சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,240     💚 ஜூலை 01, 2024 💚 திங்கள்கிழமை 💚

"உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே," ( ரோமர் 1 : 11 )

கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் இருக்கவேண்டிய ஐக்கியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. "உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்" என இதனையே அப்போஸ்தலரான பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதுகின்றார்.

அதாவது, என்னிடம் விசுவாசம் இருக்கின்றது; உங்களிடமும் விசுவாசம் இருக்கின்றது. இந்த விசுவாசம் நமக்குள் இருப்பதனால் நாம் இருவரும் சேரும்போது இருவருக்கும் ஆறுதல் கிடைக்கின்றது என்று பொருள். 

சிலவேளைகளில் ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் வரும்போது நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் அத்தகைய வேளைகளில் நம்மைப்போன்ற ஆவிக்குரிய நண்பர் ஒருவர் நமக்கு இருப்பாரானால் அவரிடம் நமது துன்பங்களைப்  பகிர்த்துக்கொள்ளும்போது மன ஆறுதல் கிடைக்கும். எனவேதான் ஆவிக்குரிய ஐக்கியம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

நமது சோகங்களையும் துன்பங்களையும் உலக நண்பர்களிடம் கூறும்போது நமக்கு ஏற்ற ஆறுதல் கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் ஆவிக்குரிய நிலையிலிருந்து பிரச்சனைகளைப்  பார்ப்பதில்லை. வெறும் உலகப்பிரகாரமான ஆறுதல் வார்த்தைகளைக்கூறி நம்மைத் தேற்றுவார்கள். மட்டுமல்ல, சிலவேளைகளில் அவர்களிடம் நாம் கூறிய காரியங்களை மற்றவர்களிடமும் கூறிவிடுவார்கள். 

ஆவிக்குரிய ஐக்கியம் என்று கூறியதும் நாம் செல்லும் சபையினரோடு உள்ள  ஐக்கியத்தை எண்ணிவிடக்கூடாது. மாறாக, தனிப்பட்ட முறையில் நமக்கு இருக்கும் ஆவிக்குரிய நண்பர்களின் ஐக்கியத்தை நான் குறிப்பிடுகின்றேன். அது அதிகமானவர்கள் கொண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஒன்றோ இரண்டோ ஆவிக்குரிய நண்பர்களோடு நாம் நெருங்கிய உறவினை வளர்த்துக்கொண்டாலே  போதும். இதன் காரணமாகவே இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது இருவர் இருவராக அனுப்பினார். 

"ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.' ( பிரசங்கி 4 : 9,10 ) என்று வாசிக்கின்றோம். 

மேலும், "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்." ( சங்கீதம் 133 : 1-3 )

ஆம், சகோதரர்கள் ஒருமித்து வாழ்வதே ஒரு ஆசீர்வாதம்தான். ஆவிக்குரிய வாழ்வில் நாம் சிறப்படையவும்  கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடவும் நமக்கென சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியத்தை உருவாக்கிக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்