பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணி

ஆதவன் 🌞 811🌻 ஏப்ரல் 18, 2023 செவ்வாய்க்கிழமை


























"எஸ்தர்,  மொர்தெகாயிடத்தில்  வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்." ( எஸ்தர் 2 : 20 )

இன்றைய காலத்தில் சிலர் பெற்ற தாய்தகப்பனையே  பாரமாக எண்ணி வீட்டைவிட்டுத் துரத்துவதையும் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும் நாம் வாழ்வில்  பார்க்கின்றோம். இன்னும், நன்றி மறக்கும் மக்களையும் நாம் வாழ்வில் சந்திக்கின்றோம்.   தங்களது காரியம் முடிந்தபின்னர் மெதுவாகக் கைகழுவி விடுவார்கள். மேலும் சிலர் அந்தஸ்து கருதி தங்களைவிட பொருளாதாரத்திலும் பதவியிலும் தாழ்ந்தவர்களைத் தங்கள் உறவினர்கள் என்று கூறத் தயங்குவார்கள்.  

ஆனால், சாதாரண மொர்தெகாய் எனும் மனிதனால் வளர்க்கப்பட்ட எஸ்தர் குறித்து நாம் வேதத்தில் வித்தியாசமான செய்தியைப் பார்க்கின்றோம். உண்மையில் எஸ்தர் ஒரு அநாதை. மொர்தெகாய் எனும் யூதனின் சித்தப்பா மகள். "அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்." ( எஸ்தர் 2 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த எஸ்தர் இந்தியா முதல் எத்தியோப்பியா வரைக்குமுள்ள 127 நாடுகளை அரசாண்ட பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணியாகிவிட்டாள். அகாஸ்வேர் ராஜாவின் மனைவியாகிவிட்டதால் இப்போது அவள் இந்த சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி.  ஆனால் அவளை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் இப்போது ராஜாவின் அரண்மனை வாசல் காக்கும் காவல்காரன்!!  

இப்படி உயர்த்தப்பட்ட எஸ்தரைக் குறித்துதான் இன்றைய வசனம் கூறுகின்றது "எஸ்தர் மொர்தெகாயிடத்தில் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்" என்று. பெரிய சாம்ராஜ்யத்தின் ராணியானபின்பும் சாதாரண வாயில்காப்போனாகிய மொர்தெகாயை நன்றியோடு நினைவுகூர்ந்ததால்தான் அவனது சொல்கேட்டு நடந்தாள்.   

அன்பானவர்களே, இப்படி அவள் நடந்ததால் ஏற்பட்ட விளைவு நமக்குத் தெரியும். எஸ்தரைக்கொண்டு யூதர்களுக்கு மிகப்பெரிய மீட்பினை தேவன் ஏற்படுத்தினார். அவளால் யூதகுலம் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இன்றைய மனிதர்களைப்போல  எஸ்தர் நன்றி இல்லாமல் தன்னை வளர்த்த மொர்தெகாயை தவிர்த்து தனது பட்டத்து ராணி வாழ்க்கையையே பெரிதாக எண்ணியிருப்பாளேயானால் அவளது வாழ்வும் யூத குலமும்  அழிந்திருக்கும். 

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தான் ஜனாதிபதியானபின்பும் மறக்காமல் தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியரை நினைவுகூர்ந்து அவரை நேரடியாகச் சென்று பார்த்தது செய்தித் தாள்களில் வெளியாகி இருவரது மதிப்பையும் உயர்த்தியதை நாம் அறிவோம். 

வாழ்வில் எவ்வளவு பெரிய உயர்வு நமக்கு வந்தாலும் நாம் கடந்துவந்த பாதைகள், நமக்கு உதவியவர்களை மறக்காமலிருப்போம். ஏனெனில் எல்லா காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் அந்தஸ்து இவற்றின் வேர் நம்மை ஒருகாலத்தில் தாங்கிப்பிடித்த மக்கள்தான். அவர்களை மதிக்கும்போதுதான்  தேவ சமாதானம் நம்மை நிரப்பும். "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.......................................நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." ( கொலோசெயர் 3 : 15 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்