இயேசு கிறிஸ்து நமது நண்பர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,255     💚 ஜூலை 17, 2024 💚 புதன்கிழமை 💚


"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." ( யோவான் 15 : 15 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவாகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்துள்ள புதிதான தகுதியைப் பார்க்கின்றோம். அதாவது நாம் இனி அவரது ஊழியக்காரர்கள் அல்ல; மாறாக நண்பர்கள் என்கின்றார். 

ஒரு எஜமானின் வேலைக்காரன் அந்த எஜமான் சொல்வதை மட்டும் செய்கின்றவனாக இருப்பான். அந்த வேலைக்காரனுக்கு எஜமான்  ஏன் ஒரு காரியத்தைச் செய்யச்சொல்கின்றான் என்பது தெரியாது. உதாரணமாக, ஒரு எஜமான் வேலைக்காரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துத் தபால் அலுவலகம் சென்று அதனை அனுப்பி வருமாறு அனுப்புகின்றான் என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்காரனுக்கு அந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்படுகின்றது எனும்  காரியம் தெரியாது. ஆனால் எஜமான் சொல்கிறபடி அதனை அனுப்பிவிட்டு வருவான். இதுதான் வேலைக்காரனுக்கும் எஜமானுக்குமுள்ள உறவு. 

ஆனால் இதே ஒரு நண்பனானால், அந்த நண்பனிடம் அவன் அந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்படுகின்றது, அந்தக் கடிதம் அனுப்பப்படும் காரியம் நிறைவேறினால் என்ன நடக்கும் என்பதனையெல்லாம் தெளிவாக விவாதித்திருப்பான். ஆம், இதுதான் வேலைக்காரனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசம். மட்டுமல்ல, ஒருவன் தனது  உண்மை நண்பனிடம் எல்லாக்  காரியங்களைக் குறித்தும் பேசி தெளிவுபடுத்துவான். நமது குடும்பத்தினரிடம் கூறாதக்  காரியங்களைக்கூட நண்பர்களிடம் நாம் பகிர்ந்துகொள்ளலாம். 

இதனையே இயேசு கிறிஸ்து, "நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவர் நம்மை எவ்வளவு மேன்மையாக வைத்துள்ளார் பாருங்கள்.  அவரோடு ஒரு நண்பனைப்போல நெருக்கம் வைத்துக்கொள்ளும்போது பரலோக ரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தருவார்.  

இதனைக் கூறும்போது ஒரு சகோதரன் கூறிய கனவு நினைவுக்கு வருகின்றது. அந்தச் சகோதரன் முகநூல் (Facebook) பார்ப்பதில் ஆர்வமுள்ளவன். அதிகநேரம் முகநூல் பார்த்துக்கொண்டிருப்பான். அதனால் ஜெபநேரம் குறைந்துபோய்விட்டது. ஒருநாள் அந்தச் சகோதரர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் உலகமக்கள் பலர் வேடிக்கைப் பார்க்கும் ஒரு அழகிய மலைப் பள்ளத்தாக்கினை மக்களோடு அவரும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து அந்தச் சகோதரனின் தோள்களைத் தட்டி, "இங்கே வா, என்று கூப்பிட்டார்" அந்தச் சகோதரனை அழைத்த அந்த மனிதர்  குறுகிய தாடி வைத்து வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த உயரமான ஒருவர்.  

அந்தச் சகோதரர் அவரோடு சென்றார். அவர் அவரை அருகிலிருந்த ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பல பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த மனிதர் இரண்டு நாற்காலிகளைத் தனியாக எதிர் எதிரே போட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டார். பின்னர் அந்தச் சகோதரரை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லி, "நாம் பேசுவோம்" என்றார்.

அன்பானவர்களே, இந்தக் கனவு மூலம், 'உலக காரியங்களில் மற்றவர்களைப்போல் நீ வேடிக்கைப்  பார்த்து நேரத்தைத் தொலைக்காதே, என்னோடு தனி ஜெபத்தையே  நான் விரும்புகிறேன்' என்று தேவன் பேசுவதை அவர் உணர்ந்துகொண்டார். ஆம், தேவன் ஒரு நண்பனைப்  போல நம்மோடு பேசி உறவாட விரும்புகின்றார். இப்படி தேவனைத்  தனிப்பட்ட உறவில் ஒரு நண்பனாக நாம் உணர்ந்து கொள்வோமானால்,  "என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." என்று அவர் கூறியபடி பல உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தித் தருவார். 

ஆம், அன்பானவர்களே, நாம் அடிமைகளோ வேலைக்காரர்களோ அல்ல; மாறாக அவரது நண்பர்கள். எனவே நமது ஜெபங்களில் ஓர் நண்பனிடம் பேசுவதுபோல அவரிடம் பேசலாம். குறிப்பிட்ட ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஜெபமல்ல; அது பிற மதத்தினரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட தேவையில்லாத விஷயம்.  தேவனிடம் நமது நண்பரிடம் பேசுவதுபோல பேசி ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம்; அந்த அனுபவம் ஆவிக்குரிய மேலான காரியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தரும்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...