கொஞ்சம் பெலன் போதும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,151       💚 ஏப்ரல் 04, 2024 💚 வியாழக்கிழமை 💚

 

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 8 )

தேவன் நமது பலம் பலவீனம் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். மனிதர்கள் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழவேண்டும் என எடுக்கும் முயற்சிகளையும் அவர் பார்க்கின்றார். ஆனால் பலவேளைகளில் அவர்களால் அது முடிவதில்லை. தங்களை அறியாமல் தேவனுக்கு எதிரான காரியங்களைச்  செய்துவிடுகின்றனர். ஆனால், எந்த பலவீனம் இருந்தாலும் அவரை மறுதலியாமல் வாழும் வாழ்க்கையினை அவர் விரும்புகின்றார். அதுவே அவருக்குப் போதும். 

இதனையே இன்றைய தியான வசனம், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே"   என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, நமது தேவன் நம்மால் சுமக்க முடியாத சுமையினை நம் தோள்மீது ஏற்றிவைப்பவரல்ல. அவர் அன்பான தகப்பன். நமது குழந்தைகளிடம் நாம் ஒரு வேலையினை ஒப்படைக்கும்போது நாம் எதிர்பார்க்கும் அளவுக்குச் சிறப்பாக அவர்கள் அதனைச் செய்து முடிக்காவிட்டாலும் அவர்கள் அதனைச் செய்து முடிக்க எடுத்த முயற்சியை நாம் எண்ணிப் பாராட்டுவோம் அல்லவா?. 

அதுபோலவே தேவனும், நாம் பூரண பரிசுத்தராக வாழவேண்டுமென்று விரும்பினாலும்  நாம் அப்படி வாழ எடுக்கும் முயற்சிகளை பார்க்கின்றார். நமது கொஞ்ச பலத்தால் நாம் அவர் விரும்பிய பூரணத்தை அடைய முடியாவிட்டாலும் "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." என்று நமது முயற்சியினைப் பாராட்டி நம்மை ஆசீர்வதிக்கின்றார். 

இதனை நாம் நியாயாதிபதிகள் புத்தகத்திலும் பார்க்கலாம். மீதியானியரை எதிர்த்துப் போரிட தனக்குப் பலமில்லை என்று கிதியோன் கூறியபோது தேவன் அவனிடம், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்கு இருக்கக்கூடிய பலத்தோடு நாம் எடுக்கும் முயற்சிகளை தேவன் வாய்க்கப்பண்ணுகின்றார். 

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு என்று கூறப்பட்டுள்ள இன்றைய வசனம் ஏதோ ஒரு சபைக்குக் கூறப்பட்டுள்ள வசனமல்ல. கொஞ்சம் ஆவிக்குரிய பலம் இருந்தாலும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்தான் பிலதெல்பியா சபையினர் என்று குறிப்பிடப்படுகின்றனர். 

இப்படி வாழ்பவர்களைக் குறித்துத் தேவன் தொடர்ந்து கூறுகின்றார்,  "என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 10 )

அதாவது, இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ விரும்பிச் செயல்படுபவர்களுக்கு இரண்டு முக்கிய ஆசீர்வாதங்களைத் தேவன் வாக்களித்துள்ளனர். முதலாவது, அத்தகையவர்களுக்கு  முன்பாக  திறந்தவாசலை (ஆசீர்வாதத்தினை) வைப்பேன்,  அதனை  அதை ஒருவனும் தடுக்க முடியாது என்கின்றார். இரண்டாவது, பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி அவர்களைக்  காப்பேன் என்று வாக்களிக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய பலத்தோடு தேவனை மறுதலியாமல் பரிசுத்த வாழ்வு வாழ முயற்சியெடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: