DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, July 03, 2024

தேவன் நம்மைத் தண்டிக்க விரும்பவில்லை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,248       💚 ஜூலை 10, 2024 💚 புதன்கிழமை 💚

 

"தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 )

இந்த உலகத்திலுள்ள எந்த ஆத்துமாவும் அழிந்து பாதாளத்துக்குப் போகவேண்டுமென்பது தேவனது சித்தமல்ல; மாறாக, எல்லோரும் நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்கவேண்டுமென்பதே அவரது சித்தம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3 : 16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அப்போஸ்தலரான பேதுருவும் இதனை, "...........ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் நமது தவறான பாவச் செயல்களைக்கண்டு கோபம்கொண்டு  நம்மைத் தண்டிக்கவேண்டுமென்று விரும்பாமல்  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புகின்றார். எனவேதான் கிறிஸ்து இயேசுவை உலகில் அனுப்பினார். 

"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." ( யோவான் 3 : 17, 18 )

தேவன் நம்மைத்  தமது கோபத்திலிருந்து தப்புவிக்க இயேசு கிறிஸ்து எனும் ஒரே வழியைத்தான்  நியமித்துள்ளார். எனவே, அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான். ஆனால் அவரது பெயரில்  விசுவாசமில்லாதபடி வாழ்பவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. விசுவாசிக்கிறேன் என்று நாம் வாயினால் சொன்னால் போதாது; மாறாக, இருதயத்தில் விசுவாசித்து மனப்பூர்வமாக அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டும். 

"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9, 10 )

இயேசு கிறிஸ்துத் தன்னைத் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அவரது பூரண சித்தம் நிறைவேற தன்னை ஒப்புக்கொடுத்ததால் மனிதர்களது பாவங்களை மன்னிக்கும் இந்த மேலான மகிமையைப் பெற்றுள்ளார். எனவே அன்பானவர்களே, நாம் இதுவரை பாவத்தில் வாழ்ந்திருந்தால் நமது பாவ வாழ்கையினைக்குறித்துக் கவலைகொள்ளாமல் கிறிஸ்துவிடம் திரும்புவோம். அவரது இரத்தத்தால் கழுவப்படுமாறு மன்னிப்புவேண்டி  நம்மை அவருக்கு  ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்றுதான்  நியமித்துள்ளார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

No comments: