இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, July 05, 2024

இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,250       💚 ஜூலை 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்." ( 1 கொரிந்தியர் 1 : 9 )

பிதாவாகிய தேவன் எதற்காக நம்மைத் தேர்ந்துகொண்டாரென்றால் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நாம் ஐக்கியமாக இருப்பதற்காக என்று இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது. அப்படி கிறிஸ்துவோடு ஐக்கியமாகும்போது நாம் பிதாவாகிய தேவனோடும் ஐக்கியமாகின்றோம். 

இதனையே இயேசு கிறிஸ்துவும்  "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று ஜெபித்தார்.

மனிதர்கள் பரிசுத்தமுள்ள பிதாவாகிய தேவனிடம் தங்களாகச் சேரமுடியாது. காரணம் நமது பாவங்கள். பாவமனிதன் பரிசுத்தமான தேவனிடம் சேரமுடியாது. அந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் பிதாவாகிய தேவனிடம் பேசமுடியும். இதற்காகவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்தார். 

நமது பாவங்களுக்கான பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவரே சிலுவையில் நமக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 ) என்று கூறினார்.

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசமில்லாமல் மக்கள் மீட்படைய முடியாது. அதன்மூலம் மட்டுமே நாம் பிதாவோடும் அவரது குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருக்க முடியும். அப்படி நாம் ஐக்கியமாக இருப்பதற்கு நம்மை அழைத்த பிதாவாகிய தேவன் உண்மையுள்ளவர் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. "நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது அவர் கூறியுள்ள தமது வார்த்தையை மாற்றமாட்டார் என்று பொருள்.

எனவேதான் நாம் சிலுவையைப்பற்றி மேன்மை பாராட்டுகின்றோம். ஆனால் பாவங்கள் மன்னிக்கப்பட விரும்பாமல், பாவங்களோடு தொடர்நது வாழ விரும்புகின்றவர்கள் சிலுவையை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், அப்படி எதிர்த்து நிற்பவர்கள் தேவனால் ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் என்று வேதம் எச்சரிக்கின்றது. "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3 : 19 )

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பிதாவாகிய தேவனோடு ஐக்கியமாக இருக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.  அப்படி நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். எனவே நமது பாவங்களை கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிட்டு அவை கழுவப்பட மன்றாடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: