DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, April 18, 2024

எப்போது வாக்குத்தத்தங்களுக்கு உரிமையடைகின்றோம்?

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,167      💚 ஏப்ரல் 20, 2024 💚 சனிக்கிழமை 💚


"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3 : 12 )

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நமக்கு வாழ்வில் என்ன கிடைக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல் இங்கு விளக்குகின்றார். உலக ஆசீர்வாதங்களல்ல; மாறாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நமக்கு முதலில் தைரியம் பிறக்கின்றது. அதாவது கிறிஸ்துவை அறியாமல் நாம் வாழ்ந்திருந்தபோது சின்ன பிரச்சனைகளும் பாடுகளும் நம்மை மனம்தளரச் செய்து நம்மைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். ஆனால், அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நமக்கு உற்ற ஒரு தகப்பனாக அவர் இருப்பதால், தைரியம் கிடைக்கின்றது.  

இரண்டாவதாக, "திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது,  நாம் மரித்தால் தேவ சமூகத்தைச் சென்றடைவோம் எனும் திடமான நம்பிக்கை நம்மில் உருவாகின்றது. எனவே, மெய்யான ஒரு கிறிஸ்தவ விசுவாசி சாவைக்கண்டு அஞ்சமாட்டான். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனைகளின்போது பலர் இரத்தச் சாட்சிகளாக உயிரைக்கொடுத்தது இந்த நம்பிக்கை இருந்ததால்தான். 

ஒருவர் கிறிஸ்துவை அறிவதற்கு முன் எப்படி இருந்தார், கிறிஸ்துவை  அறிந்தபின்னர் எப்படி மாறிவிடுகின்றார் என்பதனை விளக்கும்போது,  அப்போஸ்தலரான பவுல்,  "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்."   ( எபேசியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

அதாவது, கிறிஸ்துவை அறியாத மக்களாக நாம் இருந்தபோது, கிறிஸ்துவைச் சேராதவர்களாக, ஆவிக்குரிய இஸ்ரவேலுடைய உரிமைகள் இல்லாதவர்களாக, வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியராக,  நம்பிக்கையில்லாதவர்களாக,  இவ்வுலகத்தில் கடவுள் இல்லாதவர்களாக இருந்தோம் என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு மட்டுமே ஆவிக்குரிய உரிமைகள் உண்டு. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை நாம் அறியாமலிருந்தபோது வேதத்தில் பல நூறு வாக்குத்தத்தங்கள் இருந்தாலும் தேவனுடைய அந்த  வாக்குத்தத்தங்களின் உரிமை நமக்கு இல்லாமலிருந்தது. பெயரளவுக்கு மட்டும் அந்த வாக்குத்தத்தங்களை வாசித்து அவற்றைச் சொல்லி ஜெபித்துக்கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் அவற்றுக்கு நாம் அந்நியராக இருந்தோம். கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டபின்னரே நாம் அவற்றுக்கு உரிமையுள்ளவர்கள் ஆனோம்.  

அன்பானவர்களே, வெறுமனே "கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்" என்று கூறிக்கொண்டிருப்பதால் பலனில்லை. முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெறவேண்டும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ள முடியும். அந்த அனுபவத்தை வாழ்வில் நாம் பெறும்போதுதான்  அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாகும்.

இன்றைய வசனம் அப்படி கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்கு பவுல் அப்போஸ்தலர் எழுதியதாகும்.  எனவே இந்த அனுபவங்களையும் உரிமைகளையும் பெற்ற நீங்கள் தவறான உலக ஆசீர்வாத போதனைகளால் ஏமாறி கிறிஸ்துவைவிட்டு பின்மாறிப் போகாதிருங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆவிக்குரிய வாழ்வில் கவனமுடன் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: