DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, July 30, 2024

ஓட்டையான தொட்டி

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 07, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,276                               

     

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )

மெய்தேவனாகிய கர்த்தரை அறிந்தபின்பு நாம் அவரைவிட்டுப்  பின்மாறிப் போவோமானால் இன்றைய தியான வசனம் கூறும் நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பொருள். அதாவது அப்படி நாம் பின்மாறும்போது இரண்டு தீமைகளை செய்தவர்களாகின்றோம். முதலில்,   ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிடுகின்றோம் அடுத்து, தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஆகின்றோம்.      

அதாவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாளாம் ஒருத்தி." அன்பானவர்களே, நமது கையில் வெண்ணையான தேவன் இருக்கும்போது அதனைப் பாதுகாத்து உபயோகப்படுத்திடாமல் நாம் நெய்க்காக அலைந்து திரியும் முட்டாள்களாக இருக்கக்  கூடாது. இஸ்ரவேல் மக்கள் இப்படித்தான் செய்தனர். ஜீவத்தண்ணீர் அவர்கள் நடுவில் இருந்தும் அதனை விட்டுவிட்டு தண்ணீர் நிரப்ப வெடிப்புள்ள ஓட்டையான தொட்டிகளைத் தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர். 

அன்று இஸ்ரவேலர் செய்த அதே தவறையே இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை முழுமையாகப் பற்றுவதை விட்டுவிட்டு முட்டாள் பெண் நெய்க்கு அலைந்ததுபோல ஏமாற்று ஊழியர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆம், நாம் பற்றிக்கொள்ளவேண்டியது கிறிஸ்துவையே தவிர ஊழியர்களையல்ல. இவர்களைப்பார்த்து வேதனையுடன் தேவன் கூறுகின்றார், "என் ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். "

இதுபோலவே கிறிஸ்துவின்மேலுள்ள முழுமையான விசுவாசத்தை விட்டுவிட்டு வேதம் கூறாத முறையில் பல்வேறு புனிதர்களை நாடிப்போகும்போது நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிடுகின்றோம் என்று பொருள். 

அன்பானவர்களே, நமது வீட்டில் தண்ணீர் நிற்காத ஒரு ஓட்டையான தொட்டி இருக்குமானால் அதனால் என்ன பயன்? அது இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். வேதனையுடன் தேவன் கூறும் இன்றைய வார்த்தைகளுக்குச் செவி கொடுப்போம். நல்ல பலமான ஓட்டையில்லாத தொட்டியை நமக்குத் தந்து அதனை ஜீவத் தண்ணீரால் நிரப்பிட ஆவலுடன் காத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் முழு மனதுடன் திரும்புவோம்.

"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: