மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாது

ஆதவன் 🖋️ 695 ⛪ டிசம்பர் 23,  2022 வெள்ளிக்கிழமை

"இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்." ( லுூக்கா 2 : 34 )

சிமியோன் எனும் நீதிமான் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். தேவனுடைய கிறிஸ்துவை காணுமுன் நீ மரணமடைய மாட்டாய் என்று அவருக்கு ஏற்கெனவே பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப்பட்டிருந்தது. நியாயப்பிராமண கட்டளையை நிறைவேற்றிட ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க இயேசுவின் தாய்தகப்பன்  இயேசு கிறிஸ்துவை ஆலயத்துக்குக் கொண்டுசென்றபோது பரிசுத்த ஆவியின் அறிவிப்பின்படியே சிமியோன் ஆலயத்துக்கு வந்திருந்தார். 

சிமியோனைப்பற்றி, "அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்." ( லுூக்கா 2 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்துவைக்குறித்து சிமியோன், "அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். 

ஆம், ஆண்டவர் தனது ஊழியத்தை ஆரம்பித்தபோது இது நிறைவேறத் துவங்கியது. பலர் அவரைக்குறித்து இடறலடைந்தனர். பலருடைய இருதய சிந்தையை அவர் வெளிப்படுத்தியதால் அவர்கள் இருதயம் குத்தப்பட்டது. 

ஆனாலும் அவர்கள், "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6 : 3 ) இன்றும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த இந்த இடறல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அவரை சாதாரண உலக மகான்களில் ஒருவராகவே பலர் எண்ணி இடறலடைகின்றனர். 

இங்கு சிமியோன் எப்படி இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டார் என்று பார்ப்போம். முதலாவது அவன் நீதியும் தேவ பக்தியுள்ளவனுமாய் இருந்தான் ஏற்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவன்மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று நாம் விசுவாசித்து அறிக்கையிட பரிசுத்த ஆவியானவரது வெளிப்பாடு நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

"ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." ( 1 கொரிந்தியர் 12 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

ஆனால் இன்றும் சிமியோன் கூறியதைப்போல பலருக்கும் கிறிஸ்து  இடறலாகவே இருக்கின்றார். காரணம் அவரது போதனைகள். இவற்றைக் கடைபிடிப்பது கூடாத காரியம் என்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்றும் சொல்லக்கேட்கலாம்.  ஆம், மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாதுதான். எனவேதான் பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாய் இருக்கின்றது. 

சந்தேகத்தோடும் இடறலோடும் வாழாமல் ஆவியானவரின் துணையினை வேண்டுவோம்; அவரே நமக்கு கிறிஸ்துவைக்குறித்தத் தெளிவைத் தருவார்.  கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பிறருக்கும் ஆவியானவர் இந்த வெளிப்பாடைக் கொடுக்கும்படி ஜெபிப்போம். பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லமுடியாது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்