"பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்"

ஆதவன் 🌞 822🌻 ஏப்ரல் 29, 2023 சனிக்கிழமை





















"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 )

அன்பானவர்களே, இன்று இந்த உலகத்தில் எனக்கென்று யாருமே இல்லை, இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து என்னை விடுவிக்க யாருமில்லை, இந்த கொடிய நோயிலிருந்து, கடன் பிரச்சனையிலிருந்து, வட்டிக் கொடுமையிலிருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியாக்க யாருமேயில்லை, இந்தக் குடி வெறியிலிருந்து, பாவப் பழக்கத்திலிருந்து விடுவிக்க யாருமே இல்லை ....இப்படி "இல்லை" பட்டியலே  வாழ்க்கையில்  நீண்டுகொண்டிருக்கின்றதா? கவலைப் படாதிருங்கள். இன்றைய வசனத்தில் கர்த்தர், "நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று சொல்லுகிறார். 

ஆம், கர்த்தராகிய தேவன் தன் பிள்ளைகளை அனாதைகளாக விட்டுவிடுவதில்லை. "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்கின்றார்.

நாம் இந்த உலகத்தில் உறுதியாக மலைபோல நம்பியிருந்தவர்கள் நம்மைக் கைவிட்டிருக்கலாம். அல்லது முன்பு நமக்கு வாக்குறுதி அளித்திருந்தவர்கள் கால மாற்றத்தால் நமக்கு உதவ முடியாதவர்கள் ஆகியிருக்கலாம். அல்லது ஒருவேளை இந்த உலகத்திலிருந்து அவர்கள்  மடிந்துபோயிருக்கலாம். ஆனால் என்றும் மாறாத கர்த்தர் மாறாதவராகவே நம்முடன் இருக்கின்றார். இந்த விசுவாசத்தோடு தேவனை அண்டிக்கொள்வோம். 

நாம் தேவன்மேல் மெய்யான அன்பு கொண்டு வாழ்வோமானால் தேவையற்ற பயங்கள் நம்மைவிட்டு மறையும். எந்தச் சூழ்நிலையையும் மாற்றவல்லவர் நமது தேவன். அவரில் பூரண அன்புகொண்டு வாழ்வோமானால் பயங்கள் நம்மைவிட்டு அகல்வது நிச்சயம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடரான யோவான் இதனால்தான், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான்  4 : 18 ) என்று கூறுகின்றார். 

அவரை அன்பு செய்வது என்பது அவரது கற்பனைகளைக் கடைபிடிப்பதே.  அப்போஸ்தலனாகிய யோவான். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 ) என்று கூறுகின்றார்.

ஆம், அவரது கற்பனைகள் பாரமானவைகள் அல்ல; கடினமானவைகள் அல்ல.  அன்பானபவர்களே, வசனம் கூறுவதன்படி தேவனது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நாம் வாழும்போது வாக்குமாறாத தேவனும் தனது வாக்கினை மாற்றாமல் நமக்கு உதவிசெய்வார். அப்படி வாழும்போது நாம் அனாதைகள் ஆவதில்லை; உதவியற்று நிர்க்கதியான வாழ்க்கை வாழ்வதில்லை. தேவனாகிய கர்த்தர் நமது வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லி நம்மை நடத்துவார்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்