DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, April 05, 2024

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,155      💚 ஏப்ரல் 08, 2024 💚 திங்கள்கிழமை 💚


"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." ( பிலிப்பியர் 4 : 4 )

இந்த உலகத்தில் நமக்குப் பாடுகளும் உபத்திரவங்களும் துன்பங்களும் உண்டு என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். ஆனால் கிறிஸ்துவின்மேல் திட நம்பிக்கைகொண்டு வாழும்போது நாம் இவற்றை ஜெயிக்க முடியும். எனவேதான், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" ( யோவான் 16 : 33 ) என்றார் இயேசு. 

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்." என்று இயேசு கூறுவதிலிருந்து அவரில் நாம் விசுவாசம்கொள்ளும்போது நமக்கு சமாதானம் கிடைக்கும் என்று பொருளாகின்றது. அப்படி சமாதானம் கிடைக்கும்போது நாம் சோர்வாக இருக்கமாட்டோம்.  இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில்,  "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."என்று கூறுகின்றார். 

நமது துன்பங்ளையும் பிரச்சனைகளையும் விசுவாசத்தோடு தேவனிடம் ஒப்படைத்துவிட்டால் மனதின் துக்கங்கள் மாறும்.  சாமுவேலின் தாயாகிய அன்னாளைக்குறித்து நாம் வாசிக்கும்போது, பிள்ளையில்லாத அவளது மனக்குறையினை காண்கின்றோம். பிள்ளையில்லாத துன்பம் கொடியது. உலகத்தினரின் பழிச்சொல்லுக்கும் மனக்கவலைக்கும் அது இட்டுச்செல்லும். இப்படி பிள்ளையில்லாததனால் தனது நாச்சியாரின் பழிச்சொல்லையும் ஊராரின் பழிச்சொல்லையும் சுமந்து கவலையுடன் அவள் தேவ சமூகத்தில் ஜெபிக்கின்றாள்.    

உண்ணாமல் வேதனையுடன் தேவ சமூகத்தில் ஜெபித்த அவள் தனது குறையினைத் தேவனிடம் தெரிவித்தபின்பு மன நிம்மதியடைகின்றாள்.  வேதம் சொல்கின்றது, "பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.' ( 1 சாமுவேல் 1 : 18 ) தேவனிடம் எனது குறையினைச் சொல்லிவிட்டேன்; அவர் எனது வேண்டுதலுக்குச் செவிகொடுப்பார் எனும் உறுதி அன்னாளுக்கு இருந்தது. எனவே அவள் அதன்பின்பு துக்கமுகமாய் இருக்கவில்லை. 

அன்பானவர்களே, இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." என்று உறுதியாகக் கூறுகின்றார். பின்னர், அவ்வாறு எப்படி  சந்தோஷமாய் இருப்பது என்பதற்கு பின்வருமாறு வழி கூறுகின்றார்:- 

"நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." ( பிலிப்பியர் 4 : 6, 7 )

கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு எப்போதும் சந்தோசமாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

No comments: