உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,171       💚 ஏப்ரல் 24, 2024 💚 புதன்கிழமை 💚



"விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." ( கொலோசெயர் 3 : 5, 6 )

மனிதர்களின் உடலின் உறுப்புகளே பல்வேறு பாவங்களுக்கு நேராக மனிதர்களை நடத்துகின்றன.  விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை இவைகளுக்கு நமது கால்களும் கைகளும் கண்களும் காரணமாய் இருக்கின்றன. எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுவதையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறினார்.

"உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 43 )

"உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 45 )

"உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 47 )

இயேசு கிறிஸ்து கூறியது போலவே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உண்டுபண்ணுகின்ற இந்த உறுப்புகளை அழித்துப்போடுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அழித்துப்போடுங்கள் என்று கூறுவதால் இவைகளை வெட்டி எறிந்துவிடவேண்டுமென்று பொருளல்ல. மாறாக,  இந்த உறுப்புகள் நமக்கு இல்லாதிருக்குமானால் நாம் எப்படி வாழ்வோமோ அதுபோல நாம் வாழவேண்டும் என்று பொருள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்புரிந்து இந்த உறுப்புக்கள் பாவத்துக்கு நேராக செயல்படாமல் காத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள். 

விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை எனும் ஐந்து குறிப்பிட்ட பாவங்களைப்  பட்டியலிட்டு "இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவனுடைய பார்வையில் இவைகளே மிகவும் மோசமான பாவங்கள் என்று பொருள். வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது இந்தப் பாவங்களே பலரை அழிவுக்குநேராக இழுத்துச் சென்றதை நாம் அறிந்துகொள்ளலாம். 

எனவே அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு,  ஜெபித்து பல்வேறு பக்திமுயற்சிகள் செய்தாலும் இந்தப் பாவங்கள் நம்மில் இருக்குமானால் நமது ஆராதனைகளும் பக்திமுயற்சிகளும் வீணானவைகளே. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர் 12:1) என்று கூறுகின்றார். 

நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்து வாழ்வோம். அப்போது, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வரும் தேவகோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்வோம். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்