சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே பேசினார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,159        💚 ஏப்ரல் 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து," ( எபிரெயர் 11 : 24 )

மோசேயின் பல்வேறு குணங்கள் நம்மையும்  ஆவிக்குரிய வாழ்வில் நிதானித்து அறிந்து பின்பற்றிட வழி காட்டுகின்றது. 

மோசேயினுடைய வாழ்க்கை வித்தியாசமானது.  பிறக்கும் எபிரேயர்களுடைய ஆண்பிள்ளைகள் அனைத்தையும் நைல் நதியில் போட்டுவிடவும் பெண்பிள்ளைகளை மட்டும் உயிரோடு வைக்கவும் பார்வோன் மன்னன் எல்லோருக்கும் கட்டளையிட்டான். (யாத்திராகமம் 1:22)  மோசேயின் தாய் தனக்குப் பிறந்த மகனான மோசேயை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்து வளர்த்தாள். அதற்குமேல் அதனை வளர்க்கமுடியாமல் நைல்நதி ஓரத்தில் நாணல்பெட்டியில் வைத்து விட்டாள். அவனை பார்வோனின் மகள் எடுத்துத்  தனது மகனாக வளர்த்தாள். 

ஆனால் வளர்ந்தபின்னர் மோசேக்குத் தனது பிறப்பின் பின்னணி தெரிந்தது.  அதன் பின்னால் அவனால் அரண்மனை வாழ்க்கையில் தொடர்ந்து வாழமனமில்லை. அரண்மனையில் ராஜ வாழ்க்கை  வாழ்ந்து, பார்வோனின் மகளின் மகன் (பார்வோன் மன்னனின் பேரன்) என்ற மேலான நிலை இருந்தபோதும் மோசே அதனைவிட தேவனுடைய மக்களாகிய எபிரேயர்களுடன் சேர்ந்து பாடு அனுபவிப்பதையே தெரிந்து கொண்டார். 

அரண்மனையில் பல்வேறு பாவ காளியாட்டுகள் சந்தோஷமளிக்கக் கூடியவைகளாக இருந்தபோதும் அவற்றைவிட தனது மக்களுடன் பாடு அனுபவிப்பதையே மோசே தெரிந்துகொண்டு அரண்மனை வாழ்கையினைத் துறந்து வெளியேறினார். இதனை நாம், "அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்." ( எபிரெயர் 11 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம். 

எபிரேய நிருப ஆசிரியர் இது மோசேயின் விசுவாசத்தினால்தான் என்று கூறுகின்றார். இதனையே இன்றைய தியான வசனம், "விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து," என்று கூறுகின்றது. மோசே ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் அரண்மனையிலேயே வாழ்ந்து அடுத்த அரச பதவியினை அடைந்திட முயன்றிருப்பான். ஆனால் தேவன்மேலிருந்த விசுவாசத்தினால் மோசே அரண்மனை வாழ்கையினைத் துறந்தார். 

மட்டுமல்ல, இந்த "மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்." ( எண்ணாகமம் 12 : 3 ) என்று வாசிக்கின்றோம். பாவத்தின்மேல் வெறுப்பு, செல்வத்தின்மேல் பற்றில்லாத நிலை, சாந்தகுணம் போன்ற குணங்கள் இருந்ததால், "ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்".
( யாத்திராகமம் 33 : 11 )

இவை அனைத்துக்கும் மூல காரணம், தேவன்மேல்கொண்ட விசுவாசத்தினாலே தான்.   அன்பானவர்களே, பாவ சந்தோஷங்களையும், செல்வம், பதவி போன்றவற்றையும் வெறுத்து ஒதுக்கி தேவன்மேல் உறுதியான விசுவாசத்தோடு தேவ ஐக்கியத்தில் வாழ மோசே நமக்கு வழி காட்டுகின்றார். பெரிய உலக ஆசீர்வாதம் நமக்குமுன் இருந்தாலும் அதனைவிட தேவனுக்குமுன் உண்மையாய் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் தேவ ஐக்கியத்தில் நாமும் உறுதிப்படலாம். 

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்" என்று கூறப்பட்டுள்ளபடி தேவன் நம்மோடும் பேசுவார். அவர் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுபவரல்ல. இந்த அனுபவதில் வளருவதே ஆவிக்குரிய வளர்ச்சி. விசுவாசத்தோடு தேவ ஐக்கியத்தில் வளர முயற்சியெடுப்போம். அதற்கு, மோசே செய்ததுபோல தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கக்கூடிய  சில காரியங்களை நம்மைவிட்டு ஒதுக்கிவைப்போம். அதற்கு ஆவியானவர்தாமே நமக்குஉதவுவாராக. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்