DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, April 22, 2023

எதைக் கேட்பது? எதைத் தேடுவது? ஏன் தட்டுவது?

ஆதவன் 🌞 818🌻 ஏப்ரல் 25, 2023 செவ்வாய்க்கிழமை



























"ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 3 )

இன்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய தெளிவும் நமது வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வுக்கு அவரது தேவையும் உதவியும் பற்றி கிறிஸ்தவர்கள் பலருக்கும் போதிய புரிதலில்லை.  அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாமல் நாம் எதனையுமே செய்யமுடியாது. ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கை வாழ முடியாது.

"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 ) எனத் தனது சீடர்களுக்கு இயேசு கூறினார். இன்றைய வசனம் கூறப்பட்டதன் பின்னணியினைப் பார்ப்போமானால் இது இன்னும் தெளிவாக நமக்குப் புரியும். 

"அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட பந்தி விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 1 ) அதாவது, உணவு பரிமாறும் வேளையில் தங்களது இனத்து விதவைப் பெண்களை எபிரேயர்கள் சரியாக நடத்தவில்லை என கிரேக்கர்கள் முறுமுறுத்தார்கள். எனவே பந்தி விசாரிப்பைச் சரியாகக் கவனிக்க ஒரு குழு அமைப்பது எனச் சீடர்கள் முடிவெடுக்கின்றனர்.    

"ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்." என்கின்றனர். அதாவது பந்தி விசாரணைச் செய்வது என்பது மிகச் சிறிதான ஒரு பணி. ஆனால் திருச்சபையில் அந்தப் பணியை ஒருவர் செய்வதற்கே பரிசுத்த ஆவியைப் பெற்றவராக இருக்கவேண்டும் எனச் சீடர்கள் முடிவெடுத்தார்கள்.  அப்படியானால் பரிசுத்த ஆவியானவர்  நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தேவையாக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இயேசு கிறிஸ்து கூறினார், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்று. எனவே அன்பானவர்களே, நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கவேண்டியது மிக மிகத் தேவையான காரியமாயிருக்கின்றது.   

வெறுமனே சில மதச் சடங்குகளை நாம் கடைபிடிப்பதால் நம்மிடம் பரிசுத்த ஆவியானவர் வந்துவிடுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆவியானவரைப் பெறவேண்டுமெனும் தாகம் நமக்கு வேண்டும். 

"நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்." ( லுூக்கா 11 : 9 ) என்று இயேசு கிறிஸ்து கூறியதைப் பலரும் உலக ஆசீர்வாதங்களுக்காகவே என எண்ணுகின்றனர்.  வசனங்களைத் துண்டு துண்டாக வாசிப்பதால் ஏற்படும் தவறு இது. இயேசு என்னச் சொல்ல வருகின்றார் என்பது தொடர்ந்து வாசித்தால்தான் புரியும். இந்த வார்த்தைகளை இயேசு சொல்லி முடிப்பதைப் பாருங்கள்:- "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா." ( லுூக்கா 11 : 13 )

தேவனிடம் பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது அவரை அறிந்துகொள்ளும்படி உங்கள் இதயங்களை அவர் திறந்திடுவார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: