DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, July 10, 2024

இப்பொழுதே அநுக்கிரக காலம், இதுவே இரட்சணியநாள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,257     💚 ஜூலை 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்; கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு என்னென்ன பலன்களைத் தந்துள்ளது என்பதனை அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு எழுதியுள்ள வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.

இந்த வசனத்தின்படி, முதலாவதாக இயேசுவின் மரணம் நமது எல்லா அக்கிரமங்கள், பாவங்களிலிருந்து நம்மை மீட்கின்றது. இரண்டாவது, நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றுகின்றது. மூன்றாவது, நற்செயல்கள் செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகின்றது, இறுதியில் தேவன்மேல் நாம் பக்தி வைராக்கியம் கொள்ளச்செய்கின்றது. 

"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். இப்படி இயேசுவின் இரத்தத்தால் நாம் கழுவப்படுகின்றோம். இந்தக் கழுவுதல் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் தான் ஏற்படுகின்றது. இப்படிக் கழுவப்பட்டு நாம் அவரோடு இணைக்கப்படுகின்றோம்.

இப்படி இணைக்கப்பட்டப் பின்னர்தான் நம்மால் நற்செயல்கள் செய்யமுடியும். இதனையே இன்றைய வசனத்தில் நாம் "சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று வாசிக்கின்றோம். இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

ஆம் அன்பானவர்களே, நற்செயல்கள் செய்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டுமானால் நாம் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்று பலர் நற்செயல்கள் பல செய்கின்றனர். நற்செயல்கள் செய்யும் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் நல்லது செய்யும் இவர்களில் பலரும் நல்லவர்களாக இருக்க முடியவில்லை. காரணம், கிறிஸ்துவோடு இணைக்கப்படாத வாழ்வு. 

எனவே நாம் மெய்யாகவுமே நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது இரத்தம்  நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொள்ளவேண்டும், நாம் அவரது சொந்த ஜனங்களாகவேண்டும். இப்படி நம்மை பாவங்களிலிருந்து கழுவி, அவரோடு ஒப்புரவாக்கி நம்மை நற்செயல் புரிய வைக்கவே கிறிஸ்து சிலுவையில் மரித்து உயிர்த்தார்.  நாம் செய்த எந்தப் பாவமாக இருந்தாலும் அவரிடம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நாம் வேண்டுவோமானால் அவர் நம்மை மன்னித்து மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.

ஆம் அன்பானவர்களே, "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: