தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,245      💚 ஜூலை 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." ( ரோமர் 8 : 39 )

தேவனிடம் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக வாழ்ந்தாலும் சிலர் தங்களது வாழ்வில் உயர்வு வரும்போது அவரைச் சற்று ஒதுக்கிவிடுவதுண்டு. உதாரணமாக,  வறுமை நிலையிலிருக்கும்போது தங்கள் முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைத்து வாழும் பலர் தங்கள் வாழ்வில் பொருளாதார உயர்வு ஏற்படும்போது தேவனை மறந்துவிடுகின்றனர். தங்களது உயர்வு தங்கள் உழைப்பால் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படி எண்ணுவதும் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல். 

இப்படி வாழ்வில் உயர்வு வரும்போது நாம் தேவனை மறந்துவிடக்கூடாது என்று மோசே இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துவதை நாம் உபாகமத்தில் வாசிக்கலாம். "என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து," ( உபாகமம் 8 : 17 ) என்கின்றார் அவர். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும், உன் இருதயத்தில்கூட அப்படி நினையாதே என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இதுபோலவே சிலர் நோய்வாய்ப்படும்போது தேவனை நோக்கி ஜெபித்துவிட்டு, நோய் குணமானதும், "அந்த மருத்துவமனையில் நல்ல டிரீட்மெண்ட் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள் அதுவும் குணம்பெற ஒரு காரணம்" என்பார்கள். இதுவும் முழு விசுவாசத்தையும் அவர்கள் தேவன்மேல் வைக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. எனவே,  இப்படிப் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்தான். 

கிறிஸ்தவர்களில் சிலர்கூட, "நன்றாகப் படித்ததால் நான் மருத்துவர் அல்லது  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரி ஆனேன்"  என்று கூறுவார்கள். ஆனால் ஒன்றினை இவர்கள் மறந்துவிடுகின்றனர்; அதாவது இப்படிக் கூறும் இவர்களைவிட நன்றாகக் படித்த பலரும் அறிவுள்ளவர்களும்  இந்தத் தகுதியைப் பெறவில்லையே ஏன்? 

இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்," ( ரோமர் 8 : 38 ) கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்கின்றார்.

மரணம், தேவதூதர்கள் காட்சியளித்தார்கள் என்று அவர்களது கூற்றினைப் பின்பற்றுவது, உலக அதிகாரங்கள், பதவிகள் நமக்குக் கிடைப்பது, வல்லமை மிக்கச்   செயல்கள் புரியும் ஆற்றல் பெறுவது, நமது வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கும் நல்ல அல்லது கெட்டக்  காரியங்கள், வரப்போகின்ற காரியங்கள் எதுவும் நம்மைக்  கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டுப் பிரித்துவிட நாம் இடம்கொடுக்கக்கூடாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.

எனவே அன்பானவர்களே நாம் வாழ்வில்  எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். தற்போதிருக்கும் நிலையிலிருந்து உயர்வோ, தாழ்வோ, நோயிலிருந்து விடுதலையோ, பதவி உயர்வுகளோ, அற்புத தரிசனங்களோ, குணமாக்கும் வல்லமையோ, நமக்கு நடக்கும் காரியங்களோ, நடைபெறப்போகும் காரியங்களோ  எதுவும் கிறிஸ்துவிலுள்ள நமது அன்பைக் குறைந்துபோகவிடாமல் காத்துக்கொள்வோம். எல்லா மகிமையும் கனமும் கிறிஸ்து இயேசு மூலம் தேவனுக்கே உரியது.   

கிறிஸ்துவின்மேல் உறுதியான விசுவாசம் உள்ளவர்களாக வாழும்போதுதான் நாம் அவரை அன்புசெய்கின்றோம் என்பது உறுதியாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்