தேவன் உண்டென்று பிசாசுகளும் விசுவாசிக்கின்றன

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,150     💚 ஏப்ரல் 03, 2024 💚 புதன்கிழமை 💚


"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." ( யாக்கோபு 2 : 19 )

நாம் அனைவரும் கடவுள்மேல் விசுவாசம் இருப்பதால்தான் ஆலயங்களுக்கு வருகின்றோம், ஜெபிக்கின்றோம், பல்வேறு பக்தி முயற்சிகளை எடுக்கின்றோம். ஆனால் அப்போஸ்தலனாகிய யாக்கோபு, இதுபோல "பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." என்று கூறுகின்றார். இதிலிருந்து பிசாசுகளின் கடவுள் நம்பிக்கையைவிட நமது நம்பிக்கையென்பது மேலான ஒன்றாக இருக்கவேண்டும் என அவர் தெளிவுபடுத்த விரும்புகின்றார் என்பது தெளிவு. 

எபிரேய நிருபத்தில் நாம் வாசிக்கின்றோம், "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று. இதனைத் தொடர்ந்து அங்கு பல விசுவாச வீரர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே இப்படி தங்கள் நம்பியவைகளில் உறுதியுடனும் நிச்சயத்துடனும் வாழ்ந்தார்கள். அதனால் தேவனுக்கேற்றவர்கள் என்று நற்சாட்சி பெற்றவர்கள்.

ஆனால் பிசாசுகள் அப்படியல்ல. கடவுள் ஒருவர் உண்டு என்பதை அவைகள் நம்பினாலும் அவருக்கு எதிரான செயல்களைச் செய்ய மனிதர்களைத் தூண்டுகின்றன. இதனை நாம் ஆதியாகமத்திலேயே பார்க்கலாம். ஆதாமையும் ஏவாளையும் தேவ கட்டளைக்கு எதிராகச் செயல்படத் தூண்டியது பிசாசுதான். 

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்றும் கூறப்பட்டுள்ளது. பிசாசுக்கு இந்தநம்பிக்கையும் கிடையாது. மாறாக, பிசாசு பெருமை ஆணவம் எனும் குணங்கள் கொண்டு செயல்படுவதுகின்றது. இது கிறிஸ்துவின் தாழ்ச்சி குணத்துக்கு எதிரான குணம். 

அதாவது, கடவுள் ஒருவர் உண்டு என பிசாசுகள் விசுவாசித்து நடுங்கினாலும் அவைகளுக்கு கடவுளின் குணங்கள் இல்லை. மாறாக மனிதர்களையும் கடவுளுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுகின்றன. எனவே அன்பானவர்களே, நாமும் ஆலயங்களுக்கு வந்து ஆராதித்து கலைந்துசென்று பிசாசுகளின் குணங்களோடு வாழ்ந்தால் அதில் அர்த்தமில்லை.

கிறிஸ்துவின் பாடுகளையும் அவர் அடையப்போகும் மகிமையையும் தரிசனமாக கிறிஸ்துவுக்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன்னமேயே கண்ட ஏசாயா தீர்க்கத்தரிசி பிசாசு அடைந்த வீழ்ச்சியையும் கண்டு விவரித்துள்ளார். 

"........நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." ( ஏசாயா 14 : 13 - 15 ) என்று பிசாசின் வீழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது.

ஆம் அன்பானவர்களே, கடவுள்மேல் நாம் விசுவாசம் கொண்டால் மட்டும் போதாது,  அந்த விசுவாசம் பிசாசுகளின் விசுவாசம்போல ஆகிவிடக்கூடாது. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் விசுவாசம்போல உறுதியான விசுவாசமாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது மட்டுமே நமது உள்ளான குணங்கள் மாறி நாம் தெய்வீக குணங்களுள்ளவர்களாக மாறி ஆவிக்குரிய நிலையில் முன்னோக்கிச் செல்ல முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்