DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, July 04, 2024

சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து உயர்த்துகிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,249     💚 ஜூலை 11, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." ( 1 சாமுவேல் 2 : 8 ) மற்றும் (சங்கீதம் 113:7, 8)

அன்பானவர்களே, நமது தேவன் பல்வேறு நிலைகளில் மனிதர்களை வாழவைத்திருந்தாலும் அவர் எப்போதும் எளியவர்களை நோக்கிப்பார்ப்பவராகவும் அவர்களுக்கு உதவுபவராகவும் இருக்கின்றார். எளியவர்கள் என்று கூறுவதால் நாம் பொருளாதார எளிமையை மட்டும் எண்ணிவிடக்கூடாது; மாறாக, ஆவிக்குரிய, மனதின் உள்ளார்ந்த எளிமையையே இன்றைய தியான வசனம்  குறிக்கின்றது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனை, "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4 : 10 ) என்று கூறுகின்றார்.

அன்னை மரியாள் இதனை உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்...."( லுூக்கா 1 : 48 ) என்று. ஆம் அன்பானவர்களே, எளிய அடிமை மனநிலையுள்ளவர்களை தேவன் நோக்கிப்பார்க்கின்றார். 

இப்படியே நாம் தாவீதையும் பார்க்கின்றோம். அற்பமாக ஆடு மேய்பவராக இருந்த தாவீதைத் தேவன் அவனது எளிய மனதினைக்கண்டு உயர்த்தினார். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." என்று வாசிக்கின்றோம்.

அவர் அப்படி எளியவர்களை நோக்கிப்பார்ப்பது மட்டுமல்ல, அவர்களைத் துன்மார்க்கரின் கைகளுக்குத் தப்புவிக்கிறவராகவும் இருக்கின்றார். தாவீதைப் பல்வேறு முறை பல்வேறு வழிகளில் இப்படித் தேவன் தப்புவித்தார்.  மேலும், எளியவர்களின் சந்ததியையும் தேவன் ஆசீர்வதிக்கின்றார். "எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்." ( சங்கீதம் 107 : 41 )

தேவன் இப்படி ஏன் எளியவர்களை நோக்கிப்பார்க்கின்றார் என்றால் அப்படி எளியவர்களுக்கு அதிகமான தேவ கிருபையை அளிக்கவே. பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்பதால் அவர்கள் தேவ கிருபையினை அனுபவிப்பதில்லை. "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 )

இதனை கொலோசெய சபையினருக்கு உணர்த்தவே அப்போஸ்தலரான பவுல் அவர்களுக்கு எழுதும்போது, நீங்கள் தயவையும், மனத்தாழ்மையையும் சாந்தத்தையும், பொறுமையையும்    தரித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.  "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு....." ( கொலோசெயர் 3 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழும்போது நிச்சயமாக தேவன் நமது தாழ்நிலையிலிருந்து உயர்த்துவார். மட்டுமல்ல, பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: