DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, April 23, 2023

இந்த ஜெபம் தேவனுக்கு ஏற்ற ஜெபம்

ஆதவன் 🌞 819🌻 ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை






"என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்." ( சங்கீதம் 25 : 18 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தாவீது ராஜா கூறியது. இரண்டே வரிகளைக்கொண்டிருந்தாலும் இந்த   விண்ணப்பம் தாவீது ராஜாவின் மேலான ஆன்மீக அனுபவத்தைக் கூறுகின்றது. 

பொதுவாக சாதாரண மனிதர்கள் என்றால் "ஆண்டவரே என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து  அவற்றை நீக்கியருளும்" என்றுதான் மேற்படி ஜெபத்தை ஜெபித்திருப்பார்கள். ஆனால் தாவீது அப்படி ஜெபிக்கவில்லை. மாறாக,  ஆண்டவரே  என்  சிறுமையையும், துன்பத்தையும் பார்த்து என் பாவங்களையெல்லாம் எனக்கு மன்னித்தருளும் என்று ஜெபிக்கின்றார்.

செல்வங்கள், பதவி, அந்தஸ்து இவை அனைத்தையும்விட பாவங்கள் மன்னிக்கப்படுவதே தாவீதின் பார்வையில் முக்கியமானதாக இருந்தது. எனவே அவர் தனது துன்பங்களை நீக்கியருளும் என்று ஜெபிக்கவில்லை. 

இயேசு கிறிஸ்து கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று. தாவீது பழைய ஏற்பாட்டு பக்தனாக இருந்தாலும் இந்த தேவ கருத்தை அவர் அறிந்திருந்தார். ஆம், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத்தான் நாம் தேடவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் பாவங்கள் அகற்றப்படவேண்டும் என்று அவர் கருதினார். எனவேதான் இப்படி விண்ணப்பம் செய்கின்றார். 

அன்பானவர்களே, நமது ஜெபங்கள் எப்படி இருக்கின்றன என்று சிந்தித்துப்பார்ப்போம். நமது உலக ஆசைகளையும் உலகப் பிரச்சனைகளையும் முன்னிலைப்படுத்தி ஜெபிக்கின்றோமா இல்லை, முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் எனும் ஆவல் தாவீதைப்போல நமக்கு இருக்கின்றதா?  

உலகத்தில் நாம் சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை வாழலாம், நமக்குத் துன்பங்கள் இருக்கலாம், பிரச்சனைகள் இருக்கலாம் இவைகளை மாற்றும் என தேவனிடம் வேண்டுவதைவிட, ஆண்டவரே, எனக்கு இந்தத் துன்பங்களும் பிரச்சனைகளும் உள்ளன.  இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். இவைகளுக்கு ஈடாக எனது பாவங்களை மன்னியும் என வேண்டுவோமா? இந்த ஜெபம் தாவீதின் ஜெபத்தைப்போல தேவனுக்கு ஏற்ற ஜெபமாக இருக்கும்.

இதுவே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது; இப்படி நாம் வேண்டும்போது  தேவன் நமது மற்ற  தேவைகளைச்  சந்திப்பது மட்டுமல்ல அவைகளை நமக்குக் கூட்டித்  தந்தும்  ஆசீர்வதிப்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: