INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Saturday, April 20, 2024

கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,169      💚 ஏப்ரல் 22, 2024 💚 திங்கள்கிழமை 💚


"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்".(செப்பனியா 3:17) 

இன்றைய தியான வசனம், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வசனம்.  தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது கர்த்தர் நம்மோடிருந்து மகிழ்ந்து களிகூருவார் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலர் நன்றாகப் படிக்கின்றவர்களாகவும், பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அத்தகைய மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் தனி அக்கறைகொண்டிருப்பார்கள். சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர்களை முன்னிலைப்படுத்துவார்கள். பள்ளியின் பெயர் பெருமையடைவதால்  அவர்களிடம் சந்தோஷமாய் இருப்பார்கள். 

இதுபோலவே நமது தேவனும் இருக்கின்றார். அவர் பாவிகளை நேசிக்கின்றார், அன்புசெய்கின்றார் என்பது உண்மையென்றாலும் தனக்கு ஏற்புடையவர்களாக  நீதி நேர்மையுடன் வாழும் மக்களிடம் அதிக அன்பு காட்டி கிருபையை அளிக்கின்றார். இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழும்போது, அவர் நம்  நடுவில் இருக்கிறார்; நம்மிலிருந்து வல்லமையுடன் செயல்படுவார், நம்மை இரட்சிப்பார்; நம்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் நம்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 

இப்படி கூறப்பட்டுள்ளதால் இவர்களுக்குத் துன்பங்கள் கிடையாது என்று பொருளல்ல. மாறாக, துன்பங்களினூடே ஆறுதலும் மகிழ்ச்சியும் அளித்து அவர்களை கிருபையால் தாங்கி நடத்துவார்.  ஒரு குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும் மகளையோ மகளையோ அனைவரும் தாங்கி நடத்துவதுபோலவும், அத்தகைய மகனிடமும் மகளிடமும் குடும்பத்தினர் தனி அக்கறைகாட்டி மகிழ்ச்சியுடன் இருப்பதுபோலவும் தேவன் அவர்களோடு இருப்பார்; அவர்கள்மேல் தனி அக்கறைகாட்டுவார்.

இன்று பரிசுத்தவான்களாக, புனிதர்களாக கருதப்படும் எல்லோரும் இப்படித்  துன்பங்களினூடே கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள்தான். அதனால் தேவன் அவர்கள்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அவர்களைப் பெருமைப்படுத்தினார். 

ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது நம்மை நாமே பெருமைப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களது பெருமையினைப் பறைசாற்றிட தாங்களே போஸ்டர் விளம்பரங்களும், சாட்சிகளையும் ஏற்பாடுசெய்து தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றார். ஆம் அன்பானவர்களே, கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் என்பதற்கு இத்தகைய உலகம் காட்டக்கூடிய  அளவுகோல்கள் தேவையில்லை. அது நமக்கும் தேவனுக்குமான தனிப்பட்ட உறவின் அடிப்படையிலானது. 

தேவன் நம்மோடிருப்பது நமது ஆவிக்குத் தெரியும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நம்  தேவனாகிய கர்த்தர் நம்  நடுவில் இருப்பதையும் அவர் வல்லமையுள்ளவராக நம்மை இரட்சித்து நம்பேரில் அவர்  சந்தோஷமாய் மகிழ்ந்து,  நம்மோடு அவர் அமர்ந்திருப்பதையும்  நமது தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய மேலான நிலையினை நாம் ஆவிக்குரிய வாழ்வில் அடைந்திடவேண்டும். கிறிஸ்துவோடு நமது ஐக்கியத்தை வலுப்படுத்தும்போது நாம் இதனை உணர்ந்து அனுபவிக்கலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

No comments: