DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, March 31, 2023

"நான் பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்."

ஆதவன் 🌞 794🌻 ஏப்ரல் 01, 2023 சனிக்கிழமை











 ".....உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ( ஏசாயா 57 : 15 )

நமது தேவன் உலக அரசர்களைப்போல சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு மற்றவர்களை அடிமைகள்போல நடத்துபவரல்ல. 

மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பதனை தேவன் அறிவார். எனவே அவர்களுக்கு உதவிசெய்ய அவர் ஆர்வமுள்ளவராகவே இருக்கின்றார். ஆனால் தாழ்மையான இதயத்துடன் நொறுங்கிய உள்ளத்துடன் அவரை நோக்கிப் பார்ப்பவர்கள்தான் அவரைக் கண்டடையமுடியும். தேவன் பரிசுத்த ஸ்தலத்தில் மட்டும் வசிப்பவரல்ல, மாறாக, "நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்."   என்கின்றார். 

தேவன் வாழுமிடம்தான் பரலோகம். இந்தப்  பரலோக ராஜ்ஜியம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கே கிடைக்கும். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

இன்று உலகப் பதவிகளை அனுபவிப்பவர்கள் காட்டும் பந்தாவுக்கு அளவில்லை. பதவிகளே சிலருக்குப்  பெருமையினையும் ஏற்படுத்தி விடுகின்றது. "பதவிக்கேற்ற பெருமை வேண்டியதுதான்" என்று உலக மனிதர்கள் கூறுவார்கள். ஆனால், அது சரியல்ல. எந்தப் பதவியில் இருந்தாலும் மனத் தாழ்மையினை கடைபிடிக்கவே வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நாம் ஆராதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படித் தாழ்மையுள்ளவராகவே இருந்தார். தேவாதிதேவன் அனுபவிக்கும் பதவியைவிடவா உலகப் பதவிகள் உயர்ந்தவை ?

சர்வ லோகத்தையும் படைத்த பிதாவுக்கு நிகராக தான் இருந்தபோதும்  தன்னை அவர் மனிதனுக்கு நிகராகத் தாழ்த்தினார். 
"அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." ( பிலிப்பியர் 2 : 8 ) என்று வாசிக்கின்றோம். இத்தகைய தாழ் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தியவர் எப்படி அற்ப பெருமையுள்ளவர்களுக்கு உதவிசெய்ய முடியும்?

ஏன் இப்படிப் பணிந்த ஆவியுள்ளவர்களிடம் தேவன் வாழ விரும்புகின்றார் என்பதனையும் இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, "மகனே, மகளே கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்" என்று கூறி  அவர்களது ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும் தேவன் பணிந்த ஆவியுள்ளவர்களிடம் வசிக்கின்றார் என்று வசனம் கூறுகின்றது.   பெருமையுள்ளவர்கள் தேவனது இந்த அன்பின் குரலைக் கேட்கவும் முடியாது ஆறுதலடையவும் முடியாது.

அன்பானவர்களே, இந்த உலகத்தில் தேவன் நமக்குப் பெரிய பதவிகள் தந்திருக்கலாம், எந்தப் பதவியாக இருந்தாலும் மனத் தாழ்மையோடு நடந்துகொள்ள முயலுவோம். மற்றவர்களை அற்பமாக எண்ணாமல், அவர்களையும் சகமனிதர்களாக மதித்து அன்புசெய்து வாழ்வதே தேவன் தந்த பதவியை சரியாகப் பயன்படுத்துவதன் அடையாளம். 

"உயர் பதவியில் உள்ளவர்களோடும் சமூக அந்தஸ்துள்ள பெரும் பணக்காரர்களோடும் புகழ்பெற்றவர்களோடும் நான்  வாழ்கின்றேன்" என்று கூறாமல், "நான் உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் மட்டுமல்ல, நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: