வெற்றிபெறுபவன் அனைத்தையும் பெற்றுக்கொள்வான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,237     💚 ஜூன் 28, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 7 )

ஒரு மகனுக்குத் தகப்பனுடைய அனைத்துச் சொத்து சுகங்களின்மேலும் முழு அதிகாரம் உண்டு. இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து அவருக்குக் குமாரனாகும்  தகுதிபெறும்போது  அந்தத் தகப்பனுக்குள்ள  அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கின்றது. அதற்கு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே "ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

வேதாகமத்தில் லேவியராகமம் முதல் பல்வேறு இடங்களில் நாம் "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." ( லேவியராகமம் 26 : 12 ) எனும் வசனத்தைக் காணலாம். 

தேவன் எப்போதும் நம்மோடு தங்கி நம்மோடு இருக்கவே விரும்புகின்றார். அதற்குத் தகுகியுள்ளவர்களாக நாம் வாழ வேண்டியதே முக்கியம். இன்றைய தியான வசனம் கூறும் வார்த்தைகளைப்போன்று  வேதத்தில் பல்வேறு இடங்களிலும்  நாம் வாசிக்கலாம். (உதாரணமாக,  எரேமியா- 7:23, 11:3, 30:22, 31:1, 32:38 இன்னும் பல) 
 
ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்கள் அனைத்திலும்,  "நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவனை நாம் தகப்பனாக அறிந்து அவரோடு சேர்வதால்,  "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும் அனைவருமே அவரது குமாரனும் குமாரத்திகளும்தான். 

இப்படி நாம் அவரது குமாரனும் குமாரத்திகளுமாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்." ( எரேமியா 7 : 23 )

மேலும் இன்றைய தியான வசனத்தினைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 ) 

அதாவது, தேவன் காட்டிய வழிகளில் நடவாதவர்கள் மேற்படி வசனம் கூறுவதுபோல பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யருமாக இருக்கின்றனர். அத்தகையவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே அன்பானவர்களே, நாம் ஜெயம்கொள்ளும் ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்கான வழிகளை நமக்குத் திறந்து வைத்துள்ளார். அந்த வழியாகிய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் வாழும்போது மட்டுமே நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவோம். அவர் நமது தேவனாயிருப்பார்; நாம் அவர்  குமாரனாக குமாரத்திகளாக இருப்போம்.  

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்