அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்

ஆதவன் 🌞 801🌻 ஏப்ரல் 08, 2023 சனிக்கிழமை










"துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்" ( ஏசாயா 53 : 9 )

மரணத்துக்குத் தீர்ப்பிடப்படும் நிலையிலும் பிலாத்துவிடம் , "நான் ராஜாதான் சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்" ( யோவான் 18 : 37 ) என்று அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்து மிருக்கத்தைப்போல பலியிடப்பட்டாலும் ராஜ மேன்மையுடன் அடக்கம் செய்யப்பட்டதைப் பார்க்கின்றோம். 

இயேசு கிறிஸ்துவை எல்லோரும் துன்மார்க்கனாக எண்ணவேண்டும் எனக்கருதிய யூதர்கள் அவரை இரு கள்வர்களோடு சேர்த்து சிலுவையில் அறைந்தார்கள். அவரை அவமானப்படுத்தவே இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.   உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கவே அவர் இந்த அளவுக்குத் தன்னைத் தாழ்த்தினாலும் அவர் இறந்த உடனேயே பிதாவாகிய தேவன் அவரை மகிமைப்படுத்தத் துவங்கிவிட்டார். அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஆம் அவர் இறந்தபோது, பெரிய செல்வந்தர்களோடு இருந்தார் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறியதுபோல, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு ( மத்தேயு 27 : 57 ) செல்வந்தனான நிக்கொதேமு ( யோவான் 19 : 39 ) ஆகியோர் உடனிருந்தனர். ராஜாக்களை அடக்கம் செய்வதுபோல நறுமணப் பொருட்கள் அவரது உடல்மேல்  பூசப்பட்டது. "ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்." ( யோவான் 19 : 39 ) என்று கூறப்பட்டுள்ளது. நூறு ராத்தல் என்பது சுமார் 30 கிலோ அளவாகும். விலைமதிப்புள்ள இந்த வாசனைத் திரவியங்கள் ஒரு அரசனது உடல்  மேல் பூசப்படுவதைப்போல இயேசு கிறிஸ்துவின் உடல்மேல் பூசப்பட்டன. 

உலகத்தின் பார்வைக்கு அற்பமாக எண்ணப்பட்டாலும் தேவன் அவரை மகிமைப்படுத்தினார். செல்வந்தர்களோடு அவர் இருந்தார். அன்பானவர்களே, இதனையே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழும் எல்லோருக்கும் தேவன் செய்கின்றார். உலகத்தால் அற்பமாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக நாம் இருந்தாலும் ஏற்ற இடங்களில் தேவன் நம்மை மகிமைப்படுத்திடுவார்.  

இயேசுவின் பாடுகளும் மரணமும் அழிவிற்கானவை அல்ல. மாறாக, மகிமைக்கானவை. எல்லா மனிதர்களும் மரித்து மண்ணோடு மண்ணாகிப்போகும்போது கிறிஸ்து அப்படியல்லாமல் உயிருடன் எழுந்தார்.  உலகத்தில் மட்டுமல்ல, அவர் பரலோக ஐஸ்வர்யவானாக உயர்ந்தார். எனவேதான் ராஜாவுக்குமுன் மண்டியிடும் மனிதர்கள்போல ஒட்டுமொத்த மனுகுலத்தையும் அவர்முன் மண்டியிடச் செய்தார் தேவன். 

ஆம், "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 10, 11 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்