INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Thursday, December 01, 2022

கிருபையினால் மீட்பு

 ஆதவன் 🖋️ 674 ⛪ டிசம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 15 )

கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்ட யூதர்களை வதைத்துத் துன்புறுத்தி  சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்த சவுலை தேவன் சந்தித்து பவுலாக மாற்றினார். சவுல் மனம்திரும்பிய செய்தி முதன்முதலில்  தமஸ்கு நகரைச் சார்ந்த அனனியா எனும் பெயருள்ள மனிதனுக்கு அறிவிக்கப்படுகின்றது. 

இயேசு கிறிஸ்து அளித்த தரிசனத்தால் கண்பார்வையை இழந்த சவுல் எனும் பவுலை நேரில் சென்று சந்தித்து அவர் பார்வை அடையும்படி வேண்டுதல்செய்ய தேவன் அனனியாவை அனுப்புகின்றார். அப்போது அனனியா சவுளிடம் செல்ல பயப்படுகின்றார். ஏனெனில் சவுல் கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்ட யூதர்களைத் துன்பப்படுத்துவதை அனனியா நன்கு அறிந்திருந்தார். அப்போது தேவன் அனனியாவிடம் சவுல் இப்போது பழைய சவுல் அல்ல; அவர் நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று சொல்லி அவரிடம் செல்லுமாறு அனுப்புகின்றார்.  

"அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்று பவுலை தேவன் எதற்காகப் பயன்படுத்தப்போகின்றார் என்பதையும் தேவன் அனனியாவிடம் கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்று நாமும் பவுலைப்போல கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே பலவேளைகளில் இருக்கின்றோம். பவுல் கிறிஸ்தவர்களை உண்மையினை அறியாமல் துன்புறுத்தினார், நாம் அறிந்தே நமது தகாத பாவச் செயல்களால் கிறிஸ்துவைத் துன்புறுத்துகின்றோம். 

பவுல் தனது பாவங்களை முதலிலேயே கிறிஸ்துவிடம்  அறிக்கையிடவில்லை;  தான் செய்தது பாவம் என்று உணரவும் இல்லை. ஆனால் தேவன் அவரைச் சந்தித்தார்.  ஆம், பவுல் கிறிஸ்துவை அறிந்துகொண்டது கிருபையினால்தான். எனவேதான் அவர் மீட்பு அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது, "கிருபையினால் மீட்பு" என்று கூறுவார். "இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்." ( ரோமர் 3 : 24 ) எனப்  பவுல் கூறக்  காரணம் இதுதான். 

மேலும், பவுல் கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அது அறியாமையினாலும், தேவன் அருளிய நியாயப்பிரமாணக் கட்டளைகளைமேல் கொண்ட நம்பிக்கையாலுமே  அப்படிச் செயல்பட்டார். அவருக்கு அவர் நம்பிய யூத மதபோதனையில் உறுதியான நம்பிக்கை இருந்தது. எனவே அதற்கு எதிரான செயல்களை கிறிஸ்தவர்கள் போதிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் கோபம்கொண்டதனால்தான் அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். ஆனால் இன்று நமக்கு அத்தகையைச் சூழல் இல்லை. கிறிஸ்துவின் மீட்பு பற்றி அறிந்திட மேகம்போன்ற திரளான சாட்சிகள் நமக்கு உண்டு (எபிரெயர் 12:1) எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நமது உள்ளான மன எண்ணங்கள், கடவுளை அறியவேண்டும் எனும் ஆர்வம், நீதியான வாழ்க்கை இவை நமக்கு இருக்குமானால் நாமும் கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் அல்ல. நிச்சயமாக அவர் நமக்குத் தன்னை வெளிப்படுத்துவார். மட்டுமல்ல,  புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நம்மையும் தனது பாத்திரமாகத் தெரிந்துகொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: