DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, December 12, 2022

நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு இவைகளை தேவன்அறிவார்

ஆதவன் 🖋️ 685 ⛪ டிசம்பர் 13,  2022 செவ்வாய்க்கிழமை

"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 35 )

இந்த உலகம் ஏழ்மையானவர்களையும், அற்பமாக எண்ணப்படுபவர்களையும்  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களையும் அவர்களது சொல்லையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. "இவன்தானே / இவள் தானே" எனும் ஏளனப்  பார்வையே இதற்குக் காரணம். இது தற்போதுள்ள நிலைமையல்ல, காலாகாலமாக இதுதான் இந்த உலகத்தின் நிலை. 

மோசேயையும் எபிரெயர்கள் அன்று அப்படிதான் எண்ணிக்கொண்டனர். எனவே சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு எபிரேயர்களை மோசே கண்டு அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன? " என்று கேட்டபோது அவன் மோசேயைப்பார்த்து, "உன்னை எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?" என்று கேட்டான்.  (யாத்திராகமம் 2:13,14). ஆனால் தேவன் மோசேயை அப்படியே விட்டுவிடவில்லை. அந்த மோசேயையே அவர்களுக்குத் தலைவனாகவும் மீட்பனாகவும் ஏற்படுத்தினார். 

இன்று நமது ஊரில் அல்லது நாம் பணிசெய்யும் இடங்களில் நம்மையும் சிலர் இப்படி, "இவன் தானே / இவள்தானே" என  எண்ணலாம். அல்லது மோசேயிடம் கூறியதுபோல நேரடியாகவே நம்மைப்பார்த்துக், "நீ என பெரிய யோக்கியனா?" என ஏளனமாகப் பேசலாம். காரணம், நாம் கூறும் நியாயங்கள் அநீதி செய்பவர்களுக்கு ஏற்புடையவை ஆகாது. 

ஆனால் தேவன் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு  இவைகளை அவர் அறிவார். நாம் தேவனோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது தேவன் நிச்சயமாக நம்மைப் புறக்கணித்த மக்கள் மத்தியில் நம்மை தலை நிமிரச்செய்வார். 

புறக்கணிக்கப்பட்ட இந்த மோசேதான் அடிமைப்பட்டிருந்த மக்களை  பிற்காலத்தில் விடுவித்து எகிப்தைவிட்டு கானானை நோக்கி வழி நடத்தினார்.  இதுபோல நாம் வாழும் சமூகத்தில் தேவன் நம்மை பிற்காலத்தில் உயர்த்திவைக்க நமது சிறுமைப்படுதல் அவசியமாயிருக்கின்றது. மனிதர்களைத் தேவன் பயன்படுத்துமுன் தனக்கு ஏற்புடையவர்கள் ஆக்கும்படி பல்வேறு துன்பங்களால் புடமிடுகின்றார். எனவே துன்புறும் மனிதர்களைப்பார்த்து நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது. தேவன் அவர்கள் பக்கம் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. 

மோசேயைத் தேவன் உடனேயே உயர்த்திவிடவில்லை. மோசேயைப்பற்றி கூறப்பட்டுள்ள மேற்படி சம்பவம் நடைபெற்று நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தேவன் மோசேக்குத் தரிசனமாகி அவரை மக்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தினார். 

அன்பானவர்களே, நமது ஊரிலோ பணிசெய்யும் இடங்களிலோ நியாயமாகச் செயல்படும் அற்பமானவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆம்,  ஒருவேளை தேவன் அத்தகைய மனிதர்களோடு இருந்து செயல்பட்டுக்கொண்டிருப்பார்.  அற்பமாக, அவலட்சணமாகக் காணப்படும் புழுதான் பின்னர் அழகிய வண்ணங்களோடு சிறகடித்து வானில் பறக்கின்றது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


No comments: