வேதாகம முத்துக்கள் - மார்ச் 2023



                

                            - சகோ . எம் . ஜியோ பிரகாஷ் 

 ஆதவன் 🌞 763🌻 மார்ச் 01,  2023 புதன்கிழமை  

"உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 20 : 44 )

தேவன் நமது பாவங்களை நினைப்பாரானால் நம்மில் ஒருவருமே அவர்முன் நிற்க  முடியாது. ஏனெனில்  மனிதர்கள் நாம் அனைவருமே பாவம்செய்து தேவ மகிமையை இழந்தவர்கள்தான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் பாவங்கள் கழுவப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறுகின்றோம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,  இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" ( ரோமர் 3 : 23, 24 ) என்று குறிப்பிடுகின்றார். 

இன்றைய தியானத்துக்குரிய வசனமும்  இதனையே, "உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." என்று குறிப்பிடுகின்றது. அதாவது நமது பாவங்கள்மன்னிக்கப்படும்போதுதான் நாம் கர்த்தரை அறிய முடியும்.  

இந்த உலகத்தில் நமக்கு  ஒருவரது தவறோ கெட்ட குணமோ தெரிய வருமானால் அதனையே பிறரிடம் கூறிக்கொண்டிருப்போம். மட்டுமல்ல அந்த மனிதனைப் பார்க்கும்போது நாம் கேள்விப்பட்ட அவரது பாவ காரியமே நமக்கு நினைவில் வரும். ஆனால் நமது தேவன் பாவத்தை மன்னிக்கிறவர் மட்டுமல்ல அவற்றை மறந்துவிடுகின்றவர்.   நாம் மனம்திரும்பி அவரிடம் வந்தபின்பு மீண்டும் மீண்டும் அதனை நினைவுகூரமாட்டார். "நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்." ( எரேமியா 31 : 34 ) என்கின்றார்.

தேவன் நமது பாவங்களை மன்னிக்கும்போது, "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்குகின்றார். ( சங்கீதம் 103 : 12 ) நமது பாவங்களை, "முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுகின்றார்."( ஏசாயா 38 : 17 )

தேவன் நமது பாவங்களை மன்னிக்கும்போது நாம் அவரை அறிந்துகொள்கின்றோம். அவர் நமது பாவங்களை மறந்துவிடுகின்றார். ஆனால் பாவியாகிய நமக்கு நமது பழைய வாழ்க்கை நினைவில் இருக்கும். நமது பாவங்கள் நினைவில் இருக்கும். "ஐயோ,, நான் எவ்வளவு பெரிய பாவியாக இருந்திருக்கிறேன் என்று உணரும்போதும் இவ்வளவு பெரிய பாவியாகிய என்னை மன்னித்துத் தன்னை எனக்கு வெளிப்படுத்தியுள்ளாரே  என்று எண்ணும்போது அவரிடம் நமது அன்பு அதிகரிக்கும். அப்போது நாம் கர்த்தரையும் அவரது அன்பையும் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். 

நமது பாவங்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்குமானால் நாம் அவரை அறிய  முடியாது. எனவேதான் நாம் இந்த உலகத்தில் பாவ வாழ்க்கை வாழும் பலரும் தண்டனை அடையாமல் இருப்பதைப் பார்க்கின்றோம். நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டதுபோல அவர்களும் ஒருநாளில் கிறிஸ்துவை அறியலாம். 

"பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்". ( மத்தேயு 9 : 13 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

ஆதவன் 🌞 764🌻 மார்ச் 02,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது கிடைக்கும் மேலான ஆசீர்வாதத்தை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது, கர்த்தரே நம்மை நடத்துவார். நமது வாழ்க்கை தேவனால் நடத்தப்படுகின்ற  வாழ்க்கையாக இருக்குமானால் நாம் எதனைப்பற்றியும் கவலையோ நிம்மதியின்மையோ படமாட்டோம்.  ஆம், அவரே நமது வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாகி நமது எலும்புகளை வலிமையுள்ளவையாக்குவார். 

மிகக் கொடிய பாலைவனத்திலும் சில இடங்கள் செழிப்புள்ளதாக இருக்கும். அவைகளைப் பாலைவனச் சோலை என்பார்கள். அன்பானவர்களே, நாம் கர்த்தரைச் சார்ந்து வாழும்போது எத்தகைய கொடிய துன்பங்கள், வருத்தங்கள் நமக்கு வந்தாலும் பாலைவனச் சோலைபோல துன்பங்களுக்கிடையிலும் நமது ஆத்துமாவுக்கு  இனிய இளைப்பாறுதல் உண்டு.

இன்று அப்படி கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களைப்பார்த்துக்   கர்த்தர் கூறுகின்றார், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." என்று.

உலகத்தில் தேவனற்று வாழும் பெரிய செல்வந்தர்களை நாம் பார்க்கின்றோம். புகழும் பணமும் அதிகமுள்ள பல மனிதர்களை பார்க்கின்றோம். ஆனால் அவர்களது வாழ்க்கை இருளானதாக, நிம்மதியற்றதாக, மெய்யான செழிப்பு இல்லாததாக இருக்கக் காண்கின்றோம். சமாதானமற்ற வாழ்க்கைதான் பலருக்கு. எனவேதான் குடியிலும், இதர பாவச் செயல்களிலும் ஈடுபட்டு பலர் எந்த நிம்மதியுமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

கர்த்தருக்கு ஏற்புடையவன் அவருக்கேற்ற காரியங்களைச் சிந்திப்பான், அவரது வார்த்தைகளைத் தியானிப்பான். அப்படிக் கர்த்தரது  வார்த்தைகளை ஒருவன் இரவும் பகலும் தியானித்து வாழ்வானானால்,  "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 3 ) என்று வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவனால் அனுப்பப்பட்டவை. அந்த வார்த்தைகள் பொய்ச்சொல்லாது. அவற்றை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்வாக்கும்போது இன்றைய வசனம் கூறும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம். 

ஆதவன் 🌞 765🌻 மார்ச் 03,  2023 வெள்ளிக்கிழமை 

"ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்." ( எபிரெயர் 13 : 15 )


இன்றைய வசனத்தில்,  ஸ்தோத்திரம் செய்வதை உதடுகளின் கனி என்று கூறப்பட்டுள்ளது. நமது உதடுகளால் நாம் பல வேளைகளில் தேவையில்லாத காரியங்களை பேசிவிடுகின்றோம். சிலரது வாயில் எப்போதும் அடுத்தவரைக்குறித்து குறைகூறுவதும் சாபங்களும் புறப்பட்டுவரும். இவை உண்மையில் நம்மை தேவனைவிட்டுப் பிரித்துவிடுகின்றன.   ஆனால் நமது உதடுகள் தேவனைத் துதிக்கப் பழகிவிட்டால்  அது நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறும். 

சிலவேளைகளில் நாம் ஜெபிக்கமுடியாத அளவுக்குத் துன்பங்களும் பிரச்சனைகளும் நம்மை நெருங்கிவிடுவதுண்டு. அத்தகைய வேளைகளில் நாம் துதிக்கமட்டுமே முடியும். ஆனால் துன்பவேளையில் தேவனைத் துதிக்கும்  அத்தகைய துதி மிகுந்த வல்லமையுள்ளதாக இருக்கும். காரணம், இத்தகைய இக்கட்டிலும்  எனது பிள்ளை என்னை மறக்காமல் இருக்கின்றானே (ளே) என எண்ணுவதுதான்.  இத்தகைய நேரத்தில் தேவன் விரைந்து செயல்படுகின்றார். 

நமது கர்த்தருக்கு ஒரு பெயர், "துதிக்குத் தகுதியுள்ளவர்" என்பது. "ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்." ( 2 சாமுவேல் 22 : 4 ) என்று கூறப்பட்டுள்ளது. 

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் நடு ராத்திரியில் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 )

"கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர். எனவே அவரது படைப்புகளை அனைத்தும் அவரது செயலைத் துதிக்கும் என்று வசனம்  கூறுகின்றது.  "கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்." ( சங்கீதம் 145 : 10 )

அன்பானவர்களே, துன்பங்கள், மனச் சோர்வுகள் ஏற்படும்போது, ஜெபிக்கமுடியாத தருணங்கள் ஏற்படும்போது வேறு எதுவும் செய்யவேண்டாம், ஸ்தோத்திரம் சொன்னாலே போதும். கர்த்தர் மிகப்பெரிய விடுதலையினைத் தருவார். சங்கீதம் 136 துதியின்  சங்கீதமாகும். அதில் 23 ஆம் வசனம்  கூறுகின்றது, "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 23 ) 

ஆம், தாழ்வில் நம்மை நினைக்கின்ற அருமையான கர்த்தர் நமக்குண்டு. அவரையே துதிப்போம். மேலும் நமது ஜெபங்களில் ஸ்தோத்திரபலிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் இப்படியே ஜெபித்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 5 ) என்று.

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 'ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்" ( சங்கீதம் 50 : 23 ) என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.


ஆதவன் 🌞 766🌻 மார்ச் 04,  2023 சனிக்கிழமை 

"அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 13 )

திருச்சபையில் அப்போஸ்தல ஊழியம், தீர்க்கதரிசன ஊழியம், சுவிசேஷ ஊழியம், மேய்ப்பர் ஊழியம், போதக ஊழியம் எனும்  ஐந்துவகை ஊழியங்கள் உண்டு என்று இந்த வசனம் கூறுகின்றது. 

ஐந்துவகை ஊழியங்களாய் இருந்தாலும் இவை அனைத்தின் நோக்கமும் ஒன்றே.  ஆனால், இன்று அந்த நோக்கத்தைச் சரியாக    நிறைவேற்றுகின்றார்களோ இல்லையோ ஒவ்வொருவருக்கும் வீண் பெருமைகளுக்கு   மட்டும் குறைவில்லை. 

சரி இந்த ஐந்துவகை ஊழியங்களின் நோக்கம்தான் என்ன? அதனை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தைத் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். அதாவது, "நாம் குழந்தைகள்போல  பல்வேறு தந்திரமான போதகங்களால் அடிபட்டு அலையாமல் தலையாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் வளரவேண்டும் என்பதற்காகவே" என்கின்றார்.

"நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்." ( எபேசியர் 4 : 14, 15 )

எனவே இந்த ஐந்து வகை ஊழியமும் ஒரே நோக்கம் கொண்டவையே. இறையியல் கல்லூரியில் படித்த ஒருவர் இந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் உலக காரியங்களைப் போதிப்பவராக, சமூக மேம்பாடு எனக் கூறிக்கொண்டு பிசாசின் வலையில் வீழ்ந்து கிடக்கலாம்.  சமூக மேம்பாட்டுக்காக ஒருவன் இறையியல் படிக்கத் தேவையில்லை.  அதேசமயம் உண்மையாய் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் ருசித்து அறிந்தவர் கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவேற்றுபவராகஇருக்கக்கூடும்.  

மேலும், இந்த ஐந்து  வகை ஊழியங்களின்  நோக்கமாகிய "தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி" என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அதாவது, கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலும் வளர வேண்டும்.எல்லாவிதத்திலும் கிறிஸ்துவைப்போலாகவேண்டும். இந்த ஊழியங்களைச் செய்பவர்கள் இதனையே மனதில் கொண்டு செயலாற்றவேண்டும். 

அன்பானவர்களே, ஊழியர்களோ ஊழியங்களோ உயர் பதவிகளோ ஒருவரை மகிமைப்படுத்தாது. அது உலக மக்கள்முன் மதிப்புமிக்கதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்து மனிதர்கள் பார்ப்பதுபோல பார்ப்பதில்லை. ஒருவர் மக்களுக்கு எப்படிக் கிறிஸ்துவை அறிவிக்கின்றார், எப்படி கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் வளர்ச்சியடைய உதவுகின்றார் என்பதையே அவர் பார்க்கின்றார். அதற்கு இந்த ஐந்து வகை ஊழியம் செய்பவர்களும் கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆனால் இன்று பெரும்பாலும் இந்த ஊழியங்களைச் செய்பவர்கள் அப்படி இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். 

கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யும் இந்த ஊழியர்கள் கிறிஸ்துவையும் சத்தியத்தையும்  அறிந்திடவேண்டி ஜெபிக்கவேண்டியது விசுவாசிகளின் கடமையாக இருக்கின்றது. காரணம்,  இன்று இந்த ஊழியர்களைவிட பல விசுவாசிகள் கிறிஸ்துவை அதிகம் அறிந்தவர்கள்; கிறிஸ்துவோடு அதிக நெருக்கமாக உள்ளவர்கள். ஊழியர்களுக்காக ஜெபிப்போம். 

ஆதவன் 🌞 767🌻 மார்ச் 05,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 ) 

அப்போஸ்தலரான பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான ஒரு குணத்தை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் கூறுகின்றார். 

அதாவது நம்மிடம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையினைக்குறித்து யாராவது விளக்கம் கேட்கும்போது, அல்லது கிறிஸ்துவைக்குறித்து தங்களது சந்தேகத்தைக் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்ற பதிலைக் கூறும்படி நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அப்படி நாம் பதில் கூறும்போது அமைதியோடும் வணக்கத்தோடும்; அதாவது நம்மிடம் கேட்பவர்களை மதித்து அவர்களுக்குப் பதில் கூறவேண்டும். 

இப்படி அவர்களுக்கு நாம் கூறும் பதில் அவர்களுக்கு உள்ளத்தில் செயல்புரியவேண்டுமானால் முதலாவது நாம் நமது இருதயத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நமது இருதயத்தில் கிறிஸ்து குடியிருக்கவேண்டும்.   அதனையே இன்றைய வசனத்தின் துவக்கமாக பேதுரு,   "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்." என்று கூறுகின்றார். 

மத வெறியுடன் அல்லது நமது நம்பிக்கையே உயர்ந்தது எனும் பெருமையோடு அல்லது நமது வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமல் இருக்கும்போது நாம் பிறருக்கு கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. அத்தகைய சுவிசேஷ அறிவிப்பு அரசியல் கட்சித் தலைவர்களது பேச்சுபோலவே இருக்கும். 

இன்று சிலர் வேதாகமத்தை முழுவதுமாக இதனை நாட்களில் வாசித்துமுடித்துவிட்டேன் என்றும், இன்றுமுதல் ஆறாவது முறையாக வேதாகமத்தை வாசிக்கத் துவங்குகிறேன் என்றும்  முகநூலிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுகின்றார்கள். இதனை நாம் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது இத்தனை முறை படித்தும் இவர்களுக்கு இந்தக் காரியத்தை தேவனுக்கு மட்டுமே தெரியும்படி வைத்துக்கொள்ளவேண்டுமென்றும், இது முகநூலில் பதிவிட்டு பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல எனும் அடிப்படைகூட புரியவில்லையே!!. பின் இவர்கள் எத்தனைமுறை வேதாகமதைப்  படித்துதான் என்ன பயன்.?

இதுபோல சிலர் தாங்கள் பிறருக்குச் செய்யும் தர்ம காரியங்களைப் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். உனது வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியாமலிருக்கட்டும் என்றல்லவா கிறிஸ்து கூறினார்?

அன்பானவர்களே, நமது ஜெபம், வேத வாசிப்பு இவை அனைத்துமே அந்தரங்கமாக இருக்கவேண்டியவை. அப்படி நாம் இருக்கும்போதே நமது இருதயம் பரிசுத்தமடையும். அப்படிப்  பரிசுத்தமடையும்போது மட்டுமே நாம் பிறருக்குச் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் கிறிஸ்துவைக்குறித்து விளக்கிக்கூற முடியும். இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாகவே இருப்போம். அதுவே ஒரு வியாதியாகிவிடும்.

தேவனோடு நமது தனிப்பட்ட உறவை மேம்படுத்துவோம். அதற்கு நமது தனிப்பட்ட ஜெபம், வேத வாசிப்பு, தர்ம காரியங்கள், காணிக்கை கொடுத்தல் இவற்றை அந்தரங்கமாக நமக்கும் தேவனுக்கும் மட்டும் தெரியும்படி காத்துக்கொள்வோம். இப்படிக் காத்துக்கொண்டு நமது விசுவாசத்தைக்குறித்து விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில்கூற நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க முயலுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை பலருக்கும் அறிவிக்கமுடியும்; பிறரும் அதனை  ஏற்றுக்கொள்வார்கள்.

ஆதவன் 🌞 768🌻 மார்ச் 06,  2023 திங்கள்கிழமை 

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

தேவன்  மனிதரை எப்படிப் பார்க்கின்றார் என்பதைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் நம்மை உயிருள்ளவர்கள் என எண்ணிக்கொண்டாலும் தேவனது பார்வையில் மரித்தவர்களாக இருக்கக்கூடும். அதாவது கிறிஸ்து இல்லாத வாழ்க்கை செத்த வாழ்க்கை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஒருவர் பெயரளவில் கிறிஸ்தவராக இருக்கலாம். கிறிஸ்தவ ஆலய காரியங்களிலும், பல்வேறு ஊழியங்களிலும் ஈடுபட்டிருக்கலாம். நற்செய்தி அறிவிக்கிறேன் என்று கூறிக்கொண்டு வேதாகமத்தைச் சுமந்துகொண்டு ஊர் ஊராகச் சுற்றி வரலாம், கன்வென்சன் கூட்டங்களில் அழகாகப் பிரசங்கிக்கலாம்; ஆனால் அவரிடம் கிறிஸ்துவின் குணங்கள் இல்லையானால் அவர் கிறிஸ்து இல்லாதவர். ஜீவனில்லாதவர்.    

அதாவது எந்தச் செயலையும் தேவனுக்கு ஏற்றபடிச் செய்யவேண்டுமானால், திராட்சைச் செடியில் இணைக்கப் பட்டக் கொடிபோல கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்படவேண்டியது அவசியம். இப்படி இணையாமலும் சில பல காரியங்கள் செய்யலாம். அப்படிச் செய்வது சுய விளம்பரத்துக்கும் லாபத்துக்குமாக இருக்குமேயல்லாமல் கிறிஸ்துவுக்கு ஏற்புடையதாகாது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 )

"நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" என்று இயேசு கிறிஸ்து மேற்படி வசனத்தில்  கூறுகின்றார். அதாவது, மரமானது கனி கொடுக்கவேண்டுமானால் அதற்கு உயிர் இருக்கவேண்டும். அந்த உயிர் கிறிஸ்துவில் இருக்கின்றது. அப்படி உயிருள்ளவனே கனி கொடுப்பான்; கனிகொடுப்பவனே கிறிஸ்தவன்; கிறிஸ்துவின் சீடன். 

இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவன் ஓன்று உள்ளது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரோடு இணைக்கப்பட்டு வாழும்போது மட்டுமே நமக்கு நித்திய ஜீவன் உண்டு. ஆம், "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான்  2 : 25 )

அப்படிக் கிறிஸ்துவோடு  இணைக்கப்பட்ட வாழ்வு வாழ்பவன் இந்த உலகில் மரித்தாலும், அல்லது மரிப்பதற்கொத்த தாழ்ந்த வாழ்வு வாழ்ந்தாலும் தேவனுக்குள் பிழைத்திருப்பான்.  "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" ( யோவான் 11 : 25 ) என்று கிறிஸ்து கூறியிருக்கின்றாரே?

அன்பானவர்களே, ஆலயங்களுக்குச் செல்வது, ஊழியங்கள் செய்வது நல்லதுதான்; ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படவேண்டியது அவசியம். "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." என்று வசனம்கூறுவதற்கேற்ப குமாரனாகிய கிறிஸ்து நமக்கு உடையவராகவேண்டும். அப்படி ஆனால் மட்டுமே நமது செயல்களுக்கு மதிப்பும் அங்கீகாரமும் தேவனிடம்  உண்டு. 

அவரோடு ஒப்புரவாகி புதிய மனிதனாகும்போது மட்டுமே நாம் குமாரனாகிய அவரோடு இணைக்கப்படுகின்றோம்; அப்போது மட்டுமே நாம் ஜீவனுள்ளவர்கள் ஆக மாறி நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆக முடியும். நமது பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவோடு ஒப்புரவாகி அவரோடு இணைக்கப்பட முயலுவோம். அப்படிக் குமாரனாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது மட்டுமே நாம் ஜீவனுள்ளவர்களாகின்றோம்.


ஆதவன் 🌞 769🌻 மார்ச் 07,  2023 செவ்வாய்க்கிழமை 

"அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே." ( நீதிமொழிகள் 24 : 29 )

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு (மத்தேயு 5:39) என்று போதித்தது மட்டுமின்றி அதனைச் செயலிலும் காட்டியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதாவது பழி வாங்குதல் கூடாது என்பதே வேதம் நமக்குக் கற்றுத்தரும் பாடம். 

இன்று உலகில் மனிதர்கள் பிறர் தங்களுக்கு எதிராகச் செய்யும் செயலை மன்னிப்பது என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. தினசரி பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தால் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்தச் செயல்பாடுகளில் ஈடுபடும் பலர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றனர்.  

"பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்....." ( ரோமர் 12 : 19 )

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." ( எபேசியர் 4 : 32 )

பழிவாங்குதல் பிசாசின் குணம்; மாறாக மன்னித்து மறப்பது தெய்வீக குணம். எதிரியை மன்னித்து அவனுக்கு நாம் நன்மை செய்யும்போது அதுவே அவனுக்குத் தண்டனையாகின்றது. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்." ( ரோமர் 12 : 20 ) என்று கூறுகின்றார். 

இந்த உலக அரசியல்வாதிகளைப் பார்த்தாலே பல உண்மைகள் நமக்குப் புரியும். மன்னிக்கும் குணமின்றி பழிவாங்கும் நடவடிக்கைகளிலேயே காலத்தைக் கழித்த அரசியல் தலைவர்கள் தடமிழந்து போன வரலாறுகள் பல உண்டு. அதேநேரம் அமைதியாக நேர்மையாக நடந்து எதிரிகளுக்கும் பதவிகள் கொடுத்து நிலைத்த பெயர் பெற்றவர்களும் உண்டு.

சாதாரண உலகத் தலைவர்களே இப்படி இருக்கும்போது கிறிஸ்துவை பிரதிபலிக்க அழைக்கப்பட்ட நாம் எவ்வளவு சிறப்பாக இந்தக் குணத்தைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்?

நாம் நம்மையே சோதித்து நமது தவறுகளை எண்ணிப் பார்ப்போம். உலக ஆசீர்வாதங்களுக்கே ஜெபிக்கும் நாம் எதிரிகளை மன்னிக்கும் மேலான குணம் நமக்கு கிடைக்கவேண்டி ஜெபிப்போம். இத்தகைய ஜெபங்களே  தேவனது பார்வையில் மேலான ஜெபங்கள். 


ஆதவன் 🌞 770🌻 மார்ச் 08,  2023 புதன்கிழமை 

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாயிருக்கிறது. அன்று எகிப்திலிருந்து கானானை நோக்கி இஸ்ரவேலர் புறப்பட்டபோது  தேவன் அக்கினி ஸ்தம்பத்திலும் மேக ஸ்தம்பத்திலியுமிருந்து அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் மக்கள் தனது வழிநடத்துதலை விட்டுத் திரும்பி மீண்டும் எகிப்துக்குச் சென்று பழையபடி அடிமையாகாமலிருக்கவேண்டும் என்று கருதி  எகிப்துக்குச் செல்லவேண்டாம் என்று பலமுறை தேவன் கட்டளையிட்டார். இன்று எகிப்து என்பது நாம் கிறிஸ்துவுடன் ஒப்புரவாகுவதற்கு முன்வாழ்ந்த  பாவ வாழ்கையினைக் குறிக்கின்றது.  அந்த எகிப்தைவிட்டு  வெளி வந்தால்தான் ஆவியானவரின் வழிநடத்துதல் தொடரும். 

இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு நாம் பரம கானானை நோக்கிப் பயணிக்கின்றோம். பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வாழும் நமக்குத் துணையாகப் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார். ஆம், பழைய எகிப்து வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பரம கானானை நோக்கிப் பயணிக்கும் நம்முடன் கிறிஸ்து உடன்படிக்கை  பண்ணின வார்த்தையின்படியே, ஆவியானவரும்  நம் நடுவில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள் என்று இன்றைய தியான வசனம் நம்மைத் திடப்படுத்துகின்றது. எனவே நாம் பழைய எகிப்து எனும் பாவ வாழ்கைக்குச் சென்றுவிடக்கூடாது. 

நம்மைச் சரியான வழியில்  நடத்திடப்  பரிசுத்த ஆவியானவரை இயேசு கிறிஸ்து வாக்களித்து இன்று அளித்துள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். " ( யோவான் 16 : 13 ) என்று கூறினாரே?

இன்று பரிசுத்தமாய் வாழ முடியவில்லை என எண்ணம் உங்களுக்குள் ஏற்படுகின்றதா? அப்படியானால் நிச்சயமாக ஆவியானவர் அதற்கு உதவுவார். ஆம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறியுள்ளார். 

மேலும், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்."  ( யோவான் 16 : 13 ) என்றும் கூறியுள்ளார். 

எனவே அன்பானவர்களே, நம்மால் பாவத்தை மேற்கொண்டு மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ முடியும். அதற்கு நாம் அன்றாட ஆலய வழிபாடுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவோடு நமது உறவை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்." என்றபடி ஆவியானவர் நம்முடன் இருப்பார். 

"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." ( மத்தேயு 28 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.


ஆதவன் 🌞 771🌻 மார்ச் 09,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது."( சங்கீதம் 33 : 12 )

இன்றைய வசனம் இரண்டு வித மக்களை பாக்கியமுள்ளவர்களாகக் குறிப்பிடுகின்றது. . 

1. கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள் 

2. கர்த்தர் தனக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்.

கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்  என்பது வெறும் பெயரளவில் அவரை வழிபடுபவர்களை அல்ல; மாறாக, கர்த்தரைத்  தனது  சொந்த தாயைப்போலும் தகப்பனைப் போலும் சொந்த சகோதரனாகவும் சகோதரியாகவும்  தெரிந்துகொண்டு அத்தகைய உறவில் கர்த்தரோடு வாழ்பவர்கள். அப்படி வாழ்பவர்களை கர்த்தரும் தனக்குச் சொந்தமாக அங்கீகரிப்பார்.  

கர்த்தர் தெரிந்துகொள்வது என்பது ஒரு அரசாங்கம் ஒருவரை வெளிநாட்டிற்கு தனது தூதுவராகத் (Ambassador) தேர்வு செய்கின்றது போல தெரிந்துகொள்வது.  இப்படி தனது தூதுவரை தேர்வு செய்து பிற நாடுளில் பதவியில் அமர்த்துகின்றது உலக அரசாங்கம். இப்படித் தேர்வு செய்யப்படும் நபருக்கு அந்த நாட்டில் உள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே செய்யும். பல சலுகைகளும் வழங்கும். ஆனால் அந்த நபர் அரசாங்கத்துக்கு விசுவாசமுள்ளவராக, உண்மையுள்ளவராக இருக்கவேண்டியது அவசியம். இல்லையானால் சட்டப்படி அவர் தண்டிக்கப்படுவர்.

இதுபோலவே தனது பிரதிநிதிகளாகத் தேவன் சில மக்களைத் தெரிந்து கொள்கின்றார். அப்போஸ்தலரான பவுலைத் தேவன் இப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தெரிந்துகொண்டார். இஸ்ரவேல் மக்களையும் தேவன் இப்படியே தெரிந்துகொண்டார். உலகினில் பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைத் தனது தூதுவர்களாகக் குறிப்பாகத் தேர்வு செய்தார். அது உண்மையிலேயே யூதர்களுக்கு ஒரு மேன்மையான காரியம்தான். அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே." ( ரோமர் 3 : 2 ) என்கின்றார்.

அன்பானவர்களே, இன்றைய உலகினில் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்டு தேவனைத் தெரிந்துகொண்டவர்களையும்  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் யூதர்கள் என்று வேதம் குறிப்பிடுகின்றது (ரோமர் -2:28,29). ஆம், நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள். எனவே நாம் தான் பாக்கியமுள்ளவர்கள்.

அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கின்றார். 

இப்படி நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், "அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்" என்று இயேசு கிறிஸ்து கூறியதையும்  நாம் மறந்துவிடக்கூடாது. தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்கள் தேவனது வார்தைகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோது தேவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். பிற ராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இதுவே இன்றைய ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கும் பொருந்தும்.

எனவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டாலும் நாம் தேவனைத் தெரிந்துகொண்டாலும் அவருக்கேற்றபடித் தொடர்ந்து வாழவேண்டும். விலையேறப்பெற்ற இரட்சிப்பை நமக்குத் தந்து நம்மை  அலங்கரித்த தேவன் அதனை நாம் காத்துக்கொள்ளத் தவறினால் கடுமையாக நம்மைத் தண்டிப்பார் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் மற்றவர்களைவிட அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் கவனமுடன் காத்துக்கொள்வோம். தேவன் நமக்கு தகப்பனாக இருந்தாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கின்றார் என்ற உண்மையினை நாம் மறந்துவிடாமல் கவனமுடன் பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.



ஆதவன் 🌞 772🌻 மார்ச் 10,  2023 வெள்ளிக்கிழமை 

"அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." ( 1 பேதுரு 1 : 8, 9 )

இன்றைய தியான வசனத்தின் இறுதியில், விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு எனும் வார்த்தைகள் வருகின்றன. அதாவது, இரட்சிப்பு ஏற்பட முதலாவது விசுவாசம் வேண்டும் என்பது இதன்மூலம் தெரிகின்றது. விசுவாசம் என்பது நாம் காணாததை நம்புவது. அதில் உறுதியாக இருப்பது. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். 

நாம் காணாமல் விசுவாசத்தினாலே இரட்சிப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் கண்டால்தான் நம்புவேன் என்று கூறிக்கொண்டிருக்கமுடியாது. காணக்கூடியதை நம்புவது பெரிதல்ல. "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டியதென்ன?" ( ரோமர் 8 : 24 )

பனிப் பகுதிகளில் பனிக்கட்டியினால் பாலம்போல நீர் உறைந்திருக்கும். அதன் அடியில் நீரானது ஓடிக்கொண்டிருக்கும். நாம் பனிப்பாலத்தில் நடக்கலாம். இதனை நாம் எல்லோரும் பார்த்ததில்லை. ஆனால் அதனைப் பார்த்த மனிதர்கள் நம்மிடம் கூறும்போது அவற்றை நம்புகின்றோம். அதுபோலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் கண்டதில்லை. அவர் செய்த அற்புதங்களைப் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு இருந்து அவற்றைப் பார்த்து எழுதிவைத்துள்ள வேதாகமச் செய்திகளைக் கேட்டு; பார்த்து அவரை  நாம் நம்பும்போது இரட்சிக்கப்படுகின்றோம்.

இதனையே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய தியான வசனத்தில், "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." என்று கூறுகின்றார். 

நமது அன்பு ஆண்டவரும் அப்போஸ்தலனாகிய தோமாவிடம், "தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்." ( யோவான் 20 : 29 ) ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி பார்ப்போமானால் இன்று அவரைக் காணாமலிருந்தும் விசுவாசிக்கும் நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள்தான். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும்கூட   கிறிஸ்துவிடம் முழு விசுவாசம் இல்லை. ஊழியம் செய்யும் பலரும்கூட பிழைப்புக்கான ஒரு தொழிலாக இதனைச் செய்கின்றார்களே  தவிர கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து; அவரை அறிந்து செய்யவில்லை.  உண்மையாய்க் கிறிஸ்துவிடம் விசுவாசம்கொண்டு அவரை அறிந்துகொள்ளும்போதே நாம் இன்றைய வசனத்தில் பேதுரு கூறுவதுபோல  விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைய முடியும்; மட்டுமல்ல, அப்போது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்கள் நமது வாழ்க்கையில் செயல்பட்டு மாபெரும் மாற்றத்தை நமது வாழ்வில் கொண்டுவரும். 


ஆதவன் 🌞 773🌻 மார்ச் 11,  2023 சனிக்கிழமை 

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 )

நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு. நம்மை அவர் இரட்சித்ததற்கும் ஒரு நோக்கமுண்டு. கிறிஸ்து எல்லோருக்கும் தன்னை வெளிப்படுத்தவில்லை. குறிப்பிட்டச் சிலருக்கே வெளிப்படுத்தினார். அப்படி கிறிஸ்து எவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி அழைத்தாரோ அவர்கள் அந்தப்பணியைத் தொய்வில்லாமல் செய்யவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவோடு நாம் தொடர்புகொண்டு வாழும்போது கிறிஸ்து நம்மைகுறித்த நோக்கத்தை நமக்கு வெளிப்படுத்துவார். கிறிஸ்துவின் சுவிசேஷப்பணியினைச் செய்ய நாம் அழைக்கப்பட்டிருந்தோமானால் அந்தப் பணியினை நாம் மனப்பூர்வமாகச் செய்யவேண்டும். "கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ" என  அப்போஸ்தலரான பவுல் அடிகள் தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததைக் கூறுகின்றார். ஆம், கிறிஸ்து ஒவ்வொருவரையும் இப்படியே ஒவ்வொரு பணியினைச்  செய்யுமாறு பிடிக்கின்றார்.  பவுலடிகளைப் பிடித்தபோது  தேவன் கூறினார்:-    

"அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )

அதாவது மெய்யான ஒளியான  தேவனை அறியாமல் இருளில் வாழும் மக்களை அந்த ஒளியினிடத்திற்குக் கொண்டுவரவும், சாத்தானின் அதிகாரத்தைவிட்டு மக்களைத்  தேவனிடம் திரும்புவதற்கும், குருடாகிப்போன மக்களது மனக்கண்களைத் திறப்பதற்க்கும் தேவன் பவுலைத் தெரிந்துகொண்டார்.  இது பவுல் அடிகளுக்கு மட்டுமல்ல, தேவனது வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணி இதுதான்.  இதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். 

இந்தப் பணியை நான் செய்து முடித்துவிட்டேன் , அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் என்கின்றார் பவுல் அடிகள்.

அன்பானவர்களே, தேவன் நம்மை எந்தப் பணிக்கு அழைத்திருந்தாலும் அதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். பவுல் அடிகள் கூறுவதுபோல நமக்கு நாம் செய்த பணியில் நிறைவு ஏற்படக்கூடாது. இன்னும்.....இன்னும்.....இன்னும்.....என எண்ணவேண்டும். அப்படி எண்ணி நாம் செயல்படும்போது நமது பணி சிறப்பாக அமையும்.  

இதனையே, "நான் அடைந்தாயிற்று என எண்ணாமல் அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பணியாக இருந்தாலும் இதே மன நிலையுடன் தொடர்வோம். நல்ல உலக வேலைகளைத் தேவன் தந்திருந்தால் அந்த வேலையினை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம். 


ஆதவன் 🌞 774🌻 மார்ச் 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 )

தேவனைப் பற்றி  அறிதல்; தேவனை அறிதல்  இவை இரண்டும் வெவ்வேறானவை என்று ஏற்கெனவே பல முறை தினசரி தியானங்களில் விளக்கியுளேன். தேவனைப்பற்றி நாம் வேதாகத்தை வாசிப்பதன் மூலமும், மறைக்கல்வி வகுப்பகள்மூலமும் அல்லது பிரசங்கங்கள் கேட்பதன்மூலமும் அறிந்துகொள்ளலாம். ஆனால் தேவனை இப்படிப் படித்து  அறிய முடியாது. தேவனை அறிதல் என்பது வேறான மேலான அனுபவம். அது கடவுளோடு தனிப்பட்ட உறவில் வளருவது. அதனை  மத வழிபாடுகள்மூலமும் மதச் சடங்குகளைக் கடைபிடிப்பதன்மூலமும் பெறமுடியாது.  

கண் தெரியாத முருடர்களுக்கும்  பல்வேறு நிறங்களின் பெயர்கள் தெரியும் ஆனால் அந்த நிறங்கள் எப்படி இருக்கும் எனும் நிறங்களின் மகிமை அவர்களுக்குத்  தெரியாது. கண்பார்வை உள்ளவர்களே நிறங்களைப் பகுத்து அறிய முடியும். இதுபோலவே இறையியல் கல்விகளோ, வேத பண்டிதர்கள் ஆவதோ   தர்க்க சாஸ்திரங்களோ கடவுளை அறிய உதவாது. ஆனால் மனிதர்கள் இந்த முறையில் கடவுளை அறிய முயன்று பைத்தியமாகியுள்ளனர் என்கின்றார் பவுல் அடிகள். எனவேதான், "ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனை அறிதல் என்பது மேலான ஆவிக்குரிய அனுபவம். அது தேவனால் வழிநடத்தப்படும் அனுபவம். தகப்பன் மகன்/மகள் உறவில் தேவனது உடனிருப்பை அறியும் அனுபவம். 

ஆனால் இன்று இதனை விளக்கிக் கூறி இரட்சிப்பு அனுபவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுபவர்களை பைத்தியக்காரர்கள் என்று எண்ணுகின்றனர்  உலகத்து ஞானிகளும், இறையியல் கல்லூரி படிப்பாளிகளும். ஆனால் இத்தகைய ஆவிக்குரிய பிரசங்கங்கள் மூலமே விசுவாசிகளை தேவன் இரட்சிக்கின்றார். 

"எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

அன்பானவர்களே, வேதாகமக் கல்லூரி படிப்புகள் தேவனைப்பற்றி மட்டுமே அறிய உதவுகின்றன; ஆனால் தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் உறவுகளே தேவனை அறிய உதவும். அதுவே நாம் இரட்சிப்படைந்திட வழிகாட்டும். 

வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு வாசித்து தியானிக்கும்போது மட்டுமே நாம் தேவனை அறியும் அறிவில் வளரமுடியும். இறையியல் கல்லூரி படிப்புபடித்த  மேதைகளது பிரசங்கங்களைக் கேட்பதைவிட ஆவிக்குரிய அனுபவம் பெற்ற தேவ மனிதர்களது பிரசங்கங்களைக் கேட்கும்போது  மட்டுமே தேவனைப்பற்றி அதிகம் அறிய முடியும். 

உலக ஞானி எங்கே? உலக அறிவுபெற்ற வேதபாரகன் எங்கே? தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?. உலக ஞானத்தையல்ல, ஆவிக்குரிய ஞானத்தையே விரும்புவோம்.


ஆதவன் 🌞 775🌻 மார்ச் 13,  2023 திங்கள்கிழமை 

"கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."( 1 கொரிந்தியர் 15 : 58 )

பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் பிறர் அவர்களுக்குச் செய்யும் உதவிகளை உடனேயே மறந்து விடுவார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை நினைவுகூர்ந்து வாழ்பவர்கள் வெகுசிலர்தான். ஆனால் நமது கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல; அவற்றை அவர் மறந்துவிடுவதுமில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்காக என்று நாம் செய்யும் செயல்கள் வீணானவை அல்ல என்பதால் உறுதியுடன் அப்படி கர்த்தருக்காக என்று செய்யும் செயல்களைச் செய்து அவற்றில் பெருகவேண்டும் என்கின்றார் பவுல் அடிகள்.

கர்த்தருக்காக என்று ஆர்வமுடன்  நாம் செய்யும் தர்ம காரியங்கள், உதவிகள், அவருக்கென்று செய்யும் ஊழியங்கள் இவை விளம்பர நோக்கத்திற்காக அல்லாமல், உண்மையான அன்புடன் செய்யப்படுமேயானால் கர்த்தர் அவற்றை நினைவுகூர்ந்து நமக்குப் பதில் செய்வார். மேலும், அப்படிக் கர்த்தர் பதில் செய்வார் என்று எண்ணிக்கூட நாம் செய்யக்கூடாது. மாறாக கர்த்தருக்கென்று செய்வது இயற்கையாக நம்மில் உருவாகவேண்டும். 

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் காற்றை சுவாசிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது.  ஆனால் நாம் அப்படி நினைத்துக்கொண்டு சுவாசிப்பதில்லை. மாறாக, நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோலவே நாம் கர்த்தருக்கென்று நற்செயல்களை இயற்கையாகவே செய்யவேண்டியது அவசியம். அத்தகைய நமது செயல்களை கர்த்தரும் மறக்கமாட்டார். 

அப்படி நாம் கர்த்தரது பெயருக்காகச்  செய்யும் அன்புள்ள செயல்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகின்றது. "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 ) நீதி, நேர்மையற்று வாழும் சில உலக மக்களைப்போல அநீதியுள்ளவரல்ல நமது தேவன். 

சிலர் தங்கள் செய்த நல்லச்  செயல்களை விளம்பரப்படுத்திச்  சொல்லிச் சொல்லி வாழ்வார்கள். வேறு சிலரோ, "நான் எவ்வளவோ நல்லது செய்தேன் எனக்கு ஆண்டவர் ஒண்ணுமே செய்யமாட்டேன் என்கிறார்" எனப் புலம்புவார்கள். அன்பானவர்களே, உண்மையும் உத்தமத்தோடும் செய்த எந்த செயலையும் தேவன் மறக்கமாட்டார். தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. மட்டுமல்ல கர்த்தர் எவருக்கும் கடன்பட்டவரல்ல. இந்த உண்மை நமக்குள் உறுதியாக இருக்குமானால் எந்த எதிர்பார்ப்புமின்றி கர்த்தருக்கென்று நற்செயல்கள் செய்பவர்களாக இருப்போம்.

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற முயற்சிகள் வீணானவையல்ல  என்று  அறிந்து, நாம்  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருக்கென்று செய்யும் செயல்களில் எப்போதும் பெருகுகிறவர்களாக  இருக்கவேண்டியது அவசியம் என்று கூறும் பவுலடிகளின் வார்த்தைகளின்படி வாழ முயற்சிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.


ஆதவன் 🌞 776🌻 மார்ச் 14,  2023 செவ்வாய்க்கிழமை 

"நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 11 )

பொதுவாக இந்த உலகத்தில் மனிதர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என  வாழ்கின்றனர். தொலைபேசியில் பேசும்போது அன்பொழுகப் பேசுவார்கள். ஆனால் அவர்களது இடத்தில சென்று தங்கும்போது அவர்களது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும்.  

நாம் எவ்வளவுதான் நண்பர்களாக இருந்தாலும் தொலைவில் இருக்கும்வரைதான் நமது உறவுகள் சிறப்பாக இருக்கும். ஒரே அறையில் சேர்ந்து தங்கும்போது பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், தொலைவிலிருந்து பேசும்போது நட்புக்காக நமது சில குணங்களை மற்றவர்களிடம் மறைத்துவிடுகின்றோம். சேர்ந்து வாழும்போதுதான் நமது குறைகள் நம்மை அறியாமலேயே வெளிப்படும்.  "ஐயோ, இவரை நாம் எப்படியெல்லாமோ நினைத்தோமே, இவர் இப்படிப்பட்டவராக அல்லவா இருக்கின்றார்" என எண்ணுவோம். 
\
ஆனால் பவுல் அடிகள் தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று கூறுகின்றார். எனவேதான், "நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம்" என்கின்றார். 

பவுலின் நிரூபங்களும் போதனைகளும் கடினமானவை; ஆனால் வல்லமையுள்ளவை. பவுலின்  உடல் பலவீனமான உடல். அவரது எழுத்தாற்றலோடு ஒப்பிடும்போது பேச்சாற்றல் குறைவுள்ளது. ஆனால் இவைகளை மாய்மாலமாக மக்களிடம்  மறைக்காமல் தொலைவிலிருக்கும்போது இருப்பதுபோலவே அவர்களோடு இருக்கும்போதும் இருப்பேன் என்கின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே." ( 2 கொரிந்தியர் 10 : 10 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகளில் ஊழியர்களிடம் இந்தக் குணம் பொதுவாக இருப்பதில்லை. அவர்கள் சபைக்கு நாம் செல்லும்போது மாய்மால அன்புடன்,  வித்தியாசமான பேச்சுவழக்கில் நம்மோடு பேசுவார்கள். இவர்கள் பேசும் தமிழே வித்தியாசமாக இருக்கும். இப்படிப்பேசுவதே ஆவிக்குரிய பேச்சு என எண்ணிக்கொள்கின்றனர். ஆம், சுய முகங்களை மறைத்து தங்கள் சபைகளுக்கு மக்கள் வரவேண்டுமென்பதற்காகவே இந்த மாய்மாலம். 

அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறுவதுபோல எதார்த்தமாக இருக்கப் பழகுவோம். நமது பேச்சும் செயல்பாடுகளும் எப்போதும் ஒரேபோல இருக்கட்டும். நய வசனிப்பாலும், மாய்மால பேச்சினாலும் அரசியல் கட்சிகளுக்கு ஆள் சேர்பதுபோல நாம் ஆள் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. 

ஆதவன் 🌞 777🌻 மார்ச் 15,  2023 புதன்கிழமை 

"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட மக்களைப்பார்த்து  வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிடுகின்றார். 

கர்த்தரால் மீட்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவைப்போல வாக்குறுதியின் பிள்ளைகள். வேதத்தின் வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கே உரிமையானவை. மீட்பு அனுபவம் பெறாதவர்களை அடிமையின் பிள்ளைகள். அவர்கள் இன்னும் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கே அடிமைகளாகவும் ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உட்படாதவர்களுமாவார்கள்.. 

"ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் (உரிமைப் பெண்ணிடம்) பிறந்தவன்." ( கலாத்தியர் 4 : 22 ) 

தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஈசாக்கு. ஆனால் ஆகார் எனும் ஆபிரகாமின் அடிமைப்பெண்ணிடம் பிறந்தவன் இஸ்மவேல் (இஸ்மாயில்). வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்.  இது குறித்து ஆதியாகமத்தில் ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் கூறுவது கவனிக்கத்தக்கது. அவள் ஆபிரகாமை நோக்கி: "இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்." ( ஆதியாகமம் 21 : 10 )

ஆபிரகாமுக்கு இது வருத்தமாக் இருந்தது. ஆனால் தேவன் சாராள் சொல்லியதையே அங்கீகரித்தார். 

"அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்." ( ஆதியாகமம் 21 : 12 ) என்றார். ஆம், அடிமையின் மகன் மேலான ஆசீர்வாதத்தினைப் பெறத்  தகுதியற்றவன் ஆகிவிட்டான். 

அன்பானவர்களே, நாம் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்கள்,  வழிபாட்டு முறைமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருப்போமானால் நாம் அடிமையான ஆகாரின் பிள்ளையைப்போலவே இருப்போம். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிள்ளைகளாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே நாம் அவருக்கு உரியவர்கள் ஆக முடியாது. அவரது சந்ததி ஆகிடமுடியாது. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படும்போது மட்டுமே அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாக்குத்தத்தத்தின்  பிள்ளைகளாகின்றோம். அதாவது, அவரோடு மகன், மகள் உறவைப் பெறுகின்றோம். "அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்." ( ரோமர் 9 : 8 ) என்கின்றார் பவுல்  அடிகள். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமே உரிமைப்பெண்ணின் பிள்ளைகள். மகன், மகளுக்குள்ள உரிமை நமக்கே உண்டு. "இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே (உரிமைப் பெண்ணின்)  பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 31 ) கிறிஸ்துவைவிட்டு பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம். 

ஆதவன் 🌞 778🌻 மார்ச் 16,  2023 வியாழக்கிழமை 

"பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." ( எபேசியர் 6 : 1 )

தாய் தகப்பனை மதித்து நடக்கவேண்டியது நமது கடமை. ஆனால், அப்படி நாம் மதித்து நடப்பதிலும் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.  

மோசேமூலம் தேவன் அளித்த பத்துக் கட்டளைகளில் ஒன்று,  "உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக." ( யாத்திராகமம் 20 : 12 ) என்பது. அதாவது, நாம் தாய் தகப்பனை மதித்து அவர்களை கனம் பண்ணும்போது நமது வாழ்நாள் அதிகரிக்கும். 

ஆனால், நமது தாய் தகப்பன் தேவனுக்கு ஏற்பில்லாத அல்லது பாவமான காரியங்களில் நம்மை ஈடுபடச் செய்யும்போது அல்லது சொல்லும்போது நாம் அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. அதனையே இன்றைய வசனத்தில்,  "உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." என்று கூறப்பட்டுள்ளது. 

கர்த்தருக்குள் கீழ்ப்படிதல் என்பது கர்த்தர் பாவம் என்று விலக்கியுள்ள காரியங்களைத் தவிர்த்து மற்ற காரியங்களில் மட்டும் அவர்களது சொல்லைக் கேட்பது.  சில தகப்பன்மார் தங்களது பிள்ளைகளையே மது வாங்கிவர கடைகளுக்கு அனுப்புகின்றனர். அல்லது முக்கியமான சில காரியங்களில் உலக நன்மைகளை பெறுவதற்காக பிள்ளைகளை பொய்ச்சொல்லச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.  மேலும் சில பத்திரிகை செய்திகளில் தாயும் தகப்பனுமே தங்கள் பெண் குழந்தைகளை விபச்சாரம் செய்யத் தூண்டும செய்திகளை நாம் வாசிக்கின்றோம். இத்தகைய காரியங்களில் நாம் பெற்றோருக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை.  

சில குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது அல்லது பிறரது சொத்துக்களை அநியாயமாக அபகரிக்க முயலும் சில தகப்பன்மார் தங்களது திருமணமான மகன் அல்லது மகள்களை தங்களுக்குச் சாதகமாக பொய்கூறும்படி வற்புறுத்துவதுண்டு.

அன்பானவர்களே, நாம்  பெற்றோரை மதிக்கவேண்டும், அவர்களைப் பராமரிக்கவேண்டும் இது கட்டாயம். ஆனால் அவர்கள் கர்த்தருக்கு ஏற்பில்லாத பாவ காரியங்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டும்போது   நாம் அவர்களுக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை. 

குறிப்பாக, எந்த காரியத்தை நம் பெற்றோர்கள் நம்மை செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டாலும் நாம் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். அதாவது அவர்கள் நம்மைச் செய்யச்சொல்லும் காரியம் கர்த்தரின்முன் நியாயமாக இருக்குமா என்று சிந்தித்து அப்படி நியாயமாய் இருந்தால் மட்டுமே நாம் செய்யவேண்டும். 

வயது எத்தனை ஏறினாலும் சிலர் திருந்தாத ஜடங்களாகவும் அல்லது மனிதநேயமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய பெற்றோரை, நம் பெற்றோர் என்பதால்  வீட்டில் ஏற்றுக்கொள்வோம்; அவர்களைப் பராமரிப்போம். ஆனால் அவர்களது அநியாய சிந்தனைக்கும் அறிவுரைக்கும் கீழ்படியாமலிருப்போம். நமது  பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிவோம், இது நியாயம்.

ஆதவன் 🌞 779🌻 மார்ச் 17,  2023 வெள்ளிக்கிழமை 

"விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." ( ரோமர் 10 : 17 )

"So then faith cometh by hearing, and hearing by the word of God." ( Romans 10 : 17 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் சற்று குழப்பமான வசனம்போலத் தெரிந்தாலும் பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் பின்வருமாறு தெளிவாக உள்ளது.  "ஆகவே, அறிவிப்பைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்; கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு". அதாவது ஒருவருக்கு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் ஏற்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்படவேண்டியதும் அவர் அதனைக் கேட்கவேண்டியதும்  அவசியம். 

கிறிஸ்துவைப்பற்றிய செய்தியை ஊழியர்கள் மட்டும்தான் அறிவிக்கவேண்டுமென்று அவசியமில்லை. கிறிஸ்துவின் அன்பை ருசித்த அனைவருக்குமே அதனைப் பிறருக்கு அறிவிக்கவேண்டிய கட்டாயம் உண்டு. 

நான் கம்யூனிச சிந்தனைகொண்டு கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தபோது என்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஒரு சகோதரன் எனக்குக் கிறிஸ்துவை அறிவித்தார்.  பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்தபின்னர் - இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனபின்னரே நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். அதுவரை ஆலயங்களில் பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டிருந்தாலும் நான் கிறிஸ்துவை அறியாதவனாகவே இருந்தேன். 

கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு; விசுவாசம் வளர வாய்ப்புண்டு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அப்படியானால் எனது முப்பத்தியாறு வயதுவரை எனக்குக் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி முறையாகச் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றுதானே பொருள்? 

எனவே நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கும் மீட்பு அனுபவம் பெறாத கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துவை முறையாக அறிவிக்கவேண்டியது அவசியம். அதாவது நாம் கூறும் செய்தியை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் நம் முதலில் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும். அவரது வசனம் நமது வாழ்வில் நிலைகொண்டிருக்கவேண்டும். அப்போது மட்டுமே நாம் கூறும் கிறிஸ்துவின் செய்தி மற்றவர்களது விசுவாசத்தை வளர்க்க உதவும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு  எழுதுகின்றார்:- "உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 ). ஆம், கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்கவேண்டும்.

அன்பானவர்களே, கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. ஆனால், அப்படி அறிவிக்குமுன் நாமே நமது வாழ்க்கையினை கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கையாக மாற்றிக்கொள்வோம். அப்போது நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம்.


ஆதவன் 🌞 780🌻 மார்ச் 18,  2023 சனிக்கிழமை 

"ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:2,3) 

காலாத்திய சபையில் அப்போஸ்தலரான பவுலின் உபதேசத்தைக்கேட்டு விசுவாசிகளானவர்களிடம் சில ஊழியர்கள் வந்து பல்வேறு யூத பாரம்பரியங்களைப் பின்பற்றவேண்டுமென்று கற்பித்தனர். மோசேயின் நியாயப்பிரமாணக் கட்டளைகளை அவர்கள் மேன்மையாக எண்ணிக்கொண்டனர். 

இன்றும் இதுபோலவே பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். பத்துக் கட்டளைகளுக்கு எதிரான பாவம் நான் செய்யவில்லை என்று கூறித் தங்களைத்  தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். அன்பானவர்களே, கட்டளைகளுக்குக் கீழ்படிவந்தால் மட்டும் எவரும் தேவனுக்குமுன் நீதிமானாவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையின் பிரமாணம் நியாயப்பிரமாணக் கட்டளைகளைவிட வேலானது. ஆம், இயேசு கிறிஸ்து பத்துக் கட்டளைகளைவிட மேலான கட்டளைகளை நமக்குத் தந்துள்ளார். அவற்றுக்குக் கீழ்படியும்போதே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." (கலாத்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். 

மேலும், மோசேயின் கட்டளைகளே போதுமென்றால் இயேசு கிறிஸ்து உலகத்துக்கு வந்திருக்கவேண்டிய அவசியமேயில்லை. அவர் பாடுபட்டு மரித்ததும் வீண். கட்டளைகள் பெலனற்றுப் போனதாலேயே இயேசு கிறிஸ்து உலகினில் வந்து  பாடுகள் பட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்று அப்போஸ்தலரான பவுல் அடிகள் எழுதுகின்றார். 

நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறும்போது புதிய மனிதர்கள் ஆகின்றோம்.  ஆவிக்குரிய மனிதர்கள் ஆகின்றோம். அதே ஆவிக்குரிய நிலையில் நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும். காலத்திய சபையினர் தவறான உபதேசத்தால் ஆவிக்குரிய வழியைவிட்டுத் தடம் மாறினார்கள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், கட்டளைகளுக்குக் கீழ்படிந்ததினாலா அல்லது விசுவாசத்தினாலா, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? என்று கேட்கின்றார். 

"நியாயப்பிரமாணமானது (கட்டளைகள்) ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே (விசுவாசத்தினாலே) தேவனிடத்தில் சேருகிறோம்." ( எபிரெயர் 7 : 19 )

கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்துக்கு நாம் மொடுக்கவேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய மேலான வழியில் நடத்துவார்.  "நியாயப்பிரமாணத்தினாலே (சட்டம் சார்ந்த செயல்களால்)  ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )


ஆதவன் 🌞 781🌻 மார்ச் 19,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்" (ஏசாயா 54: 7)

இந்த உலகத்தில் துன்பங்கள் சோதனைகளை அனைவருக்கும் பொதுவானவை. கிறிஸ்துவினிடம் நம்பிக்கைக் கொண்டுள்ளதால் நமக்குத் துன்பங்கள் வராது என்று நாம் சொல்ல முடியாது. மிகக் கடுமையான துன்பங்கள், உலக மனிதர்கள் அடையாத துன்பங்கள் ஆவிக்குரிய மக்களுக்கு ஏற்படலாம். 

பக்தனான யோபு இப்படித் துன்பத்தை அனுபவித்தவர்தான். ஆனால் அவரது துன்பம் கர்த்தரால் அனுமதிக்கப்பட்டத்  துன்பம். அவரைப் பொன்னைப்போல மாற்றிட அனுப்பப்பட்டத்  துன்பம். இதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்கும் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படலாம். அவை நம்மைத் தேவன் புடமிட்டு தனக்கு ஏற்புடையவராகத் தெரிந்துகொள்ளவேண்டிய துன்பமாக இருக்கலாம். "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." ( ஏசாயா 48 : 10 ) என்கின்றார் கர்த்தர். 

தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களைத் தேவன் அப்படியே துன்பத்தில் கைவிட்டுவிடுபவரல்ல. இன்றைய வசனம் கூறுகின்றது, "இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்" என்று. அதாவது ஒரு கண் இமைக்கும் அளவுக்கு மட்டுமே அவர் நம்மைக் கைவிடுகின்றார்.  நமது காலக்கணக்குக்கும் தேவனது காலக்கணக்குக்கும்  வித்தியாசம் உண்டு. நமக்கு நமது துன்பங்கள் நீண்டகாலம் தொடர்வதுபோலத் தெரியலாம். ஆனால், தேவனுக்கு அது ஒரு இமை நொடிபொழுதுதான். ஆம், கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள்போலவும் ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றது. (2 பேதுரு 3:8)

சில வேளைகளில் குழந்தைகள் தவறு செய்யும்போது தாய், "நான் உன்னுடன் பேச மாட்டேன் போ" என்கின்றாள், அல்லது சிறிதாகத் தண்டிக்கின்றாள். ஆனால் மறுநிமிடமே அந்தக் குழந்தையினை அணைத்துக்கொள்கின்றாள்.  நமது தேவனும் இதுபோலவே இருக்கின்றார். 

அன்பானவர்களே, இன்றைய வசனத்தில், "உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்" என்று கர்த்தர் கூறுகின்றார். அவரது இரக்கம் அளவிடமுடியாதது. அவர் என்றுமே கோபமாய் இருப்பதில்லை; நம்மை அவர் அழித்துவிடுவதில்லை. அவருடைய கிருபையால் நம்மைச் சேர்த்துக்கொள்வார். ஆம்,  "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )

எனவே அன்பானவர்களே, துன்பங்களைக்கண்டு சோர்ந்துபோகவேண்டாம். நம்மை அவர் கைவிட்டுவிடுவதுபோலத் தெரிந்தாலும் அது ஒரு இமைப் பொழுதுதான். நம்மை அவர் மீண்டும் சேர்த்துக்கொள்வார். துன்பநேரங்களில் கர்த்தரை மகிழ்ச்சியாய்த் துதிப்போம். பவுலும் சீலாவும் சிறையில் துதித்தபோது கட்டுகள் அறுக்கப்பட்டு விடுதலையாகவில்லையா? (அப்போஸ்தலர்பணி - 16:25,26) கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தைக் காத்துகொண்டு துன்பங்களை எதிர்கொள்வோம். 

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 )


ஆதவன் 🌞 782🌻 மார்ச் 20,  2023 திங்கள்கிழமை

"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." ( 1 யோவான்  5 : 14 )

நம்மில்  பலரும் நீண்ட விண்ணப்பப் பட்டியலுடன் ஆலயங்களில் வேண்டுதல் செய்கின்றோம்.  பொதுவாக இந்த விண்ணப்பங்களில் தொண்ணூறு நூறு சதவிகிதமும் நமது உலக ஆசைகளை நிறைவேற்றிட வேண்டியே இருக்கின்றன. இயேசுவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பலரும் பிரசங்கிக்கின்றனர்; மக்களும் அப்படியே நம்புகின்றனர்.  ஆனால் இது வேத அடிப்படையில் சரியானதுதானா என்று நாம் எண்ணுவதில்லை. 

எந்தத் தகப்பனும் தாயும் தனது பிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனேயே  கொடுப்பதில்லை. நமது பிள்ளைக்கு இப்போதைக்கு இது தேவைதானா ? இது நமது பிள்ளைக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து, தகுந்ததானால் மட்டுமே அதனைக் கொடுக்கின்றனர்.  அப்படி இருக்கும்போது நமது வானகத்  தந்தைக்கு எது நமக்கு எப்போது தேவை என்பது தெரியாதா? பின் எப்படி கேட்பதையெல்லாம் கொடுப்பார்?   

நாம் உலக காணோட்டத்துடனேயே வேதாகமத்தைப் படிக்கின்றோம். "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்"  என்று இயேசு கிறிஸ்து கூறியதை நம்பி இந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை உலக காரியங்களை கேட்பதையும், தேடுவதையும், தட்டுவதையும் பற்றி கூறவில்லை. மாறாக, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு நாம் முயற்சியெடுத்து வேண்டுவதையே குறிப்பிடுகின்றார்.  இந்த வசனத்தின் இறுதியில் இயேசு கூறுகின்றார்,  "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?." ( லுூக்கா 11 : 13 )

மேலும், நாம் நமது குழந்தைகள்  கீழ்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றோம். தாய் தகப்பனுக்கு விருப்பமில்லாத காரியங்களில் ஈடுபட்டு தறுதலைகளாக அலையும் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்புவதைக் கொடுக்க நாம் தயங்குகின்றோம். இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) ஆம், கிறிஸ்துவிடம் நாம் கேட்பது நிறைவேறவேண்டுமென்றால் நாம் அவரிலும் அவரது வார்த்தைகள் நம்மிலும் நிலைத்திருக்கவேண்டியது அவசியம். 

உலக காரியங்களைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்து வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். உலக ஆசைகளை நிறைவேற்றவே வேண்டுதல்கள் செய்துகொண்டிருந்தோமானால் நமது வேண்டுதல்கள் தேவனால் அங்கீகரிக்கப்படாது. "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாம லிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது மற்றவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.  எனும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கைக் கொண்டவர்களாக நாம் இருந்தால் மட்டுமே  நமது வேண்டுதல்கள் வித்தியாசமானதாக, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். 


ஆதவன் 🌞 783🌻 மார்ச் 21,  2023 செவ்வாய்க்கிழமை

மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ( ஏசாயா 52:14)

உலகின் மிகச் சிறந்த ஓவியரான லியானார்டோ டாவின்சி அவர்கள் 1490 களில் வரைந்த ஓவியங்களில் மிகப் பிரபலமான ஓவியம் கிறிஸ்துவின் இறுதி இரா உணவு ஓவியமாகும். இந்த ஓவியத்தை வரைவதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு மாடலாக கிறிஸ்துவின் முக அமைப்புக்கு ஏற்ற ஒரு முகமுள்ள மனிதனைப் பல ஆண்டுகளாகத்  தேடி  இறுதியில் அப்படி அழகும் கனிவுமான முக அமைப்புள்ள ஒரு மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் கிறிஸ்துவாக வரைந்தார். பின் எல்லா அப்போஸ்தலர்கள் படத்தையும் வரைந்தார். இறுதியில் யூதாஸ் இஸ்காரியோத் முகத்தை வரைந்திட அதற்கேற்ற முக அமைப்புள்ள ஒரு மனிதனைத் தேடி அலைந்து இறுதியில் ஒருவரைக் கண்டுபிடித்தார்.  

தனது ஓவிய அறையில் அவர் அவனை நிறுத்தி அவனது முகத்தைப் பார்த்து யூதாஸின் முகத்தை வரைந்தார். அப்போது அந்த மனிதன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. டாவின்சி அவனிடம், "ஏன் அழுகின்றாய்" என்று கேட்டார். அவன் கூறினான், "ஐயா ஒரு சில ஆண்டுகளுக்குமுன் என்னைத்தான் நீங்கள் கிறிஸ்துவுக்கு மாடலாக நிறுத்தி வரைந்தீர்கள்; இப்போது என்னையே யூதாஸாக வரைகின்றீர்கள்.....எனது பாவப் பழக்கம் என் முகத்தையே அந்தகாரப்படுத்திவிட்டது " என்றான்.  ஆம், பாவம் மனிதனது ஆத்துமாவை மட்டுமல்ல, உடலையும் கெடுக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து "அவர் முற்றிலும் அழகுள்ளவர்" ( உன்னதப்பாட்டு 5 : 16 ) என வாசிக்கின்றோம். அப்படி முற்றிலும் அழகுள்ளவர்மேல் மனுக்குலத்தின் ஒட்டுமொத்தப் பாவங்கள் சுமத்தப்பட்டதால் அவர் தனது அழகை இழந்தார்; அந்தகாரமடைந்தார். அவரது தோற்றத்தைத் தரிசனமாகக் கண்ட ஏசாயா, "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது." (ஏசாயா 53:2) என்று எழுதுகின்றார். 

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்" (ஏசாயா  53:4)

முற்றிலும் அழகுள்ள இயேசு  கிறிஸ்து நமக்காக பாவியானபோது தனது அழகினை இழந்தார்.  இது கிறிஸ்து நமக்காக எவ்வளவு அன்பு வைராக்கியம் பாராட்டுகின்றார் என்பதை நமக்கு உணர்த்துவதுடன் பாவப் பழக்கம் நம்மை எப்படி உடல்ரீதியாகவும் கெடுக்கின்றது, நம்மை அலங்கோலப்படுத்துகின்றது என்பதனை உணர்த்துகின்றது. நமது ஊரில்கூட அழகானத் தோற்றமுள்ள சிலர் பாவப் பழக்கங்களால் அலங்கோலமடைந்து நம் கண்முன் வாழ்வதை நாம் பார்த்திருக்கலாம். 

கிறிஸ்து நமக்காக தன்னையே இழந்து  பலியாக்கின அன்பதனை எண்ணிப்பார்ப்போம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். நாம் நமது மனதினில் எண்ணுவதற்கும் மேலாக பரிசுத்தமாய் வாழ நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராய் இருக்கின்றார்.  தனது அழகு, அந்தஸ்து, தெய்வீகம் அனைத்தையும் நமக்காக இழந்தவர் நம்மைக் கைவிடுவாரா?
 

ஆதவன் 🌞 784🌻 மார்ச் 22, 2023 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." (நீதிமொழிகள் - 19:23)

இன்றைய தியானத்துக்குரிய வசனம், ஜெபம் செய்தல், காணிக்கைக் கொடுத்தல், உபவாசம் இருத்தல், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் இவைகளை  ஜீவனுக்கேதுவானவை என்று கூறாமல்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது என்று கூறுகின்றது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு வாழ்வைக் குறிக்கின்றது. அப்படி ஒரு வாழும்போது மனத் திருப்தியும் நீண்ட வாழ்க்கையும் நமக்குக் கிடைக்கின்றது. இதனையே, "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்;" (நீதிமொழிகள் 8 : 13 ) என்றுவேதம் கூறுகின்றது. 

நாம் பணிபுரியும் இடங்களில் அந்தந்த பணிகளுக்கென்று ஒருசில ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். அவற்றை மதித்து , அவற்றுக்குப் பயந்து நாம் பணிசெய்யும்போதே அங்கு நாம் நிலைத்திருக்கமுடியும். இதுபோலவே நாம் கர்த்தருக்குப் பயந்து அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது நமக்கு ஆபத்தின்றி நீண்ட ஆயுளும் கிடைக்கின்றது.  "எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்." (நீதிமொழிகள் 1:33) என்று நீதிமொழிகள் கூறுகின்றது.

மனிதர்கள் பொதுவாக தங்கள் வழிபாட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவே போதுமென்று வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் மற்றும் தினசரி கடமைக்காகச் செய்யும் ஜெபம், குறிப்பிட்டக் காலங்களில் அனுசரிக்கும் உபவாசம், பக்தி முயற்சிகள்  இவையே கர்த்தருக்கு உகந்தது என்று எண்ணி அவைகளைக் கடைபிடித்து நிம்மதியடைய முயலுகின்றனர். ஆனால் தேவன் நமது இருதயத்தைப் பார்க்கின்றார். எனவே கர்த்தருக்குப் பயந்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

ஜெபம், காணிக்கை, உபவாசம் இதர வழிபாடுகளுக்குமுன் நமது இருதயம் சுத்தமாகவேண்டியது அவசியம். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்.."  ( ஏசாயா 1 : 13- 15 )

அன்பானவர்களே, வழிபாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் வாழ்க்கை மாற்றத்துக்குக் கொடுப்போம். கர்த்தருக்குப் பயப்படும் மெய்யான பயம் நமக்குள் இருக்கட்டும். "தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்." ( சங்கீதம் 37 : 27 ) என்கின்றது வேதம்.
ஆதவன் 🌞 785🌻 மார்ச் 23, 2023 வியாழக்கிழமை

"லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல."  கொலோசெயர் 2:8) 

இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காரியத்தைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

கிறிஸ்தவ ஞானம், கிறிஸ்துவின்மேல் பற்றுதல் எனும் போர்வையில்  தவறுதலாக  சில வேண்டாத விஷயங்களை உலக அறிவின்படி தந்திரமாய்ப் போதித்து  நம்மைக் கொள்ளையடிக்கும் மனிதர்களின் தந்திரங்களால் நாம் ஏமாந்துபோகாமல் எச்சரிக்கையாயிருக்கும்படி பவுல் அடிகள் அறிவுறுத்துகின்றார். 

இன்று சில பிரபல ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிக்கின்றோம் என்று கூறி தேவையில்லாத காரியங்களையே அறிவித்து மக்களை மேலும் மேலும் குருடர்களாக்குகின்றனர். எங்களது  தங்கச் சாவி திட்டத்தில் சேர்ந்தால் ஆசீர்வாதம் என்றும், ஐந்து அப்பமும் இரண்டு மீனும்  திட்டத்துக்குப் பணம் அனுப்பினால் ஆசீர்வாதம் என்றும் பரிசுத்த ஆவியின் வரங்களை எங்களது  பயிற்சிகள் மூலம் பெறலாம் என்றும் கூறி பணம் சம்பாதிக்கின்றனர். 

தீர்க்கதரிசனம் என்பது ஆவியானவர் அருளும் வரங்களில் ஒன்று என்று வேதாகமத்தைப் படிக்கும் சிறு குழந்தையும் அறியும். ஆனால் எங்களது மூன்றுநாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டால்  தீர்க்கதரிசனம் கூறலாம் என்று கூறி   மக்களை வஞ்சிக்கும் ஊழியர்களும் சமூக அந்தஸ்தோடு வாழ்கின்றனர்.   காரணம் அறிவற்ற, கிறிஸ்துவை அறியும் ஆர்வமற்ற கிறிஸ்தவர்கள்.   

இவைகளையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இவை,  "மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல." என்கின்றார். அதாவது இவை உலக மனிதர்கள் கடைபிடிக்கும் பாரம்பரிய முறைமைகளையும் , உலக வழக்கங்களையும், வியாபாரிகள் கடைபிடிக்கும் தந்திரங்களைச் சார்ந்தவையே தவிர  கிறிஸ்துவைப் பற்றியதல்ல.  

அன்பானவர்களே, இத்தகைய வஞ்சனைகளுக்கு நாம் தப்பிட வேண்டுமானால் நாம் கிறிஸ்துவின் வசனத்தினால் நம்மை நிரப்ப வேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். ஆதவனில் இத்தகைய செய்திகளை நான் எழுதும்போது இந்த ஊழியர்களின் விசிறிகளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அதற்காக இந்தச் சத்தியங்களை எழுதாமல் இருக்கமுடியாது. காரணம் புதிய புதிய வியாபார தந்திரங்களோடு இவர்கள் இன்று களம் இறங்குகின்றார்கள். 

இத்தகைய ஊழியர்களை ஆதரிப்பவர்களுக்கு உண்மையில் வேதாகம அறிவு இல்லை என்று பொருள், கிறிஸ்துவிடம் மெய்யான அன்பில்லை என்று பொருள். சிலர், இவை பற்றி நாம் எதுவும் கூறக்கூடாது; தேவனே பார்த்துக்கொள்வார் என்கின்றனர். அன்பானவர்களே, வழியில் இருக்கும் ஆழமான படுகுழியை கண் தெரியாத குருடர்களுக்கு தெரிவிக்கவேண்டியது கண்பார்வையுள்ளோரின் கடமை.  

"குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்." ( உபாகமம் 27 : 18 ) நாம் அமைதியாக தவறுகளைப் பார்த்துக் கொண்டிருப்போமானால், தவறு செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அது பாவமே; சாபமே. 


ஆதவன் 🌞 786🌻 மார்ச் 24, 2023 வெள்ளிக்கிழமை

"மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா - 6:8)

மோசே மூலம் தேவன் மனிதர்கள் நல்வழியில் வாழ பல்வேறு கட்டளைகளையும் முறைமைகளையும் வகுத்துக் கொடுத்தார். பத்துக் கட்டளைகளைத் தவிர சிறியதும் பெரியதுமான பல கட்டளைகள் வேதத்தில் உண்டு. வேத ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கட்டளைகளை கணக்கிட்டு 613 கட்டளைகள் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.  இந்த 613 கட்டளைகளையும் நாம் நினைவில்கொண்டு வாழ்தல் கடினமானது. இயேசு கிறிஸ்து இந்த மொத்தக் கட்டளைகளையும் இரண்டு கட்டளைக்குள் அடக்கிவிட்டார். 

1. "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 )
2. "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக". ( மத்தேயு 22 : 39 )

"இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கின்றன ". ( மத்தேயு 22 : 40 ) என்றார் இயேசு கிறிஸ்து.

இந்த இரு கட்டளைகளையும் கடைபிடிக்கும்போது, நாம்  நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, நம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்போம். இதனையே நான் கேட்கின்றேன் என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.

ஆனால் மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் ஆன்மிகம் என்றும் பக்தி என்றும் தேவையற்ற காரியங்களுக்கே முன்னுரிமைகொடுத்து வருகின்றோம். "வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?" எனும் வார்த்தைகள் நம்மை சிந்திக்கத் தூண்டவேண்டும். 

ஒருமுறை ஒரு ஏழைத் தாயாரைச் சந்திக்கும்போது அவர் தனது மனத் துயரத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். தகப்பனில்லாத அவரது  ஒரே மகனை அந்தத் தாயார் மிக கஷ்டப்பட்டு வேலைசெய்து  படிக்கவைத்தார்.  இன்று அவன் நல்ல வேலையில் இருக்கின்றான். அவன் இந்தத் தாய்க்கு எப்போவாவது யார்மூலமாவது சிறு பண உதவிகள் செய்வதோடு சரி.  தாயாரிடம் வந்து பேசுவது கிடையாது. ஆனால் இந்தத் தாய் அவனிடம் பண உதவியையோ வேறு எதையுமோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கண்ணீரோடு கூறினார்கள், "அவன் என்னோடு வந்து பேசவேண்டும் என்பதைத்தவிர வேறு என்ன அவனிடம் எதிர்பார்க்கிறேன்?"

ஆம் அன்பானவர்களே, இதனையேதான் கர்த்தர் இன்றைய வசனத்தில் கூறுகின்றார். "நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" 

வழிபாடுகளுக்கும் ஆராதனைகளுக்கும்  கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவனது அன்பின் கட்டளைகளைக் கடைபிடிப்பதற்கும் கொடுப்போம்.  இதைத் தவிர தேவன் நம்மிடம் வேறு எதையுமே பெரிதாகக் கேட்கவில்லை; விரும்பவுமில்லை. 


ஆதவன் 🌞 787🌻 மார்ச் 25, 2023 சனிக்கிழமை

"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )

"பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்" (யோவான் - 8:34) என்றார் இயேசு கிறிஸ்து.  அடிமை என்பவன் சுய சித்தம் செய்ய உரிமை இல்லாதவன். தன்னை அடிமைப்படுத்தினவனுக்கு அவன் அடிமை ஆதலால்  தொடர்ந்து அவனுக்கே அடிமையாக உழைப்பான். 

இங்கு பவுலடிகள் இரண்டு எஜமானுக்கு நாம் அடிமைகளாய் இருக்கமுடியுமென்று கூறுகின்றார். ஒன்று பாவம்,  இன்னொன்று  நீதிகேதுவான கீழ்ப்படிதல். இந்த இரெண்டுபேரில் யாருக்கு நம்மை அடிமையாக்கிட நம்மை ஒப்புக்கொடுப்போமோ அவர்களுக்கே தொடர்நது அடிமைகளாய் இருப்போம் என்கின்றார். 

பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி நாம் தேவனுக்கு அடிமைகளாகும்போது நம்மை அவர் பரிசுத்தமாக்குகின்றார். மட்டுமல்ல அதன் பலனாகிய நித்திய ஜீவனைப் பெறுகின்றோம்.  "இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 22 ) என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கிறிஸ்துவை அறிவதற்குமுன் நம்மையும் நமது உடலையும் நாம் பாவத்துக்கும் அசுத்தத்துக்கும் ஒப்புக்கொடுத்ததுபோல இனி நமது உடலை பரிசுத்தத்துக்கு ஒப்புக்கொடுத்து  நீதிச் செயல்கள் செய்ய ஒப்புக்கொடுக்கவேண்டும். "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகின்றது. அவர் தனது இரத்தத்தினால் பாவமன்னிப்பாகிய சுத்திகரிப்பை உண்டுபண்ணியுள்ளார். எனவே நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டு அவருக்கு அடிமையாகும்போது நாம் பரிசுத்தமாகின்றோம் 

தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். அன்பானவர்களே, எனவே எதற்குக் கீழ்ப்படியும்படி நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறோமோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறோம்.  நாம் கர்த்தருக்கே அடிமைகளாயிருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். 

ஆதவன் 🌞 788🌻 மார்ச் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை

"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்" ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 7 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில் தேவன் இரண்டு முக்கியமான மரங்களை வைத்திருந்தார். ஒன்று ஜீவ விருட்சம் இன்னொன்று நன்மைதீமை அறியத்தக்க விருட்சம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கலாம். "தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 )

இதில் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைத்தான் சாப்பிடக்கூடாது என்று தேவன் ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் கட்டளைக் கொடுத்திருந்தார். ஆனால் அங்கு ஜீவ விருட்சம் எனும் ஒரு மரமும் இருந்தது. அதுகுறித்து தேவன் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.  ஆதாமும் ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்பதில் ஆர்வமும் காட்டவில்லை. 

ஆனால் தேவ கட்டளையை ஆதாமும் ஏவாளும் மீறியபோது தேவன் ஜீவ விருட்சத்தின் கனியை அவர்கள் உண்டுவிடக்கூடாது என்று தடுத்தார். காரணம், தேவனுக்கு எதிரான பாவம் செய்த மனிதன் அதனைச்  சாப்பிடக்கூடாது; அப்படிப் பாவியான மனிதன் என்றென்றும்  வாழக்கூடாது என்று தேவன் கருதினார்.  

"இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று," ( ஆதியாகமம் 3 : 22 )  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 )

அன்பானவர்களே, ஆதாம் ஏவாள் தங்கள் பாவத்தால் சுவைக்காமல் இழந்துபோன ஜீவ விருட்சத்தின் கனியை ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெறும் அனைவர்க்கும் தருவேன் என்கின்றார் தேவன்.  ஆம், வெற்றிபெறுபவன் எவனெவனோ அவனுக்கு / அவளுக்கு இந்தக் கனி உண்ணக்கொடுக்கப்படும் என்கிறார் கர்த்தர். 
"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்"  என்கின்றார்.

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்." ( 1 கொரிந்தியர் 15 : 47 ) முதலாம் மனிதனாகிய ஆதாமினால் இழந்துபோன இந்த ஆசீர்வாதம் இரண்டாம் ஆதாமாகிய வானத்திலிருந்து வந்த கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் பரிசுத்தமாகும்போது நமக்குக் கிடைக்கின்றது. 

மற்ற உலக பந்தயங்களில் ஒருவருக்கு மட்டுமே பரிசு கிடைக்கும். ஆனால் ஆவிக்குரிய ஓட்டத்தில் வெற்றிபெறும் அனைவருமே பரிசு பெறலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே பற்றிக்கொண்டு பரிசுத்தமான வாழ்வு வாழ்வோம். ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு மகிழ்வோம். 


ஆதவன் 🌞 789🌻 மார்ச் 27, 2023 திங்கள்கிழமை

"வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்". (நீதிமொழிகள் 17:3)

நம்முடைய கர்த்தர் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கின்றவர். ஒருவர் செய்யும் செயலை மட்டும் பார்த்து அவர் தீர்ப்பிடுவதில்லை. செய்யப்படும் செயலின் நோக்கத்தையும் பார்க்கின்றார். அதன் அடிப்படையிலேயே அவர் மனிதர்களை நியாயம்தீர்க்கின்றார்.

எவ்வளவு நல்லச் செயலாக இருந்தாலும் நாம் அதனைச் செய்யும் நோக்கம் நேர்மையானதாக, கர்த்தருக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உதாரணமாக சமூக ஊடகங்களில் பதிவிடவேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காகச் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். அவர்களது மெய்யான நோக்கம் ஏழைகளுக்கு உதவுவதல்ல; மாறாக, பலர் அதனைப் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும் என்பதுதான். 

தங்க நகைகளும் கவரிங் நகைகளும் ஒன்றுபோலவே இருக்கும் ஆனால் அதன்மேல் சோதிக்கும் திராவகத்தை (Chemical) ஊற்றும்போது உண்மையைக் கண்டுகொள்ளலாம். விலை உயர்ந்த அனைத்துக்குமே போலிகள் உண்டு. இதுபோலவே போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் அவைகளைச் சோதித்து நாம் உண்மை நிலையினைக் கண்டுகொள்ளலாம்.

இதுபோலவே நாம் பார்க்கும்போது மனிதர்கள் எல்லோருமே நல்லவர்கள்போலத் தெரிவார்கள். அவர்களை நாம் அடையாளம் காண முடியாது. அவர்களிடம் ஏமாந்தபின்னரே அவர்களைப்பற்றி நமக்குத் தெரியும்.  ஆனால் தேவனை யாரும் ஏமாற்ற முடியாது. 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது அவர் தேவனுடைய தற்சொரூபமாய் இருந்தபடியால் தன்னைச் சுற்றி இருந்தவர்களைக் குறித்து அவர் நன்கு  அறிந்திருந்தார். "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." (யோவான் 2:25) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் இன்று மனிதர்கள் பலருக்கும் இந்தச் சத்தியம் தெரியாததால் அவர்கள் தேவனைத் தங்களைப்போன்ற ஒருவராக எண்ணி பொய்யும், ஏமாற்றும், பித்தலாட்டமும் செய்துகொண்டு ஆலய ஆராதனைகளிலும் ஆலயப் பணிகளிலும் எந்த மனச் சாட்சியின் உறுத்தலுமின்றி ஈடுபட்டுள்ளனர். 

அன்பானவர்களே, கர்த்தரை ஏமாற்ற முடியாது. நமது இருதயங்களை தேவன் அறிகிறார் எனும் அச்சம் நமக்கு எப்போதும் இருக்கவேண்டும். அந்த அச்சம் இருக்குமானால் மட்டுமே நாம் போலி முகங்களை அகற்றி நேர்மையுள்ளவர்களாக வாழ முடியும். வேதாகமத்தை வெறுமனே வாசிப்பதாலோ, ஜெபிப்பதாலோ, இறையியல் படிப்பதாலோ நாம் நேர்மையாளர்களாக மாற முடியாது. ஆம், கர்த்தருக்குப் பயப்படும் பயம் இருந்தால் மட்டுமே நாம் நல்ல ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும். "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்." (நீதிமொழிகள் 14:27)


ஆதவன் 🌞 790🌻 மார்ச் 28, 2023 செவ்வாய்க்கிழமை

"நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 )

ஆவிக்குரிய வாழ்க்கை லெகுவான காரியமல்ல. இந்த உலக மக்கள் சிந்திப்பதுபோலவும் செயல்படுவதுபோலவும் ஆவிக்குரிய மக்கள் செயல்படமுடிவதில்லை. இதுவே மேலும் மேலும் சிலுவை சுமக்கும் அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "உலகத்திலே உங்களுக்குத் துன்பங்கள் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் " (யோவான் 16:33) என்று நமக்குக் கூறினார். 

இப்படி நாம் துன்பப்பட்டாலும் நமக்கு மறுமையில் மகிமையான ஒரு வாழ்வு உண்டு. அந்த மகிமைக்குமுன் நாம் படும் பாடுகள் பெரிதல்ல.  இதனையே, "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 ) எனக் குறிப்பிடுகின்றார் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள். 

இந்த மகிமையான நித்திய ஜீவனே நமக்கு நம்பிக்கை.  எனவே, உலகத்தில் துன்பங்கள் இருந்தாலும், இந்த மகிமையைக்குறித்த "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்கின்றார்.

உபத்திரவங்களை பொறுமையாய்ச் சகிப்பதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று எழுதுகின்றார். 

அன்பானவர்களே, எனவே நமது வாழ்வில் துன்பங்கள் பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் துவண்டுவிடாமல் கர்த்தரையே பற்றிக்கொள்வோம். அப்படி உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்போது நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை  ஏற்படும். அந்த நம்பிக்கை நமக்கு மன மகிழ்ச்சியைக் கொண்டுவரும். 

இவை அனைத்துக்குமே அடிப்படை நாம் கர்த்தரோடு ஜெபத்தில் ஐக்கியமாய் இருப்பதுதான்.  எனவேதான், "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 ) என்கின்றார் பவுல் அடிகள். 

இந்த உலகத்தின் பாடுகள் கொஞ்சநாளுக்குத்தான் நம்மை நெருக்கும். ஆனால் அதனை நாம் கர்த்தரோடு இணைந்து வாழும்போது பொறுமையாய்ச் சகித்து வாழ முடியும். எனவே, எந்தத் துன்பம் வாழ்வில் இருந்தாலும் பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுவதுபோல, நம்பிக்கையிலே சந்தோஷமாகவும்  உபத்திரவத்திலே பொறுமையாகவும் இருந்து ஜெபத்திலே உறுதியாய் நிலைத்திருப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.


ஆதவன் 🌞 791🌻 மார்ச் 29, 2023 புதன்கிழமை

"அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்." ( ரோமர் 15 : 1 )

ஆவிக்குரிய வாழ்வில் எல்லோருமே தேறினவர்கள் அல்ல. ஆவிக்குரிய வளர்ச்சி என்பதும் முடிவில்லாதது. இந்த உலகத்தில் நாம் வாழும் இறுதிநாள்வரை நமது ஆவிக்குரிய வளர்ச்சித் தொடருகின்றது. 

ஒருவருக்கு வாழ்வில்  கிடைத்திருக்கும் வாய்ப்புகள் போல எல்லோருக்கும் கிடைத்திருக்காது. எனவே, ஒருவர் ஆவிக்குரிய வாழ்வில் மற்றவரைவிட மேலான நிலையினையும் மேலான அனுபவங்களையும் பெற்றிருக்கலாம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் பலமடைந்தவர் அதனை தமக்கே உரியது என்றும்,  தனது நன்மைக்கே என்றும் கருதிடாமல்  ஆவிக்குரிய வாழ்வில் பலவீனமாய் இருக்கும் சகோதரருக்கும் சகோதரிகளுக்கும் உதவிடவேண்டியது அவசியம். 

சுவிசேஷம் அறிவிப்பதன் ஒரு  நோக்கமும் இதுதான். நமக்குத் தெரிந்த ஆவிக்குரிய உண்மைகளை, ஆவிக்குரிய அனுபவங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படிப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது அது ஆவிக்குரிய வாழ்வில் தளர்ந்து சோர்ந்திருக்கின்றவர்கள்  பலமடைந்திட உதவும்.  

இயேசு கிறிஸ்து தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். (மாற்கு 6:11) காரணம் ஒருவர் பலவீனத்தை மற்றவர் தங்கவேண்டும் என்பதற்காகவே.  "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே." (பிரசங்கி 4:10) என வாசிக்கின்றோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் மாமிசம் உண்பதைக்குறித்தும் இதர காரியங்களைக்குறித்தும்  விளக்கும்போது இன்றைய தியானதுக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். அதாவது ஆவிக்குரிய வாழ்வில் மேலான அனுபவம் உள்ளவர் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் வளர்ச்சியடையாத நிலையிலுள்ள ஒருவர் செய்யும் செயல் தவறு என உணர்ந்தால்  அதனையே குத்திக்காட்டி அவர்களைச் சோர்வடையச் செய்யாமல் அவர்களுடைய பலவீனங்களை பொறுத்துக்கொள்ளவேண்டும். அவர்களது செயலை மென்மையாக உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.

நான் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒருமுறை பிரபல ஊழியர் நடத்திய உபவாசக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர் பிரபலமானவர் என்பதால் அவரைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணமும் அப்போது எனக்கு இருந்தது. ஆனால் தற்செயலாக அந்த உபவாசக்கூட்டத்தில் கலந்துகொண்டதால் அதற்குமுன் காலை உணவு உட்கொண்டிருந்தேன். அந்த ஊழியரோ, "சாப்பிட்டுக்கொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேவனை ஏமாற்றப் பார்க்கிறவர்களுக்கு வேதனைகள் உண்டு" என சபிக்கும் தோரணையில் பேசினார். சும்மா இருந்த நாயின் வாலைப்  பிடித்து இழுத்துக் கடிவாங்கியதுபோல அவரது சாப வார்த்தைகளை வாங்கினேன். மனம் வேதனைப்பட்டது.

கிறிஸ்துவை அறியாத பிறமதச்  சகோதரர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக வேதனையோடு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் அவர்கள் வேதனை இன்னும் அதிகமாகுமல்லவா?  எனவேதான்  இப்படி நமது அறிவற்ற செயல்களால் பலவீனமாய் இருக்கும்  பிறரை வேதனைப்படுத்தாமல், பலமுள்ளவர்களாகிய நாம், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்குபவர்களாக வாழவேண்டும் என்கிறார் பவுல் அடிகள். இத்தகைய தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.


ஆதவன் 🌞 792🌻 மார்ச் 30, 2023 வியாழக்கிழமை

"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." ( எபிரெயர் 13 : 8 )

இன்று கிறிஸ்தவர்களாகிய பலரும்கூட இயேசு கிறிஸ்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமியில் பிறந்து, வாழ்ந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த ஒருவர் என்றே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? இந்த உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயிற்றே? கிறிஸ்துவை விமரிசிக்கும் அல்லது கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பலரும் இதனையே கேட்கின்றனர். கடவுள் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அவர் எங்கிருந்தார்? என்ன செய்தார்? 

அன்பானவர்களே, அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பே இருக்கிறார். இதனை இயேசு கிறிஸ்துவே பின்வருமாறு கூறினார். "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 ) 

மட்டுமல்ல, இந்த உலகமே அவரால்தான் படைக்கப்பட்டது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 3 ) உலகப் படைப்பில் அவர் பிதாவோடு இணைந்திருந்தார். "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 8 : 6 )

ஆனால் இந்த உலகம் அவரை அறியவில்லை.  "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." (யோவான் 1:10)

பிதா இயேசு கிறிஸ்துவைக்கொண்டு உலகத்தைப் படைத்தார். இதனையே ரகசியம் என்று பவுல் அடிகள் கூறுகின்றார். "இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று....."( எபேசியர் 3 : 11 )

இந்தக் கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டில் மோசேயோடு இருந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்தினார். "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே." ( 1 கொரிந்தியர் 10 : 4 ) என்று வசிக்கிறோம். "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் " (யோவான் 8 : 58 ) என்று இயேசு கிறிஸ்து கூறினாரே?

ஆம், இதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது, "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." என்று. இந்த வசனத்தை இதன் ஆழமான அர்த்தம் புரியாமல் பலரும் கூறிக்கொண்டிருக்கின்றோம். நேற்று, அதாவது உலகம் படைக்கப்படுமுன், பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  எப்படி இருந்தாரோ அதேபோல இயேசு கிறிஸ்து இன்றும் இருக்கின்றார், நாளையும், அதாவது நமது மறுவுலக வாழ்விலும் மாறாதவராக இருப்பார்.

இதனை நாம் தியானித்து உணரும்போதே கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும், இத்தனைப் பெரிய தேவன் தனையே தாழ்த்தி அடிமையின் ரூபமெடுத்து தான் உண்டாக்கின மனிதர்கள் கையால் மரிக்கும்படி தன்னையே ஒப்புக்கொடுத்த அன்பின் மேன்மையினையும் உணர முடியும். 

இத்தகைய சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார், நமக்குள் இருக்கின்றார் என்பதுதான் அதிசயம். எனவே அன்பானவர்களே, நாம் கவலைகொண்டு தனித்து புலம்பவேண்டிய அவசியமில்லை. திட நம்பிக்கையோடு நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடருவோம். 

ஆதவன் 🌞 793🌻 மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை

"போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 )

உண்ணும் உணவைக்குறித்து இன்று பல்வேறு சர்ச்சைகள் நாட்டில் நிலவுகின்றன. காய்கறி உண்பவர்கள்தான் மெய்யான ஆன்மீகவாதிகள் என்று ஒரு மாயமான பிரம்மை உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும், குறிப்பிட்டக் காலங்களில் அசைவ உணவைத் தவிர்ப்பது மேலானது என்று ஒரு கருத்து பலரிடையே உள்ளது. 

இத்தகைய கருத்துக்கள் உண்மையில் மனிதனது மூளையில் உதித்த கருத்தே தவிர இதற்கும் ஆன்மீகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நமது உள்ளான மனதையே தேவன் பார்க்கின்றார். ஆம், உணவானது நம்மை கடவுளுக்கு ஏற்ப்புடையவர்கள் ஆக்கிடாது.  புசிப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை அல்லது மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை அல்லது குறைவுமில்லை.

நமது இருதயமானது உணவினால் அல்ல மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் பலப்படவேண்டும். அதுவே நல்லது.  "போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே." ( எபிரெயர் 13 : 9 ) 

ஆவியின் கனிகள் உள்ளவனே ஆவிக்குரியவன்.   அவனே கிறிஸ்தவன். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22,23 ) இந்த ஆவிக்குரிய கனிகள் ஒருவருக்கு அசைவ உணவுகளைத் தவிர்ப்பதால் வந்திடாது; மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்துகொள்வதால் மட்டுமே வரும். 

இன்று கிறிஸ்தவர்களில் பலரும்கூட குறிப்பிட்ட காலங்களில் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பது தேவனுக்கு ஏற்றச் செயல் என்று கருதிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, இவை உடலுக்கு நன்மையாக இருக்கலாம். ஆனால், இவைகளைத் தவிர்த்துவிட்டு  மேற்கூறிய ஆவியின் கனிகள் இல்லாமல் வாழ்ந்து என்ன பயன்?

"போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது" என்று எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுவதுபோல நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பலப்பட முயலவேண்டும்;  தேவனது கிருபையினைச் சார்ந்து ஆவிக்குரிய வாழ்வு வாழ முயலவேண்டும்.  உணவுக் கட்டுப்பாட்டு முயற்சிகள் நமது உடலைப் பேணலாமேத்தவிர ஆவிக்குரிய வாழ்வைப் பேண உதவாது.  

ஆம், ஆவிக்குரிய வாழ்க்கையும் தேவனுடைய ராஜ்யமும். சாப்பிடுவது, குடிப்பது இவற்றின் அடிப்படையானது அல்ல. "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

அற்பமான உணவு விஷயத்துக்கு முன்னுரிமைக் கொடுப்பதைவிட பரிசுத்த ஆவியினால் உண்டாகும் நீதி, சமாதானம், சந்தோஷத்தையே தேடுவோம்.  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்