"கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்"

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,163       💚 ஏப்ரல் 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலு மிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்." ( செப்பனியா 1 : 6 )


இன்றைய தியான வசனம் எவை நமக்கு சாபமாயிருக்கும் என்று மூன்று காரியங்களைக்குறித்து  பேசுகின்றது. 

1. கர்த்தரைவிட்டுப் பின்வாங்குவது  

2. கர்த்தரைத் தேடாமல் வாழ்வது.

3. அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்வது.

இந்த மூன்றுவகையினரும் கர்த்தரால் ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது என்கின்றது இன்றைய வசனம். 

சிலர் ஆவிக்குரிய வாழ்வில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில, பல எதிர்மறையான காரியங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டவுடனோ அல்லது பழைய பாவ நாட்டங்கள் இருதயத்தைத் தூண்டுவதாலோ கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப்போவார்கள்.  இப்படி "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

மட்டுமல்ல, "அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 21 ) என்கின்றார். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம்.

இன்னொரு பிரிவினர் கர்த்தரை வாழ்வில் தேடாமலேயே வாழ்பவர்கள். அதாவது இவர்கள் ஆராதனைக் கிறிஸ்தவர்கள். கர்த்தரைத் தேடாமல் உலக ஆசீர்வாதங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார், "கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்" ( ஆமோஸ் 5 : 6 ) ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டால் மட்டும் போதாது, தனிப்பட்ட முறையில் தேவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்படிக் கர்த்தரைத் தேடுபவர்கள் பிழைப்பார்கள். அதாவது அவர்கள் பாவ மரண சூழ்நிலைகளுக்குத் தப்புவார்கள். 

நம்மில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் வகையினர்தான். கடவுளை நம்புகின்றோம், ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்கின்றோம் ஆனால் கர்த்தரை வாழ்வில் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாகவே இருக்கின்றோம். 

மூன்றாவது வகையினர், அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள். "கடவுள் என ஒருவர் இருந்தால் ஏன் மறைந்துகொண்டிருக்கிறார்? என் முன்னால் வரட்டும் நான் நம்புகின்றேன்" என்பார்கள் இவர்கள்.  வெட்டியாக இருந்து வம்பு பேசுவதைவிட்டு இவர்கள் கடவுளைத் தேடினால் அவரைக் கண்டுபிடிக்கமுடியும். "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" ( மத்தேயு 7 : 7 )

அன்பானவர்களே, நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம்.  கார்த்தரைவிட்டுப் பின்வாங்கியிருந்தால் அவரிடம் மன்னிப்பு வேண்டி அவரோடு ஒப்புரவாவோம்; இரண்டாவது வகையினராக இருந்தால் ஆலய ஆராதனைகள் மட்டுமே போதுமென்று எண்ணாமல் தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்க்க முயலுவோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்றால்  அப்படி ஒருவர் உண்டுமா என்று தேடியாவது பார்ப்போம்; உண்மையாகத் தேடினால் நிச்சயம் அவர் தென்படுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்