ஒருநாள் கூத்து அல்ல

 ஆதவன் 🖋️ 690 ⛪ டிசம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை

"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )

இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக  பல பெந்தேகொஸ்தே சபை விசுவாசிகள் இப்படி இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் விகற்பமாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர். 

ஒருமுறை நண்பர் ஒருவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பெந்தேகொஸ்தே சகோதரர் சுவிசேஷம் அறிவிக்க வந்தார். வந்தவுடன் அவர் நண்பரின் மனைவியிடம், "சிஸ்டர்.....நீங்க பரலோகத்துக்குப் போகவேண்டாமா?" என்று ஆரம்பித்தார். நண்பரின் மனைவி கூலாக, "உங்ககிட்ட  இன்னும் எத்தன  டிக்கெட் இருக்கு?" என்றார்.   அந்தச் சகோதரர் இப்படியொரு பதிலை  எதிர்பார்க்காததால் திகைத்துவிட்டார். நண்பரின் மனைவியின் கேள்வி அவரைப் பதில் சொல்லமுடியாதபடி வாயை அடைத்துப்போட்டது. 

அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். மட்டுமல்ல,  தேவனுடைய அன்பிலே நம்மைக்  காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில்.. 

கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய்  வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம். 

இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும்  என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.

மற்றவர்களை அற்பமாக எண்ணி, தாங்கள் பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகிவிட்டோம் எனக் கருதிக்கொள்பவர்கள் தங்கள் மன மேட்டிமையை அறிக்கையிட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்