தைரியமாய் அவரிடம் சேர்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,172     💚 ஏப்ரல் 25, 2024 💚 வியாழக்கிழமை 💚



"ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

நாம் தைரியமாய் ஒரு உயர் அதிகாரியிடம் சென்று நமது பிரச்சனைகளையும் நமது விருப்பங்களையும் கூறவேண்டுமானால் அவரோடு நமக்கு நல்ல உறவு இருக்கவேண்டும். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரிடம்கூட  சென்று நாம் துணிவுடன் பேச முடியாது. அப்படியிருக்கும்போது நாட்டின் முதலமைச்சரிடமோ பிரதமரிடமோ நாம் எப்படித் துணிவுடன் சென்று பேசமுடியும்? 

ஆனால் அந்த உயர் பதவியில் இருப்பவர் நமது  தகப்பனாராகவோ தாயாகவோ இருந்தால் நாம் துணிவுடன் தைரியமாகச் சென்று பேசுவோம். காரணம் அவர்கள் நம்மைப் பெற்றவர்கள், நம்மைப்பற்றி அறிந்தவர்கள், வீட்டில் நம்மோடு வாழ்ந்து நாம் உண்ணும் உணவை உண்டு, நாம் வீட்டில் அனுபவிக்கும் பிரச்சனைகளை நம்மைப்போல அனுபவித்து வாழ்கின்றவர்கள்.  

இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தைய வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )

இப்படி எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருப்பதால் நாம் அவரிடம் துணிவுடன் சென்று பேச முடியும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களையும் அவர் ஏற்கெனவே அனுபவித்துள்ளார். அவர் நமது தகப்பனாக, தாயாக இருப்பதால் நம்மைப்பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, முதலில் நாம் தேவனோடுள்ள நமது உறவினைச் சரிசெய்யவேண்டியது அவசியம். அவரோடு ஒரு மகனாக மகளாக உறவுடன் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். அப்படி ஒரு உறவுடன் வாழ்வோமானால் இன்றைய தியான வசனம்  கூறுவதுபோல அவரது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே நாம் சேர முடியும்.  

பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் என்று கூறியுள்ளபடி நாமும் அவரைப் போலப்  பாவமில்லாதவராக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும்போதுதான்  பாவ மன்னிப்பைப் பெறுகின்றோம்; அவரோடு ஒப்புரவாகின்றோம். அப்படி தேவனோடு ஒப்புரவாகும்போதுதான்  நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படிப் பிள்ளைகளாகும்போது தான் இன்றைய வசனம் கூறுவதுபோல அவரை நெருங்கிட நமக்குத் தைரியம் பிறக்கும். 

எனவே அன்பானவர்களே, நம்மை அவருக்கு ஒப்புவித்து ஜெபிப்போம். அன்பான பரம தகப்பனே, உமக்கு விரோதமாக நான் செய்த பாவங்களுக்காக மெய்யாகவே மனம் வருந்தி மன்னிப்பு  வேண்டுகின்றேன். கல்வாரியில் நீர் சிந்தின உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவியருளும். உமது  விலையேறப்பெற்ற இரட்சிப்பினை நான் அடைந்திடவும் அதனால் உமது பிள்ளையாகிடவும் வரம்தாரும். உமது  இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் உமது உதவி கிடைக்கும் கிருபையை நான் அடையவும் உதவியருளும். மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்