நல்ல மேய்ப்பன்

ஆதவன் 🌞 817🌻 ஏப்ரல் 24, 2023 திங்கள்கிழமை
























"சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 25 )

ஆடுகள் பொதுவாக மந்தையாக அதாவது கூட்டமாகத்தான் இருக்கும். குறிப்பாக செம்மறி ஆடுகள் கூட்டமாகவே இருக்கும். கூட்டமாக இருக்கும் ஆடுகள் கொடிய விலங்குகள் துரத்தும்போது சிதறி ஓடும். தனித்தனியாக அவை அனாதைபோல அலையும்.  நாம் முன்பு இப்படிச் சிதறிய ஆடுகளைப்போலவே இருந்தோம் என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு.

சரியான வழிநடத்துதல் இல்லாமல், போதிய உணவு கிடைக்காமல், உரிய பாதுகாப்பு இல்லாமல் அலையும் ஆடுகள்போல இருந்த நாம் இப்பொழுதோ கிறிஸ்துவிடம் வந்துவிட்டதால் நம் ஆத்துமாக்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. காரணம் அவர் நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார்.  

"நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், நல்ல மேய்ப்பன் தனது ஒவ்வொரு ஆட்டைப்பற்றியும் அறிந்திருப்பான்; அவைகளுக்குக் காயம் கட்டுவான்; இயலாத ஆடுகளைத் தனது தோளில் தூக்கிச் சுமப்பான். 

தாவீது ராஜா கர்த்தரை நல்ல மேய்ப்பராக பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கண்டு உணர்ந்திருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." ( சங்கீதம் 23 : 1) என்று. 

நல்ல மேய்ப்பனுக்கு எங்கு தனது ஆடுகளுக்குப்   போதிய உணவு கிடைக்கும், எங்கு ஆபத்து இருக்கின்றது போன்ற காரியங்கள் தெரிவதால் தனது ஆடுகளைச் சரியான வழியில் நடத்திச் செல்லுவான். மேலும் கொடிய வன விலங்குகள் ஆடுகளைத் தாக்க வரும்போது அவற்றைப் போராடித் துரத்துவான். அப்படித் துரத்தும்போது தனது உயிரையும் அவன் இழக்கக்கூடும். இதனையெல்லாம் அறிந்திருந்த  தாவீது  தொடர்ந்து, "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 ) என்கின்றார்.

தாவீது தீர்க்கதரிசனமாக உணர்ந்து கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்." ( யோவான் 10 : 11 ) என்று கூறியது மட்டுமல்ல கூறியதுபோல ஆடுகளான  நமக்காகத் தன்  உயிரையும்  கொடுத்தார். 

இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளும் இன்றைய தியானத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறும் வார்த்தைகளும் ஆவிக்குரிய அர்த்தமுள்ள உண்மைகளாகும். சிதறுண்ட ஆடுகளாய் எந்த நம்பிக்கையுமில்லாமல் குருட்டாம்போக்கில் நாம் வழிபடும் தேவனல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்து நம்மை நடத்துவார். 

இனி நாம் சிதறுண்ட அநாதை ஆடுகளைப்போல அலைந்து திரிய வேண்டாம். கர்த்தராகிய இயேசுவை அண்டிக்கொள்வோம். நல்லமேய்ப்பனாகிய அவரே நம்மை  நிலை வாழ்வுக்கு வழி நடத்துவார் என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்