தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்ட இரட்சிப்பு

ஆதவன் 🌞 795🌻 ஏப்ரல் 02, 2023 ஞாயிற்றுக்கிழமை






"புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டன." ( லுூக்கா 2 : 30-32 )

இயேசு கிறிஸ்துவைக் குறித்து சிமியோன் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். சிமியோனைக்குறித்து, "அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாகவும் இஸ்ரவேலுக்கு ஆறுதல்வரக் காத்திருந்தவனாகவும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார்"  (லூக்கா - 2: 25) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அவன் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டான்.

ஆவியானவரின் நிறைவால் அவன் பேசினான். இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இயேசு கிறிஸ்து யூதராக உலகத்தில்  பிறந்தது யூதர்களுக்கு மகிமை. மட்டுமல்ல, அவர்  தேவனையே அறிந்திராத பிற இனத்து மக்களுக்கு  ஒளியாக வந்தார்.  மேலும், அனைத்து உலக மக்களுக்கும் அவர்மூலமே இரட்சிப்பு. இத்தகைய மேன்மையான மெசியாவை என் கண்கள் கண்டுகொண்டன என்கின்றான் சிமியோன்.

அன்பானவர்களே, இன்று நமது கண்கள் இயேசுவை எப்படிக் கண்டுகொள்கின்றன? ஆவியானவர் சிமியோன் மூலம் வெளிப்படுத்தினபடி இயேசு கிறிஸ்துவைப் பாவ  இருளில் இருக்கும் நமக்கு ஒளியாகவும், இரட்சிப்பாகவும் பார்க்கின்றோமா?

இன்றைக்குப் பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்கள் இயேசுவை உலக ஆசீர்வாதங்களை அளிப்பவராகவே  அடையாளம் காட்டுகின்றனர்.  இத்தகைய ஊழியர்களுக்கு ஆவியானவரின் வெளிப்பாடு இல்லை என்றே பொருள். தீர்க்கதரிசனமாக சிமியோனுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மையினையே பல்வேறு தீர்க்கதரிசிகளும்   வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இத்தனைத் தெளிவாக இன்று ஆவியானவர் தனது அடியார்களைக் கொண்டு எழுதிவைத்த பின்னரும் உலக ஆசீர்வாதங்களுக்காகவே இயேசு கிறிஸ்து வந்தார் என்று போதிப்பது எவ்வளவு அறிவீனம்!1

சிமியோன் எட்டுநாள் குழந்தையான இயேசு கிறிஸ்துவிடம் இரட்சிப்பு இருப்பதைக் கண்டார். பிதாவின் சித்தப்படி அவர் பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது அந்த இரட்சிப்பு உலக மக்களுக்குக் கிடைத்தது.  கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவையும் அவர் உலகினில் வந்த நோக்கத்தையும் அறியாமல் வாழ்வது எத்தனை அறிவீனம்!!

சகல ஜனங்களுக்கும் ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், இரட்சிப்பு ஏற்கெனவே பிதாவாகிய தேவனால் மக்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டது. தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்ட இரட்சிப்பை நாம் புறக்கணித்தால் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்போதுதான் நாம் மீட்பு அனுபவத்தைப் பெற முடியும். அன்பானவர்களே,  தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணின தேவனது மீட்பினைச் சிமியோனைப்போல  கண்டுகொள்வோம்; பெற்று மகிழ்வோம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                 Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்