DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, April 28, 2024

கடுகுவிதையளவு விசுவாசம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,176      💚 ஏப்ரல் 29, 2024 💚 திங்கள்கிழமை 💚



"கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 17:20) 

இன்றைய தியான வசனம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த உலகினில் கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கின்றனரே, அப்படியானால் ஒருவரிடம் கூடவா கடுகளவு விசுவாசம் இல்லாமலிருக்கின்றது என்று எண்ணிக்கொள்கின்றனர். பின்னர் ஏன் இயேசு கிறிஸ்து கூறியதுபோன்று  எவராலும் மலையை அசைக்கமுடியவில்லை என்றும்  எண்ணிக்கொள்கின்றனர். 

இன்றைய வசனம்,  நாம் தேவனைப் பற்றும் விசுவாசத்தால் எந்த வல்ல செயலையும்  செய்ய முடியும் என்பதனை வலியுறுத்த இயேசு கிறிஸ்து கூறியது. மலையைப் பெயர்த்து அப்புறப்படுத்த இயேசு கூறவில்லை. இப்படி நடக்குமானால் உலகினில் வேடிக்கையான குழப்பமான சூழ்நிலையே ஏற்படும். ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் விசுவாசி இமயமலையைப் பெயர்த்து கன்னியாகுமரிக்கு அனுப்புவார். கன்னியாகுமரி விசுவாசி இங்குள்ள மலையை சென்னைக்குப் போ என  அனுப்புவார். உலகமே திக்குமுக்காடிப்போகும். 

வேதாகம வசனங்களை நாம் ஆவிக்குரிய பொருளில்தான் பார்க்கவேண்டும். கடுகளவு விசுவாசம் என்பது கிறிஸ்துவை நம்புவதாக இருக்கலாம் அல்லது அவர்மேலுள்ள நம்பிக்கையை ஏதாவது சிறு செயல்மூலம் நாம் வெளிப்படுத்துவதில் இருக்கலாம். அப்படி நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது மலைபோன்ற பெரிய தடைகள் நம்மைவிட்டு அகலும். 

எனது சாட்சியைக்குறித்து பல முறை நான் குறிப்பிட்டுள்ளேன். கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தபோது ஒரு சகோதரன் என்னை வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழியின்றி அவருடன் ஜெபிக்கச் சென்றேன். அன்பானவர்களே, அப்படி நான் வேறு வழியில்லாமல் அவர் வற்புறுத்தி அழைத்ததால் அவருடன் சென்றேன். அப்படி நான் சென்றதுதான் கடுகளவு விசுவாசம். அதாவது நான் எனது விசுவாசத்தை அன்று வாயினால் அறிக்கையிடாவிட்டாலும் அவருடன் ஜெபிக்க ஒத்துக்கொண்டு சென்றதன்மூலம் வெளிப்படுத்தினேன், அந்தக் கடுகளவு விசுவாசம் மலைபோன்ற இருளை என்னைவிட்டு அகற்றியது.      

இதுபோல என்னை வற்புறுத்தி ஜெபத்துக்கு அழைத்துச்சென்ற அந்தச் சகோதரனின்  விசுவாசமும் பலன் தந்தது. ஆம், கிறிஸ்து எனக்குத் தன்னை வெளிப்படுத்தி பாவமன்னிப்பு அளிப்பார் என்று அவர் நம்பியிருந்தார். அந்தச் சகோதரனின் விசுவாசத்தை தேவன் கனம் பண்ணினார்.  

அவிசுவாசம், இருளான வாழ்க்கைச்சூழல், தீராத நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், பாவச் செயல்பாடுகள்  இவைகளெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மலைகள். கடுகளவு விசுவாசத்தோடு கிறிஸ்துவைநோக்கி நாம் பார்ப்போமானால் இந்த மலைகள் நம்மைவிட்டு அப்புறப்படுத்தப்படும். "உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு கிறிஸ்து கூறியது ஆவிக்குரிய அர்த்தத்தில்தான். 

ஆனால் நாம் ஆவிக்குரிய அனுபவங்களில் வளர வளர உலக காரியங்களிலும் நாம் வல்ல செயல்கள் செய்யமுடியும். ஆனால் மந்திரவாதிகள்போல அற்புதம்செய்து மற்றவர்களை நம் பக்கமாகத் திருப்ப இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்வோம். நமது மற்றும் நம்மைச் சார்ந்தவர்களது ஆவிக்குரிய வாழ்வில் உள்ள மலைகளை நாம் இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: