ஆயக்காரரும் வேசிகளும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்

 ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17,  2022 சனிக்கிழமை

"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )


பொதுவாகவே நாம் அனைவருக்கும் விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள்மேல் ஒரு வெறுப்பும் அருவருப்பும் தோன்றக்கூடும்.  அவர்களைக்குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் அவர்களது தொழிலைப்பற்றி வெளிப்டையாகத் தெரிவதால்தான். ஆனால் சமூகத்தில் பலரால் மேன்மையாகக் கருதப்படும் சிலரும் ரகசியமாக விபச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களை நாம் அறியாமல் மேன்மையாகக் கருதுகின்றோம்.

நான் முன்பு ஒரு தொண்டுநிறுவனத்தில் பணிசெய்தபோது எயிட்ஸ் தடுப்புத் திட்டத்திற்காகப்  பல விபச்சாரப் பெண்களோடு பேசக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.  விபச்சார பெண்களின் கதைகளைத் தொகுத்து அப்போது வெளியிட்டோம்.  நான்தான் அவைகளைத் தொகுத்தேன். அதற்காக விபச்சாரப் பெண்களைப் பேட்டி கண்டு அவர்கள் இந்தத் தொழிலுக்கு வரக் காரணமென்ன, அவர்களது குடும்பப்பின்னணி,  இந்தத் தொழிலை மனப்பூர்வமாகச் செய்கிறார்களா, எனப் பல கேள்விகள்கேட்டு தொகுத்து வெளியிட்டோம். அப்போது, பல பெண்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்க நேர்ந்தது. 

விபச்சாரம் செய்தாலும் தேவனிடம் ஜெபிக்கும் பெண்களைக் கண்டேன்.  அவர்கள் பிறந்தச் சூழ்நிலைதான்  பல பெண்களை இந்தத் தொழிலில் ஈடுபடச் செய்துள்ளது. ஒருமுறை நான் சென்ற ஒரு குக்கிராமத்தில் சுமார் 25 கூரை வீடுகள் இருந்தன. அங்குள்ள பெண்கள் பிறந்ததுமுதல்  அதிகம் வெளியுலகுக்குச் சென்றதில்லை. அங்கேயே பிறந்து, இதுதான் வாழ்க்கை என வாழ்கின்றனர்.  

வெளியுலகில் நாம் சந்திக்கும் பெண்களைவிட மனதளவில் பல நல்ல குணமுள்ள பெண்களை நான் சந்தித்தேன். தேவன் எனக்குச் சில உண்மைகளைப்  புரியவைக்கவே இந்த வாய்ப்பினைத் தந்தார் என எண்ணுகின்றேன்.  தேவனது நியாயத் தீர்ப்பு, இயேசு கிறிஸ்து கூறிய வசனங்கள் இவைகளை நான் அப்போது எண்ணிப்பார்த்தேன். "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய தியான வசனத்தில் எபிரெய நிருப ஆசிரியர், "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." என்று கூறுகின்றார். ராகாப் ஒரு வேசிதான்.  ஆனால் அவளது விசுவாசம் அவளைக் காப்பாற்றியது. மட்டுமல்ல, அவள் பெயர் கிறிஸ்துவின் கலைமுறை பட்டியலில் இடம்பெற எதுவாகவும் இருந்தது. ஆம், அவள் தாவீது ராஜாவின் பூட்டியானாள். 
வாசிக்க:- (மத்தேயு - 1: 5,6) ஒப்பிட்டு வாசிக்கவும் (ரூத் - 4:17)

அதாவது இன்றைய வசனம் இரண்டு காரியங்களை நமக்கு உணர்த்துகின்றது. ஒன்று யாரையும் மேலோட்டமாகப்பார்த்து நாம் நியாயம்தீர்க்கக்கூடாது என்பது. இரண்டாவது, விசுவாசத்தினால் வரும் மேன்மையைக் குறிக்கின்றது. நமது எந்த இழி நிலைமையையும் மாற்றி நம்மை ராஜாக்களாகவும் ஆசாரியராகவும் மாற்றிட கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் உதவிடும். கிறிஸ்துவின் மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மைச் சேதப்படுத்தாது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்