DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, July 11, 2024

கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,258     💚 ஜூலை 20, 2024 💚 சனிக்கிழமை 💚


"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 )

சுவிசேஷமானது தேவனுடைய சாயல் என்று இன்றைய தியான வசனம் சொல்கின்றது. அந்தச்  சுவிசேஷம் கிறிஸ்துவின் மகிமையான ஒளியாகவும் இருக்கின்றது. அந்த ஒளியை இந்த உலக மக்களது உள்ளத்தில் ஒளிரச்செய்யாதபடி இந்த  இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தின் தேவன் என்பவன் சாத்தான் (யோவான் 14:30)

ஆனால் இந்த ஒளியைத் தேவன் நமது உள்ளத்தில் ஒளிரச்செய்துள்ளார் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

இந்த ஒளியானது நமக்குள் இருப்பதால் நமக்கு அது பெலனைத் தருகின்றது. துன்பங்கள், நெருக்குதல்கள், கலக்கம், மனமுறிவு போன்று எந்தத் துன்பத்தையும் அது நாம் தாங்கும்படியான பெலனைத் தருகின்றது. "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 8, 9 )

இப்படி பெலன் அடையக் காரணம் நமக்குள் வந்திருப்பது உன்னதமான தேவனுடைய ஒளி. எனவேதான் இந்த ஒளியானது நமக்குள் வந்திடாமல் சாத்தான் தடைபண்ணுகின்றான். காரணம், நமது துன்ப நேரங்களில் நாம் தேவனைத் தூஷித்து சாகவேண்டுமென்று சாத்தான் விரும்புகின்றான். 

அன்பானவர்களே, இந்த ஒளி தங்களுக்குள் இல்லாததால்தான் சில வேளைகளில்  பெரிய பெரிய தொழிலதிபர்களும், புகழ்பெற்ற திரைப்பட நடிகை நடிகர்களும், பணம் படைத்த பல செல்வந்தர்களும் நிம்மதியின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

இந்த ஒளியை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே நற்செய்தி அறிவிப்பு உலகினில் நடைபெறுகின்றது. ஆனால் இதனை அறியாதவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கின்றார்கள் என்று கூப்பாடு போடுகின்றனர்.  கிறிஸ்தவம் உட்பட எந்த மதமும் மனிதனை இரட்சிக்காது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஒருவரை மீட்க முடியும். எனவே, கிறிஸ்தவம் இதற்கான வழியை மக்களுக்குக் காண்பிக்கும் ஒரு மார்க்கம் என்று கூறலாம்.  

இந்த மகிமையான ஒளியைக் குறித்துக் கேள்விப்படுவது மட்டும் போதாது, மாறாக அந்த ஒளி நமது இருதயத்தில் பிரகாசிக்க இடம்தரவேண்டும். அப்போதுதான் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை நம்மில் தோன்றப்பண்ணுவார். 

முரண்பாடோ வெறுப்போ இல்லாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொவோம்; அவரது ஒளியை நம்முள் பெற்று துன்பங்களையும் பாடுகளையும் சகிக்கப் பெலன் பெறுவோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: