இரவிலே நடந்தால் இடறுவான் .

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,168       💚 ஏப்ரல் 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் ." ( யோவான் 11 : 9, 10 )

பகலில் நடந்து செல்வதற்கும் இரவில் நடப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய வசனம் ஆவிக்குரிய பொருளில் கூறப்பட்டுள்ளது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவது நம்மைப் பகலுக்கு உரிமையாளர் ஆக்குகின்றது. மாறாக, கிறிஸ்துவை அறியாத வாழ்க்கை இருளின் வாழ்க்கை. 

இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 ) என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் ஜீவன் மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றது. நம்மை ஒளியிலே நடத்துகின்றது. 

இப்படி கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுள்ளவன் இருளில் நடந்தாலும் இடறமாட்டான். இதனையே இன்றைய தியான வசனம், "அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்." என்று கூறுகின்றது. உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்து நம்மில்வரும்போது நாமே  வெளிச்சமாகிவிடுகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" ( மத்தேயு 5 : 14 ) என்று கூறுகின்றார். 

தன்னில் கிறிஸ்துவின் வெளிச்சமில்லாத மனிதன் இரவான சூழ்நிலை வாழ்வில் வரும்போது இடறிவிடுவான்.  காரணம் அவனில் ஒளியில்லாமலிருப்பதுதான். கிறிஸ்துவின் வசனமே நமக்கு ஒளியாக இருந்து வழிநடத்தும் அனுபவம் மேலான ஆவிக்குரிய அனுபவமாகும். அந்த அனுபவத்தால்தான் சங்கீத ஆசிரியர், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய இருளில் வாழ்பவன் இடறக்காரணம் அவனது ஆவிக்குரிய தூக்கமும் அவலட்சணமான வாழ்க்கையும்தான். ஆனால் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் வாழ்பவன்  தெளிவுள்ளவனாகவும், விசுவாசம், அன்பு மற்றும் இரட்சிப்பு அனுபவத்தையும் பெற்றிருப்பதால் இடறமாட்டான். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்."( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவைச் சார்ந்த பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்