INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Monday, December 19, 2022

லோத்தின் மனைவி

ஆதவன் 🖋️ 692 ⛪ டிசம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை

"உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ." ( ஆதியாகமம் 19 : 17 )

சோதோம் கொமோரா நகரங்கள் மிகப்பெரிய விபச்சார பாவத்தில் இருந்ததால் தேவன் அந்த நகரங்களை அழிக்கத் தீர்மானித்தார். ஆனால் அந்த நகரத்தில் லோத்து குடும்பத்தோடு இருந்ததால் தேவன் அந்த நாகரத்தை அழிக்குமுன் லோத்துவை அந்த நகரத்திலிருந்து வெளியேற்ற தனது தூதர்களை அனுப்பினார். காரணம் லோத்து அந்த நகரத்தின் பாவங்களுக்கு உடன்படவில்லை. "நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க" ( 2 பேதுரு 2 : 8 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

அந்தத் தூதர்கள் லோத்துவிடம் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகள். 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள காரியங்கள்,  முதலாவது ஜீவன் தப்ப ஓடிப்போ என்பதாகும். அதாவது உன் உயிர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இங்கிருந்து ஓடிப்போ என்பதாகும். இன்று இந்த வார்த்தைகள் நமக்கும் பொருந்துவனவாகும். நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் பாவ காரியங்களுக்கு விலகி ஓடவேண்டியது அவசியம். சோதோம் கொமோரா நகரங்களில் மிகுதியாக இருந்த பாவங்கள் வேசித்தனமும் விபச்சாரமுமாகும். இவையே தேவன் அருவருக்கும் மிக முக்கிய பாவங்கள். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும் இவைகளுக்கு விலகி ஓடச் சொல்கின்றார். "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரிந்தியர் 6 : 18 ), " "விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 14 ) என்கின்றார் அவர். ஆம், நாம் பாவத்துக்கு விலகி யோசேப்பைபோல ஓடவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள அடுத்த காரியம், "பின்னிட்டு பாராதே"  என்பதாகும். பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை மறந்துவிடவேண்டும். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

அடுத்து, "இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே" என்று கூறப்பட்டுள்ளது. இது தயங்கி நிற்கும் செயலாகும். நாம் பாவத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் தயங்கி நின்றுவிடக்கூடாது. பாவத்தைவிட்டு ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. நிற்போமானால் நாம் மீண்டும் பாவத்தில் வீழ்வது உறுதி. 

இறுதியாகக் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், "நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ" என்பதாகும். ஆம் நாம் பாவத்தால் அழியாமல் இருக்கவேண்டுமானால் கல்வாரி மலைக்கு ஓடி அடைக்கலம் புகுந்திடவேண்டும். 

பாவம் நம்மைச் சூழ்ந்து நாம் பாவத்தால் ஜெயிக்கப்படுவோம் எனும் சூழ்நிலை ஏற்படும்போது ஜீவன் தப்ப ஓடி, பின்னிட்டுப் பாராமால், தயங்கி நில்லாமல், அழியாதபடிக்கு கல்வாரி நாதரை சரணடையவேண்டியதே நாம் செய்யவேண்டியது. தயங்கி நின்று பின்னிட்டுப் பார்ப்போமானால் லோத்தின் மனைவியைப்போல உப்புத்தூணாகிவிடுவோம் (அழிந்துவிடுவோம்) . எனவேதான்,  "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


No comments: