ஞானத்தின் ஆரம்பம்

ஆதவன் 🖋️ 693 ⛪ டிசம்பர் 21,  2022 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." ( நீதிமொழிகள் 19 : 23 )

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டும் எனும் எண்ணத்தில் நாம் செயல்படுவதையே குறிக்கின்றது. உலக மனிதர்கள் தங்கள்  உயர் அதிகாரிகளுக்கோ, மாணவன் ஆசிரியருக்கோ, திருடர்கள் காவலர்களைக்கண்டோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. இது கர்த்தர்மேலுள்ள அன்பால் நாம் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வது. கர்த்தருக்கு நாம் இப்படிப் பயப்படும்போதே நாம் ஞானிகள் ஆகின்றோம். அதாவது தேவனை அறிந்து கொள்கின்றோம்.

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்." ( சங்கீதம் 111 : 10 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர்.  இப்படிக்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; என்று கூறும் இன்றைய தியான வசனம், அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது என்றும் கூறுகின்றது. 

இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும். இன்று ஜெபத்தை வலியுறுத்தும் ஊழியர்கள் அதிகம். எதற்கெடுத்தாலும்  "ஜெபியுங்கள், ஜெபியுங்கள்" என்று மக்களுக்கு அறிவுரைகூறும் பலரும் நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டுமென்று கூறுவதில்லை. ஆம், ஜெபிப்பதையும் , வேதம் வாசிப்பதையும் வலியுறுத்துகின்றனர் ஊழியர்கள். இவைகளைக் கடைபிடிப்பது எளிது. ஆனால் வாழ்க்கை எனும் சிலுவை சுமக்கும் அனுபவம் நேர்மையான வாழ்க்கையில் அடங்கியுள்ளது. 

இப்படிக் கூறுவதால் ஜெபிக்கவேண்டாமென்றோ வேதம் வாசிக்கவேண்டாமென்றோ பொருளல்ல. (இன்று பலரும் இப்படி குறுகிய கண்ணோட்டத்துடன் நான் சொல்வதைத் தவறுதலாக புரிந்துகொள்கின்றனர்). ஜெபிக்கவேண்டியது நமது சுவாசம்போல. ஜெபிக்காத ஆவிக்குரிய வாழ்க்கை ஜீவனில்லாதது. ஆனால் அந்த ஜெபம் நான் முதலில் கூறியதுபோல கர்த்தருக்குப் பயப்படும் ஞானத்துடன் கூடிய ஜெபமாக இருக்கவேண்டும். நூறு சதவிகித உலக ஆசைகளுக்காக ஜெபித்துவிட்டு, நானும் ஜெபிக்கிறேன் என்று திருப்தி அடைவது ஏற்புடைய ஒன்றல்ல.  

கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம்;  அப்போது ஜீவனைக் கண்டடைவோம். அதைக் கண்டால்  திருப்தி அடைந்து சமாதானத்துடன் நிலைத்து நிற்போம்; தீமை நம்மை அணுகாது. 


தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்