DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, July 14, 2024

எலியாவும் யோனாவும் நமக்குப் படிப்பினைகள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,261     💚 ஜூலை 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."  (1 கொரிந்தியர் 15:58)

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வை நமக்கு வாக்களித்துள்ளார். அந்த இலக்கை அடைந்திடவே நாம் ஆவிக்குரிய வாழ்வைத் தொடருகின்றோம். நித்திய ஜீவன் என்பது அழிவுக்கேதுவான நமது உடல் மறுரூபமாக்கப்பட்டு அழியாமையையும், சாவாமையையும் தரித்துக் கொண்டு பிதாவின் ராஜ்ய மகிமையினுள் நித்தியகாலமாய் வாழ்வதைக் குறிக்கின்றது  

இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்துக்கு முன்பு விளக்குகின்றார். இப்படி, "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.  அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்."  (1 கொரிந்தியர் 15: 53, 54) என்கின்றார். 

இப்படிப்பட்ட மகிமையான எதிர்காலம் நமக்கு இருப்பதால், "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும்,   அசையாதவர்களாயும்,      கர்த்தருடைய
கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." என்று கூறுகின்றார்.

அதாவது ஆவிக்குரியவாழ்வு வாழ்ந்தாலும்  நாம் ஒருவேளை இன்று பல்வேறு துன்பங்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் துன்பங்களைக்கண்டு கலங்கிடாமல் உறுதிகொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். மட்டுமல்ல, தொடர்ந்து சோர்ந்துபோகாமல் கர்த்தருக்காக நாம் செய்யும் செயல்பாடுகளிலும் நாம் பெருகுகிறவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். 

ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் ஏற்படும்போது ஒருவித சலிப்பு எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு.  ஆனால் அந்தச் சலிப்பு கொஞ்சநாட்களுக்குத்தான் என்று நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அப்படி எனக்கு சலிப்பே வந்ததில்லை என்று கூறுவோமானால் நாம் பொய்யர்கள். காரணம், வானத்திலிருந்து அக்கினி இறங்கச்செய்து அற்புதங்கள் பல செய்த எலியா சோர்வுற்று மனமடிவுண்டாகி, "ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி," ( 1 இராஜாக்கள் 19 : 4 ) புலம்பியதை நாம் வாசித்துள்ளோம்.

இதுபோலவே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக யோனாவும் மனம் சோர்வுற்று, "இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்" ( யோனா 4 : 3 ) என்று புலம்பினார். 

ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. இதுபோல, தேவனுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது நமக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். ஆனால் தேவன் நம்மைக் கைவிடமாட்டார்.

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய  கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்போமாக. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: