இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம்.

ஆதவன் 🖋️ 694 ⛪ டிசம்பர் 22,  2022 வியாழக்கிழமை

"நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  2 : 25,26 )

இயேசு கிறிஸ்து உலகினில் வந்தபோது பல்வேறு சமயங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். ஆனால் அவை அனைத்துமே நித்திய ஜீவனை நாம் அடைந்திடவேண்டும் என்பதற்காகவே. நித்திய ஜீவனை மக்களுக்கு அளிப்பதே கிறிஸ்துவின் நோக்கம். அதற்கான வழியைக் காண்பிக்கவே அவர் உலகினில் வந்தார். எனவேதான் அப்போஸ்தலனாகிய யோவான், நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதும் ஒரு வாக்குத்தத்தம் என்று கூறாமல்,  "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." என்கின்றார். அதாவது அது ஒன்றுதான் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம். 

நமது தேவன் வெறுமனே வாக்குத்தத்தங்களைக் கொடுத்துவிட்டு மறந்துவிடுபவரல்ல. அவற்றை எப்படியாவது நிறைவேற்றிட வல்லவர். வானமும் பூமியும் மாறினாலும் தேவனுடைய வார்த்தைகள் மாறுவதில்லை. எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனுக்குத் தான் படைத்த மக்களோடு உடன்படிக்கை பண்ணவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், மனிதர்கள்மேல் அன்பு கொண்டுள்ளதால் அவர் மனிதர்களோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். முதலில் நோவாவோடு உடன்படிக்கை பண்ணினார். பின்னர் ஆபிரகாமோடு உடன்படிக்கைபண்ணினார்.  அவற்றை நிறைவேற்றவும் செய்தார். 

"நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.....உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்." ( ஆதியாகமம் 17 : 4 & 6 ) என்ற வாக்குத்தத்தத்தின்படி ஆபிரகாம் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக; ஒரு தேசமாகவே  மாறினான்.

"நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்". ( ஆதியாகமம் 17 : 8 ) என்ற வாக்குத்தத்தின்படி கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிற்குக் கொடுத்தார். 

இதே வாக்குமாறாத தேவனே இன்றைய வசனத்தில் கூறியுள்ளபடி, "நித்தியஜீவனை அளிப்பேன்" என்கின்றார். இதனை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து எழுதுகின்றார், "உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியுள்ளேன்". ஆம், இயேசு கிறிஸ்து கூறிய நித்திய ஜீவனைப் பிரசித்திப்படுத்தாமல்  வேறு உலக ஆசீர்வாதங்களைப்  போதிக்கும் போதகர்களே  வஞ்சிக்கிறவர்கள். இத்தகைய வஞ்சிக்கும் போதகர்களே  இன்று உலகில் அதிகமாக உள்ளனர். 

அன்பானவர்களே, எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை மறுதலிக்கும் வஞ்சக போதனைகளுக்கு விலகி நம்மைக் காத்துக்கொவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்