஊடகங்களில்கூட பல்வேறு தேவ செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், அவற்றைப் பலரும் கேட்பதில்லை. இதுபோலவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேவனுடைய வார்த்தைகள் பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பலரும் இவைகளைப் பெரிதுபடுத்துவதில்லை. பிரச்சனைகள், துன்பங்கள் நெருக்கும்போது மட்டும் நமக்காக ஜெபிப்பதற்குப்  பல்வேறு ஊழியர்களைத்தேடி ஓடுகின்றோம். 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனம், இந்த உலகத்தில் நமக்குரிய வாழ்நாள் காலம் கடந்து செல்வத்தையும், அதுபற்றி கவலை இல்லாமல் நாம் இரட்சிப்புக்கான வாய்ப்புகளை நழுவ விட்டவர்களாக வாழ்வதையும் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. அறுவடை மற்றும்  கோடைக்காலம் எனும் உருவகங்கள் இரட்சிப்புக்கான பலனை பெறவேண்டிய காலங்களைக் குறிக்கின்றன. ஆனால் இந்தக் காலங்கள் கடந்த போதிலும், மக்கள் அதுகுறித்துக் கவலையின்றி இன்னும் ஆன்மீக அபாய நிலையில் இருக்கின்றனர் என்பதே இந்த வசனம் முன்வைக்கும் கசப்பான உண்மையாகும்.

எரேமியா இந்த வசனத்தை இஸ்ரவேலர்களின் நிலையிலிருந்து எழுதியுள்ளார். அறுவடை என்பது கடவுள் அவர்களுக்கு வழங்க இருந்த பலனைக் குறிக்கிறது; கோடைக்காலம் என்பது வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கான காலத்தைக் குறிக்கிறது. இருந்தபோதிலும், "நாம் இரட்சிக்கப்படவில்லை" என்ற புலம்பலானது, வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் பல இருந்தும் மக்கள் மீட்புக்காகக் கடவுளிடம் திரும்பவில்லை என்ற ஆழ்ந்த ஏமாற்றத்தையும் யதார்த்தத்தையும் காட்டுகிறது.

இது இன்று நமது சொந்த வாழ்க்கையையும் நாம் கடந்து வரும் காலங்களையும் எண்ணிப்பார்க்க நம்மை அழைக்கிறது. கோடைக்காலம் முடிந்து, அறுவடைக்காலம் கடந்து செல்வதைப் போலவே, நாமும் ஆண்டுகள் பலவற்றைக் கடந்து கொண்டிருக்கின்றோம்.  நமது வயதும் ஏறிக்கொண்டே இருக்கின்றது. ஆனால் நாம் அதுகுறித்த உணர்வற்றவர்களாக இருக்கின்றோம். 

எனவே, விழிப்புடன் நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்க இந்த வசனம் நமக்கு நினைவூட்டலாக அமைகிறது. "நாம் இரட்சிக்கப்படவில்லை" என்ற அந்தப் புலம்பல் நம்முள் ஆழமாக எதிரொலித்து, நமது ஆன்மீக நலனில் தொடர்ந்து கவனம் செலுத்த நம்மைத் தூண்டுகிறது. நாம் கடவுளுடனான உறவை தீவிரமாக நாடுகிறோமா, ஆன்மீக வளர்ச்சிக்கான மற்றும் இரட்சிப்பிற்கான வாய்ப்புகளை நழுவ விடுகிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள இன்றைய தியான வசனம் நமக்கு அழைப்புவிடுகின்றது. 

நமது அன்றாட வாழ்வில், கடவுளிடம் நம்மை நெருங்கச் செய்யும் அல்லது அவரிடமிருந்து நம்மைத் தூரப்படுத்தும் முடிவெடுக்கும் தருணங்களை நாம் சந்திக்கிறோம். இந்த வசனத்தை நாம் சிந்திக்கும்போது, கடவுளை முழு மனதோடு தேடவும், அவருடைய வழிநடத்துதலுக்கு செவிசாய்க்கும் இதயத்தை வளர்த்துக்கொள்ளவும், ஆன்மீக வளர்ச்சியின் காலங்கள் கனிந்திருக்கும்போதே அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டுமென்றும் உணர்வினைப் பெறுகின்றோம்.   

இன்று இளைஞர்களிடம் தேவ வார்த்தைகளை நாம் பேசும்போது அவர்கள் இதே ஏதோ வயது முதிர்ந்தவர்களுக்கான செய்தி என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், மனிதர்களது வாழ்நாளைக்குறித்து நாம் நிதானிக்கமுடியாது. ஒருவருக்கு மரணம் வயது முதிர்ந்துதான் வரவேண்டுமென்று அவசியமில்லை. எனவே எச்சரிக்கையாக இருந்து தேவனிடம் திரும்புவோம். நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். 

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்கும்போது, அல்லது அது குறித்து யாராவது பேசும்போது அவர்களைக் கேலி செய்யாமல், மற்றவர்கள் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்று வெட்கப்படாமல் அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவோம். ஆம், "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." ( ரோமர் 1: 16) என்கிறார் பவுல் அப்போஸ்தலர். எனவே,  "கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது." ( புலம்பல் 3: 26)

தொடர்ந்து அறுப்புக்காலமும், கோடைக்காலமும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. எனவே, விழிப்புடன் செயல்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                      📞 Contact: 96889 33712                                                                     🌐 Website: aathavanmonthly.blogspot.com

No comments: