ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது.

ஆதவன் 🖋️ 691 ⛪ டிசம்பர் 19,  2022 திங்கள்கிழமை

"பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
( 1 யோவான்  2 : 28 )

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப்  போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர்  ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது  அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!

நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.  

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான்  2 : 27 ) என்கின்றார்.

அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால்,  அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து  நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.

அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்