இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, July 06, 2024

போலிப் பெண்ணினவாதிகள் !

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,252      💚 ஜூலை 14, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚 


"புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்." ( 1 கொரிந்தியர் 11 : 9 )

சில இடதுசாரி சிந்தனைவாதிகளும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களும் தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களும் இன்றைய தியான வசனத்தைத் தவறுதலாக மேற்கோள்காட்டிப் பேசுவதுண்டு. "பைபிளில் பெண் அடிமைத்தனம்" எனும் தலைப்பில் ஒரு   கட்டுரையினை வாசித்தேன்.    அதில்  இன்றைய       தியானவசனத்தை         ஒருவர்  மேற்கோள்காட்டிக் கட்டுரை  எழுதியிருந்தார். 

கூறப்படும் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒரு குறிப்பிட்டப் பகுதியைமட்டும் துண்டாக எடுத்து விளக்குவது அறிவுபூர்வமானதல்ல. இது எப்படியிருக்கின்றது என்றால், "ஒருமுறை,  பெரியார் மூடநம்பிக்கை கொண்டவர்கள் கூட்டத்தில்  இருந்தார். அப்போது, ஒருவர் அவரிடம் கடவுள் குறித்துச் சில கேள்விகளைக் கேட்டார் .........." எனும் கட்டுரைப் பகுதியை துண்டாக்கி, "பெரியார் மூட நம்பிக்கைக் கொண்டவர்கள் கூட்டத்தில் இருந்திருக்கிறார்" அப்படியிருக்க அவரை மூட நம்பிக்கையை எதிர்த்தார் என்று எப்படிக் கூறலாம் என்று கூறுவதுபோல இருக்கின்றது. 

காரணம் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் எழுதுகின்றார், "ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 11 : 11, 12 )

அப்படியானால் இன்றைய தியான வசனத்தை அவர் ஏன் எழுதினார்? முதலில் தேவன் ஆதாமைத்தான் படைத்தார். உலகிலுள்ள அனைத்தையும் அவர் ஜோடி ஜோடியாக உண்டாக்கியிருந்தார். ஆனால் ஆதாம் மட்டும் தனித்திருந்தான். எனவே,  "தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்." ( ஆதியாகமம் 2 : 18 ) என்று கூறி ஏவாளைப் படைத்தார். ஏவாளை ஆதாமைவிடத் தாழ்வாகப் படைத்தார் என்று கூறப்படவில்லை. மாறாக, அவனுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில், "புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்." என்று கூறுகின்றார்.  அதாவது,  ஆதாம் தனியாக இருப்பதால் அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக அவனுக்காக பெண்ணைப் படைத்தார் என்று கூறுகின்றார். அவனுக்கு அடிமையாகவோ அவன் பயன்படுத்தும் பொருள்போலவோ ஏவாளைப் படைக்கவில்லை. 

கிறிஸ்தவர்களில்கூட சிலர் இந்த சத்தியம் தெரியாமல் போதிக்கின்றனர். இப்படிப் போதிக்கும் பல ஊழியர்கள் வீடுகளில் தங்கள் மனைவியை அடிமைப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். இப்படியே, பெண் விடுதலை பேசும் பலர் வீடுகளில் தங்கள் மனைவிகளை அடிமைகளாகவே நடத்துகின்றனர். மட்டுமல்ல, மற்ற பெண்களுடன் தகாத உறவிலும் வாழ்கின்றனர்.  எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தத் தவறான போதனைகளினாலும் பெண் விடுதலை என்று கூறி அலையும் போலி பெண்ணினவாதிகளின் பேச்சுகளாலும் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.  

"அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்." ( 1 பேதுரு 3 : 7 ) என்கின்றார் பேதுரு. ஆம், தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவே கிறிஸ்தவம் போதிக்கின்றது.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: