DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, October 10, 2024

சுய மகிமை தேடி..

அக்டோபர் 13,  2024 ஞாயிற்றுக்கிழமை💚வேதாகமத் தியானம் எண் - 1343

"அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 )

இன்று நாம் ஆலய காரியங்களுக்கென்றும் நாம் வாழும் ஊர் காரியங்களுக்காகவும் பல செயல்கள் செய்யலாம். அதிகமான பணத்தை ஆலயங்களுக்குச் செலவழிக்கலாம்; அல்லது தர்ம காரியங்கள் அதிகம் செய்யலாம். ஆனால் இவை அனைத்தையுமே எதற்காகச் செய்கின்றோம், நமது உள்மன எண்ணம் என்ன என்பதை தேவன் அறிவார். உள்ளான அன்புடன் செய்வது எது, பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று செய்வது எது என்தையும்  தேவன் அறிவார். 

பிறர் அறியவேண்டும் எனும் எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் உண்மையான அன்புடன் செய்பவையல்ல. அப்படிச் செய்வதால், நம்மை அறியாமலே ஒரு பெருமை நமக்குள் வந்துவிடுகின்றது. இதனை தேவன் விரும்புவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 ) என்று. தர்மம் செய்யும்போது மட்டுமல்ல, என்ன நல்ல செயலை நாம் செய்தாலும் இப்படியே இருக்கவேண்டியது முக்கியம். 

இதுபோலவே, சிலர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை அல்லது கிறிஸ்துவை தாங்கள்  நம்புவதை வெளிப்படையாக  வெளியில் சொல்லத் தயங்குவதுண்டு.  வேலை பார்க்கும் இடங்களில் பிற மத நண்பர்கள் அதிகம் பணிசெய்யும்போது அவர்கள் நம்மைத் தவறாகக் கருதுவர் என எண்ணி கிறிஸ்தவ விசுவாசத்துக்கு முரணான காரியங்களைச் செய்து  அவர்களோடு பல காரியங்களில் ஒத்துப்போவது சிலரது பழக்கம். 

யூதர்களில் பலர் இயேசுவை கிறிஸ்து என்று நம்பினாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினார்கள்.காரணம், யூதர்கள் தங்களைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் இயேசு கிறிஸ்து, "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 ) என்று குறிப்பிடுகின்றார்.

இன்று சுய மகிமையைத் தேடும் கிறிஸ்தவ ஊழியர்கள் நாட்டில் நிறைந்து ஆடம்பரமும் பகட்டும் கொண்டு அலைகின்றனர். இத்தகைய ஊழியர்களும் தேவனால் வரும் மகிமையைவிட மனிதர்களால் வரும் மகிமையைத் தேடுபவர்களே.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிடுகின்றார். "உங்களிடத்திலாவது,. மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 6 ) என்று எழுதுகின்றார் அவர்.

அன்பானவர்களே, நமது செயல்கள் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டுமேதவிர சுய மகிமைக்கானவைகளாக இருக்கக்கூடாது. இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மையே மறைத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடும்போம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

பிதா கிறிஸ்துவிடம் வைத்த அன்பு

 'ஆதவன்' 💚அக்டோபர் 12, 2025. 💚சனிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,342



"நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்." (யோவான் 17:26)

சுவிசேஷம் அறிவிக்கப்படுவதன் முக்கிய நோக்கத்தை இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார். அதாவது, பிதாவான தேவன் இயேசு கிறிஸ்துவின்மேல் வைத்திருந்த அன்பை அவர் நம்மேலும் வைக்கவேண்டும். அது எப்போது முடியும்? கிறிஸ்து நமக்குள் இருக்கும்போது மட்டுமே. கிறிஸ்து நமக்குள் இருக்கும்போது பிதாவான தேவன் கிறிஸ்துவை அன்பு செய்ததுபோல நம்மையும் அன்பு செய்வார்.      

இதனையே இயேசு கிறிஸ்து, "நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும் படிக்கும், நானும் அவர்களிலிருக்கும் படிக்கும்," என்கின்றார். அதற்காகவே அவர் நமக்குத் பிதாவாகிய தேவனை வெளிப்படுத்தினார். "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." ( யோவான் 1 : 18 ) என்று வாசிக்கின்றோம். இப்படி பிதாவை நமக்குகிறிஸ்து வெளிப்படுத்தக் காரணம் பிதா நம்மையும் இயேசுவை அன்புசெய்ததுபோல அன்புசெய்யவேண்டும் என்பதற்காகவே. 

"இன்னமும் தெரியப்படுத்துவேன்" என்று இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் கூறுகின்றார். ஆம், இப்போதும் தனது ஊழியர்கள்மூலம் கிறிஸ்துவிடம் பிதா வைத்த அதே  அன்பு நம்மிடத்திலிருக்கும்படிக்கும் கிறிஸ்துவும் நம்முள் இருக்கும்படிக்கும் சுவிஷேச அறிவிப்புகள் மூலம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார். எனவேதான் பிதாவையும் கிறிஸ்துவையும் அறிவிக்காமல் வெறும் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே போதிக்கும் ஊழியங்கள் போலியானவை என்று நாம் சொல்லுகின்றோம். 

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். எனவே நித்திய ஜீவனுக்கு நேராக நம்மை வழிநடத்தும் ஊழியர்களே மெய்யானஊழியர்கள். அவர்கள் காட்டும் வழியில் செல்லும்போது மட்டுமே நமக்குள் கிறிஸ்து வருவதையும் அதனால் பிதாவான தேவன் நம்மை அன்பு செய்வதையும் நாம் கண்டு உணரலாம். 

ஆனால் இன்று இத்தகைய ஊழியர்கள் குறைந்துபோய் சுவிசேஷ அறிவிப்பு பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலும் ஆசீர்வாதம் என்பது உலகச் செழுமையைப் பெறுவது என்பதாகவும் மாறிவிட்டது. எனவே, நாம் ஞானமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். மெய்யான தேவனையும் மெய்யான ஆசீர்வாதத்தையும் அறியும் ஆர்வத்துடன் வேதாகமத்தை வாசிப்போமானால் தேவன் சத்தியத்தை நமக்கு  வெளிப்படுத்தித் தருவார். 

அப்போது பிதா கிறிஸ்துவிடம்  வைத்த அன்பு நம்மிடத்திலுமிலிருக்கும், கிறிஸ்துவும் நமக்குள் இருப்பார். சத்தியத்தை அறிந்த நாமும் இதனை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக மாறுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

Wednesday, October 09, 2024

என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

 'ஆதவன்' அக்டோபர் 10, 2025. வெள்ளிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,341



"இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்." ( யோவான் 8 : 21 )

நாம் பரலோகம் சேர்ந்திட இயேசு கிறிஸ்துதான் ஒரே வழி. பரலோகம் பாவங்கள் கழுவப்பட்ட பரிசுத்தவான்கள் சென்று சேரும் இடம். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று வாசிக்கின்றோம். 

இயேசு கிறிஸ்து  இப்படி நாம் பரிசுத்தவான்களாக மாறும்படிக்கு நம்மை பாவங்கள் நீக்கி இரட்சித்து வழிகாட்டவே உலகினில் வந்தார். ஆனால் அன்றைய யூதர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  அவர்கள் இயேசு கிறிஸ்துவை வெறும் தச்சன்மகனாகவே பார்த்தனர். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வருமா? என்று சந்தேகப்பட்டனர். அவர்கள் மேசியா என்பவரை சாதாரண உலக அரசன்போல எண்ணி அவர்  இனிமேல்தான் வருவார் என நம்பினர்; கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றுவரை யூதர்கள்  இனிமேல்தான் மேசியா வருவார் என்று காத்திருக்கின்றனர். 

இத்தகைய மனநிலையுள்ள யூதர்களைப் பார்த்துத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தைக் கூறினார். இயேசு கூறுவதன் பொருள் என்னவென்றால், "நான் இத்தனை நாட்கள் பல்வேறு அதிசயங்கள் அற்புதங்கள் செய்து பல போதனைகளை எடுத்துக்கூறி நான் தான் வரவிருக்கிறவர் என்பதை உங்களுக்கு விளங்கச் செய்தேன், நீங்கள் என்னை நம்பவில்லை. எனக்குப் பிதா குறித்த உலக நாட்கள் முடிவடைந்தபின் நான் அவரிடம் திரும்பப் போகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் மேசியாவைத் தேடித் தேடி உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்கிறார் இயேசு கிறிஸ்து.

மட்டுமல்ல, "நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது." என்றும் கூறுகின்றார். காரணம் பாவியான மனிதன் பரிசுத்தவான்கள் கூட்டத்தில் சென்று சேர முடியாது.   

ஆம் அன்பானவர்களே, நமக்கு பூமியில் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் அவரைக் கண்டுகொள்ளவேண்டும். நமது பாவங்கள் அவரால் மன்னிக்கப்பட இடம்தரவேண்டும். அப்படிக் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் நாம் அவரை காணத் தவறினால் பரிதபிக்கப்படத் தக்கவர்களாகவே இருப்போம்.  பரிசுத்தவான்கள், புனிதர்கள் நம்மை பரலோகத்தில் சேர்க்க முடியாது. அவர்கள் இருக்குமிடத்துக்கு கிறிஸ்துதான் நம்மை அழைத்துச்செல்ல முடியும். 

யூதர்கள் தங்களை ஆபிரகாமின் வழித்தோன்றல் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைந்தனர். அதுபோலவே இன்றும் பலர் புனிதர்களையும், சிலர் பாஸ்டர்களையும் பின்பற்றுவதில் பெருமை கொள்கின்றனர்.  இது போதாது. கிறிஸ்து நமக்குள் வந்து நம்மை ஆட்சிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் நம்பும் புனிதர்களும் பரிசுத்தவான்களும் பரலோகத்தில் இருந்தாலும் நாம் அங்கு நுழைய முடியாது. நாம் புறம்பே தள்ளப்படுவோம். 

இதனையே, "நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்." ( லுூக்கா 13 : 28 ) என்று எச்சரிக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Tuesday, October 08, 2024

தொழுவத்தை மறந்த ஆடுகள்

 'ஆதவன்' 💚அக்டோபர் 10, 2024. வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,340

"......அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்." ( மாற்கு 6 : 34 )

மனிதர்களாகிய  நாமே தேவனது ஆடுகள். ஆடுகளுக்கு உணவு தேவைப்படுவதுபோல இந்த மக்களுக்கும் ஆன்மீக உணவு தேவைப்படுகின்றது. அந்த உணவையே இயேசு கிறிஸ்து மனதுருகி தனது உபதேசத்தால் மக்களுக்குக் கொடுத்தார். "அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்" என்று இன்றைய தியான வசனம் கூறுவது இதனைத்தான். அதாவது  ஆடுகள் உணவில்லாமல் தவிப்பதால் அவர் அவைகளுக்கு உணவளித்தார்.  

இன்றும், உணவு கிடைக்காமல் உணவுக்காக ஆடுகள்  அலையக்கூடாது என்பதற்காக ஊழியர்களை ஏற்படுத்தியுள்ளார்.      ஆனால் பல ஊழியர்கள் ஆடுகளுக்குப் போதிய உணவளிக்கவில்லை; அவைகளுக்கு ஏற்ற மேய்ப்பர்களும் இல்லை. இன்று தேவ வார்த்தைகளைப் போதிக்கப்  பல ஊழியர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஆடுகளுக்கு ஏற்ற உணவைக் கொடுப்பதில்லை. அதாவது, தேவ வார்த்தைகளைக் கொடுக்காமல் தங்கள் மனதின் எண்ணங்களை உபதேசமாகப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஆடுகள் பசியால் வாடி இரைக்காக மனச் சமாதானமில்லாமல் அலைந்து சபை சபையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. 

எரேமியா தீர்க்கத்தரிசியின் காலத்திலும் இதுதான் நடந்தது. இதனையே அவர்,  "என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 50 : 6 ) என்கின்றார்.

"தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." என்று எரேமியா கூறுவது முற்றிலும் உண்மையாகும். அந்தத் தொழுவம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. (யோவான் 10:1) சிதறி மலை மலையாக (சபை சபையாக) உணவுக்கு ஆடுகள் அலையக் காரணம் அவைகள் தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டதுதான். ஆம் அன்பானவர்களே, மெய்யான சமாதானம் நமக்கு இல்லையானால் காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாமல் வாழ்வதுதான் காரணமேத்  தவிர சபைகளை மாற்றுவதல்ல தீர்வு. கிறிஸ்துவைத்தவிர வேறு எவரும் நமக்கு ஏற்ற உணவளிக்க முடியாது. 

தொழுவத்தையும், பிரதான மேய்ப்பனையும் அறியும்போது மட்டுமே நமக்கு மனச் சமாதானம் கிடைக்கும். காரணம், அவரிடம் மட்டுமே ஆடுகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கும். அந்த உணவினை எல்லா ஆடுகளும் கண்டுகொள்ளும் காலம் வரும். ஆம், "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." ( யோவான் 10 : 16 ) என்கிறார் இயேசு கிறிஸ்து. 

நாம் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருக்கவேண்டாம். சபை சபையாக ஓடவேண்டாம். மனதுருகி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உபதேசிக்கும் வார்த்தைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Monday, October 07, 2024

தேவன் ஒவ்வொரு தலைமுடிக்கும் எண்கள் கொடுத்துள்ளார்

 'ஆதவன்' 💚அக்டோபர் 09, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,339


"உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம்  எண்ணப்பட்டிருக்கின்றன. ஆதலால், பயப்படாதிருங்கள்" ( மத்தேயு 10 : 30, 31 ) "But the very hairs of your head are all numbered. Fear ye not therefore, ..." ( Matthew 10 : 30, 31 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு தைரியமும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளைக் கூறுகின்றார். சிலவேளைகளில் நாம் நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளைக் கண்டு கலங்கிவிடுகின்றோம். இனி என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கின்றோம். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "பயப்படாதிருங்கள், உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம்  எண்ணப்பட்டிருக்கின்றன". என்று. 

அதாவது நமது தலையில் எத்தனை கோடி முடிகள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியாது ஆனால் தேவன் அவற்றை எண்ணிக் கணக்கு வைத்திருக்கின்றார். இந்த நாளில் இந்த முடி உதிரவேண்டும் என்பது தேவ சித்தமானால் அந்த முடி மட்டும்தான் உதிர்ந்து விழும். இந்த வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நாம் இரண்டு அர்த்தம் கூறலாம். ஒன்று நாம் வாசிக்கும் தமிழ் அர்த்தம். இன்னொன்று, நமது வீட்டிற்கு அரசு நிர்வாகம் எண்கள்  கொடுப்பதுபோல தேவன் ஒவ்வொரு தலைமுடிக்கும் எண்கள் கொடுத்துள்ளார் என்று பொருள். இதனையே, "the very hairs of your head are all numbered" என்று வாசிக்கின்றோம். 

நாம் அற்பமாக எண்ணும் தலைமுடிக்குக்கூட தேவன் எண்கள் கொடுத்துப் பராமரிக்கின்றார். அவரது சித்தமில்லாமல் குறிப்பிட்ட எண்  கொடுக்கப்பட்ட  முடி உதிராது. அப்படி நமது தலையிலுள்ள முடியைப் பராமரிப்பவர் நம்மைப் பராமரிக்காமல் இருப்பாரா? எனவே, பயப்படாதிருங்கள் என்கிறார் இயேசு கிறிஸ்து. இதுபோல வேதாகமத்தை வாசிக்கும்போது இன்றைய வசனத்தில் அடைக்கலான் குருவிகளைப்பற்றியும் அவர் கூறுவதைப் பார்க்கலாம். 

வானில் பறக்கும் ஒரு குருவிகூட தேவ சித்தமில்லாமல் கீழே விழாது என்கிறார். சாதாரண தலைமுடியையும் குருவியையும் பராமரித்துக் காப்பவர் நம்மைக் காப்பாற்றமாட்டாரா? குருவிகள் மட்டுமல்ல, நாம் காணும் தெரு நாய்களைப் பாருங்கள், அவற்றுக்கும் உணவு கிடைக்கின்றது; அவையும் உலகில் வாழ்கின்றன. எந்த நாயும் துன்பத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்வதில்லை.  எனவே அன்பானவர்களே, நாம் துன்பங்கள் பிரச்னைகளைக்கண்டு பயப்படவேண்டியதில்லை. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்கு தேவ பராமரிப்பு நிச்சயம் உண்டு. 

தேவனது பார்வையில் மனிதர்கள் குருவிகள், நாய்களைவிட மதிப்புமிக்கவர்கள். எனவே, இந்த வசனத்தை வாழ்வில் நாம் எப்போதும் நினைவில் கொண்டவர்களாக வாழும்போது நமக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். "என் தலைமுடியைக்கூட தேவன் அறிந்து வைத்திருக்கின்றார்" என்று எண்ணும்போது நமக்கு நம்பிக்கை ஏற்படாமல் போகாது. 

ஆனால் நாம் ஒருவருக்கு மட்டும் நிச்சயமாக பயப்படவேண்டும் என்கின்றார் இயேசு கிறிஸ்து:- "ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்." ( மத்தேயு 10 : 28 )  ஆம், மற்ற எதற்கும் பயப்படாமல் தேவனுக்கு மட்டும் பயப்படுகின்றவர்களாக வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

Sunday, October 06, 2024

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்

 'ஆதவன்' அக்டோபர் 08, 2024. செவ்வாய்க்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,338

"தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்." ( சங்கீதம் 18 : 28 )

நேற்றைய வேதாகமத் தியானத்தின்  தொடர்ச்சியே இன்றைய தியானம். "அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்".( சங்கீதம் 18 : 23 ) என்று நேற்று தியானித்தோம். அப்படி தாவீது உத்தமனாகத் தன்னைக் காத்துக்கொண்டதால் தேவனிடம் தைரியமாக முறையிட்டுத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். 

"தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் என்று மட்டும் மன்றாடாமல்  தொடர்ந்து,  "என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்." என்று நம்பிக்கை அறிக்கையும்  செய்கின்றார் அவர். காரணம், நான் தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருந்து என் துர்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் என்கிறார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்க்கை ஒளியிழந்துபோய் இருப்பதற்கு ஒருவேளை நமது துர்க்குணங்கள் காரணமாக இருக்கலாம். அந்தக் குணங்கள் மாறவேண்டும். நமது குணங்கள் மாறவேண்டுமானால் நமக்குள் ஒளி வரவேண்டியது அவசியம். நமது சொந்த முயற்சியால் நமக்குள் ஒளி வராது. பின், அந்த ஒளி எங்கிருக்கிறது? அந்த ஒளி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்றது. "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 ) என்று இயேசு கிறிஸ்துவைக்குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். 

மேலும், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்த மனிதனையும் எனும்போது ஜாதி, மதம், இனங்களைக்கடந்து மக்களை ஒளியடையச் செய்பவர் என்று பொருள். 

அந்த ஒளி நமக்குள் வரும்போது நாமும் ஒளியடைவதோடு புது பெலனும் பெறுகின்றோம். காரணம், அவரே "வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்." ( சங்கீதம் 18 : 34 ) என்று கூறுகின்றார் தாவீது. வெண்கலம் மிக உறுதியான ஒரு உலோகம். அந்த வெண்கலத்தால்  செய்யப்பட்ட வில்லை நமது கைகள் வளைக்கும் அளவுக்கு  பெலன் நமக்கு உண்டாகும்.  

ஆம், இவை அனைத்துக்கும் மூலம் தேவனுக்குமுன் நாம்  உத்தமனாயிருந்து,  துர்க்குணத்துக்கு நம்மை  விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டியதே. அப்படி நம்மைக் காத்துக்கொள்ளும்போது முதலில் நமது கைகளின் சுத்தத்துக்கு ஏற்ப நமக்குத் தேவன் பலனளிப்பார்; நமது வாழ்க்கையின் இருளை மாற்றுவார், அனைத்துக்கும் மேலாக நமக்குப் புது பெலனைத் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து.....

 'ஆதவன்' அக்டோபர் 07, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,337


"அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்".( சங்கீதம் 18 : 23 )

கர்த்தர் தாவீதை அவரது எல்லா எதிரிகளின் கைகளுக்கும் சவுலின் கைகளுக்கும் தப்புவித்து காத்தபோது தாவீது பாடிய சங்கீதம் என்று இன்றைய தியான வசனம் இடம்பெறும் இந்தச் சங்கீதத்தைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இப்படித் துர்குணத்துக்குத் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டதால் என்ன பலன் கிடைத்தது என்று பின்வருமாறு அவர் கூறுகின்றார்:-

"ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்." ( சங்கீதம் 18 : 24 ) ஆம் அன்பானவர்களே, பல வேளைகளில் நாம் தேவனது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு நமது தகாத செயல்களே தடையான காரணமாக அமைந்துவிடுகின்றன.  

தாவீதுக்கு இருந்த எதிரிகள் அதிகம். அவரைக்கொல்ல சவுல் மட்டுமல்ல அவரது சொந்த மகனே முயன்றுகொண்டிருந்தான். இது தவிர, தாவீதைக் கொன்று சவுலிடம் நன்மதிப்பைப் பெறவேண்டுமென்று சிலர் விரும்பினர். ஆனால் கர்த்தர் அவரை எவரிடமும் ஒப்படைக்காமல் காத்துக்கொண்டு மொத்த இஸ்ரவேலரின்மீதும் ராஜாவாக்கினார். 

இன்று தாவீதைப்போல நேரடி எதிரிகள் நமக்கு இல்லாமலிருக்கலாம், ஆனால் நம்மை நமது உத்தமத்திலிருந்து விலகச் செய்யும் பல்வேறு எதிரிகள் உண்டு. நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் சூழ்நிலைகள் நமக்கு எதிரிகளாக நிற்பதுண்டு. நாம் பணிசெய்யும் இடங்களில் நாம் தவறுசெய்யும் சூழ்நிலைகள் உண்டு. இந்தச் சூழ்நிலைகளில் நாம் தாவீதைப்போல உத்தமனாயிருந்து, துர்க்குணத்துக்கு நம்மை விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

அப்படி வாழ்வோமானால் கர்த்தர் நமது நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற நமது  கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் நமக்குப் பதிலளிப்பார். ஆம், வெறும் ஜெபங்களும் வேத வாசிப்புகளும் உபவாசங்களும் ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதும் முக்கியமல்ல. இன்று பலரும் தங்களுக்குத் துன்பங்கள் தொடரும்போது தங்களது மேற்படி சில பக்திச் செயல்பாடுகளையே எடுத்துக்கூறி புலம்புகின்றனர். தேவனை நோக்கி முறுமுறுகின்றனர். 

முதலில் தேவனுக்குமுன் உத்தமர்களாக வாழ முயற்சியெடுப்போம். துர்குணங்களுக்கு நம்மை விலக்கிக் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                 

Thursday, October 03, 2024

நன்மையும் தீமையும் உன்னதமானவரிடமிருந்தே

 'ஆதவன்' அக்டோபர் 06, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,336


"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." ( 1 நாளாகமம் 29 : 12 )

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் தீமைகளும் தேவனுடைய கரத்திலிருந்தே வருகின்றன. "ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?" ( புலம்பல் 3 : 37, 38 ) என்று வாசிக்கின்றோம். இன்று நாம் ஒருவேளை தாழ்மையான நிலையில் இருக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் ஆளுகிறவரது கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவரது கரத்தினால் ஆகும்.

அதுபோலவே ஒருவர் மிக உயர்ந்த நிலையில் இருக்கலாம் அவரை ஒரே நொடியில் தாழ்த்திட தேவனால் கூடும். எனவே நாம் எந்த நிலையில் இருந்தாலும்  அவருக்கு அஞ்சி அடங்கி வாழவேண்டியது அவசியம்.  இதனை அன்னை மரியாள் உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 51 - 53 ) என்று.

ஆனால் பெரிய செல்வ நிலையில் இருக்கும் பலர் இந்தச் சத்தியத்தை உணர்வதில்லை. தாங்கள் எப்போதுமே இப்போது இருப்பதுபோல சுகஜீவிகளாக வாழ்வோம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதனால் மற்றவர்களை அற்பமாக எண்ணி வாழ்கின்றனர்.  எனவே தங்களது வாழ்வில் சிறிய சறுக்கல் வந்துவிட்டாலும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை எனும் விபரீத முடிவைத் தேடிக்கொள்கின்றனர். 

பலர்  உழைப்பே உயர்வு என்று கூறி உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்; தேவனைப் புறக்கணிக்கின்றனர். ஆனால் இந்த உலகத்தில் நாம் பார்க்கின்றோம் கடுமையாக உழைக்கும் எல்லோரும் முன்னேறிவிடுவதில்லை. கடும் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் பலர் உழைத்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.  ஆனால் அப்படி உழைப்பதற்கு உடலில் ஆரோக்கியம் வேண்டும். அதனைத் தேவன்தான் கொடுக்க முடியும்.  மட்டுமல்ல இப்படிக் கடினமாக உழைக்காத பலர் எளிதில் முன்னேறிவிடுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, ஐசுவரியமும் கனமும் தேவனாயிலேயே வருகின்றது. அவரே  எல்லாவற்றையும் ஆளுகிறவர்; அவரது கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அவரது கரத்தினால் ஆகும். எனவே நாம் நம்மை அவரது கிருபைக்கு ஒப்புக்கொடுத்து மனத்தாழ்மையோடு  வாழ்வோம்.  அவரது வல்லமை மிக்க கரமே ஏற்ற காலத்தில் நமக்கு வேண்டிய உயர்வினைக் கொண்டுவரும். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

தேவனைக் குறித்து நிதானமாய்ப் பேசுவோம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 05, 2024. 💚சனிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,335


"என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 )

பல்வேறு துன்பங்களை வாழ்வில் அனுபவித்த யோபுவைப் போல நம்மில் பலரும் அனுபவிக்கவில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் யோபு தேவனைப் பழித்துப் பேசவில்லை. அவரது மனைவி  தேவன்மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தைக் கண்டு எரிச்சலடைந்து, அவரிடம் இன்னும் நீர் தேவனை நம்பிக்கொண்டிருக்கின்றீரோ? "தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்" என்றாள். அதாவது, "தேவனைப் பழித்துக் கூறிவிட்டு செத்துத்  தொலையும்" என்றாள். 

ஆனால் யோபுவோ,  "நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை." ( யோபு 2 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்." ( யோபு 2 : 11 )

இந்த நண்பர்கள் யோபுவோடு நடத்திய உரையாடல்தான் யோபு நூலில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நண்பர்கள் தேவனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நல்ல கருத்துக்கள்தான். பல தேவ சத்தியங்களை இந்த நண்பர்கள் பேசுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இவர்கள் மூவருமே யோபுவின் துன்பத்துக்கு அவரது ஏதோ ஒரு தகாத செயல்தான் காரணம் என்பதுபோல பேசினர். மட்டுமல்ல, யோபு பேசியதுபோல தாழ்மை அவர்களிடம் இல்லை. தங்களைப் பெரிய நீதிமான்கள்போலக் காட்டிக்கொண்டனர்.

எனவே, கர்த்தர் தேமானியனான எலிப்பாஸ் என்பவனை நோக்கி, "உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 ) என்று கூறுகின்றார். 

இன்றும் துன்பங்கள், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லச்  செல்லும் பலர், யோபுவின் நண்பர்கள் பேசியதைப்போல தேவையில்லாத வார்த்தைகளைப்  பேசுவதைக் காணலாம். ஒருவருக்கு நோயோ, துன்பங்களோ வருவதற்கு அவர்களது வாழ்க்கைத் தவறுகளே எப்போதும் காரணமாய் இருப்பதில்லை. எனவே பிறருக்கு ஆறுதல் சொல்லக் சென்று நாம் பாவத்தில் சிக்கித் தேவ கோபத்தைப் பெற்றுவிடக்கூடாது. 

அப்படிப் பேசுவோமானால், "நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." என்று தேவன் நம்மைக் கடிந்துகொள்வார். தேவனது இரகசிய திட்டங்கள் நமக்குத் தெரியாததால் அமைதலாக பிறருக்கு ஆறுதல் கூறுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Wednesday, October 02, 2024

பயப்படாதே

 'ஆதவன்' அக்டோபர் 04, 2024. வெள்ளிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,334

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 )

நமது நாட்டின் பிரதமர் நமது கையைப் பிடித்து இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று நேரடியாகக் கூறுவாரானால் அது நமக்கு எத்தனை பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்!!! ஆனால் அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தைக் கூறுபவர் இந்த அண்டசராசரங்களையும்  படைத்து ஆளும் சர்வ வல்லவரான தேவனாகிய கர்த்தர். அப்படியானால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருக்கவேண்டும்?

ஆனால் இந்த வார்த்தைகளை தேவனாகிய கர்த்தர் "பயப்படாதே" என்று ஒருமுறையல்ல பல முறை நம்மை நோக்கிக் கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்." ( ஏசாயா 41 : 14 )

இன்று நமது குடும்பத்தில், நமது உறவினர்கள் மத்தியில்  நாம் அற்பமான பூச்சி போன்று எண்ணப்படலாம். அதாவது அவர்கள் நம்மை கணக்கில் கொள்ளாமல் போகலாம். ஆனால் நமது ஆண்டவர் நம்மை நோக்கிக் கூறுகின்றார், "யாக்கோபு என்னும் பூச்சியே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்." அதுபோல,  நமது நாட்டில் நாம் சிறுபான்மையினரான கூட்டமாக இருக்கலாம். நம்மைப்பார்த்து அவர் கூறுகின்றார், "இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று.  

ஆம் அன்பானவர்களே, தேவனது மக்களாகிய நாம் அவரில் திடன்கொண்டு வாழவும் அவரது பலத்தை நமது வாழ்வில் அனுபவிக்கவும் ஏசாயா 41 முதல் 43 வரையிலான அதிகாரங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களை தேவன் நமக்குத் தந்துள்ளார். இவை வெற்று  வார்த்தைகளல்ல, நமது பரலோக தகப்பன் நமக்கு அளிக்கும் உறுதிமொழிகள். வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும், சோகங்களும், இழப்புக்களும் ஏற்படும்போது இந்த அதிகாரங்களை தேவ அன்போடு வாசித்துப்பாருங்கள். 

இந்த வசனங்களே பல புனிதர்களை வாழ்வில் திடன்கொண்டு வாழ உதவியவை. இன்று நமக்கும் இவையே ஆறுதலும் தேறுதலுமானவைகளாக இருக்கின்றன. நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வாழ்வில் கண்டுகொண்ட ஆரம்ப நாட்களில் இந்த வசனங்களை வாசிக்கும்போது அவை தேவனே பேசிய  வாக்குத்தத்தங்களாக  இருப்பதை ஆவியில் உணர்ந்தேன். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது உண்மையிலேயே ஆவியில் புத்துணர்வு அடைவீர்களென்றால் தேவன் அதனை உங்களுக்கும்   வாக்களிக்கிறார் என்று பொருள். 

விசுவாசத்தோடு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் இந்த அதிகாரங்களை ஜெபத்துடன் வாசியுங்கள். கர்த்தர் உங்கள் விசுவாசத்தைக் கனம் பண்ணுவார். ஆம், உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

நம்மை அடிக்கிறவரிடத்தில் திரும்புவோம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 03, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,333

"ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்." ( ஏசாயா 9 : 13 )

நமது தேவனாகிய ஆண்டவர் அன்பும் கிருபையும் நிறைந்தவராக இருந்தாலும் அவர் பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறார். நாம் நமது தவறான வழிகளை விட்டு அவரிடம் திரும்பவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். அதற்காக சிலவேளைகளில் நமக்குச் சில தண்டனைகளைத் தந்து  நம்மைத் திருத்த முயலுகின்றார்.  ஆனாலும் மனிதர்கள் அவரது தண்டனையை உணராமலும் மனம் திரும்பாமலும் இருக்கின்றனர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம்,  "ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்" என்று தேவன் கூறுவதாக வாசிக்கின்றோம். இஸ்ரவேலரைத் தேவன் இப்படியேத் தண்டித்தார். இதனை இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் தேவன் கூறுகின்றார்,  "முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது." ( ஏசாயா 9 : 12 ) என்று.

ஆம் அன்பானவர்களே, தேவன் தரும் தண்டனையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாம் நமது பாவங்களிலேயே வாழ்வோமானால் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கும். ஆனால் இதனை அறியாமல் பலரும், "நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், உபவாசிக்கிறேன், தர்மங்கள் செய்கிறேன் .....ஆனாலும் தேவன் என்னைக் கண்டுகொள்ளவுமில்லை, எனக்கு நன்மை செய்யவுமில்லை" என்று தேவனுக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். 

அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் பின்வருமாறு பதிலளிக்கிறார்:-".............நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்". (உபாகமம் 13:17,18)

எனவே அன்பானவர்களே, துன்பங்கள் பிரச்சனைகள் தொடரும்போது தேவன்மேல் கோபம்கொள்ளாமல், அவரைக் குற்றப்படுத்தாமல்  நமது பாவங்களையும் மீறுதல்களையும் உணர்ந்து அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம். ஏனெனில், "சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்." ( சகரியா 1 : 3 )

"நம்மை அடிக்கிறவரிடத்தில் திரும்புவோம், சேனைகளின் கர்த்தரைத் தேடுவோம்."

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, September 30, 2024

உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே நம்மைத் தீட்டுப்படுத்தும்

 'ஆதவன்' 💚அக்டோபர் 02, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,332


"மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்." ( மாற்கு 7 : 15 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் நடக்கும்போது பல்வேறு உலக காரியங்கள் நம்மைத் தீட்டுப்படுத்த தயாராகவே இருக்கின்றன. நாம் காணும் திரைப்பட அறிவிப்புப்  போஸ்டர்கள், இணையத்தளச்  செய்திகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆபாச காரியங்கள் போன்றவை நம்மைப் பாவத்துக்கு நேராக இழுக்கலாம். ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார்,  "மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது" என்று. 

அதாவது நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருப்பாரேயானால் நமது கண்கள், காதுகள் வழியாக நமக்குள் செல்லும் இவைபோன்ற உலக காரியங்கள் நம்மைத் தீட்டுப்படுத்த முடியாது. காரணம், "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) என்கிறார் அப்போஸ்தலரான பவுல். நாம் இவற்றுக்கு அடிமையாகமாட்டோம்.

ஆனால் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்." என்று. நமது உள்ளம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்குமானால் உள்ளத்திலிருந்து நல்லவைகளே வெளிவரும். அப்படி இல்லாதபட்சத்தில் உள்ளத்திலிருந்து அசுத்தங்களே வெளிவரும். இவைகளே நம்மைத் தீட்டுப்படுத்தும். 

"எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்". ( மாற்கு 7 : 21 - 23 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

எனவேதான் நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. நமது உள்ளத்தில் ஆவியானவர் இருந்து நம்மை வழிநடத்த நம்மை அவருக்கு ஒப்புவிக்கும்போது உலக அசுத்தங்கள் நம்மை மேற்கொள்ளாது. மட்டுமல்ல, நமக்குள்ளிருந்து வெளிவரும் வார்த்தைகள், நமது சிந்தனைகள் இவையும் தூய்மையாகும். 

இந்த உலகத்துக்குத் தப்பி நம்மைப் பாவமில்லாமல் காத்துக்கொள்ள ஆவியானவரின் துணை நமக்கு அவசியமாகையால் நாம் ஆவியானவரின் அபிஷேகத்துக்கும் அவரது வழிநடத்துதலுக்கும் வேண்டுவோம். அப்போது வெளியுலக அசுத்தங்கள் நம்மைத் தாக்காமலும் நமது உள்ளத்திலிருந்து நலவைகளே வெளிவரவும் அது உதவியாக இருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Sunday, September 29, 2024

செல்வங்களை அனுபவிக்க தேவ கிருபை அவசியம்.

 'ஆதவன்' அக்டோபர் 01, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,331

"தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." ( பிரசங்கி 5 : 19 )

இன்று மனிதர்கள் பலரும் பெரும்பாலும் உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனிடம் ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உலக செல்வங்கள் மட்டும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுத்துவிடுவதில்லை. இந்த உண்மையினைப் பலரும் எண்ணிப்பார்ப்பதுமில்லை. அனைத்துச் செல்வங்கள் இருந்தாலும் ஒருவன் அதனைத்  தனது வாழ்வில் அனுபவிக்கவேண்டுமானால் தேவனது கிருபை அவசியம். 

இதனையே இன்றைய தியான வசனம், "தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." என்று கூறுகின்றது. உண்பதற்கு வகை வகையான உணவுகளை வாங்க வசதியிருந்தாலும் உடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இருக்குமானால் நாம் விரும்பும் எந்த உணவினையும் உண்ண  முடியாதவர்களாகவே இருப்போம்.  

இதனையே பிரசங்கி நூலில் நாம் தொடர்ந்து வாசிக்கும்போது பார்க்கின்றோம், "ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது." ( பிரசங்கி 6 : 2 )

எனவே அன்பானவர்களே, உலக செல்வங்களுக்காக அல்ல, மாறாக தேவனது கிருபைக்காகவும் அவரது இரக்கங்களுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டியதே முதன்மையான தேவையாக இருக்கின்றது. மிகப்பெரிய தொழிலதிபர்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரை உலக நடிகர் நடிகைகள் உண்மையில் மன மகிழ்ச்சியோடு இருப்பதில்லை அவர்கள் விரும்பி வாங்கிய பொருட்களை  வாழ்வில் அனுபவிப்பதுமில்லை. அவர்களது வெளியுலக பகட்டைப்பார்த்து நம்மில் பலரும் ஏமாந்துகொண்டிருக்கின்றோம். 

உண்மையான மகிழ்ச்சி, சமாதானம் இவை தேவனால் மட்டுமே கிடைக்கும். அவரது கிருபை இருந்தால் மட்டுமே நமது உலக செல்வங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும். எனவே நாம் தேவ கிருபைக்காக இறைஞ்சுவதே முக்கியமாகும். அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ) என்று. 

எனவே, தேவனையும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகின்ற முயற்சியில் ஈடுபடுவோம். அதற்கு முதலில் நமது பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட    அவரிடம் பாவ அறிக்கைச் செய்வோம். நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் தேவனை வாழ்வில் அறிய முடியும்; தேவ கிருபையில் வளர முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்